கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே..

sex

என் எஸ் நடேசன்

பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன்.

நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு சிறிது நேரம் பிந்திவிட்டது. ”மொனிட்டராக வந்தபின்பு பொறுப்பு வந்திருக்கு” என அம்மா பலமுறை கூறுவதுண்டு.

மாலை சூரியன் முற்றாக மறையவில்லை. ஆனாலும், பாதை ஓரத்தில் இருந்த பாரிய மரங்கள் பாதையை இருட்டாக்கின. தோளில் புத்தகங்கள் கனத்தன. இந்த பாடப்புத்தகங்களை இனித் தூக்க வேண்டியதில்லை என்ற சிறுசந்தோசம் மனத்தில் மலர்ந்தது. ஐந்தாம் வகுப்புக்கு எப்படியும் புத்தகப் பை ஒன்று வாங்கித் தருவதாக அம்மா சத்தியம் செய்திருக்கிறாள். பையுடன் கழுத்தில் தொங்கும் தண்ணீர் போத்தலுடன் பாடசாலை செல்லும் என் தோற்றம் கனவுகளில் எட்டிப் பார்த்தது.

ஐந்தாம் வகுப்பை நினைத்து கற்பனை செய்யும் போது இடுப்பில் இருந்த கால்சட்டை நழுவப் பார்த்தது! சிறிது நேரம் நின்று கால்சட்டையை சரி செய்ய முயன்றபோது பாதை ஓரத்து பாரிய அரச மரம் மனத்தை கலக்கியது. பாதையில் இருந்து சிறிது விலகி இருந்தாலும் பாரிய குடைபோல் கிளை விரிந்து இருந்தது. மரத்தின் அடிப்பகுதியை மூன்றுபேர் கைகோர்த்து நின்றால் மட்டும் பிடிக்க முடியும். மரத்தின் கீழ் வயிரவர் சூலம் உள்ளது. அரசடி வயிரவரைப் பற்றிய பல கதைகள் ஊரில் உலவின. பொய், களவு போன்ற குற்றம் செய்தவர்களை இங்குதான் வந்து சத்தியம் செய்யச் சொல்வது ஊர் வழக்கம். திருடியவர்கள் மீண்டும் அப்பொருளை வயிரவரிடம் கொடுத்துவிட்டுப் போவார்கள் என என்னுடன் படிக்கும் கண்ணன் பொழிப்புக் கூறினான்.

‘சமீபத்தில் ஏதாவது பொய் சொன்னேனோ’ என யோசித்துக்கொண்டு வேகமாக நடந்தேன். ‘எதற்கும் ஒரு தேவாரம் பாடினால் பயம் போய்விடும்” என, ”தோடு உடைய செவியன்” என கூவியபடி நடந்தேன்.

”நாயினாரா? ஏன் இவ்வளவு நேரம்?” என கேட்டபடி ஆலமரத்துக்கு பின்னாலிருந்து நாகமணி திடீரென்று தோன்றினான்.

இந்தநேரத்தில் இவன் எங்கே வந்தான்?’ என நினைத்தபடி தேவாரத்தை நிறுத்திவிட்டு வேகமாக நடந்தேன்.

நாகமணி அதே மண்ணிற அரைமுழ வேட்டியை நிலத்தைக் கூட்டும்படி அணிந்திருந்தான்.. சட்டை போட்டதை நான் என்றுமே கண்டதில்லை. தலையில் உச்சி மொட்டையை மூன்றுபக்கம் அணைகட்டியபடி நரை கலந்த தலைமயிர் உள்ளது. அடிக்கடி ஊதிய பலூனைப் போன்ற முகம். பலகாலம் சவரம் செய்யப்படவில்லை. அடிக்கடி தலையைத் தடவியதால்தான் இவனுக்கு மொட்டை விழுந்ததோ என நான் பலதடவை நினைத்தது உண்டு. நெஞ்சில் கத்தையாக மயிர் இருந்தது. முதுகில் பாரிய தளும்புகள் தெரியும்: அவை துலாக்காவடி எடுத்ததால் ஏற்பட்டவை என கேள்விப்பட்டேன். சேற்றுக்கடலில் தெரியும் மட்டியின் சிறுகண்கள் போன்ற கண்கள் நாகமணிக்கு. ஆனாலும், அலைந்து கொண்டிருக்கும் பார்வை.

நாகமணிக்கும் தனக்கும் ஒரேவயது என அம்மா கூறியதை வைத்துப் பார்த்தால், அவனுக்கு முப்பத்தைந்து வயதாவது இருக்க வேண்டும். நாகமணியின் பூர்வீகம் ஊரே அறிந்தது. அவனுடைய தாய் தந்தையர் மிகவும் வசதியாக சிங்கப்பூரில் வாழ்ந்தார்கள். இவன் சிறுவனாக இருக்கும் போது யப்பானியர்களின் குண்டு தாக்கி இருவரும் இறந்துவிட்டார்கள். உறவினர் உதவியுடன் கப்பலேறி இங்கு வந்து தூரத்து உறவுக்காரப் பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். பாட்டிக்கிழவி இறந்ததும் நாகமணி அனாதையானான்.

அம்மாவிடமிருந்து பெற்ற விசேட தகவல்களின்படி… சிறுவயதில் நாகமணி பாடசாலைக்கு வந்தாலும், படிக்கமாட்டான். மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடமாட்டான். இடையிடையே குழப்பம் விளைவிப்பான். சாப்பிடும் போது எச்சில் ஒழுகச் சாப்பிடுவதால் மற்றய பிள்ளைகளிடம் இருந்து விலக்கப்பட்டான். சத்தம் போட்டு அழுவதோ, சிரிப்பதோ அரிது. வாலிப வயதிலும் வேலைகள் செய்வதில்லை. கோவிலில் சாப்பாடு கிடைக்காத நாட்களில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று சாப்பிடுவான். தங்குவதற்கு மட்டும் தனது கொட்டிலுக்குச் சென்றுவிடுவான்.

இவனது கொட்டில் தடிகளால் கட்டப்பட்டு, கிடுகுகளால் வேயப்பட்டு, சுற்றிவர அடைத்து இருக்கும். வாசல்கதவு இல்லாமல் கிடுகுத் தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும். இவனது கொட்டிலுக்கு பக்கத்தில் காவல் கோபுரம் எப்பவும் இருக்கும். இவனது கொட்டிலும் கோபுரமும் மாதம் ஒருமுறை இடம் மாறும்.

தாத்தா நடுஇரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக பட்டரி லைட்டுடன் கடல்கரைக்குச் சென்றபோது கரையில், அலைந்து கொண்டிருந்த நாகமணியிடம்,

”ஏன் படுக்கவில்லை” எனக் கேட்டார்.
‘காலடித் தடயங்களைத் தேடுகிறேன்” என்றான் நாகமணி.
”உனக்கு வேலை இல்லையா?”
”எதிரிகள் இந்த ஊருக்குப் படையெடுப்பதற்கு முன்பாக உளவு பார்க்க வந்திருக்கிறார்கள் என எனக்குத் தகவல் வந்துள்ளது” எனக் கூறிவிட்டு காலடி தடயங்களை மீண்டும் தேடினான்.
”போய் படுத்துத் தூங்கு” என தாத்தா துரத்தினார். தாத்தா பாட்டியிடம் ஒருமுறை கூறியதிலிருந்து இந்த வரலாற்றை அறிந்து கொண்டேன்.

இளம் பெண்கள் நாகமணியைக் கண்டாலே வெறுப்புடன் காறி உமிழ்வார்கள். ”கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என பக்கத்து வீட்டுத் தேவி என்னிடம் கூறினாள்.

இந்த வெறுப்புக்கு அழுக்கான நாலுமுழவேட்டி. மொட்டையான தலை, வாத்துப் போன்ற நடை மட்டும் காரணம் என கூறமுடியாது. கயிற்றுக் கொடிகளில் உலரப் போடும் பெண்களின் உள்ளாடைகள் காணாமற் போவதற்கு நாகமணிமேல் சந்தேகம் பெண்கள் வட்டாரத்திலே நிலவி வருகின்றது.

எதிர்வீட்டு சந்திரா பட்டணத்தில் படிப்பவள். விடுமுறைக்காக வீடுவந்து நின்றபோது தனது உள்ளாடையைக் காணவில்லை எனக் கூறியபடி தடிஎடுத்துக் கொண்டு நாகமணியை அடிப்பதற்குச் சென்றாள்.
தாத்தா இடைமறித்து, ‘அவன்தான் எடுத்தான் என்பதற்கு என்ன ஆதாரம?’; எனக் கேட்டுச் சந்திராவைத் தடுத்து நிறுத்தினார்.

இரவு முழுவதும் ஊரைச் சுற்றித் திரியும் நாகமணிக்கு புத்திசுவாதீனம் அற்றவன் என சிலரின் அனுதாபம் கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் அசிங்கமான விலங்கையோ அல்லது குஷ்டரோகியையோ பார்ப்பது போன்றே பார்த்தார்கள். இளம் பெண்கள் நாகமணியை வெறுப்பதிலும், சிறுவர்கள் துன்புறுத்துவதிலும் முன்னின்றார்கள். நாகமணி சாப்பிட்டுவிட்டு அதே இடத்தில் பகல்நேரத்தில் கண்ணயர்வது உண்டு. என்னோடு ஒத்த சிறுவர்கள் நாகமணிமேல் வண்டைப் பிடித்து விடுவதும், காதுக்குள் ஈர்க்கிலால் நுழைப்பதும், பேப்பரைச் சிகரட்டாகச் சுருட்டி அவன் வாயில் திணிப்பதிலும் இன்புறுவார்கள்.

நான் ஒருமுறை சிவப்பு நிற கம்பளிப்பூச்சியை நாகமணிமேல் விட்டபோது பிடிபட்டேன். நாகமணி உலுப்பிய உலுப்பில் பயந்துவிட்டேன். இந்த சம்பவத்தின் பின் மரியாதை கலந்த பயம் நாகமணிமேல் உருவாகியது. கோயில் திருவிழா தொடங்கினால் ஊருக்கு மட்டுமல்ல நாகமணிக்கும் கொண்டாட்டம். கோயில் வாசலில் உள்ள வாழைமரத்தின் கீழ் இருந்து தேவாரம் தப்பும் தவறுமாகப் பாடுவதும், அங்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்பதுமாக நேரத்தைச் செலவிடுவான். கோயிலுக்கு வரும் பெண்களைப் பார்க்க, நாண்டு கிடக்கிறான்’ என்பது பெண்கள் வட்டாரத்தில் நிலவிய அபிப்பிராயம்.

சிறுவர்கள் நாகமணிமேல் கல்லெறிந்து குறும்பு செய்தாலும், பெரியவர்களுக்கு பயந்து தங்கள் குறும்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். திருவிழா காலம் நாகமணிக்கு விடுமுறைக் காலம் போன்றது.

அந்தவருடம் எங்கள் ஊரில் மழை பெய்யவில்லை. கிணறுகள் வற்றிவிட்டன. எங்கள் வீட்டுக் கிணற்றில் ஒரு வாளி தண்ணீர்கூடக் கிடைக்காது. குடிப்பதற்கு கடற்கரையில் மணற்பகுதியில் சிறிய குழி தோண்டி அதில் இருந்து பொசியும் நீரைத் தென்னஞ் சிரட்டையால் அள்ளி எடுத்துக் குடத்து வாயிலில் துணிகட்டி வடித்தெடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழி சொந்தமாக இருக்கும்.

குளிப்பதற்கு கோயிலுக்குப் பக்கமான பெரிய கிணற்று நீரில் ஆண்கள் பகலில் குளிப்பதும், மாலைப் பொழுதில் பெண்கள் குளிப்பதும் ஊர் வழக்கம்.

அன்று ஒருநாள் அம்மா, தேவி, சந்திரா ஆகியோருடன் கோயில் கிணற்றுக்குச் சென்றேன். அம்மா துணி துவைக்கும்போது சந்திரா எனக்கு முன்பு தண்ணீர் அள்ளிக் குளித்தாள். ஒன்பது வயதான என்னை ஓர் ஆணாகவே நினைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் சுற்றி இருந்த பனந்தோப்புக்குள் பந்தை எறிந்துவிட்டுத் தேடிக்கொண்டு சென்றேன். இரண்டு கட்டைப்பனை மரங்களுக்கு இடையே நாகமணியைக் கண்டேன்.

”அம்மா நாகமணி ஒளிந்திருக்கிறான்” என கூவினேன்.
”அட நாயே பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை” என அம்மா அவனை விரட்டினாள்.

”சந்திரா பாரிய கல்லைத் தூக்கியபடி நாகமணியை நோக்கி ஓடினாள். வாத்துப் போல் நடக்கும் நாகமணி முயலைப் போல், பாய்ந்து, பாய்ந்து ஓடினான்.

அடுத்தநாள் நாகமணி வீட்டுக்குச் சாப்பிட வந்தான். ”இனிமேல் இந்த வீட்டுக்கு சாப்பிட வராதே” என கூறி அம்மா படலையைப் பூட்டினாள்.

”நாச்சியார் அப்படிச் சொல்லாதே, பசிக்குது”…
”பொம்பிளை குளிக்கிறதைப் பார்க்கிற உனக்கு என்ன சாப்பாடு” என ஆத்திரமாக அம்மா கத்தினாள்.

நாகமணியின் கண்களில் கண்ணீர் வந்தது.

”அவனை ஏன் துரத்துகிறாய்?” என்றபடி சமையல்கட்டிலிருந்து பாட்டி வந்தாள்.
”இவன்ர குணத்துக்கு வீட்டில் அடுக்கக் கூடாது.” இது அம்மாவின் கொள்கைப் பிரகடனம்.
”சும்மா உள்ளே போ, நான் சாப்பாடு போடுகிறேன்” “தலையில் கிறுக்குப் பிடித்தாலும் அவன் ஆம்பிளைதானே” என்றாள் பாட்டி.

”தலையில் கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…’ என்று பாட்டி முணுமுணுத்தது அம்மா செவிகளிலே விழுந்திருக்குமா?

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உண்மைகள் சுடும்

lmபயணியின் பார்வையில் 21
முருகபூபதி

துப்பாக்கி,பீரங்கி, எறிகணை ஆகியனமட்டுமல்ல வெய்யிலும் நெருப்பும் சுடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எம்மத்தியில் வெளிப்படும் உண்மைகளும் சுடும் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் உண்மைகளை ஏற்கமுடியாமலும் சகிக்கமுடியாமலும் வாழத்தலைப்படுகின்றோம்.

ஜெயகாந்தன் உண்மை சுடும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். இந்த பயணியின் பார்வையில் தொடரில் நான் சந்தித்த மனிதர்களையும் பெற்ற அனுபவங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த தகவல்களையும் எமது இலங்கைத் தேச மக்களுக்கு இனி என்ன தேவை என்பதையும் ஒரு படைப்பாளியின் பார்வையிலும் பத்திரிகையாளனின் தேர்விலுமே பதிவுசெய்தேன்.

அறிந்த உண்மைகளையே சொல்லிவருகின்றேன். உண்மைகள் சுட்டுப்பொசுக்குவது மற்றவர்களை மட்டுமல்ல. என்னையும்தான். அந்த வெக்கையிலிருந்தும் வேதனையிலிருந்தும்தான் பதிவு செய்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் செங்கலடியில் அமைந்துள்ள ஒரு தேவாலய சமூகமண்டபத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தேன். அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்தனர். எமது கிழக்கு மாகாண தொடர்பாளர் த.கணேசும் வருகைதந்தார்.

நிதியம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து மேற்கொண்ட பணிகளை ஆவணப்படுத்தியுள்ள பெரிய அல்பம் ஒன்றும் எப்பொழுதும் என்னுடனேயே பயணிக்கும். அதனை அம்மாணவர்கள் அனைவரும் பார்வையிட்டு வியந்தனர். அதில் அவர்களது ஒளிப்படங்களும் குறிப்புகளும் செய்தியறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. தங்களது படங்களை பார்த்துச்சிலிர்த்து புன்னகை சிந்தினர். அந்தச்சிலிர்ப்புக்கும் காரணம் இருக்கிறது. தங்களது படங்கள் இவ்வாறு தகவல்களுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“யாவும் உண்மைகள்…..பதிவுசெய்துள்ளோம். வருங்காலத்தில் புதிய பரிபாலனசபை உறுப்பினர்கள் நிதியத்தில் பணியாற்றவருவார்கள். அவர்களுக்கும் இந்த ஆவணப்பதிவு பயனுள்ளதாக அமையும்” என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

ஏற்கனவே இந்தத்தொடரில் குறிப்பிட்டதுபோன்று பல்கலைக்கழகத்திலோ அல்லது உயர்தர வகுப்பிலோ பயிலும் மாணவர்கள் தமக்கு கிடைக்கும் தவணைவிடுமுறை காலங்களில் எந்தவேலையும் இன்றி வீட்டில் இருக்கிறார்கள். அல்லது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றிவருகிறார்கள். வெளிநாடுகளில் இருப்பதுபோன்று விடுமுறைக்காலங்களில் அல்லது வார விடுமுறைநாட்களில் பகுதிநேர வேலை செய்து உழைத்து சம்பாதிக்கும் நடைமுறைகள் இலங்கையில் இல்லை.

“ஏன்….இல்லை?”எனக்கேட்டால்,“ படித்துவிட்டு பட்டம்பெற்றுவிட்டு இருப்பவர்களுக்கே இங்கே வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கும் எமக்கா தரப்போகிறார்கள்?” என்று திருப்பிக்கேட்டார்கள். இலங்கை அரசும் கல்வி அமைச்சும் இதுதொடர்பாக ஆராயவேண்டும்.
வெளிநாடுகளுக்கு வருகைதரும் இலங்கை அதிபரும் அமைச்சர்களும் இந்நாடுகளில் நடைமுறையில் உள்ள அரசியல், கல்வி, சமூகம் சார்ந்த உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டும். முடிந்தவரையில் இலங்கையில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
அன்று என் முன்னால் அமர்ந்திருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் முன்வைத்தவேண்டுகோளையே சமர்ப்பித்தேன்.

“வாராந்த விடுமுறை நாட்களில் அல்லது தவணை விடுமுறைக்காலங்களில் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பிள்ளைக்காவது இலவசமாக பாடம்சொல்லிக்கொடுங்கள். ஏழைப்பிள்ளைகள் தனியார் நடத்தும் டியூஷன் வகுப்புக்குரிய கட்டணம் செலுத்தமுடியாமல் அவதியுறுகின்றனர். அத்தகைய பிள்ளைகளை தெரிவுசெய்து முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி பாடம்சொல்லிக்கொடுங்கள்.”

“ ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்” என்பார்கள் என்றவுடன் “ எங்களுக்குப்பிள்ளைகள் இல்லை சேர்” என்று ஒரு குரல் சன்னமாக எழுந்தது. நான் உட்பட அனைவரும் சிரித்தோம்.

பின்னர்,“ சேர் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.”என்று ஏகமனதாகச்சொன்னார்கள். அவர்களுக்கான தகவல் அமர்வையும் நடத்தி நிதிக்கொடுப்பனவுகளையும் வழங்கினோம்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப்பணியாற்றும் இலக்கிய விமர்சகரும் எனது நீண்டகால நண்பருமான பேராசிரியர் செ.யோகராசாவிடமிருந்து அழைப்பு வந்தது. கல்முனைக்குப்புறப்படும் முன்னர் பல்கலைக்கழகத்திற்கும் வந்து செல்லுமாறு அவர் அழைத்தார்.

