>புக்காரா நகரம்

நடேசன்

நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம்.

நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம்.
நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறார்கள்
விமானத்தின் யன்னலோரத்து ஆசனத்தில் அமர்ந்து, இமையமலைச் சிகரங்கள் மேலாக பறக்கும்போது மனதில் டென்சிங்கையும் எட்மண்ட் ஹிலாரியையும் நினைத்துப் பார்க்காது இருக்கமுடியாது .

காலையில் செல்லவேண்டிய புத்தா விமானச்சேவை பல மணிநேரம் தாமதமடைந்து புறப்பட்டது. இமயமலை மேலாக பறப்பதால் காலநிலை சரியாக இருக்கவேண்டும். நாங்கள் சென்ற நாளன்று மேகமூட்டமாக இருந்தது. நேபாளத்தில் பல இடங்களில் மேகம் உயரத்தில் இல்லை. தரையில் வந்து இறங்கிவிடும். எனக்கும் மனைவிக்கும் இடையிலும் வந்துவிடும் என்றால் பாருங்களேன்.

புக்காரா அரை மில்லியன் மக்கள் வாழும் அழகான நகரம். அன்னபூரணா மலைச் சிகரத்துக்கு அண்மித்த பள்ளத்தாக்கில் உள்ளது. இங்கிருந்து மலையடிவாரத்துக்கு வாகனங்களில் மற்றும் ஹெலிக்கப்டர்களில் போவார்கள்.
புக்காரா மிகவும் சுத்தமான நகரம். மிகவும் அதிகமான கடைகள் உல்லாசப்பிரயாணிகளை நம்பியுள்ளன. அடுத்த நாள் காலை செல்லுமிடம் குளிரான மலைப்பிரதேசமானதால் அன்று மாலை ஆறு மணியளவில் ஒரு கடையில் இரண்டு குளிர் உடுப்புகள் வாங்கியபோது, அங்கிருந்த இளைஞனிடம் இரண்டை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி எனப் பேரம் பேசத் தொடங்கியபோது, ஆங்கிலத்தில் அவன் “ இதுவே எனது முதல் விற்பனை. நேற்று எதுவும் விற்காமல் சென்றேன் “ என்று தனது சோகத்தை பாடியதும், எதுவும் பேசாது பணத்தைக்கொடுத்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, ஜீப்பில் Sarangkot என்ற மலை அடிவார நகரத்திற்குச் சென்று மலைச் சிகரங்கள் ஊடாக சூரியன் உதிப்பதை அங்குள்ள மொட்டை மாடிகளில் ஏறி நின்று பார்க்க முடிந்தது. நேபாளத்தில் ஒரு நல்ல அரசு அமைந்தால் சுவிட்ஸர்லாந்தைப்போல் அழகான நாடாக மாறும். ஆனால், அது தற்பொழுது தென்னாசியாவிலே வறுமையான நாடாக விளங்குகிறது.

கொரோனா வைரசின் தாக்கத்தால் முக்கியமாக சீனர்கள் வருகை இங்கில்லை.


ஐரோப்பியர்களுக்கு சீசனில்லை. இந்தியர்கள் வருகிறார்கள். இந்துக்கள் பெரும்பாலனவர்கள் தல யாத்திரையாக வருகிறார்கள் புத்த மதத்தினர் கம்போடியா, தாய்லாந்து மற்றும் யப்பானிலிருந்து லும்பினிக்கு அதிகமாக வருகிறார்கள். இப்படியான மத யாத்திரீகர்கள் குறைந்தளவில் பணத்தை செலவழிப்பவர்கள்.
வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திற்கு அடுத்ததாக நேபாளம் தங்கியிருப்பது இந்த உல்லாசப்பிரயாணிகளையே!
தற்போதைய அரசு இடதுசாரி அரசு. அதாவது மாவோயிட்ஸ்களும் மற்றைய கம்மியூனிஸ்டுகளும் சேர்ந்து உருவாக்கியது . பலரோடு பேசியபோது அரச நிர்வாகம் ஒழுங்கில்லை, வேலை வாய்ப்பில்லை என்றார்கள். விவசாயம் பெரிதளவில் வருமானம் தராதமையினால், நிலத்தை விற்கிறார்கள். அதில் வரும் பணம் வெளிநாடு செல்ல உதவுகிறது. நேபாளத்திலும் விவசாய நிலங்கள் வீடுகளாகின்றன. உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருகிறது. கடல் வழியற்ற நாடானதால் தொடர்ச்சியாக இந்தியாவின் அழுத்தமுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை ஆயிரம் இளைஞர்களை ஹெங்கொங் , பிரித்தானிய பொலிசிற்கும் பிரான்ஸ் இராணுவத்திற்கும் இங்கிருந்து எடுப்பார்கள். அதற்கு ஐந்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் வருடத்திற்கு ஐந்தாயிரம் மாணவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் நோக்கமற்று அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள்.

<br />புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது. நான்கு பக்கமும் உயர்த்த மலைகளில் இருந்து வரும் மழைநீரால் உருவாகியது. அந்த வாவியில் ஒரு மணிநேரம் ஒரு பெண்ணோட்டியின் படகில் பயணித்தபோது அந்தப் பெண்ணைப்பற்றி விசாரித்தேன். அவள் 35 வயதானவள் . இரண்டு குழந்தைகள் . பத்து வருட காலமாக படகைச் செலுத்துவதாகச் சொன்னாள் . அங்குள்ள படகுகள் பல வர்ணத்திலிருந்ததால் கண்ணைக்கவர்ந்தன.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.