Director:Jude Ratnam
Writer: Isabelle Marina
ஜுட் இரத்தினத்தால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உண்மையில் என் எல் எவ் ரி யில் அங்கத்தவராக இருந்து பின்பு விடுதலைப்புலிகளின் துப்பாக்கிக்குண்டுகளால், ‘காதில் பூக்காமலோ, நெற்றியில் பொட்டு வைக்கப்படாமல் ‘ தப்பிய ரஞ்சன் என்ற செல்லையா மனோரஞ்சன் – மாமாவாகத் தனது இயக்க காலத்து சம்பவங்களை இரை மீட்பதாகும் : அதாவது நனைவிடை தோய்தலாகும்
ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் வரும் இரயில் பாதை, அதை மூடிவளர்ந்த மரம் என்பது படிமமாக தொடங்கி அந்த மரம் படத்தின் இறுதியில் துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. படிமங்கள், இலக்கியத்தில் பலரால் பல மாதிரி புரிந்துகொள்ளப்படும். ஆனால் எனக்கு மரம் துண்டு துண்டாக்கப்படுவது 2009 சமூகத்தின் விடுதலையாக குறிக்கிறது. எனக்கு அந்த மரத்தை வெட்டுவதைப் பார்க்கும்போது இதயத்தில் குருதி கசியவைத்தாலும் ரெயில் பாதையை மேன்படுத்த வேறுவழியில்லை என்ற யதார்த்தம் உணர முடிந்தது.
தமிழர்கள் குங்குமப் பொட்டையழித்து, மொட்டாக்கு போட்டு ஜுலை 1983 தப்புவது போல விவசாயியின் உடைகளை அணிந்து ரஞ்சன் விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பும்போது அவர்கள் மக்களிடம் தண்டவாளங்களை துண்டு துண்டாக அரியும் வேலையில் ஈடுபடுத்துகிறார்கள். மாமா துண்டு துண்டாக வெட்டும் காட்சி நன்றாக இருக்கிறது. உடுப்பு மாற்றும் காட்சியை கொஞ்சம் நீடித்துவிட்டது. ஆனாலும் இயற்கையாக இருக்கிறது.
படிமான விடயம் இயற்கையாக மாறும்போது தேர்ந்த இரசிகர்களுக்கு கஸ்டமாகி விடுகிறது.
ஜுலைக் கலவரத்தில் ஒரு தமிழனை பலர் அடிப்பதைப் போட்டோ எடுத்த அந்த சிங்கள புகைபடப்பிடிப்பாளர் சொன்ன பதில் எனது மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
படமெடுத்த நீங்கள் ஏன் காப்பாற்ற முயலவிலை என்றபோது “இந்தச் சம்பவம் பொலிஸ்நிலயத்திற்கு முன்னால் நடக்கிறது. அத்தனை பேர் மத்தியில் நான் காப்பாற்ற முயலவில்லை காரணம் அது முடியாது ஆனால் நான் எனது தொழிலை செய்யமுடிந்தது.” அந்தப் புகைபடப்பிடிப்பாளர் கூறிய உண்மை எனது நெஞ்சை நிறைந்து விட்டது. அந்த மனிதர் இலங்கையின் ஆன்மாவாக நினைக்கவேண்டியவர். அவருக்கு இந்தப் புகைப்படம் புகழைக் கொடுக்குமென கனவிலும் நினைத்து திருக்கமாட்டார்.அவர் தனது கடமையைச் செய்திருக்கிறார்.
மாமாவின் குடும்பத்தைக் காப்பாற்றிய சிங்கள மக்கள்போல் பலர் இலங்கையின் தென்பாகத்தில் நிறைந்திருக்கிறார்கள். இவர்களே இறுதிவரையும் இலங்கையில் ஜனநாயகத்தையும் புத்த தர்மத்தையும் காப்பாற்றுவார்கள். இவர்களை வெளிக்கொண்டு வந்தது மிகவும் உன்னதமான விடயம்.
ஆவணப்படத்தின் இறுதியில் பல இயக்க நண்பர்கள் இருந்து போராட்டத்தவறுகளை அலசுவது நமது சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கவேண்டியது.