செங்கலடியில் மாணவர்களிடமிருந்து விடைபெற்று பல்கலைக்கழகம் வந்து அங்கு அவரையும் விரிவுரையாளர்கள் சித்திரலேகா மௌனகுரு, அம்மன்கிளி முருகதாஸ் ஆகியோரையும் சந்தித்து உரையாடினேன். அங்கு இலக்கியம்தான் பேசுபொருளாக இருந்தது. இம்மூவரையும் இறுதியாக 2011 இல் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலேயே சந்தித்திருந்தேன். இவர்கள் ஈழத்து இலக்கியப்பரப்பில் மிகுந்த கவனிப்புக்குள்ளான விமர்சகர்கள். கல்வி நிதியத்தின் பணிகளையும் ஏற்கனவே நன்கு அறிந்திருந்தவர்கள்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு துணைவேந்தர் நிதியம் ஊடாக உதவ முடியாதிருக்கும் நிருவாகச்சிக்கல்கள் குறித்தும் அவர்களிடம் விளக்கினேன். நிதிக்கொடுப்பனவிற்கும் நாம் வெளியே மண்டபம் தேடவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் சொன்னேன். உரிய இடங்களுக்கும் பீடங்களுக்கும் இந்த உண்மைகள் தெரியவேண்டும்.

கிழக்கு பல்கலைக்கழக சந்திப்பை முடித்துக்கொண்டு கல்முனைக்குப்பயணமானேன். அங்கே பெரியநீலாவணை விஷ்ணுமகா வித்தியாலயத்தில் பயிலும் சில மாணவர்களை சந்திக்கவேண்டியிருந்தது. இந்த வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம்.
அவரது இல்லத்திற்கு செல்லும்பொழுது மாலை ஆறு மணியாகிவிட்டது. மறுநாள் அந்தப்பாடசாலையில் பொங்கல்விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
மாணவர்களை சந்திக்கும் அதேவேளையில் அந்த விழாவிலும் கலந்துகொள்ளுமாறு அதிபர் அழைப்புவிடுத்தார். ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கு நடந்த மாணவர் ஒன்று கூடல் நிதிக்கொடுப்பனவு நிகழ்வுகளுக்கு நண்பர் நடேசனும் உடன் வந்திருக்கிறார்.

2010 டிசம்பரில் மீண்டும் அங்குள்ள மாணவர்களை சந்திக்கச்சென்றவேளையில், பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதரசிங்,யாத்ராஇதழின் ஆசிரியரும் நாம் நடத்திய மாநாட்டின் அமைப்புச்செயலாளருமான அஷ்ரப் சிஹாப்தீன், கிழக்கிலிருந்து வெளியாகும் செங்கதிர் இதழின் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் வந்திருக்கிறார்கள் அஷ்ரப்சிஹாப்தீன் குறிப்பிட்ட சந்திப்பு பற்றி பின்னர் இருக்கிறம் இதழ்,தினக்குரல் வார இதழ் ஆகியனவற்றில் விரிவாகப்பதிவுசெய்துள்ளார்.

முதல்நாள் இரவு அதிபரின் இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டேன். இங்கு பயிலும் எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் சிலர் உயர்தர வகுப்பில் விஞ்ஞானம் கற்பதற்காக வேறு பாடசாலைகளுக்கு இடம்மாறிச்சென்றுள்ள தகவலை அறியமுடிந்தது.எனினும் தொடர்ந்து நிதியத்தின் உதவி அவர்களுக்கு கிடைத்துவருகிறது.
பாடசாலை பொங்கல் விழாவில் கல்வி அதிகாரிகள் ஊர்ப்பிரமுகர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மு. சடாட்சரனும் வருகைதந்து உரையாடினார்.
கிழக்கு மாகாணப்பயணத்தை முடித்துக்கொண்டு
ஊருக்குத்திரும்பினேன். நான் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி நீண்டகாலமாக ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. அதனால் ஊரின் உண்மைகளையும் தெளிவுபடுத்திவிட்டு இந்த பயணியின் பார்வையில் முதலாவது அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.
ஏற்கனவே வெளியான எனது நினைவுக்கோலங்கள் கதைக்கோவையின் முன்னுரையில் ஓரளவு சொல்லியிருக்கின்றேன்.
நீண்டநெடுங்காலமாக நீர்கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தபோதிலும், சின்னரோமாபுரி என்று வர்ணிக்கப்பட்டபோதிலும், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் இந்த ஊரை பூர்வீகமாகக்கொண்டவர்கள்.
அனைத்து இனத்தவர்களுக்கும் பாடசாலைகள் இருப்பதுபோன்று அனைத்து மதத்தவர்களுக்கும் வழிபாட்டிடங்கள் இருக்கின்றன.
கொழும்பின் வடமேற்கே இந்துசமுத்திரத்தின் கரையை தழுவியிருக்கும் இந்த ஊரை வந்தோரைவாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்றே வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் அழைக்கின்றார்கள். இந்து தமிழ்மக்கள் செறிந்து வாழும் கடற்கரைவீதியில் மூன்று பெரிய கோயில்கள் இருக்கினறன. தவிர மேலும் நான்கு கோயில்கள் ஊரின் புறநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ளன.

இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) தெரிவானவர் எஸ்.கே. விஜயரத்தினம் என்ற பெரியவர். இவர் வடக்கே காரைநகரிலிருந்து வந்து நீர்கொழும்பில் பதில் நீதிவானாகவும் கடமையாற்றியவர். அவரைத்தொடர்ந்து அவரது சகோதரர் எஸ்.கே. சண்முகம் அவரது மகன் ஜெயம் விஜயரத்தினம் ஆகியோர் மாநகரசபைக்குத்தெரிவானார்கள். இன்றும் யாராவது ஒரு தமிழர் அந்த இடத்தை பிரிதிநிதித்துவம் செய்துவருகிறார்கள்.

நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் அமரர் விஜயரத்தினம் அவர்கள் தலைவராக இருந்த காலப்பகுதியில் (1954 இல்) உதயமானதுதான் விவேகானந்தாவித்தியாலயம். 32 இந்து தமிழ் மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப்பாடசாலையின் முதலாவது மாணவன் இந்தப்பத்தியை எழுதிவருபவன் என்பதும் உண்மை.

பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் வரையில் கொழும்பு விவேகானந்தா சபையின் நேரடி கண்காணிப்பிலும் பெற்றோர் ஆசிரியர்களின் உதவியிலும் வளர்ந்து காலப்போக்கில் கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு இந்து தமிழ்க்கல்லூரியாக ஒரு கலங்கரைவிளக்கமாக எழுந்திருப்பதுதான் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.

திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், உட்பட காருக்குறிச்சி அருணாசலம், நாச்சிமார்கோயிலடி கணேசன், பஞ்சமூர்த்தி – காணமூர்த்தி கலைஞர்கள் மட்டுமன்றி தமிழக படைப்பாளிகள்,ஈழத்து முன்னணி படைப்பாளிகள் அறிஞர்கள் கால் பதித்து நடமாடிய நகரம்.
அங்கே இன்றும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் வாழ்கிறது.
அப்படியாயின் அங்கே சிங்களவர்களாக மாறியவர்கள் யார்? அந்த ஊருக்கு வந்த சில சிங்கள கத்தோலிக்க மதகுருமாரே அதற்குப்பிரதானமான காரணம். அவர்கள் தேவாலயங்களில் சிங்களத்தில் பூசை நடத்தினார்கள். சிங்களம் கற்றால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்று பரப்புரை செய்தார்கள். அதனால் சிங்களம் பேசும் கத்தோலிக்க சமுதாயம் காலப்போக்கில் உருவானது.
மணல்சேனை, ஏத்துக்கால், நஞ்சுண்டான்கரை, கொச்சிக்கடை,தோப்பு, முன்னக்கரை, மாங்குழி,பலகத்துரை, பெரியமுல்லை, காமாச்சோடை,குட்டித்தீவு முதலான பெயர்களுடன் இன்றும் அங்கே பலபிரதேசங்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். கடற்கரை வீதியை குட்டி யாழ்ப்பாணம் என்றும் சொல்லலாம்.

நீர்கொழும்பு சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்களமொழியினால் கபளீகரம் செய்யப்பட்ட பிரதேசம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், எழுதிக்கொண்டிருப்பவர்களை நீர்கொழும்பு வருக… வருக….என்று அழைக்கிறது.
நீர்கொழும்பு தொடர்பாக பல ஐதீகக்கதைகளும் இருக்கின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்தன் நிகும்பலை யாகம் நடத்தியது இங்குதான் என்பதற்கு அடையாளமாக மழைவெள்ளம் வந்தால் குளமாகிவிடும் மைதானங்களும் இருக்கின்றன. சில குளங்கள் தூர்ந்துபோய் அங்கே பஸ்நிலையங்களும் கட்டிடங்களும் வந்து விட்டன.

தமிழர்களாகிய நாம் அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஆங்கிலமும் சில ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பியமொழிகளும் கற்றால்தான் அரசாங்க உத்தியோகமோ அல்லது வேலைவாய்ப்போ கிடைக்கும். அதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆங்கிலேயர்களாகவும் வெள்ளை இன ஐரேப்பியர்களாகவும் மாறிவிட்டார்களா?

தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் ஏன் தமிழில் எழுதுவதற்கும்கூடத் தெரியாமல் தமிழ் உணர்வோடும் தமிழ் அடையாளத்தோடும் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களை எனக்குத்தெரியும்.

நீர்கொழும்பில் சிங்கள கத்தோலிக்க மத குருமார்களினால் பல கத்தோலிக்க குடும்பத்துப்பிள்ளைகள் சிங்களம் கற்கத்தூண்டப்பட்டார்கள். அதனால் அவர்களின் பாடசலைமொழி மட்டுமல்ல வீட்டுமொழியும் சிங்களமாகியது.

அவுஸ்திரேலியா,அமெரிக்கா, இங்கிலாந்து , நியூசிலாந்து முதலான நாடுகளில் எமது பிள்ளைகளுக்கு பாடசாலைமொழியாகவும் வீட்டுமொழியாகவும் ஆங்கிலம் வந்ததுபோன்று, ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய மொழிகள் பாடசாலைமொழியாகவும் வீட்டுமொழியாகவும் மாறியதுபோன்று நீர்கொழும்பில் பல கத்தோலிக்கர் குடும்பங்களில், சிங்களம் பாடசாலை மற்றும் வீட்டுமொழியாகிவிட்டது.

