இரத்தினதுரையின் கவிதை

Puthuvai Ratnathurai
காசியானந்தன் ஒரு வக்கிரமான கவிஞன் , ஆனால் புதுவையை கவிஞனாக ஏற்றுக்கொண்டேன் .

விடுதலை இயக்கம் மனிதர்களைக் கொலைகாராக்குவதுடன் கவிஞர்களை வக்கிரமானவர்களாக மாற்றியது என்பதற்கு இந்தக்கவிதை உதாரணம்

இரத்தினதுரையின் கவிதை ஒன்றில் முக்கியமான துரோகிகள் பட்டியல் இட்டு காட்டப்பட்டு இருந்தனர். கவிதை வருமாறு:

– வானத்துத் தேவதை பூமிக்கு வருகின்றாள்.

வரம்கேட்க காத்திருப்பவர்களே

வரிசையாக வாருங்கள்.

“வெண்தாமரைத் தட்டேந்திய” வெடியரசி

வீதிக்கு வருகின்றாள்

எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.

” நவாலி நரபலி” நாயகி உலா வருகின்றாள்

பிக்குகளே “பிரித்” தோதுங்கள்

தலதாமாளிகையின் தங்கக் கவசமே

“சந்திரிக்கா”வுக்கு வாழ்த்துக் கூறுக.

அலரி மாளிகை அலங்கார ரூபிணி

“கொரகொல்லைச் சமாதி” யைக்

கும்பிட வருகின்றாள்.

எடுபிடிகளெல்லோரும் எழுந்து புறப்படுக

நாடாண்ட பண்டாரநாயக்கா திருமகளே!

ஈடாடிக் கொண்டிருக்கும் ரத்வத்த மருமகளே!

செந்தமிழர் குடியழிக்கத் தேரெடுத்த சீமாட்டி!

தேசமெல்லாம் தீமூட்டும் சிங்களவர் பெருமாட்டி!

தாய்வாழ்வு வாழ்க! தமிழ் வாழ்வு வீழ்க.

“கட்டியக்காரக் கதிர்காமரே” வருக!

இதை எட்டுமுறை சொல்லுக.

என்னது?

உன்னால் முடியாதா?

கதிர்காமா எதிர்வாதமா புரிகின்றாய்?

என்ன? உனக்குத் தமிழே தெரியாதா?

மன்னிக்க;

ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டேன்.

உன்னைப் போலொருவன்

உலகத்தில் கிடையாது.

அடிமைக்கு நீயே அசல்.

தமிழே தெரியாத தமிழனே!

காக்கை வன்னியனின் கடைசித் தம்பியே!

ஆங்கிலத்தில் சொல்லு அது போதும்.

அடுத்து “ஆராத்தியெடுக்கும் அழகி” யார்?

பத்மாவா?

பலே, பொருத்தமான பொடிச்சி

நல்ல பலசாலிகள் நாலுபேர் வேண்டும்.

கனதூரம் “காவவேண்டும்.”

இடையிடையே “காலும் பிடிக்கவேண்டும்!

எச்சில் துப்பும்போது

இருகையில் ஏந்தவேண்டும்.

எவரெவரென்று பேர்சொல்லு பார்க்கலாம்?

“உடுப்பிட்டிச் சிங்கம்”

“திருமலைச் செயல் வீரன்”

“அத்தியடிக் குத்தியன் டக்ள்ஸ் தேவானந்தா”

மற்றது யார்?

“மாணிக்கதாசன்”

அச்சா, அருமையான தெரிவு.

இவர்களுக்கு

எலும்புகூட எறியவேண்டியதில்லை

பழைய செருப்புக்கே

பல்லிளிக்கக் கூடியவர்.

நிலபாவாடை விரிப்பவன் யார்?

“நீலன் திருச்செல்வம்”

சபாஷ்

அள்ளக்குறையாத அறிவுத் திலகத்துக்கு

வெள்ளத் துணிவிரிக்கும் வேலையா?

வெகு பொருத்தம்.

ஆயிரம் கண்ணுடைய ஆத்தாளுக்கு

சாமரம் வீசுவது யார்?

“அஸ்ரப்” பை அழைத்து வாருங்கள்.

கவரி பற்றி வீசட்டும் காற்று வரட்டும்.

பெற்ற தாயை கூட நிறுத்து விற்கும்

எட்டப்பர் கூட்டமே!

தமிழனின் மானத்தையும், வீரத்தையும்

எங்கே அடகு வைத்தீர்கள்?

கசாப்புக்கடை வாசற் காகங்களாகக்

கழிவுகள் தூக்கவா காத்திருக்கிறீர்கள்?

உங்களையும் ஒருத்தி பெற்றாளே

என்ன பாவம் செய்தாளோ?

எத்தனை வதைக்கிடையில் எம் நாடு

நீங்கள் பத்திரிக்கையில் பார்த்தது பாதி,

பாழிருட்டில் போனது மீதி

நெடிய பனையாக நிமிர்ந்துள்ள தேசத்துக்கு

கொடிய விஷமேற்றக் குதிப்பவர்களே

தமிழன் எதிரியால் அழிந்ததைவிட

துரோகியால் எரிந்ததே அதிகம்.

இந்த வரலாறு இன்றுவரை நீண்டு

உங்களிடம் வந்து முடிகின்றது.

உதிரம் சொரிந்து வளர்த்த உரிமைப் பயிரை

கருகவிடச் சொல்லும் கறுப்புச் சட்டைகளே!

நாளை காலமெழுதும் தீர்ப்பின்

வாயில் விழுந்து போய்வீர்கள்.

நாங்கள் காற்றிடமிருந்து காப்பாற்றி

போற்றி வணங்கும் “புனித நெருப்பை”

ஊதியனைக்கும் உரிமையை

உங்களுக்குத் தந்தது யார்?

கானல் நீரில் கைநனைக்கத் துடிப்பவரே!

கனவிற்கண்ட தெருவில்

பயணம் புறப்பட்டு

இன்று காடுமாறி விட்டீர்கள்.

இனி வீடு வரமாட்டீர்கள்.

விடுதலை போராட்டமென்பது

வாய் கிழியும் வார்த்தைகளாலான

வானவில்லல்ல.

புள்ளடி போடும் கள்ள வியாபாரமல்ல

அது உயிர்கொடுத்து வாங்கும் உரிமம்

சத்தியத்துக்கான யுத்தம் தான்

உரிமைக்கான திசைகாட்டும்.

வழிதவறாத நேர்கோடே வழிகாட்டும்.

உயிர்ப்பூவே விடுதலைக்கு உரிய மலர்.

“பிள்ளைகளின்” பொன்னுடலம் வீழும்

ஒவ்வொரு கணமும்

பூமிப்பந்தே புல்லரித்துக் கொள்ளும்.

காற்றின் கண்களும் கலங்கும்

மேகங்கள் கூட மெளனமாகும்.

நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி குத்தும்.

உங்களுக்கு இவையொன்றும் உறைக்காது.

வேரிழந்து போன மரங்களுக்கு

நீரினைப் பற்றி எப்படித் தெரியும்?

உங்களை எவர்தான் கணக்கில் எடுத்தார்?

சுவர்வெடித்தும்

கூரை சிதிலமாகியும் விட்ட

பழைய வீட்டுக்கு எவர்தான் வர்ணம் பூசுவர்.

என்றாலும்….

பத்திரிக்கைகள் படிக்கும் போது தான்

பற்றிக்கொண்டு வருகிறது

விடுதலைக்கு அதிக விலை கொடுத்து விட்டும்

விஸ்பரூபமாக நிற்கும் எங்கள் தலைவிதியை

தூரத்தில் உள்ள

நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்.

கற்பூர வாசத்தை கழுதை அறியாதே;

தந்ததைத் தின்றுவிட்டுச் சரிந்து படுக்காமல்

உங்களுக்கேனிந்த “ஊர்த்துளவாரம்”?

இரும்படிக்கும் இடத்திலே

இலையானுக்கு என்ன அலுவல்?

சுதந்திரத்துக்குப் போராடும் மக்களுக்கு

சோற்றுப் பிண்டங்கள்

சுற்றறிக்கை விடுவதேன்?

மனிதனாக பிறந்தவனுக்கு

வெட்கம், ரோசம் வேண்டும்.

அதையெப்படி உங்களிடம் எதிர்பார்பது ?

மனிதர்களுக்குத்தானே அது! –

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.