ரங்க மார்த்தாண்டா- தெலுங்கு சினிமா

தொலைவான  விமானப் பயணத்தில், விமானத்தில் திரைப்படம் பார்க்கும்போது தூக்கம்- விழிப்பு என இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருதுவதால் பெரும்பாலும் படத்தின் நினைவுகள் வீடு வந்தவுடன் மழையில் அழிந்த கோலமாக  மனத்தில் கலங்கியிருக்கும். ஆனால் இம்முறை கொழும்பிலிருந்து வந்தபோது,   சிறி லங்கா ஏர்லைனில்  நான் பார்த்த தெலுங்குப்படம்  ‘ரங்க மார்த்தாண்டா ‘ என்னை அப்படியே இறுக்கமாக  உடும்புப் பிடியாக வைத்திருந்தது. .  நான் இயர் போன்  கருவியை தவிர்த்துவிட்டேன்.   வார்த்தைகள் காதில் விழாது, ஊமைப்படமாக  ஆங்கிலத்தில் வாசித்தது மட்டுமே.

 இதுவரையும் தெலுங்கு படங்களில் எனக்கு அதிக ஈடுபாடில்லை காரணம்  இந்திய மொழிப் படங்களில் தரத்தில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஆக முடிந்தால் பாகுபலி KKK போன்ற மனமகிழ்விற்கான படங்களை பணத்தைக் கொட்டி எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் எனது நினைப்பைக் கெடுத்து,  உனது எண்ணம்  தவறெனக் கன்னத்தில் அறைந்து கூறியது இந்த ரங்க மார்த்தாண்டா படம்.

மராத்திய நாடகத்தை, அழகிய திரைப்படமாக நமக்கு விருந்தாக்கி படைத்திருக்கிறார்கள். தமிழ்த் திரையில்,  திரைத்துறையை நாடகமாக்கிய துன்ப வரலாறு – நம்மை எல்லாம் லூமிரி பிரதேர்ஸ்  (the Lumière brothers) பிறப்பதற்கு முன்னால் கொண்டு சென்று  கூத்துப் பார்க்கும்  ரசிகர்களாக்கியது. 

ரங்க மார்த்தாண்டாபடம்,  இந்திய சமூகத்தின் கதை மட்டுமல்ல நமது தென் ஆசியச் சமூகத்தில் பல பெற்றோரின் விதி . மரணத்தின்  முன்பாக சொத்தை பிள்ளைகளுக்குக் கொடுத்த விட்டு , வீதியிலும் மற்றும் அனாதை ஆச்சிரமத்திலும் அலைந்து , பின்பு அனாதையாக இறக்கும் பலரைக் கேட்டிருப்பீர்கள். அவர்களின் கதை.  எந்த தொய்வுமில்லாது  திரையில் சொல்லப்படுகிறது.

ரங்க மார்த்தாண்டா படம்  சொல்வது மிகவும் எளிமையான கருத்து. தினமும் நாம் பார்த்த அறிந்த கருத்து . இங்கு நாடகத்தில் ஈடுபட்டவர்கள் அந்தக் கலைத்துறையில் ஆழ்ந்து, அதில் தங்களை எப்படிப் பறிகொடுப்பதும்,  அவர்களைச் சூழ்ந்தவர்கள் அதற்கு மதிப்பளிக்காது,  பின்பு அவர்களது இறுதிக்காலத்தில் பேரக்குழந்தைகளைப் பிரித்து,  தங்கள் பெற்றவர்களைத்  தூக்கி வீசுகிறார்கள்.

பிரகாஸ்ராஜ் நல்ல நடிகரென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ஆனால் இங்கு ராகவ ராவ் என்ற நாடக கலைஞனாக நடிக்கும் பிரகாஸ்ராஜ் எந்த படத்திலும் காட்டாத நடிப்பு-குறைந்த பட்சம் இதுவரையில் நான் இப்படியான நடிப்பை நான் பார்க்கவில்லை.  பிரகாஷ்ராஜ் நடிக்காது அந்த பாத்திரமாக வாழுகிறார். ரம்யா கிருஷ்ணன் வார்த்தைகளை அளந்து பேசி,  பிரகாஸ்ராஜ்க்கு உடல்மொழியால் ஈடு கொடுத்து நடித்துள்ளார் அதை விட நகைச்சுவை நடிகராக வரும் பிரமானந்தம் நட்சத்திரமாக  ஒளிரும் படமிது. இந்த மூவரும் நடிகர்களாக அற்புதமாகப் படத்தில் வாழ்கிறார்கள். ஆனால் வழக்கம்போல் அடி தடி ஆடல் பாடல்கள் இல்லாததால்  ரங்க மார்த்தாண்டா வசூலில் தோல்விப் படமாகிறது.

ரங்க மார்த்தாண்டா , நாடக வாழ்வில் பிரகாஷ்ராஜ்க்கு  கிடைக்கும் பட்டம். அதன்பின் கலை வாழ்விலிருந்து ஓய்வுபெற்ற பிரகாஷ்ராஜ் வாழும்போதே  மகனுக்கு தனது சொத்துகளை அளிக்கிறார்.  தந்தை அளித்த வீட்டை , மருமகள் அடுக்கு மாடியாகக் கட்டி பணம் பண்ண விரும்பி, மாமனாரை வெளியேற்றுவதும் , பெற்றோர் அடுத்ததாக மகளது வீட்டில் தஞ்சமடைந்து வாழும்போது ,   அங்கும் நடந்த தவற்றால் தாய் தந்தையினர்  அனாதைகளாக இரவில் வெளியேறுவதுமே இங்கு கதையாகும்- பெரிய கதையில்லை. ஒவ்வொரு சம்பவமும் முத்துக்களாக கிருஷ்ண வம்சி என்ற இயக்குநரால்  வரிசையாகக் கோர்க்கப்படுகிறது.

மனைவியை இறந்ததும் பிரகாஷ்ராஜின் நண்பனும் சக கலைஞனும் ஆன பிரமானந்தம் வாழப்பிடிக்காது இறக்க விரும்பியபோது பிரகாஷ்ராஜ் தூக்க மாத்திரையை வைத்தியசாலை கட்டிலில் வைத்தே  கலந்து கொடுப்பது என்னை உலுப்பிய ஒரு இடமாகும் . அந்தக் காட்சியில் நண்பர்களாக இருவரது நடிப்பு  அபாரம். அதேபோல் ஒரு காட்சி,  ரம்யா கிருஷ்ணன் ஆலமரத்தடியில் இறந்து கிடக்கும்போது ரம்யா கிருஷ்ணனை எழுப்ப முயல்வது.

இப்படி பல சம்பவங்கள் மனத்தில் மிகவும் ஆழமாகப் பதிவன.

நல்ல திரைப்படம் தயாரிக்கவும்,  படங்களுக்கு கதை எழுத   ஈரான் தென்கொரியா எனப்போகாது,  ஒவ்வொரு வீட்டிலும் நடப்பவைகளை சிறந்த முறையில் படமாக்கினால் அவை நல்ல சினிமாவாகும் என்பதற்கு ரங்க மார்த்தாண்டா உதாரணமாகும்.

பல யதார்த்தமில்லாத பல  குப்பை படங்களைப் பார்த்த எனக்கு, நட்பகலில்  பாலவனத்தை நடந்து கடந்தவனுக்குக் கிடைத்த முதல் குடிநீராக ரங்க மார்த்தாண்டா இருந்தது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.