நண்பர் முருகபூபதி. 

மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரத்தை பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தேயுவின் பின்னே நின்று அவரின் கையை பிடித்து விவிலியத்தை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தேயுவிற்கு எவ்வளவு எழுதத் தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களின் வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதாகமே. 

88களில் முருகபூபதி கேட்டதற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. அன்றய இந்தியாவை இணைத்தது மதமோ கலாச்சாரமோ அல்ல, தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல் கட்டுரை “நடுக்காட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில் (1987 வைகாசியில்) வெளிவந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை அவரே சீர்பார்திருப்பார். கடைசியாக வெளிவந்த “தாத்தாவின் வீடு” நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்திருக்கும் ஸ்தானத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம்.

எழுத்துக்கப்பால் பல விடயங்களில் ஒன்று சேர்ந்தியங்கியுள்ளோம்.

80களில் தொடங்கிய அகதிகள் சங்கத்தில் இருவரும் பல வருடங்கள் இருந்தோம். அதன் பின்பு அவரால் உருவாக்கப்பட்ட இலங்கை மாணவர் நிதியத்தை அவரது தனிபட்ட பிரச்சனையின்போது என்னை பார்த்துக் கொள்ளும் படி சொல்லி ஓதுங்கியிருந்தார். அதை மீண்டும் அவர் கால்நூற்றாண்களுக்கு மேலாக நடத்துவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

97ம் ஆண்டில் உருவாக்கி நடத்திய உதயம் பத்திரிகையில் பலர் வந்து பங்கேற்றிப் போனார்கள். ஆனால் அதன் இறுதிவரையும் என்னுடன் கூட பயணித்தவர் முருகபூபதி அவர்களே. அதனாலே எனக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த 13 வருடங்கள் சாதாரணமானவை அல்ல. ஏராளமான சவால்கள், பயமுறுத்தல்கள். ஆனால் அதே சமயம் வெற்றிகள் பலவும் அடையாமல் இல்லை. அக்காலம் எவ்வளவு சவாலானது என பலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அது பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் 60 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து உதயத்தை ஒப்பு நோக்க எனது வைத்தியசாலைக்கு அவர் வருவார்.

கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிகளில் இருந்தவர்கள் மாணவர்களாகப் பரீட்சை எழுத விரும்பினார்கள். அவர்களின் தனிப்பட்ட கல்விக்கு ஒழுங்கு பண்ணுவதற்கு இலங்கையில் புனர்வாழ்வுக் கமிஷனராக இருந்தவர் என்னை அணுகி உதவி கோரினார். அதை ஒழுங்குசெய்வதற்கு நான் அங்கிருந்து முருகபூபதியைத் தொடர்பு கொண்டபோது, தயங்மைல் அவரே அதை ஒழுங்கு செய்தார். அக் கல்வி முடிந்தவுடன் அம்மாணவர்கள் அவர்களின் பெற்றோருடன் சேர்க்கப்பட்டனர்.

நல்லவைக்கப்பால் என்னால் அவருக்கு பல இழப்புகள் வந்ததுண்டு. அதையும் சொல்லவேண்டும்.

 போர் முடிந்தபின்பு 2011ல் இலங்கையில் முருகபூபதியின் முயற்சியால் கொழும்பில் நடந்த இலக்கிய மகாநாட்டில் என்னை சம்பந்தப்படுத்திய போதிலும் ஆத்மரீதியான ஆதரவைத் தவிர எனது நேரடி முயற்சி எதுவம் இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை என்னுடனும் இலண்டன் எழுத்தாளர் இராஜேஸ்வரியுடனும் இணைத்து சேறடிக்க முயற்சித்தார். அதில் பல பிரபலமான இலக்கியவாதிகளும் இணைந்து கொண்டனர். சமீபத்தில்கூட ஒரு நண்பர், மகிந்த இராஜபக்சவுடன் இலக்கிய மகாநாட்டை சம்பந்தப்படுத்திக் கேட்டபோது, சிரிப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. முருகபூபதியிடம் என்னிடமிருந்து விலகியிருக்கும்படி தொலைபேசியிலும் நேரடியும் பலர் சொல்லியிருக்கிறார்கள் என அறிகிறேன்.

நான், கனடா, கியூபா, இலங்கை என பல நாடுகளுக்கு அவருடன் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அதிக திட்டமிடல் இன்றி ஒரு வித அலட்சியத்தோடு செல்லும் என் போன்றவர்களுக்கு முருகபூபதியோடு செல்வது இரண்டாவது பாஸ்போட்டுடன் செல்வது போன்றது. வழக்கமாகப் பயணம் செய்யும்போது பொதிகள், பாஸ்போட் என்பவற்றில் எனது மனைவி கவனம் செலுத்துவார். முருகபூபதி அந்த பொறுப்பைத்தானே எடுத்து விடுவதுமல்ல, இப்பொழுதும் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது ‘கவனம்’ என்று சொல்லி அனுப்பும் ஒரு மனிதர் அவர்.

