கனடா – ரொறன்ரோவில்  அநுரகுமார திசநாயக்கா  நிகழ்த்திய உரை .பகுதி 1

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா,  கடந்த மார்ச் மாதம்  23 ஆம் திகதி, கனடா –  ரொறன்ரோவில் மண்டபம் நிறைந்த தமிழ்  – சிங்கள மக்கள் மத்தியில், உரையாற்றியபோது,  இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் தோழர் மனோரஞ்சன்,  சிங்களத்தில்  அவரிடம் கேட்ட கேள்விக்கு , அநுரகுமார சிங்களத்தில் அளித்த பதிலின்  தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பேரம் பேசும் ஓர் ஏற்பாடாக பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை தமிழ்த்  தேசிய பரப்பில் பலரும் ஆதரித்து பரபரப்பாக பேசிவரும் நிலையில், மாகாணசபை முறைமையை , அதன் ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்த ஜே. வி. பி, தற்போது அது தமிழ் மக்கள் போராடிப் பெற்ற அரசியல் சட்ட உரிமை எனவும்  அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பகிரங்கமாக அறிவித்திருப்பதானது, தமிழ் பொது வேட்பாளர் என்ற முன் மொழிவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே என்னால் பார்க்கக் கூடியதாக உள்ளது.

கீழ்வரும் கேள்வி –  பதில் உரைகள், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான புரிதல் / விவாதங்களுக்கு உதவும் என நம்புகின்றேன். ( தோழர் மனோரஞ்சன் )

—————————————————————————— 

அநுரகுமார திசநாயக்க:

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்  தரப்பில் முன்னர் மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமவைச் சேர்ந்தவன். எங்களுடைய  ஊர் புகையிரத நிலையத்தின் அதிபர் (  ஸ்டேஷன் மாஸ்டர் )  ஒரு தமிழர். நான் சிகிச்சைகளுக்குச்சென்ற  வைத்தியசாலையில்  இருந்த  மருத்துவர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவரும் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கு பணியாற்றிய  பொறியியலாளரும் தமிழர். அவரது பெயர்  திரு. கனகரட்ணம்.

நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் மருத்துவரிடம் செல்லுகின்ற பொழுது,  ஒரு தமிழ்  மருத்துவரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு  எனக்கு ஒரு காலமும் வந்ததில்லை.

எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் , சிங்கள , முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமண சம்பந்தங்களும்  நடந்திருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப்பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது.

ஆனால்,  எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்காகவும் , தமக்கான வாக்குகளை பெறுவதற்காகவும்  குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

நாங்கள் பிறந்த சமூகப் பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் –  பண்பாடு என்பன இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்றபொழுது,  எனக்கு நல்லது எது ? கெட்டது எது ? என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே.

              “ இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே “  என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சினைகள் வருகின்ற பொழுது அதில் தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார்.

எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார்.

அப்போது எனக்குள் என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்ந்து வளர்கின்றது.

ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால்,  அவர்களுக்கு நல்லது கெட்டது  புனித அல் –  குர் ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குர் ஆனில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடாக  போதிக்கப்படுகிறது.

குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக… அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ரம்ஜான்.  அவர்களுடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது.

அதாவது  அந்த சமயத்தைச்சேர்ந்த ஒருவர்  இஸ்லாமியராக. வளர்க்கப்படுகிறார்.

கத்தோலிக்க மதத்தைச்  சேர்ந்த ஒருவரைப் பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது யேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாகவே  போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் தேவாலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவர்களுடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள்ளும்  அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.

நாங்கள் தொழில் ரீதியாக பொறியியலாளராக, தொழிலாளர்களாக,  மருத்துவர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால்,  எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது.

ஆனால், அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு எங்களின்  ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள்.

 “ வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது… எங்களுடைய தேரவாத பௌத்தத்திற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்….? எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள்..?  2050 ஆம் ஆண்டில் முஸ்லிம் மக்கள்  அனைவரும் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்  “ எனச்சொல்லி  அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள்.

ஏன்?

அவர்களால் எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசமுடியாது, நமது நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது, நமது நாட்டின் அபிவிருத்தியைப்  பற்றி, நமது நாட்டில் ஜனநாயகத்தை பற்றிப் பேச முடியாது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு முறை பற்றியும்  அவர்களால் பேச முடியாது.

நாட்டில் நடக்கின்ற குற்றச்செயல்களை குறைப்பது குறித்தும் அவர்களால் பேச முடியாது. நாட்டில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன? செய்திருப்பது என்ன? என்பதைப் பற்றி அவர்கள் பேச முடியாமல் இருக்கிறது.

ஏனென்றால் அவை எல்லாவற்றிலும் அவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அந்தத்  தோல்விகளை எல்லாம் அப்படியே இருக்கும் நிலையில்  அவர்கள் என்னத்தைப் பற்றி பேசுகிறார்கள்?

 ‘இனத்தைப் பாதுகாக்க வேண்டும்…’ ‘ எமது இனம் ஆபத்துக்குள் சிக்கியிருக்கிறது’. இப்படியான சுலோகங்களை 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நாம் கேட்டோம். சில சுலோகங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

‘தேசியம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது’ என்ற சுலோகம் வந்தது. இரண்டாவது, ‘மீண்டும் புலிகள் புத்துயிர் பெற விரும்புகிறார்கள்’ என்ற சுலோகம் வந்தது. அடுத்தது,   “ 2050 ஆம் ஆண்டு  வருகின்றபோது முஸ்லிம் மக்கள் இலங்கையின் பெரும்பான்மையாக இருப்பார்கள்.  “    என்ற  சுலோகம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம்  இந்த அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் ?  

எமக்குள் அடங்கிக் கிடக்கின்ற அந்த ஆன்ம ரீதியான பண்பாட்டை,  அவர்கள் கிண்டித் தூண்டிவிடுகிறார்கள். அதை தூண்டி விட்டதன் பின்பு நாங்கள்  “ எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, எங்களுக்கு கல்வி தேவையில்லை, சாப்பிட உணவு இருக்கிறதா, எங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை இருக்கிறதா ?  என்பது பற்றியும் அவசியம் இல்லை, எங்களுக்கு தொழில் இருக்கிறதா என்பது அவசியமில்லை, எங்களுடைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வசதி –  வாய்ப்புகள் இருக்கிறதா?  என்பதும் பிரச்சினை இல்லை, எங்கள் இனத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மாத்திரம்  தூண்டிவிடப்படுகின்றன.

அந்த அடிப்படையில் எங்களுக்குள்ளேயே அதற்குத் தேவையான மேலும் அதிக சுலோகங்கள் உருவாக்கப்படும்.

கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்வார்கள்?                          

“ நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத சுலோகங்கள் மேலே வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டுமென்றால் திரு. ஹக்கீமின் கட்சிக்காரர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.  “

 இவ்வாறு அங்கும் இது போசிக்கப்படுகிறது. இதேபோல் வடக்கிலும் இவ்வாறானவை போசிக்கப்படுகின்றன. அப்போது இறுதியில் நடப்பது என்ன? ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தார்களா ? என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. மாறாக தங்களுடைய இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை கொடுக்கின்றார்கள்.

இப்படியும் சொல்வார்கள்:   “ சாப்பிட இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை.  எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் போதும். நமது நாட்டை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…  “  இவ்வாறாக எங்களுடைய உணர்வுகள் தூண்டப்படுகின்றன.

எங்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு,  அதனை இந்த தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உணர்வுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு பின்னர் அதுவே இனவாதமாக உருவெடுக்கிறது.

ஆகவே எங்களுடைய நாட்டில் இந்த இன வாதம் என்பது சாதாரண மக்களுக்கு இருக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு அரசியலாகும். எங்களுடைய நாட்டின் இனவாதம் என்பது ஒரு அரசியல் இனவாதம்.

எமது நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்கள கிராமங்கள் இடையே பரவி வாழ்கிறார்கள். வடக்கில் மிகப் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுதும் கூட கொழும்புப் பகுதியில் பெரும் தொகையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். எனக்குத் தெரியும்… அங்கே பாதுகாப்பு – கெடுபிடிகள் – பரிசோதனைகள் போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் அவர்களுக்கு இருந்தன.

அப்படி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அங்கு முழுமையான அமைதியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்கள் என்றும்  நான் சொல்லவில்லை. ஆனால்,  பொதுமக்களிடையே இருந்த இனவாதத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை.

1958 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடந்தன. 1983 இல் கலவர சம்பவங்கள் நடந்தன என்பது உண்மை. ஆனால்,  நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களிடம் அந்த இனவாதம் இருக்கவில்லை. நமது நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே.

ஆகவே நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் என்னவென்றால்,  இந்த நாட்டில் இருக்கின்ற இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். இனவாதம் ஒரு அரசியலாக இருக்கிறது என்றால் அதற்கு எதிர்மாறாக இன ஐக்கிய அரசியலை கட்டியெழுப்புவதைத்தான்  எமது தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்து தமிழ், முஸ்லிம் மக்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு அவர்களும்  முகம் கொடுக்கிறார்கள். அதே வேளை நாங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சினைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதையும்  நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் தான் சிங்களமும் தமிழும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

 ஒரு கடைக்குச் சென்று கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தமிழிலே பேசுகிறோமா?  சிங்களத்தில் பேசுகிறோமா?  என்பது அந்த வியாபாரியோடு இருக்கின்ற கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால்,  ஒரு அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்த கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

தங்கள் தாய்மொழியிலேயே கொடுக்கல் வாங்கல் செய்யும் அவருடைய உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தமிழ் குடிமகனுக்கு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ,  தன்னுடைய தமிழ் மொழியிலே ஒரு முறைப்பாடு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், மொழிக்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

எங்களுக்கு இன்று நன்றாகத் தெரியும் , ஒரு முஸ்லிம் நபர் சென்று  ஒரு முறைப்பாடு செய்கின்ற பொழுது,  அந்த முறைப்பாடு செய்த பின்பு கீழே வாசித்து அறிந்து புரிந்து கையெழுத்திடுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால்,  உண்மையில் அவர்  அதனை வாசிக்கவும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை, அது அவருக்குப் புரியவுமில்லை.

ஆனால்,  சிங்களத்தில் எழுதப்பட்டட்ட அந்த முறைப்பாட்டை வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டேன் என்று முஸ்தபா கையெழுத்து இடவேண்டும். இது சரியா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தோடு செயற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை அவருடைய சுய தாய்மொழியிலேயே அவர்கள் செய்வதற்கான அந்த உறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு இருக்கின்ற தடைகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

அடுத்தது, அவர்களுடைய கலாச்சாரத்தில் தனித்துவமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. சிலருக்கு தங்களுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவது அச்சம் தருவதாக இருக்குமானால்,  அது பிரச்சினை. என்னுடைய கலாச்சார அடிப்படையில் உடைகளை உடுத்திக்கொண்டு மினுவாங்கொட நகரத்துக்கு போவது ஆபத்தாக,  அல்லது அச்சம் தருவதாக இருக்கும் என்று அவர் உணர்கிறார்களாக இருந்தால் அது ஒரு பிரச்சினை.

எனக்குத் தெரியும் இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றன. நான் இப்படி உடுத்திக்கொண்டு போனால் ஆபத்து இருக்கிறது, ஆகவே நான் இப்படி உடுத்திக்கொண்டு போகக் கூடாது, என்னுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை ஒளித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு வருவது சரியா? அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? அவர்களுடைய பண்பாட்டுக் கலை,  கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சட்டத்தின் மூலம், கல்வியின் மூலம், சமூக கருத்துக்களின் மூலம் அவை பாதுகாக்கப்படல் வேண்டும், உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

ஆனால்,  இந்த கலாச்சார –  பண்பாடுகள் அல்லது கலாச்சார தனித்துவங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வது,  அவை நாங்கள் பிரிந்து இருப்பதற்கான ஒரு காரணி என்ற அடிப்படையிலிருந்து அல்ல.

ஒரு தமிழ் சகோதரி நெற்றியிலே வைக்கின்ற பொட்டு தன்னை சிங்களவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கான ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? சிங்களச் சகோதரி உடுத்துகின்ற  அவரது பண்பாட்டுச் சேலை கட்டும் முறைமை,  தமிழர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு கலாச்சார அடையாளமாக இருக்க வேண்டுமா?

 ஒரு முஸ்லிம் பெண்மணி அணிகின்ற பர்தா ஆடை,  சிங்களவர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு காரணியாக காட்ட முனைவது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களுடைய கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களுடைய அடையாளங்களை விட உயர்ந்தது என்று காண்பிக்க முயற்சிக்கின்றோம். அது தவறானது.

நான் சிங்களவன், நான் தமிழன், என்று காட்டிக்கொண்டு செல்ல வேண்டுமா? நாங்கள் எங்களுடைய கலாச்சார விழுமியங்களை, பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால்,  அவை காப்பாற்றப்பட வேண்டியது ஏனையவர்களுக்கு அது எதிரானதாக காட்டுவதற்காக அல்ல.  “நான் இப்படி உடுத்திக் கொண்டு ஒரு நிகழ்வுக்கு போகிறேன், அப்படிப் போய் மற்றவர்கள் மனங்களை நோகப் பண்ணப்போகிறேன்.  “  என்று சொன்னால் அது சரியா? அப்படியல்ல. அந்தக் கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களோடு மோதுவதற்காக கடைப்பிடிக்கப்படுவதல்ல.

மூன்றாவது நாங்கள் விரும்பிய மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை. எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்திற்காக அது தனக்கு ஒரு ஆபத்து என்ற உணர்வு வராமல் இருக்க வேண்டும்.

 மதங்கள் என்பது அவரவருடைய நம்பிக்கை. நான் புத்த பகவான் போதித்த தர்மத்தை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். நபிகள் நாயகத்தினால் போதிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் பின்பற்றலாம். அதேபோல் கிறிஸ்தவர்களை எடுத்தால் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையை அல்லது பைபிளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால்,  என்னுடைய மதம் உன்னுடைய மதத்தைவிட உயர்ந்தது என்று எங்களால் சொல்ல முடியுமா?

அப்படிச் சொல்லமுடியாது. அது அவரவர்களுடைய நம்பிக்கை. என்னால் சொல்ல முடியுமா ? அவருடைய நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையை விடத் தரம் குறைந்தது? என்று . முடியாது. அது அவருடைய நம்பிக்கை. அது மட்டுமல்ல ஒரு மதத்தை பின்பற்றுவது, அல்லது ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகள் இல்லாமல் செய்யப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கலாச்சார உரிமைகள், ஒருவருடைய மத வழிபாட்டுக்கான உரிமைகள், அவருடைய மொழிக்கான உரிமைகள்… இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல்தான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை நான் சொல்லுகிறேன் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில்தான் சிலகாலமாக அமர்ந்திருந்தார். அவருடைய சில சில அரசியல் கருத்துக்களோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால்,  அவர் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களையும் பிடித்துக் கொண்டு,  இப்படிச் சொன்னார்.   “ அநுர, நான் ஒரு ஶ்ரீலங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால்,  நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்.   “ அவரது இந்தக் கருத்து நியாயமானது இல்லையா?

திரு. ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார்:  “  அநுர,  என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போகக் கூடியது ஒரு அமைச்சர் பதவியை நோக்கித்தான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான்.  “  என்று சொன்னார். அவருடைய இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் அவருக்கு தோன்றுகிறதா தன்னுடைய வாழ்க்கையில் அடைய முடிந்த ஆகக் கூடிய உயரம் இவ்வளவுதான் என்று. –  இவ்வளவுதான் என்னால் அடைய முடியும் என்று.

அது நீதியானது அல்ல. அவரால் பிரதம மந்திரியாக வரமுடியுமா..?  ஒரு ஜனாதிபதியாக வரமுடியுமா ..? என்பது வேறு கதை. ஆனால்,  அவருக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால், தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் தன்னால் இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியாக வர முடியாது, தனக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியாது என்ற ஒரு உணர்வுதான் ஏற்படுகிறது என்றால்,  அது அவ்வளவு நீதியானது அல்ல.

நாங்கள் அவரிடம் சென்று   “ உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை?  “  என்று கேட்கலாம். ஆனால், ஒருவருக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், தாம் இந்த நாட்டில் என்னவாக  இருந்தாலும்,  ஒரு இரண்டாம் தர பிரஜைதான் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றாலே,  அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அல்லவா?

அதை நாங்கள்  புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியலுக்குள், ஆட்சி அதிகாரத்துக்குள், சமூக செயற்பாட்டுக்குள் நியாயமான முறையில் பங்கேற்க அவர்கள் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும். உள்வாங்கப் படுவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

(கை தட்டல்)

அவர்களுடைய மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவர்களுடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்

தொடரும்

“கனடா – ரொறன்ரோவில்  அநுரகுமார திசநாயக்கா  நிகழ்த்திய உரை .பகுதி 1” மீது ஒரு மறுமொழி

  1. Thank you for his translated speech.
    Rajendran

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.