ஈழப்போராட்டம் முள்ளிவாய்காலில் சிதைந்தாக ஓலமெழுப்புவர்கள் பார்க்க வேண்டிய ஆவணப்படம் டீமன் இன் பரடைஸ். இதை நான் சொல்லவில்லை:
ஆழமாகப் பதியும் வார்த்தைகளும் படிமங்களும் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படத்தில் உள்ளவை
“800 மேற்பட்ட பயிற்சியளிக்கப்பட்ட ரெலோ போராளிகள் எங்களால் கொலை செய்பட்டார்கள் அப்பொழுது ஒருவர் கடையில் இருந்து தொடர்ச்சியாக எங்களுக்குக் கோக்கோ கோலா வழங்கியபடியே இருந்தார் ” என அக்காலத்தில் விடுதலைப்புலி இயக்க முன்னாள் போராளி சொன்னது இந்தஆவணப்படத்தில் பதிவாகியுள்ளது.
“என்னோடு இப்படியான கொலைகளில் ஈடுபட்டவர்கள் மனசாட்சிக்கு எதுவித உறுத்தலுமின்றி கனடாவில் குடும்பமாக வாழ்கிறார்கள்.” அப்போது உங்களுக்கு எப்படியிருந்தது என்ற கேள்விக்கு “ஒருவித மகிழ்சியான அனுபவமாக இருந்தது. ஆனால் இப்பொழுது என்னையே துன்புறுத்துகிறது ” என்றார்.
ஆவணப்படத்தின் இறுதியில் “எல்லா இயக்கத்தவர்களும் சேர்ந்து 20000 வரையான தமிழ் மக்களை கொன்றிருப்போம்” என்கிறார்கள்.
எல்லா இயக்கங்களையும் ஒரே மாதிரி, மக்கள் ஒரு காலத்தில் நேசித்தனர்.
மருமகனை மாமா வாழ்த்தி இந்தியாவுக்குப் போவதற்கு கவிதையால் வழியனுப்புகிறார்.
கண்ணீரைக் கடலாக்கி
நெஞ்சங்களைப் படகாக்கி
ஆன்மாவைத் துடுப்பாக்கி.
எல்லா இயக்கங்கப்போராளிகளுக்கும் இப்படி ஒரு மாமா, தந்தை, ஏன் தாய்கூட இருந்திருக்கலாம்.ஆனால் விடுதலைப்புலிகளைத் தவிர மற்றவர்களது உயிர்கள் தியாகங்கள் காற்றோடு கலந்துவிட்டது
தமிழர்களின் அழிவுக்கு யார் காரணம்? மகிந்த இராஜபச்சாவோ? கோத்தபயா? இல்லை சரத்பொன்சாவா என்பதைக் கரப்பான் பூச்சியின் மூளைகொண்டவர்களும் புரிந்துகொள்ளமுடியும்.
“சிறுவனாக இருந்தபோது எல்லா இயக்கங்களையும் ஆரம்பத்தில் எனது நாயகர்களாகப் பார்த்தேன். எனது மாமா இயக்கத்திற்குச் சென்றபோது அவர் எங்களுக்கு ஒரு ஹீரோவாகத் தெரிந்தார். ஆனால் போரின் இறுதியில் அரசாங்கப் படைகள் வெல்லவேண்டும் எனது உள்ளம் கூறியது. நான் மெல்ல மெல்லத் துரோகியாக மாறினேன்.”
இந்த வார்த்தைகள், எனக்கு என்மனச்சாட்சி பேசுவதாகத் தெரிந்தது.
எமது சமூகத்தின் தவறுகளை சுமக்கும் காலம் இது. யேசுநாதர் பிறந்து யூதர்களது பாவங்களை சுமந்தார் என்ற விவிலியம்: அசாத்தியமான விடயம். சிலுவைகளுக்கும் முள்முடிகளுக்கும் அவர்களே சொந்தக்காரர் என்பது எனது கூற்றல்ல. யேசுநாதர் பிறந்த அதேகாலத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதிய அருமையான வரிகள்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
இதன் அர்த்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை.
நாம் நம்மை நாம் கண்ணாடியில் பார்க்க உதவும் இந்த ஆவணப்படம்.
மறுமொழியொன்றை இடுங்கள்