முற்காலத்தில் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சீனர்களும் தங்களது அரசவையில் நடந்தவைகளை எழுதி வைக்க ஒருவரை நியமிப்பாரகள். அப்படியான நடைமுறை நமது தமிழரிடம் இருக்கவில்லை. 2500 வருட வரலாறு என பீற்றிக்கொண்டாலும், அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல. இலங்கை சம்பந்தமான விடயத்தில் கூட , நண்பர் முருகபூபதி இலக்கியவாதிகப்பால் ஒரு சமூகபதிவாளராக ( Social Recorder) இயங்குவது மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன். (அதற்காக கன்பராவிலிருந்து ஒரு PHD படித்த நபர் இறந்த தந்தைக்கு கல்வெட்டெழுத முருகபூபதியை அழைப்பது கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன்!)

அவரது பழைய நாவல்கள் சிறுகதைகளை படித்த எனக்கு அக்காலத்தில் இருந்த மொழியின் வீரியம் தற்போதய இலக்கிய படைப்புகளில் இல்லை என்பதை நான் அவதானித்து இது பற்றி அவரிடம் கூறியுள்ளேன். அப்போது அவர் பதில் ‘சீவியத்திற்காக நான் செய்த வீரகேசரி எழுத்து வேலையின் விளைவு இது’ என்றார் சிரித்துக் கொண்டே.

அவரது ‘’இலங்கையில் பாரதி” என்ற புத்தகம் மிகவும் சிறந்த ஒரு படைப்பு. அதை பற்றி நான் எழுதிய விமர்சனத்தில்:   கொள்ளைக்காரன் ஒரு வங்கியின் இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்தால் , அவனது மனதில் ஏற்படும் நினைவுகளுக்கு குறைவிருக்காது. அது போன்றதுதான் முருகபூபதி எழுதியிருக்கும் “இலங்கையில் பாரதி” புத்தகத்திலுள்ள தகவல்கள். ஒரு விதத்தில் பல்கலைக்கழக டாக்டர் பட்டத்துக்கான ஆய்வு போன்றது இது. நிச்சயமாக இந்தப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்து பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கமுடியும். ஆனால் என்ன, நமது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் இவற்றைக் கண்டு கொள்ளாது.

இந்தப் புத்தகம் ஆய்வாளரது மொழியில் எழுதப்படாது செய்தியாளரது மொழியில் எழுதப்பட்டதால் வாசிக்க இலகுவாக இருக்கிறது. ஆனால், முக்கியமான தகவல்களை உள்ளே அடக்கி வைத்துள்ளது – அக்காலத்தில் நம்மூர் நடமாடும் புடவை வியாபாரிகளினது பொட்டணிபோல், இறுக்கமாக கட்டப்பட்டு இருந்தாலும், அவிழ்த்தப் போட்டால் காஞ்சிபுரம், பெனாரிஸ், மணிப்புரியென வகை வகையான புடவைகள் வந்து விழும்.

இந்தப் புத்தகம், பாரதியை இலங்கைத் தமிழர்கள் எப்படி ஆராதிக்கிறார்கள் என்பதைத் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு நிச்சயம் புரிய வைக்கும்!

எனது வலைத்தளத்தில் இந்த கட்டுரையை பார்த்த எழுத்தாள நண்பர் மாலன் தற்பொழுது இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்பது நண்பர் முருபூபதி தந்த புதிய தகவல். 

பல நிறைகளுள்ள மனிதனாக இருக்கும் நண்பர் முருகபூபதி மற்றவர்களையும் அதேபோல் எதிர்பார்ப்பார். மற்றவரால் அவை முடியாது போனதும், ஏமாற்றமடைவதும், துரோகங்களைக் கண்டு கொதிப்பதும் அவரது இயல்பு. இவைகளே அவரது நெஞ்செரிவு மற்றும் இதய பிரச்சனைகளுக்கு காரணம் எனது கருத்து.

மனிதர்கள் வாழும்போது நடப்பவற்றுக்கு அவர்களே முழுப் பொறுப்பு என்பதுடன் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப வாழ்தலே ‘இருத்தலியல்’ எனப்படும் எக்ஸிஸ்ரன்ஸலிசம் (Existentialism) என்பதாகும். அரிஸ்டாட்டிலில் இருந்து பிரீட்ரிக் நீட்சே, சோரன் கீர்க்கே கார்ட், எனப் பல தத்துவவாதிகள் கூறிய விடயங்கள் அடிப்படையில் இவையே. இதை ஏற்று வாழும்போது சமூகத்தில் இருந்து அன்னியமாக வாழ்வது முடியாத காரியம் ஆகும். அப்படி வாழ்ந்தால் அது இந்து மத, அல்லது புத்த மத துறவறமாக(Disconnected from the society) அல்லது தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ முடியும். என்னைப் பொறுத்தவரை சமுகத்தோடு சேர்ந்து அத்துடன் அந்த சமூக தேவைகளோடு ஒரு தனிமனிதன் இணைந்து வாழலாம், வாழமுடியும் என்பதற்கு நண்பர் முருகபூபதி உதாரணம். 

அரிஸ்டாட்டில், தனது சீவனத்திற்கு அப்பால் ஓய்வு நேரத்தில் மனிதன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம் என்கிறார். அதையே முருகபூபதியில் நான் பார்கிறேன்!

1)What is the simple definition of existentialism?

Existentialism is the philosophical belief we are each responsible for creating purpose or meaning in our own lives. Our individual purpose and meaning is not given to us by Gods, governments, teachers or other authorities.

2) Gospel of Matthew; the Gospel of Mark; the Gospel of Luke; and the Gospel of John.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.