முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியன்

முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியனை இங்கு உங்களுக்க அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மறைந்த ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களால் 14 வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிட்னியில் அறிமுகமான பின்பு நெஞ்சுக் அருகில் உறவாகியவர் அவர் மட்டுமல்ல அவரது டிஐஜி கணவர் சந்திரசேகரன் குழந்தைகளும் உறவாகினார்கள்.
சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில்ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி இளம் வயதிலிருந்தே கலை இலக்கியஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை விமர்சனம் மொழிபெயர்ப்பு நாடகம் நடனம் ஆய்வு முதலான துறைகளில்ஈடுபாடுகொண்டிருந்தவர்.

இவரது எஞ்சோட்டுப்பெண் வனப்பேச்சி அருகன் மஞ்சனத்தி பாம்படம் முதலான கவிதைத் தொகுப்புகள் தென் தமிழக கிராமங்களைச் சுற்றி வரும் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில் 2005 இல் அவுஸ்திரேலியாவுக்குத் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து அதைத் தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மர்க்கண்டையரின் நாடகங்களைத்தனது ஆராய்ச்சிப்பொருளாக கொண்டு அதன் தமிழாக்கம் நிழல்வெளி என்னும் பெயரில் எழுதியுள்ளார்)

இந்த நூல் தமிழர்களின் அவுஸ்ரேலிய வரவு இலங்கை அரசியல் அரசியல் காலனித்துவ அரசியல் நாடகங்கள் மற்றும் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மர்க்கண்டையரின் வரலாற்றைப் பேசுகிறது . அத்துடன் எமக்குத் தெரியாத புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில்வாழும் பல சிங்கள எழுத்தாளர்களைப் பற்றியும் பேசுகிறது.எம்போன்ற ஈழத்தமிழர்களை வரலாற்றுச் சுவடிகளுள் அழுத்தமாகப் பதித்ததால் நாமெல்லாம் சுமதி தங்கபண்டியனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

அவரது திறமைகள் கவிஞர் எழுத்தாளர் ஆராய்ச்சியாளர் என்பவற்றிற்கு மேலாக ஈழத்தமிழர்களில் மிகவும் அன்புகொண்டவர்.
சுமதி தங்கபாண்டியன் இந்த நூலை முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்து மக்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

2009 ஜுலையில் போரின் பின்பு நாங்கள் ஐந்துபேர் – நண்பர்கள் சிவநாதன் கனடா மனோரஞ்சன் மறைந்த டாக்டர் நரேந்திரன் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இலங்கை அரசில் முக்கியமானவர்கள் பலரை சந்தித்தோம்.
அமைச்சர் பசில் இராஜபக்சாவைத் சந்தித்தபோது அவர் நாங்கள் இந்திய பாராளுமன்ற அங்கத்தினரை தாங்கள் அழைத்ததாகச் சொன்னார் . அத்துடன் எங்களுக்குத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களை பார்க்க அனுமதி கிடைத்தது. இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் முகாம்களுக்கு சென்ற நாங்கள் முகாமில் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளிடம் நாம் முள்ளிவாய்காலில் இருந்து இறுதியாக வந்த மக்களைப் பார்க்க வேண்டுமென வற்புறுத்தினோம்
அங்கு சென்றபோது ஒரு முகாமில் மக்கள் சுகாதார வசதிகள் மற்றும் இட வசதியற்று தோல் நோய்களுடன் இருந்தார்கள். குழந்தைகள் பெண்கள் போசாக்கற்று நலிந்திருந்தார்கள்.

இதை இலங்கை அரசிடம் சொல்லி உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது என நினைத்து நானும் எழுத்தாளர் இராஜேஸ்வரியும்சென்னை சென்றோம் .அங்கு எங்களுக்கு உடனடியாக – நாடளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழியை சந்திக்கச் சுமதி தங்க பாண்டியனே உதவி செய்தார்.

அந்தச் சந்திப்பின்போது கனிமொழி “எனக்கு மட்டுமே அழைப்பிருக்கிறது. நான் எப்படி தனியே போக முடியும் “ என்றார்.
அதையறிந்துகொண்டதும் உடனே பசில் இராஜபக்சாவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும்அழைப்பு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டோம் .

இந்திய நாடாளுமன்ற குழு வந்தது எல்லோரும் அறிந்த வரலாறு. அக்காலங்களில் அகதி முகாம்களின் சுகாதார இட வசதியை சீரமைக்கவேண்டிய கட்டாயம் இலங்கை அரசிற்கு ஏற்பட்டது .

சுமதி தங்கபாண்டியன் எமக்கு கனிமொழியை சந்திக்க உதவியது அந்தக்காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பேருதவியாகஇருந்தது.

அதற்கான நன்றியை இன்று உங்கள் மத்தியில் சொல்லிக்கொண்டு இந்த இந்த அறிமுக உரையை முடிக்கிறேன்.

பிற்குறிப்பு – ஒரு இலட்சத்திற்கு மேல் ஈழத்து அகதிகளாக இருப்பவர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இல்லைத்தான் . ஆனாலும் எங்கள் ஒவ்வொருவருக்கும் தென்சென்னையில் தமிழர்களைத் தெரிந்திருக்கும் என்பதால் வரவேற்புரை இங்கு பதிவாகிறது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.