ஆனால் நீர்கொழும்பில் பூர்வீகத்தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் இன்றும் தமிழர்களாகவே வாழ்ந்து தங்கள் அடையாளத்தைப் பேணுகின்றனர்.
அவர்களை எவரும் ஆக்கிரமிக்கவில்லை. நம்பினால் நம்புங்கள். இதுதான் உண்மை. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துமத்திய கல்லூரியிலும் சில மாணவர்களுக்கு எமது கல்வி நிதியம் உதவுகிறது. அதிபர் திரு. கணேசலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்தக்கல்லூரி அடுத்த ஆண்டு 60 ஆண்டுகளை பூர்த்திசெய்யவிருக்கிறது. ஆறுதசாப்தகாலமாக இக்கல்லூரி இங்கு வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்காகத்தான் இயங்குகிறது. இந்தத்தமிழர்களில் பலருக்கு என்னைப்போன்று சிங்களம் பேச முடியும். அதற்காக அவர்களை சிங்களவர் என்று தப்புக்கணக்குப்போடவேண்டாம்.
நீர்கொழும்பைப்பற்றி மேலும் அறியவிரும்புபவர்கள்,
http://www.negombotamilweb.blogspot.com
என்னும் வலைத்தளத்தை பார்வையிடலாம்.
தேனாலி படத்தில் கமல்ஹாசன் பேசிய இலங்கைத்தமிழைப்பார்த்துவிட்டு, அதன் விழாவொன்றில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,“ அதனை சிங்களத்தமிழ்” என்ற குறிப்பிட்டார்.
அவரது அறியாமையை உடனே போக்கினார் அறிவிப்பாளர் பி.எச். அப்துல்ஹமீட்.

உண்மைகளுக்கு சுடும் இயல்பு இருப்பதுபோன்று அறியாமையைபோக்கும் குணமும் இருக்கிறது.ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் எல்லோருமே ஆங்கிலேயர்கள் இல்லை என்பதும் உண்மைதானே?
வாசகர்களுக்கு நன்றி.

(பயணியின் பார்வை, இனி இரண்டாவது அங்கத்தில் தொடரும்)

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முகபுத்தகத்தில் ஈழம்…!!!

Puthuvai RatnathuraiThis was sent to me by a girl who was an LTTE fighter who lost both her legs. She was given away in marriage to a tiger doctor by Mathivathani.

This letter typifies the current attitude and the situation prevailing amongst remnants of LTTE

Sundar

முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில் பந்தாடப்படும் விடயம் ஈழம்.

இன்றைய முகபுத்தகத்தில் தமிழர்களை ஈழ ஆதரவு ரீதியில் இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று அதாவது ஈழம் பற்றி பதிவுகள் இட்டு ஈழபோராட்டம் பற்றிய சாதனைகளை பேசிகொண்டிருப்பது. இவர்கள் கண்டிப்பாக இலங்கை அரசின் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள். இவர்கள் தான் ஈழஆதரவாளர்கள். இவர்கள் தான் இங்கு பெரும்பான்மை.
இரண்டு, யதார்த்தவாதிகள் சாதனைகளை விடுத்து, விட்ட பிழைகள் என்ன, எதனால் நாங்கள் இந்த நிலையில் இப்போது இருக்கிறோம் எவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் அவற்றை திருத்தி கொண்டால் தான் மீண்டும் இதுபோன்ற நிலை எங்களுக்கு வரக்கூடாது என்பதுக்கான இதுபோன்ற உரையாடல் நடத்தும் சிறுபான்மை யதார்த்தவாதிகள். இவர்கள் முதல் பிரிவினரின் பார்வையில் துரோகிகள், அவர்களால் பந்தாடப்படும் அதன் விளைவால் அமைதி காக்கவும் முடிவெடுத்தவர்களும் இதில் அடங்கும்…

ஈழத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரம் வசதி செல்வாக்கு படைத்தவர்கள், வெளிநாடு போகும் வழி தெரிந்தவர்கள் எல்லோரும் அன்று ஈழத்தில் நண்பர்கள் உறவினர்களை போராட விட்டுவிட்டு சுயநலம் கொண்டு தன்னுயிர் காக்க சென்று விட்டார்கள். எங்கள் ஒற்றுமையின்மை இங்குதான் ஆரம்பிக்கின்றது. ஈழ போராட்டத்துக்கு முதல் துரோகமும் இங்கு தான் ஆரம்பிக்கின்றது இவர்களை தவிர்த்து எஞ்சியவர்களினால் உலகமே திரும்பி பார்க்குமளவுக்கு போராட்டம் வளர்க்கபட்டது . இந்த முதல் துரோகத்தை ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழர்களும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் ஆனால் இவர்களில் சிலர் சொல்கிறார்கள் பணம் கொடுத்ததால் தான் போராட்டம் வளர்ந்ததென்பதால் இவர்களும் மாவீரர்கள் போல் சமமாக பேசுகிறார்கள். இப்படி பேசுவது சரியல்ல மாவீரர்களின் , போராளிகளின் தியாகங்களை பணதுடன் ஒப்பிட்டு கொச்சை படுத்துவது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கின்றதல்லவா?. விட்ட பிழைகளை நாங்கள் உணராதவரை நாளை சரியான பாதையை அமைத்து விட முடியாது. எங்களுக்காக போராடி இன்று (இறந்த பெண்ணின் உடையை கிழித்து இச்சையை தீர்துகொள்ளும்) இராணுவத்திடம் பிடிபட்டு அங்கங்களை இழந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என எதோ ஒரு வழியில் எஞ்சியவர்கள் இன்று பரிதாபத்துக்கு உரியவர்களாக இருக்கின்றார்கள். இதில் சில பெண்கள் விபச்சாரம் செய்வதாகவும், சிலர் பிச்சை எடுப்பதாகவும்இ சிலர் இவை முடியாமல் தற்கொலை செய்ததாகவும் நாங்கள் தினம் தினம் அறிகின்றோம் அல்லவா?.

இருந்தும் பயன் இல்லை. இப்படி ஒரு சுயநல இனத்துக்காக போராடியது மிக பெரிய தவறென்று இன்று பலர் தங்கள் வாயால் சொல்ல முன் வந்திருகுமளவுக்கு எங்கள் செயல் அவர்கள் மனதை புண்படுத்தி இருக்கின்றது. இதில் சிலர் எஞ்சி வந்தவர்களை சந்தேக கண்ணோடு பார்கிறார்கள் இவர்கள் எப்படி உயிருடன் தப்பி வந்தார்கள் ஒரு வேளை மற்றவர்களை காட்டி கொடுத்து தப்பி வந்திருப்பார்களோ என சிந்திச்சு இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். போராட்டமும் போராளிகளும் இப்படி தமிழர்கள் மத்தியில் நடை முறையில் இருக்க………… முக புத்தகத்தில் ??????????

இப்போதும் ஈழத்தில் இருக்கும் தமிழனுக்கும் புலம்பெயர்ந்து சென்ற தமிழனுக்கும் வாதம் நடக்கின்றது , இதில் ஈழத்தில் இருக்கும் நண்பன் தனது உண்மை முகம் பெயர் மறைத்து அரசியல் பேசுகிறான் பாதுகாப்புக்காக ஆனால். ஈழத்தில் இருக்கும் நண்பனிடம் புலம் பெயர்ந்த நண்பன் கேட்கின்றான் உன் உண்மையான பெயர்,படம் போட்டு வாதிடலாமே இவ்வளவு பயமா உனக்கு புலிகள் பிறந்த மண்ணில் தானே நீயும் பிறந்தாய் எங்கிருந்து வந்தது உனக்கு பயம். நீ வீரனா? உண்மை தமிழனா? நீ ஒரு கோழை….இப்படியாக பலர் அந்த குழுவில் சேர்ந்து சிறிது தயக்கம் கூட இன்றி கேட்கிறார்கள் அன்று எதுக்காக அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள் என்பதை மறந்து…..

ஈழத்தில் உள்ள மக்கள் எவற்றை எல்லாம் இழக்ககூடாதோ அவற்றை எல்லாம் இழந்துவிட்டார்கள் இவர்கள் இழப்பை புலம்பெயர்ந்து இருப்பவர்கள் குடியுரிமையாக்கி கொண்டார்கள்.

இன்று இறுதி யுத்தத்தில் கைகள்,கால்கள், சகோதரர்கள்,பெற்றவர்கள்இ பிள்ளைகள், உறவுகள்இ சொத்து,நிலம், வீடு என எல்லாவற்றையும் இழந்து எப்படியான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்? இவர்கள் மனநிலை எப்படி இருக்கும். இது பற்றி யாருக்கு என்ன கவலை? அடுத்த யுத்தம் எப்போது வெடிக்கும்? இதுதான் அவர்களின் இப்போதைய கவலை. அப்படி ஒரு யுத்தம் ஈழத்தில் வெடிக்கனும் என ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

எதுக்காக போராடவா??????

குளிர்காயவா??????????

அண்மையில் ஒரு குழுவில் ஒருவர் பதிவொன்றை இட்டார். இந்த செய்தி போலியானதும் கூட ஈழத்தில் எங்கோ காட்டு பகுதியில் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்பது போல அந்த பதிவின் பின்னூட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொட்டிய வார்த்தைகளை தாங்க முடியவில்லை உண்மையா, உண்மையா அப்படி ஒரு சந்தோசம்.. ஆனால் அதில் யாரும் சிந்தித்து பார்த்தது போலவே தெரியவில்லை இது சாத்தியமா? இப்போது ஈழ மக்கள் இருக்கும் மனநிலையில் எப்படி இது சாத்தியமாகும் புலம்பெயர்ந்த தமிழர்களா சென்று போராட போகிறார்கள் அது எந்தளவுக்கு சாத்தியம்??? இப்போது ஈழத்தில் குற்றுயிராக இருக்கும் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வெடித்தால் அந்த மக்கள் நிலை என்ன? சிந்திக்க யாரும் இல்லை…இப்படியாக நாங்கள் செய்த சாதனைகள் வெற்றிகள் இது பற்றி பேசி பேசியே காலத்தை விரயமாக்குவதோடு
இதுதான் வீரம் இதுதான் நாட்டு பற்று என்பதுபோல குழு அமைத்து பேசிபேசியே காலம் கடத்தி மனதை சமாதனபடுத்தி சந்தோசம் காண்பதில் என்ன லாபம்?

இன்றைய தமிழனின் மனநிலை தான்,தனது குடும்பம் பாதுகாப்போடு இருக்கவேண்டும் ஆனால் அடுத்தவன் போராடி ஈழம் மலரவேண்டும்…. !!!

இப்படியான மனநிலைகளை நீங்கள் இன்றைய முகபுத்தகத்தில் பரவலாக காணலாம். என்னால் வெற்றி பெறமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும் நான் என்னென்ன பிழைகள் செய்தேன் எதனால் நான் தோற்றுபோனேன் என்பதை அராய்ந்து பிழைகளை திருத்தி கொண்டால் தானே நான் வெற்றி பெற முடியும் அதை விடுத்து நான் செய்த சில சாதனைகள்இ வெற்றிகளை திரும்ப திரும்ப நினைத்து பேசி பெருமிதமடைந்துகொண்டிருந்தால் என் தோல்வி வெற்றியடையுமா? பிழைகளை பற்றி நான் நினைப்பது தவறுகளை பேசி விவாதித்து கேள்விகள் கேட்டு தெளிவது துரோகமென நான் நினைத்தால் வெற்றி சாத்தியமா? இதுதான் இன்றைய முகபுத்தகத்தில் ஈழ அரசியல், மறுவாழ்வளிக்க பட்ட புலிகள் நடு வீதியில் அநாதரவாக இருக்க வாழ வழி இன்றி நலிந்து நிற்க பழைய புலிகளின் புகழ் பாடிகொண்டே இருக்கின்றார்கள் சிலர் இதன் பயன் என்ன என கேட்பவன் துரோகி. இங்கு ஈழமும் இவர்களால் போலிமுகம் கொண்டு நிஜமென நம்ப நடிக்கின்றது ……..

இனி இதுதான் ஈழ போராட்டமோ?
…………………
………………………………………………………………………………

தாயகம் மீட்டிட உரிமையை காத்திட
பெரும் கடமை கொண்டவர்
சுயநல செல்வாக்கு வசதியால்
தன்னுயிர் காத்திட புலம் விட்டு ஓடினர்
இவர்கள் அன்றைய துரோகிகளாகினர்

தொடங்கிய யுத்தத்தை முடித்திட எண்ணி
பூக்களும் ஆயுதம் ஏந்தின
ஈழகவிஞரோ ஓடியவர் தனை
கோழையென வசை பாடியே
எஞ்சியவர் மூளையை சலவை செய்தனர்

இறுதியில் அரும்புகள் கைகளிலும்
உயிர்கொல்லி ஆயுதம் திணித்தது
பணங்களை அள்ளி வீசியே
வன்னியில் இருந்தவர் யுத்தம் வளர்த்தனர்

யுத்தத் தீயினை காரணம் சொல்லியே
குடியுரிமை பெற்று குளிர் காய்ந்தனர் பலர்
பொருளாதார அரசியல் மலிந்த உலகினில்
பல நாடுகள் துணையுடன் ஈழத்தை அழித்திட
போர் என்ற பெயரில் பெரும் சூழ்ச்சி நடந்தது

ஆணிவேரற ஈழ மரமும் சாய்ந்தது அதில்
விதைகள் விழுதுகளென எண்ணி
அரும்புகள் முதல் சருகுகள் வரை
ஆயிரமாயிரம் சனம் துடிதுடித்தழித்தனர்
எஞ்சிய குற்றுயிர் உறவுகளில்
அங்கங்கள் இழந்தவரில் ஆயிரம் பிஞ்சுகள்
இப்படியானது ஈழவரலாறு
இருந்தும்
இன்னொரு போர் மூண்டிடாதா என
ஓநாய்கள் அழுகின்றது எஞ்சிய மக்களையும்
கொண்றிட சந்தர்ப்பவாதிகள் சூழ்சிகள் தொடருது
நாடு கடந்து நின்றே வீரம் பேசி நிக்குது
காசு கொடுத்தது வீரம் என பேசி நிக்குது
இவர்கள் இன்றைய வீரர்கள்

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள்
வாழ்க்கை வீதியில் நிக்குது
எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என
எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே
பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில்
இவர்களை ஒதுக்கியே வைக்குது
அன்றைய போராளிகள்
இன்றைய துரோகிகள் என்கிறது
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா…..!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Counting the Dead

Who Speaks for Sri Lanka’s Tamils?
Islandjaffna

Padraig Colman

An article I posted on Groundviews on May 28 elicited many responses.

http://groundviews.org/2013/05/28/sri-lankas-numbers-game/

On May 16, a seminar was held at the Marga Institute to launch a publication by the Independent Diaspora Analysis Group – Sri Lanka (IDAG-S) – The Numbers Game: Politics of Restorative Justice.

Dr Godfrey Gunatilleke, Chairman Emeritus of the Marga Institute, opened the proceedings by answering the question: “Do numbers matter”. He acknowledged that, while even a low number of civilian casualties was cause for anguish, citing large and inaccurate figures could only inhibit the healing process.

After careful consideration, the IDAG-S concluded that the civilian death toll in the final months of Eelam War IV was probably between 15,000 and 18,000. This estimate itself has been challenged by Professor Rajiva Wijesinha, who points out that “only 6000 injured were taken off by the ICRC (Red Cross) ships over four months, along with bystanders, suggesting that the figure of the dead would have been less.” The 18,000 figure includes civilians killed by the LTTE, the IDAG-S says, although “it is probable that more were hit by government fire than by the LTTE, the latter’s ‘work’ in this sphere was not small”.

The IDAG-S estimate is, despite the ire of some critics, somewhat higher than some calculations by Tamils.

Rajasingham Narendran talked to IDPs who had fled the last No-Fire Zone in April 2009 and later with IDPs at Menik Farm and elsewhere. He said : “My estimate is that the deaths — cadres, forced labour and civilians — were very likely around 10,000 and did not exceed 15,000 at most”. Muttukrishna Sarvananthan of the Point Pedro Institute said “[approximately] 12,000 [without counting armed Tiger personnel] “.Dr. Noel Nadesan: “”roughly 16,000 including LTTE, natural, and civilians”. Note that Nadesan includes fighters and natural deaths. In any population, a number would die from natural causes of ill health or medical misadventure at child birth or operation. On 13 March 2009, UN Human Rights Commissioner Navi Pillay issued a press release saying that as many as 2,800 civilians “may have been killed”. Data compiled by the South Asia Terrorism Portal, data “primarily based on figures released by the pro-LTTE Website Tamil Net”, put the casualty figure for civilians inside Mullaithivu at 2,972 until 5 April 2009.

IADG-S consider that Frances Harrison and Alan Keenan, by claiming 147,000 civilian deaths, have moved “into the realms of statistical fantasy in ways that raise questions about their integrity/ morality”. “It would seem that such spokespersons are motivated by moral rage and retributive justice. They seek regime change in Sri Lanka – a form of 21st century evangelism that is imperialist in character and effect.”

Response from TGTE

The first response to my Groundviews article came from Usha S Sri-Skanda-Rajah. Dr Sri-Skanda-Rajah has long lived in Toronto but claims to speak for those Tamils who lived in Sri Lanka under the brutal rule of Prabhakaran. She continues to campaign for a separate Tamil state in Sri Lanka. She describes herself as “Senator Transnational Government of Tamil Eelam”. Her Groundviews comment was highly critical of my article and of the IDAG-S report, although she later admitted that she had not actually read it. In her first comment she said: “Numbers don’t matter, it is the truth that matters”.

Conciliation

In a conciliatory spirit, Amar Gunatilleke of the Marga Institute responded to the senator: “I accept the fact that terrorism in Sri Lanka was born because of grievances of the Tamil people. There is no debate on that. I don’t want to debate on what became of the LTTE later and how it ended. We all have to accept our faults if we are interested in reconciliation…. My personal view on this whole matter is that one cannot have lasting peace and reconciliation unless there is collective atonement, admission of guilt, confession, repentance, forgiveness. Forget the state, the Rajapaksas. Can you and I do this together? Are you interested?”

The senator’s response was: “there are gaping holes in your offer”. Amar responded: “Even if a small group of civil society, private sector organizations and NGOs involved in humanitarian work can make a difference in the lives of some of the people who were affected by the war, I will find peace and joy in my life by being involved with such group.”

Does the Diaspora Speak for Tamils in Sri Lanka?

In an exchange with me Amar said: “It will be interesting for the Tamil diaspora to hear what some Tamils in the North actually have to say. I can arrange that if they are interested. I will leave it at that. As a starting point maybe we should arrange that.” Throughout the comment thread, Dr Sri-Skanda-Rajah’s position was challenged. It was particularly telling when she was challenged by Tamils who had lived in Sri Lanka throughout the war.

Here is one: “I am really fed up, as a Tamil, to be told by those of you who live in the west in your comfy postcodes that you represent me. None of you do, because during the war when you all left, it was the poor Tamils without exit options who died…and it was their sons and daughters, who were either conscripted by force or went willingly, who died. During the final days of the war, in the west, it was quite the rage to walk around with wrist bands and banners saying ‘free Tamil Eelam’ …but no one among them sent their children back to fight…oh no, it was all OK for some poor mother’s son to die, but not their precious offspring…. Let us turn away from calls for separation, but instead look for ways to ensure equal rights for Sinhalese, Tamils, Muslims and Burghers and please help us celebrate our diversity instead of going behind pipe dreams.”

The TGTE Case According to

the Senator

The senator frequently resorted to the clarion call of those with entrenched positions who are not prepared to do the work required to present a logical argument. “Do your homework”. I have had similar calls from committed Catholics, dedicated Muslims, convinced Zionists, militant atheists. It means that the truths of which they are convinced are so obvious that it is up to their opponents to do the heavy lifting.

The senator persistently refused to answer direct questions. She did provide long list of links which she claimed supported her argument that large numbers of civilians were deliberately killed by government forces in pursuit of a policy of planned extermination of the Tamil race. David Blacker tirelessly checked out these links and found them to be spurious or irrelevant. One link leads to a collection of videos with titles varying from Vampire Weekend to Trampoline Fails. Another redirects to a page advertising a mobile ringtone and game called Chicken 2. Another says “Oops page not found”. The “evidence” she presents consistently and disingenuously confuses dead Tigers with dead civilians.

David Blacker: “Usha, you say that the GoSL has killed all dissent on the Tamil side; but isn’t it true that it was the Tigers that destroyed all other Tamil voices? Isn’t it a fact that this action ensured that once the Tigers were destroyed that there was no other Tamil voices? Isn’t it also true that by destroying all other representatives of the Tamils and usurping the role of sole representation the Tigers ensured that any voice of Tamil dissent in the foreseeable future would be bound to the Tigers by association? Also, do you not see the TNA as a voice of Tamil dissent? Or do you believe that your unelected so-called government in exile is the sole representative of the Tamils now?”

The Future?

David Blacker further commented: “the Tamils need to take a good look at what has led them to the place they are in and stop repeating the mistakes that got them there and disassociate themselves from people who got them there; people who do not have their best interests in mind. The waving of Tiger flags in international capitals was directly instrumental in preventing foreign governments from interfering. So why do the very same damaging things and think that now it’ll be different? That self-examination is not happening.”

Amar Gunatilleke commented: “After going through 142 comments I could see only a handful of suggestions regarding the way forward posted by those who were not present at the Seminar.”

David Blacker replied to Usha: “I would expect a far higher quality of debate from a self-declared representative of the Tamils.” He continued: “This is symbolic of the Tamil Diaspora’s total lack of commitment to the cause that their SL brethren died for; you threw some money at the problem and got on with your lives over there in the west. Now, you are bitter at the defeat, but still are unwilling to actually do what is necessary.”

I will let the Tamil who calls himself “Fed Up” have the last word: “Please understand Usha, that I would love to see Tamil activists committed to ensuring our rights within a unified country. My concern about this separate state is that even if you get it, how will Tamils treat fellow Tamils, let alone those of other ethnicities? The caste system is alive and well in the north, so will low caste people be allowed into top positions? If you are fighting against racism, will you allow a Muslim or Sinhalese into top positions in Tamil Eelam? Usha, practically speaking, why don’t the TGTE conduct a survey amongst the Tamils who live in Sri Lanka, to find out what we really want….don’t claim that you speak for all of us without finding out what we who live here, really want.”

The Marga Institute plans to undertake research to enable the views of Tamils living in Sri Lanka to be heard. Watch this space.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மனைவி இருக்கிறாவா…? Is your wife at home?

TREES_

முருகபூபதி

இந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம்.

அன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

“ கையில் வேலை. நீங்களே போய்ப்பாருங்கள்” என்று அவளும் உரத்த குரலில் சொன்னாள்.

யார்… இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும். எவரும் வருவதாக இருந்தால் முற்கூட்டியே சொல்லியிருப்பார்கள். பத்து நிமிட கார் ஓட்டத்தூரத்திலிருக்கும் இரண்டாவது மகள் அன்று மாலை வருவதாகவும் சொல்லவில்லையே… தற்பொழுது நாம் இருப்பது மெல்பன் நகரிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிராமமும் அற்ற மாநகரமும் அற்ற சனசந்தடி செறிவற்ற மிகவும் அமைதியான பிரதேசம். மெல்பனிலிருந்து இந்த மாலைவேளையில் எவரும் புறப்பட்டு வந்திருக்கமாட்டார்கள். வந்திருப்பது யாராக இருக்கும்? என்ற யோசனையுடன் எழுந்துசென்று வாசல் கதவைத்திறந்தேன்.
ஒரு அழகிய இளம் யுவதி. முப்பது வயதிற்குள் மட்டிடலாம். புன்முறுவலுடன் மாலை வணக்கம் சொன்னாள். நானும் பதிலுக்குச் சொல்லிவிட்டு உள்ளே அழைத்தேன். ஆனால் அவள் உள்ளே வராமல் வாசல் கதவுக்கு வெளியே நின்றவாறே உரையாடினால். அவளது ஒரு கையில் ஒளிப்படங்கள் பதிவுசெய்யப்பட்ட சிறிய அட்டைகள். அத்துடன் ஒரு ஹேண்ட்பேக்.
எமது உரையாடல் ஆங்கிலத்தில் அமைந்தது. அதனை தமிழ்ப்படுத்தினால் இப்படித்தான் இருக்கும் என நம்புகின்றேன்.

“ சொல்லுங்கள்… என்ன விடயம்?”

“ நான் வேர்ல்ட் விஷன் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகின்றேன். ஒரு ஏழைப்பிள்ளைக்கு உங்களால் உதவமுடியுமா?”

“ ஏற்கனவே நாங்கள் இலங்கையில் போரிலே பெற்றவர்களை இழந்த ஏழைப்பிள்ளைகளுக்கு உதவி வருகின்றோம்.”

“ அப்படியா…? மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இலங்கையரா? இலங்கையில் கொழும்பா?”

“ இல்லை அதற்கு சமீபமாக உள்ள ஒரு மேற்குகரையோர நகரம் நிகம்பு. நீங்கள்..?”

“ இந்தியா. வடக்கு பஞ்சாப்.”

“ நல்லது இந்தியரான நீங்கள் ஆபிரிக்க நாட்டுப்பிள்ளைகளுக்கு உங்கள் அமைப்பின் ஊடாக உதவுகின்றீர்கள். சிறந்த மனிதாபிமான பணிகளை வேர்ல்ட் விஷன் செய்வது அறிவேன். எனது மகனும் ஒரு பிள்ளைக்கு உதவிவருவதாக அறிகின்றேன்.”
“ அப்படியா… நல்லது. மகன் எங்கே இருக்கிறார்?”

“ அவன் தொலைவில் தென்அவுஸ்திரேலியா மாநிலத்தில் இருக்கிறான். தற்பொழுது உடல்நலக்குறைவினால் நான் வேலைக்குச்செல்வதில்லை. அதனால் சற்று பொருளாதார நெருக்கடி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் சேவைக்கு உதவமுடியும். ஏற்கனவே எமது குடும்பம் இலங்கையில் சில பிள்ளைகளுக்கு உதவிவருகிறது. தற்பொழுது உங்களது வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன்.”

“ பரவாயில்லை… நீங்களும் பிள்ளைகளுக்கு உதவுவதாக சொல்கிறீர்கள்… நல்லது. அதுபற்றிய ஏதும் பிரசுரங்கள் இருக்கிறதா.. .பார்க்க விரும்புகின்றேன்.”

“ ஆம்… நிச்சயமாக.. .உள்ளே வாருங்கள். எடுத்துவருகின்றேன்.”

நான் வீட்டினுள்ளே திரும்பிச்சென்று எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் இந்த ஆண்டுக்கான 40 பக்க அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை அடங்கிய பிரசுரத்தை எடுத்து வந்து கொடுத்தேன். அப்பொழுதும் அந்த யுவதி வீட்டினுள்ளே வராமல் வெளியே நின்றவாறு அந்தப்பிரசுரத்தை பார்த்துவிட்டுää “ இதனை நான் எடுத்துக்கொள்ளலாமா?” எனக்கேட்டாள்.

“தாராளமாக” என்றேன்.

சில கணங்களில் அவள் கேட்ட கேள்வி என்னை துணுக்குறச்செய்தது.

“ உங்கள்… மனைவி தற்பொழுது வீட்டில் இருக்கிறாவா?”

“ ஆம்… இருக்கிறாள். பின்புறம் தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் விடுகிறாள். அழைக்கட்டுமா? “

“ இல்லை… வேண்டாம்…” எனச்சொல்லிவிட்டுää சற்று தயங்கினால். பின்னர் மூன்று செக்கண்டுகளில்ää “ உங்களது குளியலறையை பாவிக்கலாமா?” எனக்கேட்டாள்.

“ ஆம்… வாருங்கள் உள்ளே…”

நன்றி சொல்லிவிட்டு கொண்டுவந்த பேக்கையும் பிரசுரங்களையும் தரையில் வைத்துவிட்டு உள்ளே வந்தாள். அழைத்துச்சென்று குளியலறையை காண்பித்தேன். அதற்கிடையில் மனைவியும் வீட்டின் பின்புறமாக வந்துவிட்டாள். மனைவியைக்கண்டதும் அவளுக்கும் மாலைநேர வணக்கம் சொன்ன அந்த யுவதிதனது உபாதையை போக்கிவிட்டு கைகளை கழுவி சுத்தம் செய்தவாறு வந்து மனைவியுடனும் சிறிது நேரம் உரையாடினாள்.

“ இந்தப்பிரதேசம் மிகவும் அமைதியானது. உங்கள் நாட்டவர்களை மட்டுமல்ல எங்கள் இந்தியர்களையும் இந்தப்பிரதேசத்தில் அரிதாகவே பார்க்க முடிகிறது. உங்களுக்கு போரடிக்கவில்லையா? இந்த இடம் உங்களுக்கு பிடித்தமானதா?” எனக்கேட்டாள்.

நான் குறுக்கிட்டுää “ இல்லை போரடிக்கவில்லை. எவருக்குமே தாய்நாடு விருப்பமானதுதான். ஆனால் ஏதோ விதிவசத்தால் இங்கு நாமெல்லோரும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம். இனம், மொழி மதங்களுக்கு அப்பால் நாங்கள் மனிதர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்தால் எல்லோருமே நேசத்துக்குரியவர்கள்தான்” என்றேன்.

“ சரியாகச்சொன்னீர்கள்.. .மீண்டும் சந்திப்போம்” எனச்சொல்லிவிட்டு புறப்படத்தயாரானாள்.

“ ஏதும் கோப்பி… தேநீர் அருந்துகிறீர்களா…?” என்று மனைவி அவளை உபசரிக்க முனைந்தாள்.

“ வேண்டாம். நன்றி. உங்கள் குளியலறையை பயன்படுத்துவதற்கு உதவியதே பெரிய உபசரிப்புத்தான். மீண்டும் சந்திப்போம்” அவள் விடைபெற்றாள்.

“ பாவம் அந்தப்பிள்ளை” என்றேன்.

“ ஏன்…?” எனக்கேட்டாள் மனைவி.

“அவளுக்கு வந்த உபாதையை போக்குவதற்கு சிரமப்பட்டிருக்கவேண்டும். தெருவிலே ஆட்களின் நடமாட்டமே இல்லை. எங்கள் வீட்டுக்கு வந்தாவது தனது சிரமபரிகாரத்தை முடித்துக்கொள்ள நினைத்திருக்கிறாள். எனினும் முன்னெச்சரிக்கையாக “ உங்கள் மனைவி வீட்டில் இருக்கிறாவா..?” என்று கேட்டுக்கொண்டாள்.”

நான் அப்படிச்சொன்னதும் மனைவி “அவள் புத்திசாலிப்பெண். பிழைத்துக்கொள்வாள். நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு தாக்குதல் சம்பவங்களை அறிந்திருப்பாள்தானே..?” என்றாள்.

சிறுநீர் உபாதை எத்தகையது என்பது என்னைப்போன்ற நிரிழிவு நோய் இருப்பவர்களுக்குத்தெரியும். எழுத்தாளர் – நண்பர் டானியல் ஒரு சமயம் எனக்குச்சொன்னார்ää ‘தம்பி நான் தூரப்பயணங்கள் வெளியூர் பயணங்களை முடிந்தவரையில் தவிர்த்துக்கொள்வதற்கு எனக்குள்ள நீரிழிவு வியாதியும் ஒரு காரணம்.’

ஆம் உண்மைதான். வெளியூர்ப்பயணங்களில் எங்காவது இரவில் தங்கநேர்ந்தால்ää அந்த இடத்தில் அல்லது இல்லத்தில் எங்கே மலகூடம் இருக்கிறது என்பதை கேட்டுத்தெரிந்துவைத்துக்கொள்வேன். இரவில் இருட்டில் தட்டுத்தடுமாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழக இலக்கியவாதி தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் பாம்படம் என்ற கட்டுரைத்தொகுதியை சமீபத்தில் படித்தேன். அதில் புறவழிச்சாலை என்னும் கட்டுரையில் பெருந்தெருக்களின் அருகே வளர்ந்திருந்த மரங்களை அழித்திருக்கும் கொடுமை பற்றி உருக்கமாகக்குறிப்பிட்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கொளுத்தும் வெய்யிலில் தலையில் முக்காடுபோட்டுக்கொண்டு இளநீர் விற்கும் ஒரு பெண்ணைப்பற்றி பதிவுசெய்கிறார்.

வெய்யிலில் தாகம் எடுத்தாலும் தான் விற்கும் இளநீரைக்கூட குடிக்காமல் எச்சிலை விழுங்கியவாறு தனது உபாதையை கட்டுப்படுத்தும் அந்தப்பெண்ணின் வார்த்தைகளை இங்கே பாருங்கள்:-

“ இங்கன இருந்த மரமெல்லாம் வெட்டி ரோடு போட்டப்ப நானும் காண்ட்ராக்ட்ல வேலை செஞ்சேன். அப்பவும் சரி இப்பவும் சரி… ஒதுங்குறத்துக்கு எங்க போறதுங்கிறதுதான் பொம்பிளைகளுக்குப் பெரும்பாடு. மரத்துக்குப்பின்னாடி இன்னொருத்தி காவலுக்கிருந்தா படக்குன்னு ஒதுங்கிட்டு வந்துடலாம். இதனாலயே இத்தனை இளநி இருந்தும்ää நா தாகத்துக்கு ஒண்ணும் குடிக்கிறதில்லை. எச்சியை முழுங்கிட்டே இறங்கு வெயில் வரைக்கும் தாக்குப்பிடிச்சுடுவேன். அந்த முணு நாட்களில் இன்னும் சித்ரவதை. சமயத்துல தூக்கு மாட்டிச்செத்துடலாமான்னு இருக்கும். அட அதுக்கும் ஒரு மரமில்லாம நாதியத்துப்போச்சு”

நடுவீதியில் உபாதைகள் வந்தால் ஒதுங்க ஏதாவது ஒரு இடம்வேண்டும். அந்த உபாதைகளை எழுத்தில் சொல்வதாயின் வார்த்தைகளும் வேண்டும்.
—-0—-

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்

பயணியின் பார்வையில் 20

Murugapoopathy

முருகபூபதி

கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன்.

திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை (மாணவர்களை) விடுவித்து அவர்களை க.பொ.த. உயர்தர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வகைசெய்தபோது அந்தப்பணியை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் வவுனியா கிளையே ஒத்துழைப்பு வழங்கியது.
திருகோணமலை, மட்டக்களப்பில் பல மாணவர்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவர்களுக்கும் மேற்குறித்த தன்னார்வ அமைப்பின் ஊடாகவே எமது நிதியம் உதவிவருகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் காணாமல் போனதையடுத்து அங்கு பணியிலிருந்த துணைவேந்தர்கள், மற்றும் மாணவர் நலன்பேண் அலுவலர்கள் குறிப்பிட்ட உதவிபெறும் மாணவர்களின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிவந்தார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நிதியம் ஊடாகவே எமது கல்வி நிதியம் நிதிக்கொடுப்பனவுகளை அனுப்பி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கச்செய்தது.
எனினும் எதிர்பாராதவிதமாக தமக்கு ஒரு நிர்வாகச்சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன் பேணும் அலுவலர்களிடமிருந்து தகவல் கிடைத்தது.

துணைவேந்தர் நிதியம் கல்வி அமைச்சின் கண்காணிப்பிலிருப்பதனால் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவிகளை அதில் இணைப்பதில் நிருவாகச்சிக்கல் இருப்பதாக சுற்றறிக்கை வந்திருப்பதனால் தொடர்ந்தும் துணைவேந்தர் நிதியம் ஊடாக மாணவர்களுக்கு உதவ முடியாது என்ற தகவல் கிடைத்ததும் நாம் மாற்று வழியைத்தேடினோம்.

எக்காரணம்கொண்டும் மாணவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவும் தெளிவாகவும் இருந்தோம்.

பயணங்களின்பொழுது நாம் ரயிலை தவறவிட்டால் பேருந்தில் ஏறிச்செல்வோம். அதனையும் தவறவிட்டால் வாடகைக்காவது ஒரு வாகனத்தை நாம் தேர்வுசெய்யமாட்டோமா?
இப்படித்தான் பொது வாழ்க்கையும். ஒரு கதவு மூடப்பட்டால் வேறு ஒரு கதவு திறந்தே இருக்கும். இது வாழ்க்கை
எமக்குச்சொன்ன எளிய தத்துவம்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் தேவைகளை கவனிக்க திருகோணமலை நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு முன்வந்தது.
கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் ஊடாகவே அம்பாறை மாவட்டம் தவிர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி வருகின்றோம்.

கிழக்கில் மழைவெள்ளத்தினால் எந்தப்பாதை மூடப்பட்டிருக்கிறது என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே பயணத்தை தொடர்ந்தேன். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் இந்த இயற்கையின் சீற்றத்தால் மாற்றம் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

திருகோணமலைக்கு செல்லும்போது விடிந்துவிட்டது. கன்னியா வெண்ணீர் கிணறுகளில் நீராடினால் பயணக்களைப்புத்தீரும். உடலில் புத்துணர்ச்சி பிறக்கும். அங்கு சென்றேன்.

இலங்கையில் இன்று மலிவாகக்கிடைக்கும் சிலை புத்தருடையது. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். திருகோணமலையில் நடுநாயகமாக அமைந்துள்ள பெரிய புத்தர் சிலை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்ற நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகும் அவர் அங்கே மௌனமாக நிஷ்டையில்தான் இருக்கிறார்.

அரசும் வேண்டாம் அதிகாரமும் வேண்டாம் குடும்ப உறவும் வேண்டாம் என்று முற்றும் துறந்த துறவியாகச்சென்றவரின் சிலைக்கு ஆயுதப்படையினர் பாதுகாப்பு வேலியும் அமைத்து காவல் இருக்கின்றனர்.
கன்னியா வெண்ணீர் கிணறுகள் இராவணன் காலத்து ஐதீகக்கதைகளை சொல்கின்றன. ஆனால் அங்கு இராவணன் சிலை இல்லை. இராவணன் வழிபட்டதற்கான அத்தாட்சி தரும் சிவன் சிலையும் இல்லை. ஆனால் ஒரு சிறிய சிவன் கோயில் இருக்கிறது.

இராவணனுக்குப்பின்னர் தோன்றிய புத்தர்பெருமான் அங்கே எழுந்தருளியிருக்கிறார். இலங்கை எங்கும் எழுந்தருளியிருக்கிறார். இலங்கைவேந்தன் சிலை எங்குமே இல்லை. ஆனால் இராமபிரான் ஏதாவது கோயிலில் சிதாப்பிராட்டி அனுமான் சகிதம் இருக்கிறார்.

இலங்கையை முன்னொருகாலத்தில் ஆட்சி செய்தான் என்று கர்ணபரம்பரைக்கதைகள் ஊடாக சொல்லப்படும் இராவணனுக்கு இலங்கையில் சிலைகள் இல்லை. ஆனால் லங்காதகனம் புரிந்த ஆஞ்சநேயர் எனச்சொல்லப்படும் அனுமானுக்கு நுவரேலியாவிலும் கொழும்பு தெஹிவளையிலும் மற்றும் பல்வேறிடங்களிலும் பெரிய கோயில்களும் சிலைகளும் இருக்கின்றன.

இலங்கையுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காலத்துக்குக்காலம் இந்தியாவிலிருந்து ஏராளமான தூதுவர்கள் வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தூதுவர் ஆஞ்சநேயர்தான்.

அவர், சிறைவைக்கப்பட்ட சீதைக்காக தூது வந்தார். அவருடைய வாலில் இராவணனின் படையினர் தீவைத்தனர். அவர் அந்தத்தீயினாலேயே லங்கா தகனம் செய்தார்.

வன்னிபெருநிலப்பரப்பு (2009 இல்) தகனத்திற்கும் தூதுவர்கள்தான் பின்னணியிலிருந்தார்கள். அவர்களுக்கும் ஆஞ்சநேயர் முன்னோடிதான்.

