நடேசன்
தோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல்.
அந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. அதனை எழுதப்பட்டிருந்த முறையால் அந்த நாவலுக்குள் நம்மை உள்ளே இழுத்துச் செல்லும். அதன் பின்விளைவாக தொடரும் கதையை எவரால் விடமுடியும்? யாரால் புத்தகத்தை கீழே வைக்க முடியும் ?
தோப்பில் முகமது மீரானது அஞ்சு வண்ணம் தெரு தமிழ்நாவல் வரிசையில் தோமஸ் காடியின் நாவல்போல் முக்கியமானது. முதல் அத்தியாயம் மலையாளத்து மகாராஜா வீதிவலம் போகும்போது அவரைப் பார்த்த இஸ்லாமியப் பெண்ணைக்கண்டு, அவளது அழகில் மயங்கி அந்தப்பெண்ணை மணப்பதற்காக தனது பரிவாரங்களை அனுப்புவதாக தகவல் அனுப்புகிறார் .
அந்த மகாராஜாவின் ஆட்கள் வருவதற்கு முன் எட்டு ஆண்பிள்ளைகளைத் தப்பிச் செல்ல அனுமதித்து விட்டு, அவளின் தந்தை தனது பெண்ணை மகாராஜாவாக இருந்தாலும், ஒரு காபீரைக் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு ஆழமான குழியை வெட்டி அந்த குழியில் புதைக்கிறார்.
புதைக்கப்பட்ட அந்தப் பெண் பிற்காலத்தில் அந்த ஊருக்கே தாயாகிறாள்- தெய்வமாகிறாள். அவளது சமாதியருகே தைக்கா பள்ளிவாசல் கட்டப்பட்டு நம்பிக்கைகள் தொன்மக் கதைகள் பின்னப்படுகின்றன.
சோழ மற்றும் பாண்டிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு குடியேறிய ஐந்து இஸ்லாமிய நெசவாளர் குடும்பங்களால் உருவாகியதே இந்த அஞ்சுவண்ணம் தெரு நாவலின் ஆரம்பப்புள்ளி. இங்கு வாழ்பவர்கள்
புதைக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தங்கள் காவல் தெய்வமாக நினைக்கிறார்கள்
அஞ்சுவண்ணம் தெருவில் மேற்குப்புறத்தில் உள்ள தாருல் ஸாஹினா என்ற வீட்டின் மாடி அங்குள்ள தைக்கா பள்ளியைவிட உயரமாக உள்ளது என்பதால் அந்த வீட்டினர் நோய் , வறுமை, மற்றும் பாம்பு பேய்களால் துன்பப்படுவார்கள் என்ற சாதாரண மக்களின் நம்பிக்கையே நாவலின் ஊடுபாவாக இறுதிவரையும் இழையோடுகிறது .
வீட்டில் இருந்து கெட்டு நொந்த ஷேக் மதார் சாகிபிடமிருந்து வாப்பா அந்த வீட்டை வாங்கி மகளையும் , மருமகனையும் குடிவைப்பதாக – வாப்பாவின் மகன் சொல்வதாக கதை தொடங்குகிறது.
2008 இல் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலில் தற்கால அரசியல் தெளிவாக பேசப்படுகிறது. இதுவரையும் தர்ஹா வழிபாட்டுடன் தக்கலை பீரப்பா பாடலுடன் , ஆலீம்புலவரின் மொஹராஜ் மாலை என்ற காவியமும் பாடியபடி மலேசிய தொப்பியும் அணிந்தபடி வழிபாடு நடத்தியவர்களை, புதிதாக சவூதி சென்று வந்த வஹாபிய கொள்கையைக் கொண்ட தௌஹீத் கட்சியினர் எதிர்க்கின்றனர்.
தெருவெங்கும் இரத்த ஆறு ஓடுகிறது. தொன்மையான தைக்கா மசூதி, தொழுவதற்கு எவருமற்று அழிவதுடன், ஊரில் வெளிநாட்டு பணத்தில் புதிதாக தௌஹீத் கட்சியினரின் ஒரு பள்ளி கட்டப்படுகிறது. ஆனால், அதில் ஏற்படும் மோதலில் அந்த மசூதியின் நிர்வாகம் இந்து வக்கீலின் கையில் செல்வதாக நாவல் முடிகிறது.
இருதரப்பின் சண்டையில் இங்கும் அப்பாவிகள் இறக்கிறார்கள் . எந்தப் பகுதியிலும் சேராது சுக்குக் காப்பி விற்று வயிறு வளர்க்கும் இஸ்மாயில் மரணமடைகிறான் . இருபகுதியினரும் அவனைத் தியாகியாக்கிறார்கள்.
இந்த நாவலில் எனக்கு பிடித்த விடயம்: நாவல் சம்பங்களுக்குப் பதிலாக வலிமையான கதாபாத்திரங்களால் உருவாகி இருக்கிறது .
மிகவும் ஏழையாக தெருவில் வாழும் மம்மத்தமா என்ற பாத்திரம் மறக்கமுடியாதது. ஆதிகாலத்து வீரனின் வழி வந்து விதவையாகியதால் திண்ணைகளில் படுத்துறங்கி வாழ்க்கை நடத்தியபோதிலும், தனது நாக்கை வாளாக்கி அந்த தெருவுக்கே ராணியாக வாழ்கிறாள். அவளிடம் பலரது இரகசியங்கள் இருப்பதால் மற்றவர்கள் பயந்துவிடுகிறார்கள். மூன்று குழந்கைளுடன் நெருப்பாக வாழும் அவளது வாழ்க்கையில் ஒரு முறை குளிர்ந்திருப்பது மிகவும் அழகாக நாவலில் வெளிவருகிறது.
மம்மத்தமாவின் நாக்கின் கூர்மை- அவளது வார்த்தைகளில்:
“ அவன் அப்பன் பெருநாள் தொழுகைக்குப் போகமாட்டான். உம்மாக்காரி வட்டி வாங்கி தின்னிட்டு கொழுத்துப் போய்கிடக்குதா. அவொ பிள்ளைக்கு புதிசா ஒரு இஸ்லாம் கெடச்சிருக்கோ? தெருவை ரண்டாக்கம் இஸ்லாம்- “
அபூஜலீல் என்ற தவ்கீத்தவாதியையும் அவனது கூட்டத்தையும் மீன்கத்தியுடன் தனி ஒருத்தியாக எதிர்க்கும் மம்மத்தமா தமிழ் இலக்கியத்தின் மறக்கமுடியாத பாத்திரம்.
மொஹராஜ்மாலை என்ற காப்பியத்தைத் தந்த வம்சத்தில் வந்த வாஜா அப்துல் லத்தீப், ஹஜ்ரத் என்ற காப்பியத்தை பாடி குர் – ஆனை மனப்பாடம் செய்து ஓதுபவர் . மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர். காரில் வந்து அழைத்தபோதே பிரசங்கத்திற்கு செல்லும் அவர், இலக்கியங்களை அழிக்கவேண்டுமென குரலெழுந்தபோது குமுறுகிறார். அவர் மேலட்டை கிழிந்த மொஹராஜ் மாலையை நெஞ்சுடன் அணைத்தபடி அதன் வரிகளைப் பாடியபடி தர்கா மற்றும் மக்கள் உள்ள இடங்களில் அலைகிறார் . பிற்காலத்தில் மனைவி மகனால் கவனிக்கப்படாது உடையற்று பாயில் ஒட்டியபடி வாழும் பாத்திரமாகிறார்.
மனிதர்களின் கனவுகள் சில இடங்களிலும் தொன்மமான நம்பிக்கைகள், பல இடங்களிலும் கதையை நகர்த்துகின்றன. பல இடங்களில் நகைச்சுவை நாவலின் மீது படர்ந்துள்ளது . அதில் முக்கியமானது: தாருல் ஸாஹினா என்ற வீடு தைக்கா பள்ளி உயரமாக இருப்பதால் அங்கு வாழ்பர்கள் நொந்துபோவார்கள் என்ற கருத்தே கதையின் ஓடுபாவாக இருந்த விடயம் மர்மமாக இறுதி வரையும் இருந்து அவிழும் விதம் நாவலை கீழே வைத்தபோது சில நிமிடங்கள் புன்முறுவலை தொடரவைத்தது. .
தற்காலத்தில் உலகமெங்கும் இஸ்லாமிய சமூகத்தின் இரு பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்று, இந்த நாவலிலும் மோதுகின்றன. பாரம்பரியத்தினதும் அடிப்படைவாதிகளினதும் இழுபறிகள் கொலைகள் இங்கும் நடக்கின்றன. யுத்தங்கள் அரச மற்றும் இராணுவத்தின் தலையீடுகள் இங்குமுண்டு. அணுவைத் துழைத்து ஏழ்கடலை புகுத்திய குறள் என்பதுபோல் இந்த இந்த அஞ்சுவண்ணம்தெரு நாவல் இருக்கிறது.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்