அறிமுகம் கானல் தேசம்

சுகு-ஸ்ரீதரன்
கானல் தேசம் தமிழ் சமூகத்தில் பேசப்படுவதை விரும்பாத பிரச்சனைகளை கலை இலக்கிய வடிவத்திற்கு கொண்டு வருகிறது.
பேசாப் பொருளைபேசத்துணிந்தது. தமிழ்போராட்டத்தின் அறஞ்சார் தராதரத்தை அது அலங்காரம் எதும் இல்லாமல் தனது இயல்பான ஓட்டத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது.

போராட்டத்தின் பிரதான போக்கில் பொதிந்திருந்த சர்வதேச அளவிலான “மாபியாதனத்தை” மக்களின் பேரில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய நிதி எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் கருத்து சுதந்திர இடைவெளியை இல்லா தொழிப்பதில் ஊரிலும் உலகிலுமாக இருந்த மிருக வெறியையும், பிரக்ஞை பூர்வமாக போராட்டத்தில் ஆட்கள் ஈடுபடுவதை தவிர்த்து தோழமை நட்புக்கு பதிலாக பரஸ்பரம் சந்தேகத்துக்குரியவர்களாகவும் -போராட்டத்திற்கு றோபோக்கள் தயாரிக்கும் பட்டறையாகவும் இருந்ததையும் ,
சகல மட்டங்களிலும் போராட்டம் என்று சொல்லி ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காத நிலையும், மனிதாபிமானம்- அறம்- துளியறவு இல்லாத நிலையும், பல சொந்த இழப்புக்களை சந்தித்து அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வரப்பட்ட இளைஞன் அவனுக்குத் தெரியாமலே எவ்வாறு வில்லங்கமான காரியங்களில் சிக்கவைக்கப்படுவதையும்,ராஜஸ்தான்-டெல்லி- சென்னை- மெல்பேர்ண் இலங்கை வடக்கு கிழக்கு என யுத்தம் பேரழிவு சுனாமி மக்கள் கூட்டங்களின் பலவந்தமான இடம்பெயர்வு ஊழல் -காதல் -சண்டை- வதை – மரணம்- மனிதாபிமானம்,சாதாரண பெண் பிள்ளை எவ்வாறு போராட்டத்தின் பெயரில் அபாயமான முனைகளில் வேலை செய்ய அனுப்பபடுகிறாள்.

போர் முனைகளில் போரளிகளின் பாதுகாப்பு பற்றிய பிரக்ஞை எவ்வளவு தூரம் ?

நிர்பந்திக்கப்பட்ட உறவு மூலம் கர்ப்பிணியாக்கப்பட்ட பெண் எவ்வாறு தற்கொலை குண்டுதாரியாக்கப்படுகிறாள்.
கைதுசெய்யப்படுபவர்கள் மீதான குரூரமான சித்திரவதைகள, வயது வேறுபாடின்றி வேள்விக்கு வளர்க்கப்படும் கிடாய்கள் போல புறொயிலர் கோழிகள் போல இங்கு மனிதம் வறுத்தெடுக்கப்படுகிறது.

இங்கு மனிதாபிமானத்தின் கூறுகள் எவையும் இல்லை.

1990 முஸ்லிம் மக்களின் இடம்பெயர்வும் 1995 இடம்பெயர்வும் வெவ்வேறு மனிதர்களை எங்கெங்கு கொண்டு சேர்ப்பிக்கிறது
வடக்கு கிழக்கு எல்லைப்பிரதேச சிங்கள குடும்பங்கள் -பெண்கள் அனுபவித்த துயங்கள் ,
கிராமப்புற பிக்குகளின் யுத்த மனநிலை- தேச பக்தி என்ற பெயரில் சிங்கள தமிழ் இருதரப்பிலும் நிலவிய வன்மங்கள் இதில்; சாதாரண மக்களும் பெண்களும் அனுபவித்த துன்பங்கள், புலம்பெயர் உள்ள தமிழ் பிரமுக உலகின் வன்மங்கள் ஊழல்கள்,
போராட்டகாரர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடையே நிலவிய ஏற்றதாழ்வு,பெண்போராளிகள் மீதான குரூரம்,
சித்திர வதைக் கூடங்களிலும் இதர அதிகார மட்டங்களிலும் வார்த்தைகளில் சரமாரியாக வந்து விழும் “ஆணாதிக்க வக்கிரம் ”
கருத்து சுதந்திர நிராகரிப்பு, அரச இராணுவ உயரடுக்கினருக்கும் சாதாரண பதவி நிலையில் உள்ளோருக்கும் இடையிலான உறவு சிக்கல்கள்,அனைத்து உளவுத்துறை உயரடுக்குகளின் லஞ்ச லாவணியங்கள்,சமூக உறவுப் பிளவின் வரலாற்று ரீதியான காரணிகள்
உள்ள சர்வதேச இலக்கிய தரத்திலான கூறுகள் நடேசனின் நூலில்.

