ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை
‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது.

முக்கால்மணி நேரமாக வவுனியாவாகனதொடரணி சோதனைமுகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்றுநிமிர்ந்துபார்த்தேன்.கையில் துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான்.
எனக்குநெஞ்சுதிக்கென்றது.
இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச. அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனப்பலர் தொடரணி புறப்படுவதற்காக காத்திருந்தனர்.
ஏதோதடை செய்யப்பட்டபொருட்களைக் கடத்த முற்பட்டுப் பிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும்.
விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையும் மெய்யுமாகபிடிபட்டதுபோன்ற உணர்வு ஒரு கணம் என்னை ஆட்கொண்டது.
ஒரு மணி நேரத்திற்க்கு முன்னரே சகல பொருட்களும் சோதனையிடப்பட்டு வாகனத்துக்குள் ஏற்றியாகிவிட்டது. ஒரு சில பத்திரிகைகளும் சஞ்சிகைளும் மாத்திரமே என் வசம் இருந்தன. அவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த இராணுவச்சிப்பாயை பின்தொடர்தேன்.ஒர் அறையைக் காட்டி உள்ளே செல்லுமாறு பணிவாக் கூறினான் அந்தச் சிப்பாய். அவனதுபணிவு எனக்குகொஞ்சம் தென்பைத் தந்தது.
அது ஒர் நீண்ட விசாலமானஅறை. எனது வரவை எதிர்பார்த்தவாறு அங்கிருந்த உயர் அதிகாரி’ “ Hello come on in” என்றார் சிரித்தவாறே. எனக்கிருந்த பயம் ஓரளவு நீங்கியது.
அவர் காட்டிய கதிரையில் அமர்ந்தேன். மேசையில் இரண்டு கொக்காக் கோலாபோத்தல்கள் இருந்தன. ஒன்றை எனக்கு முன் தள்ளிவிட்டு மற்றையதை அப்படியே அண்ணாந்தபடியே பருகினார். அவரது பாணியை நானும் கொப்பியடித்தேன்.
நீண்டநேரம் வெய்யிலில் நிண்டஎனக்கு அது அமிர்தமாக இருந்தது. உடம்பும் மனதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போன்று உணர்ந்தேன்.
வாகனத்தொடரணி இன்று புறப்படசற்றுதாமதமாகுமெனப் பேச்சைஆரம்பித்த அவர் எனது விபரங்களை மேலோட்டமாக கேட்டறிந்தார்.
இவ்வளவுபேர் உள்ள இடத்தில் இவர் ஏன் என்னை மாத்திரம் கூப்பிட்டார் என எனக்கு புரியவில்லை. அதைஅவர் உணர்ந்தவர் போல் ‘ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம் நீர் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தது ஒரு இராணுவவீரனுக்கு சந்தேகத்தை எழுப்பிவிட்டது, அவன் உம்மை விசாரிக்கவேண்டுமென என்னிடம் கூறினான். அதுதான் நீர் அப்படிஎன்னபெரிசாய் வாசிக்கிறீர் எனஅறியத்தான் கூப்பிட்டனான்,’எனஅழகானஆங்கிலத்தில் கூறினார்.
ஒருநிம்மதிப் பெருமூச்சுடன் என்னிடமிருந்த சகலவற்றையும் அவரிடம் கொடுத்தேன்.அதில் இரண்டு மூன்று SPORTSTAR சஞ்சிகைகள்,ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகைகள் சில,சரிநிகர்,துக்ளக்,Fredrick Forsyth இன் ஆங்கிலநாவல் ஒன்றுஎன்பன இருந்தன.
ஒவ்வொன்றையும் மேலோட்டமாக புரட்டிப்பார்த்து விட்டுஆங்கிலபத்திரிகைகளை உடனடியாகவை திருப்பித் தந்தார். பயபக்தியுடன் அவற்றைப்பெற்றுக்கொண்டேன். Fredrick Forsyth இன் ஆங்கிலநாவலின் பின்னட்டையிலுள்ள சுருக்கத்தை வாசித்துவிட்டு அந்த ஆசிரியரின் வேறு சில நாவல்களைதான் வாசித்ததாகவும் ஆனால் அந்தகுறிப்பிட்டநாவலைதான் வாசிக்கவில்லைஎன்றார். ‘அப்டியாயின் நீங்கள் இதை வைத்திருங்கோ’என்றேன் சற்றுமனவருத்தத்துடன். அவர்ஒருகணம் யோசித்துவிட்டு’இதை என்னால் கொழும்பில் இலகுவாக வாங்கமுடியும் ஆனால் வன்னியில் உம்மால் இதை வாங்கமுடியாது’என்றுஅதைத் திருப்பித்தந்தார்.
எங்கேஅது கை நழுவிப்போய் விடுமோஎன்று பயந்த நான் அதைப் பறிக்காதகுறையாக பெற்றுக்கொண்டேன். அதன் பின் SPORTSTAR களைதந்து விளையாட்டுக்களைப்பற்றி கதைக்க ஆரம்பித்தார் அந்த நாட்களில் உலகக்கோப்பைகால்பந்துபோட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவர் பிரேசில் விசிறி. எனக்கும் கால்பந்தில் அதிகஆர்வம் இருந்ததால் அந்த போட்டிகள் பற்றிகால் மணிநேரம் கதைத்தோம். இறுதியாக என்னிடமிருந்தசரிநிகர்,துக்ளக் பற்றித் துருவித்துருவி கேட்டார். நான் அவற்றில் வெளியானசெய்திகள் கட்டுரைகள் குறித்து ஓரளவு விரிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற கவனமாககேட்டுக்கொண்டிருந்தஅவர் இறுதியாக’இவற்றைக் கொண்டுபோகபுலிகள் விடுவார்களா’எனஆச்சரியத்துடன் கேட்டார்.
‘புலிகளின் சோதனைச்சாவடியில் நிற்கும் எல்லோரும் சரியாகத் தமிழ் வாசிக்கமாட்டார்கள்’என்றேன். சிரித்துக்கொண்டே,அவற்றை என்னிடம் தந்தார்.
‘போமஸ்துதிமாத்தையா’
“you are welcome.”
விடைபெற்றுவெளியேறினேன் ஒருநிம்மதிப் பெருமூச்சுடன்.
மறுமொழியொன்றை இடுங்கள்