மேரி மாதாவின் தரிசனம் நாடி

பிரான்சிலுள்ள பரிசுத்த லூர்து (St. Lourdes) மாதா எங்கள் வீட்டிற்கும் வந்து பல காலமாகிவிட்டது.   எப்படி என்றா கேட்கிறீர்கள்?

சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக மனைவி சியாமளாவின் கான்சர் நோய் பற்றி அறிந்ததும் அதனது அறுவை சிகிச்சைக்கு சியாமளாவோடு நானும் வைத்தியசாலைக்குப் போனேன்.  பல வருடங்கள் முன்பாக நாங்கள்  லூர்து நகர் போய் வந்தபோது அங்கிருந்து  கொண்டு வந்த புனித நீர் (Holy water) நிறைந்த மாதா சொரூபம்  வைத்தியசாலையின் கட்டிலருகே உள்ள சிறிய மேசையில் எனக்குத் தெரியாமலே வந்து அமர்ந்து கொண்டது. மீண்டும் வீட்டுக்கு வந்தபோது படுக்கையறையிலுள்ள மேசையில்,  ஐந்து வருடத்தில் நான்கு வீடுகள் மாறிய போதும், தொலையாது எம்மை நிழலாகத் தொடர்நதது.  ஒவ்வொரு நாளும் காலையில் அந்த மாதாகோவிலிருந்து வந்த புனித நீரைத் தொட்டு கண்ணில் வைப்பது சியாமளாவின் வழக்கம்.

கடந்த இரு நூற்றாண்டுகள் முன்பு மருத்துவம், விஞ்ஞானம் என்பன பெரிதாக கிடையாது. அதிலும் நமது தென் ஆசியப் பிரதேசத்தில்  நம்பிக்கைகள் மட்டுமே ஊன்றுகோலாகக் காலம் காலமாக மனிதர்களை வழிநடத்துகிறது. பராம்பரியமான மதங்களோடு வெளியிருந்து வந்த மதங்கள்,  நமது மக்களது மனித வரலாற்றில் ஆழமாகப் பதிந்தவை. இந்த நூற்றாண்டிலும் 95 வீதமான மக்கள்  விஞ்ஞானம் தோற்றுவித்த மருத்துவத்தை தங்களது அன்றாட தேவைக்குப் பாவித்தாலும் அடிப்படையான பரிணாமம் பகுத்தறிவு என்பன அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. அது அவர்கள் தவறல்ல. மானிட வரலாறு எப்பொழுதும் ஏற்கனவே போடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதில்லை!

பிரான்சு நாட்டின்  தென் மேற்குப்பகுதியில் ஸ்பெயின் நாட்டின் எல்லையோரத்தில் லூர்து என்ற சிறிய நகரம் மலைசாரந்த பகுதியில் உள்ளது.  அங்கு ஒரு புகழ்பெற்ற  மாதா கோயில் உள்ளது. இந்த இடம்  தற்பொழுது வத்திக்கானுக்கு அடுத்தபடியாக கத்தோலிக்க மக்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது. நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு லூர்து நகருக்கு போனோம். அதன் காரணம் எனது நண்பர் ரவிந்திரராஜ ; இவர் பல முறை அங்கு போயிருந்தார்…அதன் மகிமை பற்றி எமக்கு சொல்லியிருந்தார்.

 பாரிசில் விமானத்திலிருந்து மதியத்தில் இறங்கினாலும் எமது  பிரயாணப்பொதிகள் வரத்தாமதமாகிவிட்டது. லூர்து நகருக்கு செல்லும் மாலை இரயிலை பிடிக்க வெளி மாகாணத்திற்குச் செல்லும் இரயில் நிலையத்திற்கு வேறு செல்லவேண்டும். ஆறு கிழமை பயணத்திற்கான பொருட்களை அடங்கிய பெட்டிகளைத் தூக்கி இரயில் மாறுவது வேறு கடினமாக இருந்தது. பயணத்தை இரயிலில் ஒழுங்கு செய்யாது விமானத்தில் போயிருக்கலாமே என எண்ணி வருந்தினோம். ஆனால் என்ன செய்வது; விட்ட தவற்றை நினைத்து நோகத்தான் முடியும்! மேலும் பிரயாணங்களில் இப்படியான பல சிக்கல்களை எதிர்கொள்வதும் பயண அனுபவத்தின்  ஒரு அங்கமே!

பாரிஸ் இரயில் நிலையத்தில்  பயணிகள் பலர்,  நாங்கள் கேட்காது, எங்கள் பொதிகளைத் தூக்க உதவியதும் இந்தப் பயணத்திலேயே!  அப்போது எனது நண்பன் சொன்ன வார்த்ததை நினைவில் வந்தது.  ‘வாழ்வில் உனது பெட்டியை நீயே தூக்கும் வரையிலும்தான் நீ பிரயாணம் செய்யமுடியும்’  என்பதாகும்.

கடந்த முறை நாங்கள் லூர்து நகருக்கு போனபோது அதிகம் பக்தர்கள் இருக்கவில்லை.  ஆனால் என்னை அதிசயிக்க வைத்த விடயம்:   ஏராளமானவர்கள் சக்கர நாற்காலிகளோடு வந்திருந்தார்கள். விசாரித்தபோது யாரோ ஒருவர் அந்த கோயிலில் சக்கரநாற்காலியிலிருந்து  எழுந்து நடந்ததாக வரலாறு உண்டு என்றார்கள்.

முதியவர்கள் மட்டுமல்ல இளம் வயதினர் பலர் இருந்தனர். வந்தவர்கள் எல்லோரும் சக்கரநாற்காலியிலிருந்து எழுந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வந்திருப்பார்கள் என்பதால்   அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரார்த்தனை கூட்டத்தில் முன்பாக ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்தார்கள்.  இவ்வளவு சக்கரநாற்காலிகளை ஒன்றாக ஒரு இடத்தில் பார்த்ததில்லை என்ற ஆச்சரியம் கலந்த நினைவு பல காலமாக எனக்கு,  யாழ்ப்பாணத்தில் சேட்டுக் காலரில் போட்ட சலவைக்குறியாக, தொடர்ந்து நிலைத்திருந்தது.

 பாரிசில் இருந்து ரயிலில் தென் நோக்கிப் போவது கண்ணுக்கு  விருந்தான (banquet) அனுபவம். அதிலும் நாங்கள் சென்றது வசந்தகாலத்து மாலை நேரம். எங்களுடன் பேச்சுத்துணையாக எத்தியோப்பியாவில் வசிக்கும் தமிழ்பேசும் மலையாளத்தவரும் சேர்ந்து கொண்டார். எத்தியோப்பியாவில் வியாபாரம் செய்பவர்.  எங்களுக்கு பெட்டி தூக்கி உதவி பின்பு எங்களுடன்; உணவுண்ணும் அளவு நெருக்கமாகினார். எங்களை அடுத்தமுறை எத்தியோப்பியாவுக்கு வரும்படியும் தனது வீட்டில் நிற்கமுடியும் என அழைப்பு விடுத்தார். இம்முறை தனது மகனது பரீட்சை சித்தியடைதலுக்கான வேண்டுதலுக்காக வந்ததாகவும் அடுத்தமுறை திருவனந்தபுரத்திலிருந்து தனது தாயை அழைத்துவரவிருப்பதாகவும் கூறினர்.

நாங்கள் தூய லூர்து அன்னையின் ஆலயத்தை சென்றடைய இரவாகிவிட்டது. ஆனாலும் அங்கு வசதியாக டாக்சி தயாராக இருந்தது. எத்தியோப்பிய நண்பரை ஹோட்டலில் விட்டுவிட்டு எங்களது ஹோட்டலுக்கு சென்றோம். 

இம்முறை இந்த லூர்து அன்னை தலயாத்திரையை மையமாகக் கொண்டே  மிகுதி பிரயாணத்தை ஒழுங்கு செய்திருந்தோம். அத்துடன் நண்பன் ரவீந்திராஜ் மனைவியுடன் வந்திருந்தார். பயணத்துக்குத் துணையாக வரும்போது பயணத்தில் வாய்பாட்டுக்கு வாத்தியமாகச் சுவை அதிகம். 

காலையில் எழுந்து ஆலயத்திக்குச் சென்றபோது, அந்த ஊர் என்னை மிக கவர்ந்தது. அழகான பச்சை கம்பளம் விரித்த நிலத்தில் இடைக்கிடையே திட்டுத் திட்டாகப் பனி படர்ந்த மலைப்பிரதேசம்,  பாடிக்கொண்டே பாவாடையை ஒதுக்கியபடி ஓடும் பருவப் பெண்ணாகச் சலசலத்தபடி கரைகளிடையே ஒதுங்கி ஓடும் ஆறு,   பனிதிட்டுகளைத் தடவி ஆற்றில் நீராடி  மலைகளுடன் அந்தரங்கமாக கீதம் இசைத்து  தென்றல் வீசும் வசந்த காலம், மத்திய கால ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் அங்கமைந்த ஆலய அழகிக்கு வைத்த பொட்டாக அந்தப் பிரதேசத்தில்  ஒளிர்ந்தது.

நாங்கள் தங்கிய ஹோட்டல் ஆலயத்திலிருந்து அதிக தூரமில்லை. ஆலயத்தின் பின் பகுதியில் ஒரு குகையுள்ளது. அதில் தண்ணீர் கசியும். எல்லோரும் அந்தக்குகையின் பாறைகளில்  கசியும் குளிர்  நீரை முகத்தில் ஆசீர்வாதமாக தொட்டு வைப்பார்கள். இந்த குகையில்தான் மேரிமாதா ஒரு சிறுமிக்குக் காட்சியளித்ததாகச் சொல்லப்படும் இடம்!

 நண்பன் ரவிந்திராஜ், அவர்  மனைவியுடனும் சியாமளாவுடன் குகை உள்ளே செல்ல சில மணிநேரம் வரிசையில் நின்றபோது,  நான் எதிரில் சலசலத்தபடி ஓடும் ஆற்றின் கரைக்குக் கட்டியிருந்த சுவரில்   இருந்தபடி எனது மனக்குதிரையைத் தட்டி விட்டேன்.

19ம் நூற்றாண்டில்(1858)  லூர்து நகரில் வாழ்ந்த பதினாலு வயதான  பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமியின் முன்பாக மேரி மாதா  ஒரு நாளல்ல பல நாட்களாகத் தரிசனமாகி , அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.  இச்செய்தி மதகுருமார்களுக்கு சிறுமியின் மூலம் ஊரில் பரவி , இறுதியில் விடயம் ரோமிலுள்ள கத்தோலிக்க  திருச்சபைக்குப் பரவியது. இப்படிப் பல இடங்களில் மேரி தோன்றுவதாகப் கதைகள் வந்தபோதிலும் இந்த இடத்தை கத்தோலிக்க திருச்சபை தீவிரமாக விசாரித்து அது உண்மையாக இருக்கலாம் என்ற முடிவு செய்ததால் தற்போது ஒன்றல்ல மூன்று  ஆலயங்கள் குன்றைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது மட்டுமல்ல பின்னாளில் 35 வயதில் இறந்த பெர்னதெத்தை கத்தோலிக்க திருச்சபை, பரிசுத்தமானவளாக( Sainthood) 1933ல் பிரகடனப்படுத்தியது.

பெர்னதெத் (Bernadette) என்ற சிறுமியின்  முன்பாக  மேரி மாதா தரிசனமாகிய  கதையை மதம் சாராதவர்கள் நம்ப மறுத்து,  மனப்பிராந்தி அல்லது அருட்டுணர்வான விடயம் எனலாம். 86களில் நாகபட்டினத்திலுள்ள இலங்கை அகதி முகாமிலுள்ள மன்னார் இளம்பெண் தன்னோடு மடு மாதா வந்து பேசுவதாகச் சொன்னதை வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். அருட்டுணர்வே மதத்தின் அத்திவாரம் என்பதால் இதைப்பற்றிய ஆராய்வு நமக்குத் தேவையில்லை!

 லூர்து நகர் தற்பொழுது 14000 மக்கள் தொகையை மட்டும் கொண்ட இந்த சிறிய  நகரம், ஆனால் பாரிசுக்கு அடுத்ததாக அதிக ஹோட்டல்கள் கொண்ட நகரமாகிறது.  வருடத்திற்கு ஆறு மில்லியன் மக்கள் புனிதயாத்திரையாக இங்கு வருகிறார்கள். ஏராளமான உணவகங்கள் உள்ளன. இலங்கையர்களது பல உணவகங்களை இங்கு பார்த்தேன்: அதில் ஒன்றில் உணவருந்தினோம்.

லூர்து நகர் பிரான்சில் முக்கிய  சுற்றுலாப் பொருளாதார மையமாக உள்ளது. பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பாவின்  பல பகுதியிலிருந்தும் பாடசாலை மாணவர்கள்  கூட்டமாக கிறிஸ்துவ மத சுலோகங்களை எழுப்பியபடி வந்தார்கள். கத்தோலிக்க மதம்,  இளம் மனங்களில் ஆதர்சமான மதமாக இருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.  பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடான போதிலும் அடிப்படையில் கத்தோலிக்க நாடு. மேலும் கத்தோலிக்க மதத்தில் உள்ள உலகத்தின் பல இனத்தவர்கள் இங்கு வந்துபோவதைக் காணமுடிந்தது. பாரிசில் வாழும் பல இலங்கையர்களைச் சந்திக்க முடிந்தது.

கத்தோலிக்க மதத்தின் பெயரால்  வரலாற்றில் நடந்த பல கொடுமைகளை நாம் பேசமுடியும். சிலுவை யுத்தத்தை ஆசீர்வதித்துப் பல நூற்றாண்டுகளாகப் போர் நடத்த உதவியவர்கள்,  மெக்சிக்கோ மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் மாயன், அஸ்ரெக் மற்றும் இன்கா என்ற புராதன சமூகங்களை சிதைப்பதற்குக் கத்தோலிக்க மதம் கைத்தடியாக ஸ்பானியர்களுக்கு உதவியது.  மத்தியகாலத்தில் விஞ்ஞானத்தைக் கருவறுத்த   கத்தோலிக்க மதகுருமார்கள் நடத்தைகள்,  அடிமை வியாபாரம் மற்றும் தற்காலத்தில் வெளிவரும் பாலியல் அவதூறு எனப் பலவற்றைப் பேசமுடியும்.ஆனால் கத்தோலிக்க மதத்தில் எனக்குப் பிடித்த விடயங்கள் சில உள்ளது.   ஓவியர்கள்,  சிற்பிகள்,  கட்டிடக்கலைஞர்கள்,  சங்கீத மேதைகளை  வளர்த்து விட்ட தொட்டிலாகும். கத்தோலிக்க மதம் தனது நிறுவனத்தை நிலை நிறுத்த பல கொடுமைகளைச் செய்திருந்தபோதிலும்  கத்தோலிக்க மதமில்லாதபோது நமக்கு லியனடோ டாவின்சி கிடைத்திருப்பாரா?

மேற்கண்ட துறைகள் மட்டுமல்ல மாயா ஜதாரத்தம் என்ற இலக்கிய வடிவம் உருவாக்கம்  கத்தோலிக்க மதத்தில் உள்ள அருட்டுணர்வுகளை வைத்தே  தென்னமெரிக்காவிலிருந்து தோன்ற முடிந்தது.  கனவுகள், கற்பனைகள்,  தோற்ற மயக்கங்கள் என்பன கலைக்கு அவசியம்.  அவை இல்லாதபோது  மதங்களில் வெறுமையாக இருக்கும்.  இந்தியாவில், இந்து மதத்தின் கீழ் வளர்ந்த கலை கலாச்சாரம்போல் தற்போது நாம் பார்க்கும் ஐரோப்பாவின் தோற்றம் , மத்திய காலத்திலிருந்த கத்தோலிக்க மதத்தின் சாயலே. இந்தியாவில் இந்து மதத்தை வெளியே எடுத்தால் கலாச்சாரத்தில் என்னதான் மிஞ்சும்?  

 கத்தோலிக்க மதத்தின்  வடிவங்களே நாம் பார்க்கும் மேற்கு ஐரோப்பா. அதேபோல்  ஓதோடொக்ஸ் கிறிஸ்துவ மதத்தின் தேவாலயங்கள் மோசாய் வடிவங்கள் எல்லாம் சேர்ந்து உருவாகிய கலவையே   கிழக்கு ஐரோப்பா எனலாம்.

தற்போது லூர்து நகரில் கட்டப்பட்டுள்ள  மூன்று ஆலயங்களும் மலைக் குன்றின்மேல் ஒன்றாக இயற்கையோடு இணைந்து கட்டப்பட்டுள்ளன. அருகிலுள்ள ஒரு மலையில் தொடர்ச்சியாக யேசு நாதரைச் சிலுவையில் அறைவதற்குப் போர் வீரர்கள் அழைத்துச் செல்வதும்,  இயேசுநாதர் சிலுவையோடு மூன்று தடவைகள் விழுவதும்,  மாதா மேரியை  சந்திப்பது, வெரோனிக்காவிடம் முகம் துடைக்கக் கைக்குட்டையை  வாங்குவதும், சிலுவையில் அறையப்படுவதும் பின்பு மரித்த பின் குகையினுள் வைத்து மூடுவதும், இறுதியில்   அவர் உயிர்த்தெழுவதெனப் பல காட்சிகள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன அந்த மலையைச் சுற்றி வர மூன்று கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால் வயதானவர்கள்,  ஊனமாகி நடக்க முடியாதவர்கள் எனப் பலர் அந்த மலையை  சுற்றி வந்தார்கள் என்பது எமக்கு  வியப்பைக் கொடுத்தது!

நாங்கள் அங்கு தங்கியிருந்த இரண்டாவது நாளின் மாலையில், அதிகமான பக்தர்கள் அற்ற சூழ் நிலையில்,  நானும் சியாமளாவுடன் அந்த மலைக்குகைக்குள் சென்று வந்தேன். 

சிறுவயதில் எனக்கு நோய் வந்தபோது, மடுமாதாவுக்கு மெழுகுதிரி கொளுத்துவதாக நேர்த்திக்கடன் வைத்திருந்ததுடன் என்னையும்  என் தாயார் அங்கு அழைத்துச் சென்று பெரிய மெழுகுதிரியைக் கொளுத்தியதை அசை போடவைத்தது. 

இறுதியில் அரைக்கலன் நீரை அங்கிருந்து  தனக்காகவும் மற்றவர்களுக்குக் கொடுக்க என பிளஸ்ரிக் கலத்தில் சியாமளா கொண்டு வந்தார்.  மூன்று இரவுகள் லூர்து நகரில்   தங்கியிருந்து மீண்டும் பாரிஸ் வந்தோம்.

—–

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.