கன்னியா வெண்ணீர் கிணறுகளில் நிராடச்சென்றபொழுது உடன்வந்த திருகோணமலை இளைஞர் ஒருவர் அங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து கவலைதெரிவித்தார். “மதம் ஆன்மீகத்தை வளர்ப்பதற்குப்பதிலாக குரோதங்களையே வளர்க்கிறது. இலங்கையும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் அதற்கு சிறந்த உதாரணங்கள். இவற்றைக்கடந்துதானே நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். கடப்போம். காலம் எதற்கும் பதில் செல்லும்.” என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

நிலாவெளியில் அமைந்துள்ள தன்னார்வ அமைப்பின் பணிமனையில் மாணவர் ஒன்றுகூடலும் தைப்பொங்கல் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அமைப்பின் பிரதிநிதிகள் திருமதி ராதிகா, திரு. ரவீந்திரகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஓழுங்கு செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

அரச பாடசாலைகளுக்குச்சென்று கல்வி கற்றபோதிலும் மாலைநேரங்களில் தனியார் நடத்தும் வகுப்புகளுக்கும் செல்லும் நிலையிலேயே மாணவர்சமுதாயம் வாழ்கிறது. இந்த நிலைமை இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளிலும் தொடருகிறது.

உலகில் ரியூஷன் வகுப்புகளுக்குச்செல்லாத மாணவர்கள் எவருமே இல்லை என்பது பொதுவிதியாகியிருக்கிறது. திருகோணமலை மாவட்டத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச்சென்று பயிலும் அதேவேளையில் தனியார் நடத்தும் வகுப்புகளுக்கும் சென்று வருகின்றனர்.

சில ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் கற்பித்து சம்பளம் பெற்றுக்கொண்டே, தம்மிடம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாலைவேளைகளில் வீட்டில் பாடம் நடத்தி உழைக்கின்றனர். உரியநேரத்தில் மாணவர்கள் இயலாமையினால் பணம்கொடுக்க முடியாமல் தவிக்கும்போது…. “ரியூஷன் ஃபீஸைக்கொண்டுவா…..அதன் பிறகு படிக்க வரலாம் என்று களைத்துவிடும்” ஆசிரியப்பெருந்தகைகள் எமது சமுதாயத்தில் வாழ்கிறார்கள் என்ற கொடுமையான செய்திகளும் இந்த ஒன்று கூடல்களில் கிடைத்தன.

“ நிதியத்தின் நிதியுதவி ரியூஷன் ஃபீஸ் செலுத்துவதற்கும் போதாது” என்று சில தாய்மார்கள் சொன்னபோது திகைத்துப்போனேன்.

ஒரு தாயார் கண்கலங்கியநிலையில் தமது குடும்பத்தின் ஏழ்மை பற்றிச்சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரக்கணக்கான விதவைத்தாய்மார்கள் எங்கள் தேசத்தில் தவிக்கின்றார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் ஒவ்வொருவரும் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஓரு குடும்பத்தில் ஒரு பிள்ளையின் படிப்புச்செலவையாவது பொறுப்பேற்றால் அந்தக்குடும்பத்தில் விளக்கேற்றிவைக்க முடியும்.

திருகோணமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மட்டக்களப்புக்கு புறப்பட்டபோது மாலை நான்கு மணியாகிவிட்டது. கிண்ணியா பாதையில் சென்றால் விரைவில் மட்டக்களப்பை அடைந்துவிடலாம் என்று அங்கே சிலர் சொன்னார்கள்.
நாமும் அதனை நம்பிக்கொண்டு புறப்பட்டோம். சுமார் 60 மைல்கள் கடந்து வந்தபின்னர், ஓரிடத்தில் பொலிஸார் எமது வாகனத்தை தடுத்தனர். வெள்ளம் இருப்பதனால் பயணத்தை தொடரமுடியாது எனச்சொன்னார்கள். மீண்டும் திரும்பி பொலன்னறுவை – ஹபரணை மார்க்கமாக மட்டக்களப்பை வந்தடையும்பொழுது இரவு பதினொரு மணியும் கடந்துவிட்டது.

வீரகேசரி, ஈழநாடு பத்திரிகையில் முன்னர் பணியாற்றியவரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கோபு’ என ஈழத்து இதழியல் துறையில் அழைக்கப்படும் எஸ். எம். கோபாலரத்தினம் எனது வரவுக்காக உறங்காமல் காத்திருந்தார். அவர் தற்போது மட்டக்களப்பில் மகள் குடும்பத்தினருடன் இருக்கிறார். அவரது பேரன் அருள் சங்கீத், இருக்கிறம் இணையஇதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.

கோபுவை எனக்கு 1975 இல் யாழ்ப்பாணத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அறிமுகப்படுத்திய காலப்பகுதியில் அவர் ஈழநாடு பத்திரிகையில் பணியிலிருந்தார்.

கோபு பற்றி குறிப்பிடும்பொழுது, எனக்கு தமிழகத்தின் ஜெயகாந்தன், ம.பொ.சிவஞானம், விந்தன் ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் ஒப்புநோக்காளர்களாக தமது தொழில் வாழ்க்கையை தொடங்கியவர்கள். பின்னாளில் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தவர்களானார்கள்.

தற்போது இலங்கையில் தினக்குரல் நாளேட்டின் பிரதம ஆசிரியராக பணியாற்றும் நண்பர் தனபாலசிங்கமும் நானும் 1977 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாகவே இணைந்து பின்னர் பத்திரிகையாளர்களானோம்.

கோபுவும் 1953 இல் வீரகேசரி பத்திரிகையில் ஒரு ஒப்புநோக்காளராகவே பணியில் அமர்ந்தார். பின்னர், ஆசிரியபீடத்தில் இணைந்து ஒரேசமயத்தில் அலுவலக நிருபராகவும் துணைஆசிரியராகவும் பணியாற்றி பத்திரிகையாளனாக உருவானார்.

அப்பொழுது அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார்.
கோபு வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர்.

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப்(?) படை வடக்கு, கிழக்கு மாகணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்பிட்ட தொடர் பிரான்ஸில் குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடு வார இதழிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

பின்னர் தனி நூலாக வெளியானது. ஏற்கனவே அவர் இதழ்களில் பதிவுசெய்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாக ‘ அந்த ஒரு உயிர்தானா உயிர்’ என்ற நூலையும், பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு, முடிவில்லாப்பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களையும் வரவாக்கியுள்ளார்.

போர்க்காலத்தில் இயக்கங்கள் மற்றும் இலங்கை இந்திய படைகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்? என்பதை கோபலரத்தினத்தின் குறிப்பிட்ட நூல்கள் ஆழமாகப்பதிவு செய்துள்ளன.

“இதுவரையில்….இலங்கையில் ஊடகவியலாளர்களின் வாழ்வையும் பணிகளையும் அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்களையும் சித்திரிக்கும் நாவல் எதுவும் வெளியாகவில்லையே…. உங்களால் எழுதமுடியும்…..எழுதுங்களேன்…” என்று அவரைச்சந்தித்தவேளையில் சொன்னேன்.

“ நான் ஒரு இலக்கியப்பிரதியாளன் அல்ல. அனுபவங்களை பதிவு செய்யும் ஊடகவியலாளன். உங்களைப்போன்ற பத்திரிகையாளர்களாகவே செயற்பட்டு அதேசமயம் இலக்கியப்படைப்பாளிகளாகவும் இயங்குபவர்கள்தான் எழுதவேண்டும்.” என்றார்.
மட்டக்களப்பில் தமது மகள் குடும்பத்தினருடன் இளைப்பாறிவரும் கோபலரத்தினம் அவர்களுடன் நீண்டபொழுதுகளைச் செலவிட்டேன். ஒரு மூத்தபத்திரிகையாளருடன் உரையாடிய அந்த இரண்டு நாட்களில் அறிந்துகொண்ட தகவல்கள் பெறுமதியானவை.

“ உங்கள் பெயரைச்சொல்ல உங்கள் நூல்களை மட்டுமல்ல ஒரு பேரனையும் (ஊடகவியலாளர் அருள்.சங்கீத்) வழங்கியிருக்கிறீர்கள்” எனச்சொல்லிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்று, செங்கலடியில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்துசேர்ந்தேன்.

(பயணங்கள் தொடரும்)

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Rumblings in the temple

SIva
By our community reporter
Melbourne: In the April 2013 issue of the SAT we did a story ‘Immigration raid at temple in Carrum Downs…’ On Friday 5 April, 2013 immigration officials had visited the Sri Shiva Vishnu temple, Carrum Downs and interviewed a person there. Subsequently, we saw a denial by the Immigration Department published in the Casey Weekly “that it raided a Hindu temple in Carrum Downs…” but the same news report says, “The alleged raid on April 5 was reported in the South Asia Times. A spokesman of the department, Steve Pivetta, said there was no raid but departmental officers visited the temple as part of an ongoing investigation”. Well, this proves the SAT report correct and reveals that an immigration department is probing some issues in the temple.
Later, the Hindu Society of Victoria (HSV) sent a letter to all its members refuting the SAT report in the April 2013 issue but officially a copy was never sent to SAT and hence was not published by SAT. SAT came across the said letter by HSV at ‘Noelnadesan’s Blog’ (http://noelnadesan.com/2013/05/08/reply-to-south-asian-times-by-hsv/) titled ‘Reply to South Asia Times by HSV’.
At a recent meeting of the temple’s trust board, according to a reliable source, Mr. Thanikasalam, a former President of HSV and a member of the trust was asked to quit the trust board and he did so. The reasons for this action are unknown to SAT. The issue of having an external audit is also hanging on fire despite the trust and the temple committee having consented to it.
Much more has, meanwhile, happened in the temple and SAT has information of insiders being ripped off of huge sums of money by powerful and influential people. The alleged victims are silent as they fear losing their livelihood. Another development has been that a person who had breached his priest visa and was working as a cook in the cultural centre kitchen has gone back to Sri Lanka after pressure from the Immigration Department.
- SAT News Service

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக