

உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது.
அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும் விலக்கத்திலிருந்தே நவீன நாவல்கள் துவங்குகின்றன. சென்ற நுப்ற்றாணடு வரை பேரின்பம் என்று மட்டுமே அடையாளப்படுத்த பட்ட பாலுறவு இந்த நூற்றாண்டில் அகப்பிரச்சனை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
தமிழ் உரைநடையில் பாலின்பம் குறித்த எழுத்து எப்போதுமே கலாச்சார தணிக்கையொன்றிற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இந்த தணிக்கையை எழுத்தாளனே மேற்கொண்டு விடுகிறான். அல்லது மதம், அறநெறி, சமூகக் கட்டுபாடு ஏற்படுத்தும் தடைகள் காரணமான பயம் அவனை நிர்பந்தபடுத்துகிறது.
தமிழில் நு¡ற்றுக்கணக்கான குடும்ப நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் கூட கணவனும் மனைவியும் தங்களுக்குள் உடலின்பம் கொள்வது இயல்பாக எழுதப்படவில்லை. ஆனால் சங்கக் கவிதைகள் காமத்தைப் பாடியிருக்கின்றன. முற்றிய காமத்தின் காரணமாக உடல் கொள்ளும் மாற்றங்களும் மனப்போக்கில் ஏற்படும் கொந்தளிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.
ஆண்டாள் மிக இயல்பாக தன் காம உணர்வுகளை பாடலில் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளிவீதியார் கையில்லாதவன் முன்னால் வெயிலில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி போவதை போன்றதே காமம் என்று அடையாளம் காட்டுகிறார்.காமப்பிரதி என்று தனித்து அடையாளமிட்டு வாசிக்கபடுவதற்கான தனிப்பிரதிகள் எதுவும் தமிழில் இல்லை. மாறாக காமம் குறித்து இலக்கிய தளத்தில் நடைபெற்ற பெரும்பான்மை சொல்லாடல்கள் ஒழுக்க கட்டுபாடுகளையும் அதை மீறும் போதும் அடையும் தண்டனையையுமே வலியுறுத்துகின்றன..
ஒரு நூற்றாண்டின் முன்பாக ஐரோப்பிய இலக்கியம் கடந்து சென்று விட்ட பாலுணர்ச்சிகளின் இயல்பான பதிவுகள் இன்றும் தமிழில் மிகுந்த சர்ச்சைக்கும், மிரட்டலுக்குமே உள்ளாகி வருகின்றன.
நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன.
நாவல் இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கி கொள்வதற்காக பீறிடும் காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம்பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பது பதிவு செய்யப்படுகிறது.
நாவலிலின் தனித்துவம் அதன் நுட்பமான கதை சொல்லும் முறை. மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு. சந்திரன் அவன் மனைவி ஷோபா, சந்திரனோடு நட்பு கொள்ளும் ஜீலியா என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் விவரிக்கபடுகிறது. பெரும்பாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். அதில் ஏற்படும் சிறு சிறு சந்தோஷங்கள் மற்றும் கசப்புணர்வுகள் , பெரும்பாலும் சுயசிந்தனை வழியாகவே வெளிப்படுத்தபடுகிறது.
நாவலின் அடித்தளமாக வலியும் வேதனையும் வெளியே சொல்லமுடியாத அவமானமும் கொண்டவர்களாக புகலிடம் தேடி இலங்கையிலிருந்து வெளியேறிவர்களின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை அவர்கள் மனதில் தீராத ரணமாக உறைந்து போயிருப்பதை நாவல் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. அது போலவே ஏதோவொரு தேசத்தில் பிழைப்பிற்காக சென்று வாழ நேரும் போது எதிர் கொள்ளும் கலாச்சார தனிமை நாவலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மனத்தடையற்ற உடலின்பத்தை ஜுலியா சந்திரனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அது ஒரு சிகிட்சை போன்றே உணர முடிகிறது. உடல் தன்னளவில் அடங்க மறுக்கும் போது காமம் அதை சாந்தம் கொள்ள செய்கிறது. சந்திரன் தன்வாழ்வில் காமத்தின் அடர்ந்த சுகந்தத்தை ஜுலியாவிடமே அறிந்து கொள்கிறான்.
யுத்தம் உடலில் வெளித்தெரியாத மாற்றங்களையும் வடுக்களையும் உருவாக்கியிருக்கிறது. உயிரிழப்பை விடவும் வேதனைமிக்கமது அவமானமும் வலியும் நிறைந்த நினைவுகள். அது நிம்மதியற்று எதிலும் சாந்தி கொள்ள முடியாத மனப்போக்கினை உருவாக்கி விட கூடியது. அதன் விளைவு இந்த நாவல் முழுவதும் எதிரொலிக்கபடுகிறது.
புகலிடங்களில் வசிக்கும் பெரும்பாலும் ஆண்கள் அந்நிய கலாச்சாரத்தினுள் தங்களை கரைத்து கொண்டுவிடுகிறார்கள். ஆனால் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் அதை எதிர் கொள்ள முடியாமலும் அதே நேரம் தங்களது பூர்வ நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமலும் ஊஞ்சலாடுகிறார்கள் .
நடேசனிடம் மிக நுட்பமான கதைசொல்லும் திறனிருக்கிறது. அதே நேரம் வேதனைகளை மிகைபடுத்தாமல் பதிவு செய்யும் நுட்பமும் கைவந்ந்திருக்கிறது. அவ்வகையில் இந்த நாவல் முக்கியமானது என்றே தோன்றுகிறது.
இந்த நாவல் மிக விரிவாகவும் இன்னும் பல தளங்களிலும் வளர்ந்து செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. நடேசன் அதை மிகச் சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதே அதன் சிறிய பலவீனமாக தோன்றுகிறது.
இயல்பும் எளிமையும் வாழ்வை பதிவுசெய்வதில் தனித்துவமும் கொண்டிருக்கிறது என்பதாலே இந்த நாவல் என் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. அவ்வகையில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவு என்றே கூறுவேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்