புத்தனுக்கு போதி மரம்……….

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ முறை சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள சகலருக்கும் மருத்துவ வசதி எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்கும். இதை விட மேலதிகமாக வசதி தேவைப்படுபவர்கள் பிரத்தியேகமாக தங்களுக்கு காப்புறுதி செய்துகொள்ள முடியும். இப்படியான நடைமுறைகள் இங்குள்ளவர்கள் வாழ்க்கை காலத்தை அதிகப்படுத்துகிறது.எண்பது வருடத்துக்கு மேல் வாழ்கிறார்கள். உடலை இயங்க வைக்கும் மருந்துகள் பல மூளை நரம்பு மண்டலத்தை நலமாக வைத்திருப்பதில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தபோதும் வீட்டில் பராமரிக்கப்படாது முதியோர் விடுதிகளுக்கு செல்லுவது தவிர்க்கமுடியாது.

சமிபத்தில் நேர்சிங் ஹோமில் வளர்க்கப்பட்ட சொக்ஸ் என்ற பூனையின் நிமிர்த்தமாக அங்கு செல்ல நேர்ந்தது.

சொக்ஸ் கடந்த பத்து வருடங்களாக அந்த நேர்சிங் ஹோமில்
வளர்ந்து வருகிறது. வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனைக்காகவும், தடுப்பூசி ஏற்றுவதற்காகவும் என்னிடம் எடுத்து வரப்படும். இம்முறை வந்தபோது உணவு உண்ண மறுக்கிறது எனக்கூறப்பட்டது. பரிசோதனையில் வாய் , முரசு எங்கும் புண்ணாக இருந்தது. இரத்தசோதனை செய்த போது எயிட்ஸ் (Feline AIDS) இருப்பது தெரிய வந்தது. பல்லை சுத்தம் செய்து அன்ரி பயற்றிக் கொடுத்து விட்டு சொன்னேன்.

“மனிதர்களுக்கு வரும் எயிட்ஸ் போல் இதுவும் சொக்ஸை நேரடியாக மரணத்துக்கு அழைத்து செல்லாது, ஆனால் உடலை பலவீனப்படுத்துவதால் தொற்று நோய்கள் அடிக்கடி தாக்கும். அதிக நாட்கள் வாழ்வது கடினம். ஏதாவது தொற்று நோய் தாக்கினால் கருணைக் கொலை செய்வதே உத்தமம்”

நான் கூறியது போல் சில நாட்களில் சொக்ஸ் வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படுவதாக தகவல் வந்தது

இப்படியான நேர்சிங் ஹோம்களில் உள்ளவர்களுக்கு தொற்றிவிடும்
என்ற காரணத்தால் அங்கு வயிற்றுப்போக்கு உள்ள வெளிமனிதர்கள் உள்செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நேர்சிங் ஹோமில் முதியவர்களை பராமரிக்கும் பெண்தாதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் சொக்ஸ் மீது வாரப்படு,  ஆனலும் சுகாதார காரணத்தை முன்வைத்து சொக்ஸ்ஸின இறுதி நாளை குறித்துவிட்டதும் அங்கே என்னை வந்து அந்த காரியத்தை தங்கள் முன்னிலையில் செய்ய கூறினார்கள். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்பு ஒப்புக்கொண்டேன்.

மெல்பேனின் இளம் காலை நேரத்தில் அந்த சன் ரைஸ் நேர்சிங் ஹோமின் உள்சென்றேன். அந்தக் காலை நேரத்துக்கு உகந்த பெயராக இருந்தாலும் உள்ளே இருப்பவர்கள் அந்திம காலத்தில் அல்லவா உள்ளார்கள்?

நேர்சிங்ஹோமின் உரிமையாளருக்கு பிளாக் கொமடி (Black comedy) எனப்படும் எதிர்மறை நகைச்சுவை உணர்வோடு வைத்திருக்கலாம் அல்லவா?

உள்ளே சென்ற என்னை ‘வயிற்றோட்டம் உள்ளவர்கள் உள்ளே வரவேண்டாம்’ என்ற அறிவித்தல் வரவேற்றது. உடனே எனது உடலை என் மனத்துக்குள் மருத்துவ பரிசோதனை செய்து எனக்குள்ளே எந்த நோயும் இல்லை என மருத்துவ அறிக்கை தயார் செய்து கொண்டேன்.

உள்ளே சென்ற எனக்கு திருமதி ஸ்ருவேட் வரும்வரையில் அங்குள்ள முதியவர்களை பார்க்கும் அனுபவம் கிடைத்தது.

