தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்

” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர்


முருகபூபதி
” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஈ.கே. ராஜகோபால்.
1983 வன்செயலையடுத்து அரியாலையில் சிறிதுகாலம் இடம்பெயர்ந்திருந்தபோது இடைக்கிடை அவரை சந்தித்து உரையாடுவேன். அவர் செய்தியாளராக இருந்தமையால் அவருடனான உரையாடல் இலக்கியத்தின் பக்கம் திரும்பாது.
அச்சமயம் திருநெல்வேலியில் வசித்த காவலூர் ஜெகநாதன் என்னை தமது ஊர்காவற்றுறைக்கெல்லாம் அழைத்துச்சென்று இலக்கியக்கூட்டங்களில் பேசவைத்திருக்கிறார்.

தமிழகத்திற்கு அவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தபின்னர், வீரகேசரி வாரவெளியீட்டில் நான் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கு தமிழகத்திலிருந்து தகவல்கள் தந்துகொண்டிருந்தார்.

1985 ஆம் ஆண்டு ஜெகநாதன் தமது இனிவரும் நாட்கள் குறுநாவலை சென்னையிலிருந்து தபாலில் அனுப்பியிருந்தார். எனது முகவரியில் அவருடைய கையெழுத்துத்தான். ஆனால், அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அவர் சென்னையில் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டதாகச் சொல்லியிருந்தது.
அந்தத் தகவல் கிடைத்ததும் யாழ்ப்பாணம் ஈழநாடுவுக்கு தொடர்புகொண்டபொழுது , தன்னாலும் அதனை இன்னமும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை எனச்சொன்னார் குகநாதன்.காலத்தின் விதி எம்மையெல்லாம் ஓட ஓட விரட்டியது. தொடர்புகள் குறைந்தன. தொடர்ச்சியாக வடக்கிலிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள்தான் வந்தவண்ணமிருந்தன.அதில் ஒன்று பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலன் கொல்லப்பட்ட செய்தி. அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த பலரை துப்பாக்கிகள் இரையாக்கிக்கொண்டிருந்தன.மனிதவேட்டையில் இந்திய இராணுவமும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிச்சென்ற ஈழ இயக்கங்களும் தீவிரமாக இறங்கியிருந்தன.

மின்னஞ்சல் இல்லாத அக்காலப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு எனது வீடு தேடி ஓடி வந்தது பாரிஸ் ஈழநாடு இதழ். அதற்குள் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார் அதன் ஆசிரியர் நண்பர் குகநாதன். இவருக்கும் உள்ளார்ந்த ஊடகத்துறை ஆற்றல் இருந்தமையால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது. என்னையும் தமது பாரிஸ் ஈழநாடுவுக்கு எழுதச் சொன்னார். அக்காலப்பகுதியில் நாம் இங்கு தொடங்கியிருந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றிய விரிவான கட்டுரையை அனுப்பினேன். ஈழநாடு இதழில் அதனைப்பார்த்த பல ஐரோப்பிய வாசகர்களும் எம்முடன் தொடர்புகொண்டு, இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.இவ்வாறு புலம்பெயர் வாழ்வில் நண்பர் குகநாதனுடன் எனக்கு நட்புறவு மீண்டும் துளிர்த்தது. இன்று வரையில் ஆழப்பதிந்துள்ளது.

நான் பிரான்ஸ் சென்றதில்லை. ஆனால், எனது இலக்கிய ஆக்கங்களில் பெரும்பாலானவை தொன்னூறுகளில் அவர் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடுவிலும், இதர நண்பர்கள் காசிலிங்கம் வெளியிட்ட தமிழன் இதழ் மற்றும் லண்டனில் ஈ.கே. ராஜகோபால் வெளியிட்ட ஈழகேசரி ஆகியவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.பிரான்ஸிலிருந்து நண்பர் மனோகரன் வெளியிட்ட ஓசை, அம்மா முதலான இதழ்களிலும் வந்திருக்கின்றன.ஆனால் — இன்று காலம் வேகமாக மாறிவிட்டது. இணைய இதழ்கள் பக்கம் நாம் சென்றுவிட்டோம். உடனுக்குடன் எமது படைப்புகளைப்பார்த்து கருத்துச் சொல்லும் யுகம் மின்னல்வேகத்தில் வந்துவிட்டது.
முன்னர் அச்சுப்பிரதியாக பாரிஸ் ஈழநாடுவை வெளியிட்ட குகநாதன் பின்னர் புதிய ஈழநாடு என்ற இணையப்பதிப்பை வெளியிட்டார்.

கண்ணதாசன் யாரை நினைத்து ” மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ” என்று பாடினாரோ தெரியவில்லை. ஆனால், அந்த வரிகள் ஆழமான கருத்துச்செறிவான வைரவரிகள்தான். நல்ல நட்பு கிடைப்பது எப்படி ஒரு பாக்கியமோ அது போன்று மனைவி அமைவதும் பெரும் பேறுதான். அதிலும் ஊடகவியளாலனுக்கு கிடைப்பது பாக்கியம்தான். நண்பர் குகநாதனுக்கு வாய்த்த மனைவி றஜனி அவர்கள்தான் குகநாதனுக்கு ஊடகத்துறையில் என்றென்றும் பக்கத்துணையாக இருக்கிறார்.
அவரையும் முதல் முதலில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த சமயத்தில்தான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் குகநாதன், றஜனி பிரசுரமாக சில நாவல்களையும் அக்காலத்தில் வெளியிட்டார். பல எழுத்தாளர்களின் வெளிவராத நாவல்களின் பிரதிகளை றஜனி பிரசுரம் வாசகர்களுக்கு நூலாக வரவாக்கியது. பாரிஸ் ஈழநாடுவில் எம்மவர்களின் கையெழுத்துக்களையெல்லாம் கணினியில் பதிந்து உயிரூட்டி, அதில் பதிவுசெய்தவர் திருமதி றஜனி குகநாதன்.

இலங்கை – இந்தியச் செய்திகள், நமது நோக்கு என்ற தலைப்பில் ஆசிரியத்தலையங்கம், சிறுகதை, அரசியல் களம், ஐரோப்பாவில் தமிழர், தமிழகம் ஒரு பார்வை, கொழும்புக்கோலங்கள், கொழும்பு ரிப்போர்ட், தொடர் நவீனம், கவிதைச்சோலை, சினிமா, ராசி பலன், டில்லி ரிப்போர்ட், மழலைகள் பூங்கா முதலான தொடர் பத்திகள் பாரிஸ் ஈழநாடுவில் தவறாமல் இடம்பெறும்.
புகலிடத்தில் வாழும் தமிழ் வாசகர்களுக்கு இந்தப்பத்திகளைத்தவிர வேறு என்னதான் வேண்டும். முடிந்தவரையில் வாசகர்களின் நாடித்துடிப்பை இனம் கண்டு பாரிஸ் ஈழநாடு அக்காலப்பகுதியில் வெளிவந்து பாராட்டுப்பெற்றது.

ஐரோப்பிய நாடுகளையும் கடந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா எங்கும் பாரிஸ் ஈழநாடு சென்றது. ஈழத்தின் எழுத்தாளர் செ. யோகநாதனின் தொடர்கதைகளுக்கும் காசி. ஆனந்தனின் ஹைக்கூ கவிதைகளுக்கும், இதர கவிஞர்களின் படைப்புகளுக்கும் களம் தந்த இவ்விதழ், சினிமா ரசிகர்களையும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் திருப்திப்படுத்தியது.
இலங்கை வீரகேசரி, தமிழ்நாடு தினமணி முதலான பத்திரிகைகளில் பணியாற்றிய சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம், மற்றும் எஸ். எம். கோபலரத்தினம் ஆகியோர் எழுதிய விறுவிறுப்பான அரசியல் தொடர்களும் பாரிஸ் ஈழநாடுவில் வெளிவந்தன.
எனக்கு அடிக்கடி நித்திரையில் கனவுகள் வரும். ஒருநாள் மறைந்த இரசிகமணி கனகசெந்திநாதன் வந்தார். என்னை பெரிதும் கவர்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர். கால், கைவிரல்களை நீரிழிவு உபாதையினால் இழந்துவிட்ட பின்னரும், இனிமையாகப்பேசி எம்மையெல்லாம் உற்சாகப்படுத்தியவர்.

மறுநாள் அவர் பற்றிய நினைவுப்பதிவை எழுதி குகநாதனுக்கு அனுப்பினேன். அதற்கு நான் இட்ட தலைப்பு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள். அதனைத் தாமதியாமல் பாரிஸ் ஈழநாடுவில் பிரசுரித்து பிரதியை அனுப்பும்பொழுது, அதுபோன்று மறைந்த இதர படைப்பாளிகளையும் எழுதித்தாருங்கள் என்று குகநாதன் ஒரு கடிதமும் இணைத்திருந்தார்.
அவர் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் அடுத்தடுத்து சிலரைப்பற்றி எழுதவைத்தது. கனகசெந்திநாதனைத் தொடர்ந்து, கே.டானியல், மு. தளையசிங்கம், என்.எஸ்.எம். இராமையா, பேராசிரியர் கைலாசபதி, கே.ஜி. அமரதாச, எச்.எம்.எம்.பி. மொஹிதீன், க. நவசோதி, கவிஞர் ஈழவாணன், நெல்லை க. பேரன், காவலூர் ஜெகநாதன், சோவியத் எழுத்தாளர் கலாநிதி விதாலி ஃபூர்னீக்கா முதலானோர் பற்றிய நினைவுப்பதிவுகளை எழுதினேன். இக்கட்டுரைகள் வெளியாகும் வேளைகளில் அதனைப்படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்களையும் குகநாதன் பாரிஸ் ஈழநாடுவில் வெளியிட்டார். இத்தகைய தொடர் பின்னாளில் யாழ்ப்பாணம் காலைக்கதிரில் ” காலமும் கணங்களும்” என்ற தலைப்பிலும் வேறு இணைய இதழ்களிலும் வெளியானது.

சிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரை தமது தமிழ்க்குரல் பதிப்பகத்தின் சார்பில் தமிழ் நாட்டில் வெளியிட விரும்பி பதிப்புரையும் எழுதினார். அத்துடன் உடனுக்குடன் வந்த விமர்சனக்குறிப்புகளையும் அதில் பதிவுசெய்யவிரும்பினார். பலருடைய கருத்துக்களுடன் நண்பர் குகநாதனின் கருத்தும் அதில் கிட்டத்தட்ட அணிந்துரையாகவே வெளியானது.

” நமது தமிழ் மக்களிடையே எப்போதும் ஒருவரது திறமையை மற்றவர் மதிக்கின்ற தன்மை அதிகளவில் இருந்ததில்லை. ஒரு எழுத்தாளனின் திறமையை இன்னுமொரு எழுத்தாளன் ஒப்புக்கொண்டதையும் ஈழத்தில் காண்பதரிது. தான் சந்தித்த பழகிய இலக்கிய நண்பர்களை இன்றைய சந்ததிக்கு இனம் காட்டும் வகையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் தொடராக அவர் எழுதிய கட்டுரைத்தொடர் அவரது திறந்த இலக்கிய நோக்குக்கு ஒரு சான்று. ஈழத்து இலக்கிய வரலாறுகளை எழுதியவர்களும் இலக்கியத் தொகுப்புகளை வெளியிட்டவர்களும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியதையே ஈழத்து இலக்கிய உலகில் இதுவரையில் காணமுடிந்தது. அத்தகைய இலக்கியவாதிகளில் முருகபூபதி முழுமையாக வித்தியாசமானவர் ” என்று என்னை வாழ்த்தியிருந்தார்.

அதற்குப்பதில் தரும்விதமாக எனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டேன்:-
” கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது. இந்த அடிப்படையிலேயே இந்தத் தொடரை எழுதினேன். ”
இந்தத்தொடரைத் தொடர்ந்து அவதானித்துவந்த மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் தமது தமிழன் இதழுக்கும் ஒரு தொடர் கேட்டிருந்தார். அதனால் எழுதப்பட்டதுதான் பாட்டி சொன்ன கதைகள்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் குகநாதனை கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்த டான் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தபொழுது, இலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் பற்றிய பதிவுகள் ஒளிப்படங்கள் செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தை அவருக்கும் காண்பித்தேன்.

அந்த அல்பத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள முழுப்பக்க கட்டுரை அவருடைய பாரிஸ் ஈழநாடுவில் இருந்து எடுக்கப்பட்ட கல்வி நிதியம் சார்ந்த செய்தியின் நறுக்குத்தான். அதனைப்பார்த்து கண்கள் விரிய ஆச்சரியப்பட்டார்.
கொழும்பில் எமது மாநாடு 2011 இல் நடந்தபொழுது வீரகேசரி, தினக்குரல் முதலான ஊடகங்களின் அதிபர்களும் நிதியுதவி வழங்கினார்கள். குகநாதன் தமது டான் தொலைக்காட்சியின் சார்பிலும் கணிசமான நன்கொடை வழங்கியதுடன், மாநாடு தொடர்பான நேர்காணல்கள், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்.