முதலாவது பிரான்சுப்புரட்சி காலத்தில் எழுதப்பட்ட டீக்கன்சின் -“இரண்டு நகரங்களின் கதையின்”; முதல் முன் வாக்கியங்கள் பலவற்றை நான்கைந்து வசனங்களில் முன்நிறுத்தி விடுகின்றன.
லியோ டால்ஸ்டாயின் “புத்துயிர்ப்பு” மாஸ்லேவாவின் சிறைநோக்கிய யாத்திரை,
“போரும் சமாதானத்தில” வரும் பிரான்ஸ் ராஸ்சிய யுத்தம் -மஸ்கோ,
தாஸ்தோயோவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையில”; வரும் ராஸ்கோலனிக்கோ சோனியா காதல், கதரினாவின் நிராசையான கடந்த காலம், மாமலட்டோவ் மரணம், மனைவி கதரினாவின் மரணச்சடங்கிற்கு பிந்திய விருந்து,
கடைசியாக தெருவிற்கு வருதல் “அன்னாகரினா” நாவலின் காதல் பயணம் ஆரம்பித்த அதே ரயில் நிலையத்தில் குரூர மரணம்
துர்க்கோனிவின் தந்தையரும் தனையரில் வரும் பரஸ்பர ஆக்கிரமிப்புக்களும் போராட்டங்களும்
இறுதியாக அந்த “நிகிலிஸ்டின்” மரணத்தின் பின்னர் வயோதிப தாய்தந்தையர் அமைதியான அந்த இடுகாட்டிற்கு செல்லும் கட்சி
இவை அந்த காலகட்டத்துடன் பிரதான தொடர்புடைய அமரத்துவ இலக்கியங்களில் என்னுள் மன அதிர்வை ஏறபடுத்திய காட்சிகள்.
இந்த பக்கங்களை பந்திகளை திரும்ப திரும்ப பல சந்தர்பங்களில் வாசித்ததுண்டு.

2 ஆம் உலகமாயுத்த நடுப்பகுதியில் எழுதப்பட்ட “அன்னி பிராங்கின் டயறி”
பூசிக்கின் 2 வார சித்திரவதை அனுபங்களான “தூக்குமேடைக்குறிப்பு”
1990 இல் ஈரானில் வெளிவந்த -சின்னஞ்சிறிய அன்னியன்- திரைப்படத்தில் வரும் பாசு
சோபாசக்தியின் -ம்- பிரசன்ன விதானகேயின் திரைப்படம் -புரவந்த கலுவர- வில் யுத்தகால எல்லையோர கிராமங்களின் பிரதிபலிப்புக்கள் 2000 களின் இன் நடுப்பகுதியல் வெளிவந்த -ஏ-9- திரைப்படம்
விமல் குழந்தைவேலுவின் -கசகரணம-; நாவல்
இவை போன்ற இன்னும் பல மன அதிர்வை ஏற்படுத்தும் வாசிப்பு மற்றும் படைப்பு அனுபவ அதிர்வுகள் நடேசனின் இந்த எழுத்துக்களில் உணரமுடிந்தது .

படைப்பு பற்றிய சுயாதீன சிந்தனை வேண்டும். மனனம் செய்து ஒப்புவிப்பது போன்று இது நாவல் என்ற வரைவிலக்கணத்துள் பொருந்துகிறதா என்று பார்ப்பது சமூக பொருளாதார வாழ்வு இலக்கியத்தின் வாழ்நிலை மாற்றத்தின் இயக்கவியலை மறுப்பதாகும்.

போராட்டத்தின் அறப்பரிமாணம் இழிவு நிலையில் இருந்ததை,சர்வதே சக்திகள் தமது நலன்களுக்கு பிராந்தியத்தின் நலன்களுக்கு பாதகமானது என்று புரிந்து கொண்டதை,போராட்டம் சர்வதேச நிலைமைகளுக்கு பொருத்தமற்றதாகவும் எதிரானதாகவும் இருந்ததை,
மனித உயிரும்- பொருளும்- வளமும் வாரியிறைக்கப்பட்டதை, சமூகங்கள் சிதிலமடைந்து சின்னாபின்னப்பட்டுப்போனதை,
ஆச்சி -பெரியம்மா- பெரியப்பா- அசோகன்- ஜெனி- கார்த்திகா -சாந்தன்- செல்வி- பாதர் -சிற்றம்பலம்- நியாஸ்- இந்திராணி -சுனில் எக்க நாயக்கா -தயாரத்தின- மகிதானந்த தேரர் பாண்டியன் என உலவும் பாத்திரங்கள்

கானல் தேசம் எமது போரட்டம் பற்றிய ஒரு சுய தரிசனம் . ஏகப்பட்ட சுய தரிசனங்கள் தேவைப்படுகின்றன.

இந்த தரிசனமில்லாமல் இந்த சமூகத்தின் மறுமலர்ச்சி?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.