உடல்வலி உள்ளவர்களுக்கு என ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மெதுவாக எட்டிப்பார்த்தேன். முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை ஓலமிட்டுக்கொண்டீருந்தார். .அந்தகுரல் நேர்சிங் ஹோம் எங்கும் எதிரொலித்தது. அந்த தனியறையில் உள்ள அவரை, மற்றவர்கள் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு அறையிலும் எட்டு முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தனர்

ஒரு மூதாட்டி கதிரையில் உட்கார்ந்து இருக்கும்போது தலை பின்பக்கமாக தொங்கியது. இரண்டு கால்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தது. அவரால் கால்களை  அவரால் பிரித்து எடுக்கமுடியவில்லை. தலையை நேராக வைத்திருக்க சக்தி இருக்கவில்லை.

மற்றொரு மூதாட்டிக்கு உடை விலகி இருந்தது. அவள் தனது காய்ந்து மெலிந்திருந்த விரல்களால் காற்றில் தாளமிட்டாள்.வயதான ஒருவரது வாய் அகலத் திறந்திருந்தது அங்கே பராமரிப்பில் ஈடுபடும் ஆபிரிக்க இன பெண் அந்த திறந்த வாய்குள் உணவுட்டினாள். அவளுக்கு அந்த வேலையில் சிரமம் இருக்கவில்லை என நினைத்தேன்.

இந்த முதியவர்கள் எத்தகைய திறமை வாய்தவர்களோ? இந்த மூதாட்டிகள் என்ன மாதிரி ஜொலித்தார்களோ?  இவர்களின் அந்திம காலத்தை நினைத்த போது எனக்கு வயிற்றுக்ககுள் ஏதோ ஊர்வன இனத்தை சேர்ந்த ஜந்து ஒன்று உள்ளே புகுந்த பின்பு வெளிவருவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்வது போல் இருந்துது.

என்னை இந்த அவஸ்த்தையில் இருந்து தற்காலிகமாக காப்பாற்ற திருமதி ஸ்ருவேட் வந்தார்.
என்னிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபடி, சொக்ஸ் இருக்கும் இடத்தை காட்டினார்

சொக்ஸ் சுருண்டபடி அந்த மூலையில் படுத்திருந்தது. நான் அருகில் சென்றதும் என்னை தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் தனது பழைய நிலைக்கு சென்றது.

இந்த நேர்சிங் ஹோமில் சொக்ஸ்ஸை கருணைகொலை செய்து, இந்த நிகழ்வை ஒரு துன்பியல் நாடகமாக அங்கே அரங்கேற்ற என்மனம் இடம்கொடுக்கவில்லை.
அதேவேளை சொக்ஸ்ஸை வளர்த்தவர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டேன்.

“நான் சொக்ஸ்க்கு இங்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு எடுத்து செல்கிறேன் மேலும் இதற்கான செலவையும் நான் பொறுப்பேற்கிறேன்”

திருமதி ஸ்ருவேட் தலையை ஆட்டினார். மற்றவர்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை

மயக்க மருக்தை ஏற்றியதும் சொக்ஸ் மெதுவாக சுவாசிக்கத் தொடங்கியது. கண் இமைகளை மெதுவாக தொட்டேன். மருந்து மயக்கம் ஆட்கொண்டுவிட்டது தெரிந்தது.

அப்படியே சொக்ஸ்ஸை கையில் எடுத்து நான் ஏற்கனவே கொண்டுவந்த பெட்டியில் வைத்தேன்.
வெளியே வந்து காரில் இருந்தபடி எனது பக்கத்து இருக்கையில் அந்தப் பெட்டியில் உறங்கும் சொக்ஸ்ஸை பார்த்தேன்.

அந்திம காலத்தில் உடல் உணர்வுகளை இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இந்த மனிதர்கள் நிலையை எண்ணும் போது அமைதியாக மரணத்தை தழுவ இருக்கும் இந்த பூனை அதிஸட்டம் செய்ததா?

சித்தார்த்தன் நோய்  மூப்பு,  இறப்பை கண்டு போதியை தேடி ஓடியது நினைவில் வந்ததும்,  இதற்கு மேல் நினைவுகளை அலையவிடாது எனது காரை கிளினிக் நோக்கி செலுத்தினேன்.

“புத்தனுக்கு போதி மரம்……….” மீது ஒரு மறுமொழி

  1. சிந்தனையை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்கச் செய்தது தங்கள் பதிவு. அருமையான பதிவு. தங்களது நடை அருமையாக உள்ளது. தொடருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: