மெல்பன் ‘சுந்தர்’ சுந்தரமூர்த்தியின் வாழ்வும் பணிகளும்

முருகபூபதி
சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை.
அவ்வாறு சமூகப்பணிகளில் ஈடுபடும் ஒருவர் தனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று சொல்லி ஒதுங்கிச் செல்லவும் முடியாது. அவ்வாறு எதிலிருந்தும் ஒதுங்காமல் தனக்குச்சரியெனப்பட்டதை, அந்தந்த காலங்களுக்கு ஏற்ப துணிந்து சொல்லிச்செயல்பட்டவர்தான் ஆஸ்திரேலியா மெல்பனில் நான்கு தசாப்த காலமாக ( 48 வருடங்கள் ) வதியும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தி.
இவரை நாம் சுந்தர் எனச்செல்லமாக அழைப்பது வழக்கம். இலங்கையில் காரைநகர் களபூமியில் 31-05-1948 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தர், தனது ஆரம்ப – இடைநிலைக்கல்வியை கொழும்பில் பம்பலப்பிட்டி, இரத்மலானை இந்துக்கல்லூரிகளில் நிறைவுசெய்துகொண்டு, Times Of Ceylon நிறுவனத்தில் தொழில் ரீதியாக இணைந்துகொண்டவர். தனது 23 வயதிலேயே சாம்பியா நாட்டில் அச்சக நிறுவனம் ஒன்றில் தனக்குப்பிடித்தமான பயிற்சியை மேற்கொண்டு தேர்ச்சிபெற்று தாயகம் திரும்பினார்.
1974 இல் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து, சொந்தமாகவே ஒரு அச்சுக்கூடத்தை தொடங்கியவர். இவ்வாறு அந்நிய நாட்டில் தனக்குத்தெரிந்த தொழிலை முதல்கட்டத்திலேயே தொடங்குவதற்கு சற்று துணிவும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
குறிப்பிட்ட தொழில் துறையில் தாயகத்தில் ஈடுபட்டவர்களுக்கு புகலிடத்தில் தொடக்கத்தில் அதே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது அரிது. இலங்கையில் இவர் வாழ்ந்த காலத்தில் தலைநகரில் மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசத்தில் பெற்ற அனுபவங்களும் புகலிட நாட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள மூலதனமாக இருந்திருக்கவேண்டும்.
மனிதர்களுக்கு தொழில் தொடர்பான தேர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமோ, அதேயளவு சமூகரீதியான மக்கள் தொடர்பாடல் தேர்ச்சியும் அவசியம்தான். இந்த இரண்டுவகைத் தேர்ச்சிகளும் ஒருவகையில் கலைதான். இக் கலைகளிலும் தேர்ந்தவர்தான் சுந்தர்.
இலங்கையில் காலத்துக்கு காலம் தோன்றிய இனநெருக்கடிகள், இன ரீதியான அச்சுறுத்தல்கள், கல்வியில் ஏற்படுத்தப்பட்ட தரப்படுத்தல், இனப்பாகுபாடுகள் என்பவற்றை ஒரு பிரஜையாக அவதானித்து வந்திருக்கும் சுந்தர், புகலிடம் வந்தபின்னரும் தாயகம் குறித்த சிந்தனைவயப்பட்டவராகவே விளங்கியவர்.
தன்னாலும் தனது தாயகத்திற்கும் தமது இனத்திற்கும் ஏதும் ஆக்கபூர்வமாகச்செய்யவேண்டும் என்ற கனவுகளுடன் புகலிட வாழ்வை அமைதியாக ஆரம்பித்தவர்.
பெரும்பாலானவர்கள், வெளிநாடுகளுக்கு வந்ததும் தானுண்டு தன்பாடுண்டு, தனது குடும்பம் உண்டென்ற மனப்போக்குடன் பொதுவாழ்வை நெருங்கமாட்டார்கள். ஒரு வட்டத்திற்குள்ளேயே தம்மை வரையறுத்துக்கொள்வார்கள். பொதுவாழ்வில் கண்டனங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகவும், எமக்கு ஏன் வம்பு என ஒதுங்கியிருப்பவர்களாகவும் பலரை சமூக வாழ்வில் பார்த்திருப்போம்!
ஆனால், சமூக ரீதியாகச்சிந்திப்பவர்கள் எப்பொழுதும் பொதுநோக்கத்துடனேயே செயல்படுபவர்கள், மக்கள் மத்தியில் Activist ஆக இனம் காணப்படுவார்கள். சுந்தரமூர்த்தி அவர்களும் மெல்பனில் சமூகப்பணியாளராக அடையாளம் பெற்றவர்.
நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் 1981 ஆம் ஆண்டில் இணைந்திருக்கும் சுந்தர், இச்சங்கத்தின் சமூக, கலை, கலாசார, கல்விப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு சங்கத்தின் தலைமைப்பீடம் உட்பட இதர உறுப்பினர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
1983 இல் இலங்கையில் இனக்கலவரத்தின் பின்னர், தமிழ்மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்த வேளையில், இம்மக்களின் எதிர்காலம் தொடர்பான அக்கறையில் விக்ரோரியா இலங்கை தமிழ்ச்சங்கம் தீவிரம் காண்பித்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அரசமட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுந்தர் இடம்பெற்றிருந்தார்.
அத்துடன் இலங்கையில் 1983 இல் நடந்த இனக்கலவரத்தை கண்டித்து மெல்பனிலும் ஆஸ்திரேலியாவில் இதர மாநிலங்களிலும் நிகழ்ந்த கவனஈர்ப்பு நிகழ்வுகள் கூட்டங்களிலெல்லாம் சுந்தரும் கலந்துகொண்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக வரத்தொடங்கியதும், அமைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பலரது தஞ்சக்கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வந்திருக்கும் சுந்தர், இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏடான தென்துருவ தமிழ்முரசு இதழின் ஆசிரியராகவும் இயங்கினார். இவரது அச்சகத்திலிருந்தே இந்த இதழும், சங்கத்தின் பிரசுரங்களும் வெளிவந்தன.
இலங்கையில் இந்திய அமைதிப்படையின் பிரவேசத்திற்குப்பின்னரும், அதன் வெளியேற்றத்தின்போதும், அதனைத்தொடர்ந்து, மீண்டும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தவேளைகளிலும் புகலிட தமிழ் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விடயங்களிலும் கவனம் செலுத்தியதை அறிவோம். அவ்வாறு தொடங்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட சுந்தர், அதன்பொருட்டு நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு கலாசார நிகழ்ச்சிகளிலும் முன்னின்று உழைத்தார். அத்துடன் தமிழ் ஈழ பொருளாதார மேம்பாட்டு அமைப்பிலும் Tamil Elam Economic Development Organisation (TEEDOR) சுந்தரின் பங்களிப்பு முக்கியமானது.
இந்தத் தொண்டு நிறுவனங்களின் வாழ்வாதார உதவிகளை இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கும் சுந்தர் பல தடவை இலங்கைக்கு பயணங்களை மேற்கொண்டார். ஏ. 9 பாதை மூடப்பட்டிருந்த கால கட்டத்தில் உயிரையும் பணயம் வைத்து கிளாலி கடல் ஏரி மார்க்கமாகவும் நிவாரண உதவிகளை கொண்டு சேர்ப்பித்த இவரது துணிவும் முன்னுதாரணமானது.
இவ்வாறு தாயகத்தில் போரில் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் மனிதநேயப்பண்புகளுடன் செயல்பட்டிருக்கும் சுந்தருக்கு 2009 ஆண்டு மேமாதம் நடந்த இறுதிப்போரின் முடிவுகள் ஆழ்ந்த வேதனைகளைத்தந்திருந்தது. அதனால் எம்மவர் மத்தியில் விரக்திநிலைக்கு தள்ளப்பட்ட பலரை பார்த்திருப்போம்.
எப்பொழுதும் மனிதநேயப்பணிகளில் அக்கறையோடு செயல்படுபவர்களுக்கு தீர்க்கதரிசனப் பார்வையும் இருப்பதனால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற எண்ணமும் குடியிருக்கும்.
வன்னியில் செஞ்சோலை, அன்பு இல்லம், பாரதி இல்லம் முதலான போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுடனும் சுந்தருக்கு தொடர்பாடல்கள் இருந்தமையால், வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்னும் தன்னார்வ அமைப்புடன் North East Rehabilitation and Development Organization (NERDO) இணைந்து இயங்க ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான பெற்றோரை இழந்த குழந்தைகள் வன்னியில் பராமரிக்கப்படுகின்றனர்.
அந்தக்குழந்தைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது தாயகத்திற்கு பயணிக்கும் சுந்தர், எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பவர்.
1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் பொதுவாழ்வில் பல மனிதநேய சமூகப்பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கும் சுந்தர், விக்ரோரியா மாநில அரசின் பல்லின கலாசார ஆணையம் காலம் கடந்துதான், 2016 ஆம் ஆண்டில் மகத்தான சமூகசேவைக்கான பாராட்டு விருதை வழங்கி கௌரவித்தது.
1981 முதல் 2006 வரையில் ஈழத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக, துணைத்தலைவராக, தலைவராக, இதழாசிரியராக பல்வேறு பதவிகளில் அங்கம் வகித்திருக்கும் சுந்தர், 1986 முதல் 2009 வரையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஸ்தாபக உறுப்பினராகவும் இயங்கியவர். 1986 இலேயே ஆஸ்திரேலியா லிபரல் கட்சியிலும் அங்கத்தவராக சேர்ந்தவர். 1991 முதல் 2004 வரையில் சமூகத்தொடர்புச் செயலாளராக ஆஸ்திரேலிய தமிழர் பேரவையிலும் Australasian Federation of Tamil Association (AFTA) 1994 முதல் 2005 வரையில் ஸ்தாபக உறுப்பினராகவும் இணைப்பாளராகவும் Tamil Eelam Economic Development Organisation (TEEDOR) என்னும் அமைப்பிலும் இயங்கி வந்திருப்பவர்.
ஈழத்தமிழர் விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலியப் பிரதமர்களுடன் நடைபெற்றபோது அச்சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர்.
இவ்வாறு தாயகம் சார்ந்த தன்னார்வத்தொண்டு அமைப்புகளிலும் மனித உரிமை அமைப்புகளிலும் அர்ப்பணிப்புடன் இயங்கிவந்திருக்கும் சுந்தர், தனக்கு புகலிடம் வழங்கிய தேசத்திற்கும் விசுவாசம் மிக்கவராக சிறுவர் நலன்கள் உரிமைகளை பேணும் ஒன்றியத்திலும், லயன்ஸ் கழகத்திலும் இணைந்திருப்பவர். விக்ரோரியா மாநிலத்தின் பல்லின கலாசார ஆணையத்தின் ஆலோசகராகவும் அங்கம் வகித்துவருகிறார்.
மற்றவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நட்புறவை வளர்த்துக்கொள்ளும் பண்புகள் சுந்தரிடம் இருந்தமையால், மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களும் அவருடன் நேசம் பாராட்டினார்கள்.
சுந்தர் ஆஸ்திரேலியாவில் பதிவுபெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் இயங்குபவர். மெல்பனில் எழுத்தாளர் நடேசன் சில வருடங்களுக்கு முன்னர் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்தவேளையில், இந்த நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் சிலர் தமது கதைகளை தமிழில் சொன்னபோது அவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்த்தார்.
எழுத்தாளர்களும், சமூகப்பணியாளர்களும் தீர்க்கதரிசனத்துடன் இயங்கவேண்டியவர்கள். ஒரு காலகட்டத்தில் சரியென தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் பிறிதொரு காலகட்டத்தில் வேறு ஒரு பரிமாணத்தை வந்தடையும். அத்தகைய வேளைகளில் எழுத்தாளர்கள் சமூகப்பணியாளர்களுக்கு கடந்த கால நிலைப்பாடுகள் தொடர்பாக தளம்பலும் தோன்றும்.
அவ்வாறு தளம்பல் நிலைவந்தால் விரக்தியும் உடன் வரப்பார்க்கும். அதிலிருந்து மீண்டு, புத்தெழுச்சியுடன் இயங்குவதற்கு தீர்க்கதரிசனம்தான் பெரிதும் உதவும். அவ்வாறு 2009 இறுதிப்போருக்குப்பின்னரும் மனச்சோர்வடையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கும் நிலைப்பாட்டில் எந்தவொரு தளம்பலும் தடங்களும் இன்றி அயராமல் இயங்கிவரும் “சுந்தர்” சுந்தரமூர்த்தி, தனது பவளவிழாக்காலம் நெருங்கும் சமயத்தில், தனது வாழ்வியல் அனுபவங்களை Dare to Differ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடுகிறார்.
இந்தத் தலைப்பும் சற்று வித்தியாசமானதுதான். இதனை துணிந்து மாறுபடு எனவும் மாறுபட அஞ்சேல் எனவும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
அச்சம் தவிர் என்பதும் மனித வாழ்வியலில் ஒரு கோட்பாடுதான். சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இன்று 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்