2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலருகிலும் சங்காரம் முடிவுற்றதும், சரணடைந்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் முடங்கியதை அறிவோம். வெளிநாடுகளில் பல கவிஞர்களின் கவிதை அரங்குகளில் எல்லாம் அந்த நிலமும் நீர்நிலையும் தவறாமல் இடம்பெறும். இன்றுவரையில் அந்தப் பெயர்கள் அவர்களின் கவிதைகளில் வாழ்கிறது. ஆனால் குகநாதனும் அவரைப்போன்ற பல மனிதநேயவாதிகளும் என்ன செய்தார்கள்…? என்பது பற்றி கவிதை பாடுவதற்குத்தான் நாதியில்லாமல் போனது.குகநாதன் தமது தொடர்புகளையெல்லாம் அந்த பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திற்கு நன்மை விளைவிப்பதற்கே உரியமுறையில் பயன் படுத்தினார். ஆனால், அதனையும் வாய்ச்சவடால் வீரர்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

குகநாதன் பிரான்ஸில் மேற்கொண்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி முயற்சிகளுக்கெல்லாம் பலதரப்பட்ட அழுத்தங்களும் ஆக்கினைகளும் தொடர்ச்சியாக கொடுத்தவர்கள் மூஞ்சிப்புத்தகம் வந்ததும் அதிலும் உமிழ்நீர் உதிர்த்தார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் பதில்சொல்லிக்கொண்டுதானிருக்கிறது.
அவதூறுகளின் ஊற்றுக்கண் பொறமைதான்.

தம்மால் முடியாததை மற்றும் ஒருவர் செய்யும்பொழுது அந்த ஊற்றுக்கண் திறந்துகொள்கிறது.
முன்னாள் போராளிப் பெண்களுக்கு அடிப்படைத் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை எடுத்துச்சென்று கொடுத்தவர்கள் எனது இனிய நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன், இரஜரட்ணம் சிவநாதன், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர். அவர்களுக்கு பல்வேறு வழிகளில் அங்கு நின்ற நண்பர் குகநாதன் உதவி செய்தார்.

அப்பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அத்துடன் நண்பர் நடேசன் தனதும் மற்றும் தனது நண்பர்களினதும் உதவியுடன் தமது சொந்த ஊர் எழுவைதீவில் அமைத்த மருத்துவ நிலையத்தின் திறப்பு விழாவுக்கும் சென்றுவந்து, லண்டன் நாழிகை இதழில் எழுதியிருக்கிறார். அந்தப்பதிவையும் பார்த்திருக்கின்றேன்.
அத்துடன் சுமார் 350 முன்னாள் போராளி மாணவர்களை மீட்டெடுத்து அவர்களை G C E சாதாரண தரம் G C E உயர்தரம், பரீட்சைகளுக்கு தோற்றவைப்பதற்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடக நாம் உதவுவதற்கு நடேசனுக்கு தக்க ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கியவர்தான் நண்பர் குகநாதன். இப்படி எத்தனையோ பக்கங்களை இங்கு பதிவு செய்யமுடியும்.அவருக்கு தெரிந்ததைத்தான் அவர் செய்தார். முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பற்றி காற்றிலே பேசத்தெரிந்தவர்களும் தமக்குத்தெரிந்ததைதான் செய்வார்கள்.

எனது நீண்டகால இனிய நண்பர் குகநாதன் – தமது ஊடகத்துறைவாழ்வில் சந்தித்த அனுபவங்களை, சவால்களை, நெருக்கடிகளை, சாதனைகளையெல்லாம் எழுதவேண்டும். அதுசுயசரிதையல்ல. ஈழத்தினதும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஊடகத்துறை பற்றிய ஆவணமாகவும் திகழவேண்டும். ஓடும் நதி தான் செல்லும் பாதையில் எத்தனை இடையூறுகளைச் சந்திக்கும்? நண்பர் குகநாதனும் நதியைப்போன்று, ஓடிக்கொண்டே இருப்பவர்.

நதிநடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…?

letchumananm@gmail.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.