நடேசன்

யாழ்ப்பாணம்
ஐந்து வருடங்கள் படித்த மிருக வைத்தியக் கல்வி , நாற்பது வருடங்கள் செய்த தொழில், அதனாலடைந்த வாழ்வு, அம்மா ஆனந்தராணியின் கழுத்தில் தாலியாகத் தொங்கியது என்ற உண்மையை நான் இங்கு சொல்ல வேண்டும்.
1975 ஆண்டு சித்திரை மாதத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அனுமதியிருந்த காலமது. இலங்கையில் பேராதனை மட்டுமே மிருக வைத்திய பீடம் உள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதால், நான் செல்லாத இலங்கையின் மத்திய மலைப்பகுதிக்குச் செல்கிறேன் எனச் சந்தோசத்தில் மிதந்த நாட்கள் அவை.
அதுவரையும் யாழ்ப்பாண குடாநாட்டு கற்றாழையாக இருந்தேன். சிறு வயதில் ஒரு முறை நேர்த்திக்கடன் தீர்க்க மடுத்தேவாலயம் சென்றேன். ஆனால், அது கேரதீவு வழியாக என்பதால் ஆனையிறவு பாலத்தைத் தாண்டவில்லை. இருபது வயதில் இலங்கையின் தெற்கு நோக்கிச் செல்லவிருந்தேன்.
சியாமளாவின் பரீட்சை முடிவுகள் தவறியதால் இரண்டாவது தடவை பரீட்சை எடுப்பதற்கு மாலை வேளையில் ரீயூசன் வகுப்புகளுக்கு சியாமளா போனபோது அங்கெல்லாம் நான் போவேன். அக்காலத்தில் நாங்கள் இருவரும் இணையாகத் திரிந்த செய்திகள் உறவினர்கள் நண்பர்களிடையே தந்தியாகியது.
பகல் நேரத்தில் யாழ்ப்பாணம் நூல் நிலையம், திரையரங்கங்கள் எனச் சிறகுகள் முளைத்து யாழ்ப்பாணமெங்கும் பறந்து திரிந்தேன். அக்காலத்தின் நான் எந்தளவு மகிழ்ச்சியில் இருந்தேனோ அந்தளவு அல்லது அதற்கு மேலாக , ஒரு மனிதர் மனமுடைந்திருந்தார். அவர்தான் எனது தந்தை சின்னத்தம்பி வாத்தியார்.
சின்னத்தம்பி வாத்தியார் திங்கள் காலையில் ஆசிரியத் தொழிலுக்கு எழுவைதீவுக்கு போகுமுன்னர், அம்மாவுக்கு செலவுக்குக் கொடுக்கும் பணத்திற்கு, வார இறுதியில் வந்து தேங்காய், முட்டை, கத்தரிக்காய் விலை ஏன் கூடியிருக்கிறதென சனிக்கிழமை காலையில் எழுந்து சிவப்பு கணக்கு புத்தகத்தில் உள்ள இலக்கங்களை மீண்டும் கூட்டிப் பார்த்துவிட்டு, போதாததற்கு ஆசிரியராகவும் அம்மாவிடம் விளக்கமும் கேட்பார்.
அவருக்கு ஏற்கனவே இந்துக்கல்லுரி ஹாஸ்டலில் பணம் கட்டி என்னைப் படிப்பித்ததற்கான செலவுகளைக் கணக்குப் பார்த்திருப்பார். சீதனச் சந்தையில் நான் நுகர்பொருளாக இருந்தால் அக்காலத்தில் சில இலட்சங்களாவது பெற்று யாராவது தீவுப் பக்கத்து முதலாளியின் புதல்வியைத் திருமணம் செய்து வைத்திருக்கமுடியும்.
எழுவைதீவிலிருந்து வந்து ஏற்கனவே மூன்று வருடத்தில் மூன்றாவது வாடகை வீட்டிற்கு யாழ்ப்பாணத்தில் மாறிவிட்டோம். சீதனப் பணத்தை வைத்து ஒரு கல் வீடு கட்டலாம் எனக் கணக்குப் போட்டிருப்பார். வாத்தியாரது கரும்பலகைக் கணக்கை, நான் தவறென அழித்து விட்டேன் என்று அவரது மனம் வெந்து புகைந்திருக்கும்.
ஆனால், வெளியில் காட்டாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்ததுபோல் நடந்துகொண்டார். எழுவைதீவில் ஆசிரியராக அவர் இருந்ததால் வார விடுமுறையில் மட்டுமே வீடு வருவதால் எங்களைப் பொறுத்தவரை வாரநாட்கள் விடுமுறையாகவும் விடுமுறை நாட்கள் வேலை நாட்களாகவும் மாறியிருந்தது. அந்த வார விடுமுறை நாட்களில் முடிந்தவரை அவரது கண்ணில் படுவதைக் குறைத்துக் கொள்வேன்.
ஏப்ரில் நடுப்பகுதியில் எனக்குப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான கடிதம் வந்தது. அதை அம்மாவிடம் காட்டியபோது “உங்கப்பன் வந்து என்ன சொல்லப் போகிறாரோ தெரியாது “ எனக் கண்களில் நீலச் சேலையின் முந்தானையை நனைத்தார்.
நான் கண்டி போக வேண்டியதற்கு முன்பான நாளில் அதிகாலையில் அப்பு எழுந்து, வெற்றுமேலுடன் திண்ணையில் குந்தி, சுவரில் சாய்ந்து, சுருட்டை பற்ற வைத்துக்கொண்டு சாவகாசமாகப் புகை விட்டபடியிருந்தார். அம்மா அவரருகே சென்று “தம்பியைக் கண்டிக்குக் கூட்டிக் கொண்டு நீங்களும் போகவேண்டும். அவனுக்கு அது புது இடம் “
“அவனைப் படிப்பித்து பிரயோசனமில்லை. நான்கு பிள்ளைகளையும் நான் பார்க்க வேண்டும் “
“ அப்பிடி விடமுடியாது. அவன் படிக்கவேண்டிய பிள்ளை. “
“ என்னிடம் பணமில்லை. “ எனச் சொல்லி முற்றத்தில் அடித்தொண்டையில் இருந்து காறி நிலத்தில் துப்பி, காலால் தட்டி மணலால் மூடினார்.
“என்ன, இன்றைக்குப் பணமில்லை என்கிறீர்கள் ?”
“நான் என்ன செய்ய? காசில்லை “.
“ இந்தாருங்கள் என்ர தாலிக்கொடி. இதை அடைவு வைத்து அவனைக் கண்டிக்குக் கொண்டு செல்லுங்கள் “ என்றார்
அப்பு இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஆனால் சுருட்டு புகைந்து அவரது உதட்டருகே சாம்பல் மூடிய நெருப்பு தென்பட்டது. அம்மா கண்ணீரால் முகம் கழுவினார்
இதுவரையும் அவர்களது உரையாடலை, அதே விறாந்தையில் உள்ள வாங்கில் படுத்தபடி கேட்டுக் கொண்டிருந்தேன். அப்புவால் பணம் புரட்டமுடியாது என்பது பொய் . கடகங்கள் வியாபாரம் செய்வதால் எப்பொழுதும் ஒரு தொகையைத் தேவைக்கு புரட்டமுடியும். என்னையோ அல்லது அம்மாவையோ மிரட்டும் விதமாக இந்த நாடகம் நடக்கிறது என்பதால் இதற்கு மேல் பேசாது இருப்பது நல்லதல்ல. எனக்கு அப்புவின் மனவோட்டம் ஏற்கனவே தெரிந்திருந்தது. ஏற்கனவே நான் அதற்கு மாற்றுவழி சிந்தித்திருந்தேன். அப்புவின் தன்மானத்தை அது துளைபோடும் என்பதால் இறுதி அஸ்திரமாகவே பிரயோகிக்க விரும்பினேன்.
“ உங்களிடம் காசு இல்லையென்றால் எனக்கு ஒரு வழி தெரியும். சியாமளாவின் விட்டுக்குச் சென்று கடன் வாங்கிக்கொண்டு, நான் தனியே கண்டி போவேன். எனக்கு ஒருவரும் துணை தேவையில்லை . “
அந்த வார்த்தைகள் நான் அம்மாவின் கண்களைப் பார்த்துச் சொல்லியவை. ஆனால், சேர்ட்டுப் போடாதிருந்த அப்புவின் முதுகில் சவுக்கால் அடித்தது போலிருந்திருக்கும் என்பது தெரியும்
சுருட்டை தூர எறிந்துவிட்டு, அம்மாவிடம் தாலியை வாங்கிக்கொண்டு, காலையில் எதுவும் சாப்பிடாது, கொடியில் காய்ந்து கொண்டிருந்த வெள்ளைச் சட்டையை வலது கையில் கொழுவியபடி வீட்டிலிருந்து போனவர், மதியம் கழிந்த பின்பு வந்தார். நேரே குசினிக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, காலையில் நான் படுத்த வாங்கிலில் சாயும்போது ‘சரி மெயில் ரெயினுக்குப் போவோம்’ என்றார்.
அவசரமாக பெட்டியைக் கட்டிக் கொண்டு அன்று இரு அன்னியர்களாக மாலையில் தெற்குநோக்கிச் செல்லும் மெயில் ரயிலில் ஏறினோம்.
சென்னை
ஒரு நாள் நடுப்பகலான நேரம். நானும் சிவநாதனும் வேலை செய்து கொண்டிருந்தபோது எங்களது சூளைமேடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு சந்ததியாரும் டேவிட் ஐயாவும் வந்தார்கள். ஏற்கனவே பலமுறை அறிமுகமானவர்கள். அவர்கள் மிகவும் கலவரமடைந்திருந்தார்கள்.
அன்று சந்ததியார் பேசியதைக் கேட்டபடி இருந்தேன். நான் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச்சுக்கள் இயக்கத்தில் நடக்கும் உட்கொலைகளைப் பற்றியும் உமாமகேஸ்வரனது சர்வாதிகாரமான போக்கையும் பற்றியதாக இருந்தது.
இதில் சந்ததியார் மிகவும் நேர்மையான மனிதர் எனக்கேள்விப்பட்டதோடு மக்கள் விடுதலைக் கழக இயக்கத்தில் (PLOT) நேர்மையான மனிதன் என்று சிவநாதன் சந்ததியார் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவர் மீது மதிப்பு இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) சார்பில் , இந்திய அயலுறவுக் கொள்கையின் தவறான செயற்பாட்டை சுட்டிக்காட்டி, சந்ததியார் வங்கம் தந்த பாடம் என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். அந்தக் கைநூல் தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் இந்திய விரோதப்போக்கை எடுத்துக்காட்டியதாக பலரால் சொல்லப்பட்டது. எனக்கும் அந்த கருத்தியல் கசப்பாக இருந்தது. இந்தியாவை விரோதித்து இலங்கைத் தமிழர் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட முடியாது என்பது எனது அறிவுக்கு அக்காலத்தில் புரிந்திருந்தது.
தொடர்ச்சியாக அவர்களின் உட்கட்சி மோதல்களைப் பற்றிப் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை. கடைசியாக சந்ததியாரிடம் “ நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா …? “ என்றேன்.
சந்ததியார், “ ஆம் கேளுங்கள் “ என்றார்.
“ நீங்கள்தான் உமாமகேஸ்வரனோடு மிக நெருங்கிப் பழகிய மனிதர். அதுவுமல்லாது உமாவை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தவர். பலகால நட்பும், பழக்கமுமுடைய உங்களுக்கு அக்காலத்தில் உமாவின் சர்வாதிகாரத்தன்மை புரியவில்லையா? “
சந்ததியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது “ எனக்கூறிவிட்டு எழுந்து போகும்போது, “ உங்களை மீண்டும் சந்திப்பேனா தெரியாது “ எனச் சொல்லிவிட்டு டேவிட் ஐயாவுடன் வெளியேறினார்.
அந்த வார்த்தை என்னை கதிகலங்க வைத்தது.
சில நாட்களின் பின்னர் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன்.
இரவு நேரத்தில் சந்ததியாரைத் தேடிச்சென்ற தமிழ் மக்கள் விடுதலைக் கழக கோஷ்டியினர், சந்ததியார் என நினைத்து டேவிட் ஐயாவை ஒரு சாக்கில் கட்டி தூக்கிச் சென்றனர். பின்னர் தாம் தூக்கியது டேவிட் ஐயா என அறிந்ததும் சென்னையில், அண்ணாநகர் அருகே உள்ள மயானமொன்றின் அருகில் அவரை விட்டுச் சென்றனர்.
பின்னாளில் டேவிட் ஐயாவால், “ கொலைகார முகுந்தனும் (உமா மகேஸ்வரன்) கூட்டாளி வாசுவும் ( மட்டக்களப்பைச் சேர்ந்த வாசுதேவா ) என பிரபலமான கட்டுரை எழுதப்பட்டது. அக்காலத்தில் அவரது துணிவை நாங்கள் எல்லோரும் பாராட்டினோம் . ஒருவிதத்தில் உமாவின் சரிவிற்கும் அவரது இந்தக் கட்டுரை உதவியது.
இதைப் பார்த்தபின்னர் , அவரைப் பற்றிய நேர்முகத்தை வாசித்தபின்பும் பலமுறை நான் சந்தித்திருக்கும் டேவிட் ஐயாவை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் , எழுதுவதற்கு சந்தர்ப்பம் வரவில்லை.
அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் டொக்டர் சிவநாதன்.
மட்டக்களப்பு சிறையில் இருந்து தமிழ்ப் போராளிகள் இயக்கத்தினர் சிறையுடைத்து வெளியேறியபோது, அவர்களில் டேவிட் ஐயாவும் ஒருவர். இந்தச் சிறையுடைப்பிற்கு இரண்டு இயக்கங்கள் அதாவது, தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) மற்றும் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (EPRLF) என்பன உரிமை கோரி துண்டுப்பிரசுரம் விநியோகித்தன.
இவர்கள் தப்பி வந்தபோது கிழக்கு மாகாணத்தின் வாகரைப்பிரதேசத்தில் அரசாங்க மருத்துவராக இருந்த டாக்டர் சிவநாதன் தப்பியவர்களுக்காக உதவி செய்ததால் இலங்கையை விட்டு பின்னர் வெளியேறியவர். இப்படி ஒன்றாகத் தப்பியவர்கள் பின்பு தங்களது இயக்க வள்ளங்களில் பிரிந்து இந்தியாவுக்குப் புறப்பட்டனர்.
எனது நண்பர் டொக்டர் சிவநாதன் வந்த வள்ளம் புளட் எனும் தமிழ் ஈழமக்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்ததால் அவர்களுடன் பின்பு தேனி பிரதேசத்தில் அவர்கள் அமைத்த முகாமில் சிலகாலம் தங்கியிருந்தார். டேவிட் ஐயா மீது வாரப்பாடாக இருந்தவர் டொக்டர் சிவநாதன்.
சிவநாதன் புளட் இயக்கத்தில் இருந்த தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் பழகுவார். அவரை தமிழர் மருத்துவ நிதியத்தின்(MUST) பொருளாளராக பிரேரித்தவர் அக்காலத்தில் வாசுதேவா. அவரே , அதேபோன்று டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியான சாந்தியக்காவை தமிழர் மருத்துவ நிதியத்தின் உபதலைவராக்கியவர். சாந்தியக்கா எந்த இயக்கங்களுடனும் தொடர்புபடாமல் சென்னை எக்மோர் பொலிஸ் வைத்தியசாலையில் வேலை செய்தவாறு அந்த அமைப்பின் உதவித் தலைவராக இருந்தார்.
இந்தக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் டொக்டர் சிவநாதனுக்கு வரும். அந்தத் தகவல்கள் குறித்து தனது தலையில் அடித்தபடி ‘இவங்களைத் திருத்த இயலாது’ என்று வேதனையுடன் எனக்குச் சொல்வார்.
தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOT) உள்மோதலில் பலர் கொல்லப்படுவதாகவும் காணாமல் போய்விடுவதாகவும் அதன் செயலதிபரான உமாமகேஸ்வரனது தலைமை பிடிக்காது இயக்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும் பலர் வந்து வந்து அவரிடம் சொல்வதும் அதை அவர் என்னிடம் திருப்பிச்சொல்லிவிட்டு உமா மகேஸ்வரனை திட்டுவதாகவும் காலம் கழிந்தது.
அதன் பின்பு கிட்டத்தட்ட உமா மகேஸ்வரன் குழுவால் வர இருந்த சாவை பல வருடங்கள் ஏமாற்றி முப்பது வருடங்கள் டேவிட் ஐயா வாழ்ந்திருக்கிறார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்பு சில நாட்களில் சந்தியார் காணாமல்போனது செய்தியாகியது.
தமிழ் மக்கள் விடுதலைக்கழகம், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை தரக்கூடியதாக முற்போக்கு கொள்கைகளும் ,வெளித்தொடர்புகளும் கொண்ட போராட்ட இயக்கமாக ஆரம்பத்தில் இருந்தது . ஒரு காலத்தில் அதில் 6000 இற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட இளைஞர்கள் இருந்தனர்.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) மற்றும் தமிழ்ஈழ விடுதலை (TELO) இயக்கம் ஆகியவற்றை அழித்தும் ஈழ புரட்சிகர (EROS) இயக்கத்தை தங்களுடன் சேர்த்தும், அழித்த விடுதலைப்புலிகளுக்கு, அதிக வேலை வைக்காமல் தன்னைத்தானாக அழித்த இயக்கமாக தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் (PLOT )இருந்தது.
1987 ஜூலை மாதம் நான் இந்தியாவை விட்டு வெளியேறும்போது, எனது இலங்கை கடவுச்சீட்டில் இருந்த இந்திய விசா காலாவதியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரியின் மூலமாக விசாவை புதுப்பித்தேன்.
அக்காலத்தில் இந்திய மண்ணில் ஈழ இயக்கங்கள் செய்த உட்கொலைகளின் பட்டியல் ஒன்றை அந்த அதிகாரி தம்வசம் வைத்திருந்தார். அதில் 250 இற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து உமா மகேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை இயக்கம் (PLOT) முன்னணியில் இருந்தது.
விடுதலைப்புலிகள்(LTTE) 32 கொலைகளையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) 18 கொலைகளையும் செய்திருந்தன. ஈழமக்கள் விடுதலை இயக்கமும் (EROS) ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் (EPRLF) செய்த கொலைகள் பற்றிய பட்டியல் அவரிடம் இல்லை.
ஆனால் , விசாவை புதுப்பித்து நான் வெளியேற இருந்த கால எல்லையில் நான்கு பேரை ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (EROS) மதுரையில் கொலை செய்ததாக தகவல் வந்தது. இந்தப் பட்டியலும் அந்த அதிகாரியிடம் இருந்தது. இதை விட பல கொலைகள் பற்றிய தகவல்கள் அவர்களிடம் போகாது இருக்கவும் சாத்தியம் உள்ளது….? மேலும் அந்தப் பட்டியலின் காலம் 87 நடுப்பகுதியாகும். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்த காலப்பகுதியாகும்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததன் பின்பாக டேவிட் ஐயாவை மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சந்தித்தேன். அவரோடு பேசியதில் தெரியவந்த விடயம், அவர் தமிழர் தரப்பு பிரிவினையை மிகவும் பலமாக ஆதரிக்கும் மனிதராகவும் சிங்கள எதிர்ப்பில் மிகவும் உறுதியானவராகவும் இருந்தார்.
அவரது சிங்கள எதிர்ப்பு, இன எதிர்ப்பாகத்தான் தெரிந்தது. அதனாலேதான் அவரால் பின்னாட்களில் விடுதலைப்புலிகளில் நம்பிக்கை வைக்க முடிந்தது.
டேவிட் ஐயா கிறிஸ்தவராக இருந்தாலும், அவரது வாழ்க்கை இந்து சமயத்து சாமிகள்போன்று இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல, உடை விடயத்திலும் அவர் மிகவும் எளிமையாகவும் உறுதியாகவும் இருந்தார்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிச்சயமாக சப்பாத்து அணிந்திருப்பார். ஆனால் , இந்தியாவில் அவரை நான் செருப்புடன் கண்டதில்லை. டொக்டர் சிவநாதன், “ ஐயா தமிழீழம் கண்டபின்புதான் செருப்பு அணிவார் ” என்று சொல்லிச் சிரிப்பார் . அதில் எவ்வளவு உண்மை – பொய் இருக்கிறது என்பது தெரியாது.
ஓரு ஈழப் பிரிவினைவாதியாக தன்னை ஒறுத்து முனிவராக நடந்தார். ஆனால், அவரது பிடிவாதத்தில் பல பிற்போக்கான தன்மைகள்தான் தெரிந்தன. ஆரம்பத்தில் காந்தீயம் என்ற அழகான குழந்தையை பெற்று, அதை பொறுப்பாக அவர் வளர்க்கவில்லை. ஆயத இயக்கத்தினரிடம் அதனைக் களப்பலியாகக் கொடுத்தார். ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனையும் பிற்காலத்தில் பிரபாகரனையும் நம்பினார். புலிகள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
கடைசிவரையும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவரும் என ஒரு யோகிபோன்று, அதேநேரத்தில் பிடிவாதமான குழந்தையாகவும் தன்னைச் சுற்றி கற்பனைகளால் சுவர் எழுப்பியபடி வாழ்ந்த மனிதர்.
ஈழப் போராட்டத்தில் ஏதோ வகையில் பங்கு கொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவரும் வெல்லாத அந்தப் போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களைச் சுதாகரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்.
ஆனால், டேவிட் ஐயா எவ்வளவு மனச்சுமையுடன் தனது இறுதிநாட்களை கழித்திருப்பார் என்பதை எண்ணித்தான் என்னால் அவரை நினைவு கூரமுடியும்.
மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்….? என் முன்னால் நிற்கும் கேள்வி.
இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள்.
நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்ல முடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது வாழ்வில் இருந்து விட்டுச் சென்றவர். அவர் வாழ்வையும் பணிகளையும் உணர்வு நிலைக்கு அப்பால் நின்று பார்ப்பது எமக்கு அவசியம்.
ஐம்பதுகளில் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமென கருதப்பட்ட அவுஸ்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். அதன் பின்பு இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர்.
அதன்பின்பு கென்யாவில் சிலகாலம் தொழில் புரிந்தவர்.
ஐம்பதிற்கு பின்பே ஐரோப்பா வட அமெரிக்கா தவிர்ந்த உலகத்தின் மற்றைய நாடுகளில் நகர்மயமாக்கம் நடந்தது. இந்தக்காலகட்டத்தில் டேவிட்ஐயா எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்தார்…?
அவராலும், டொக்டர் இராஜசுந்தரத்தாலும் உருவாக்கப்பட்;ட காந்தீயம் அமைப்பு அக்காலத்தில் வெளிநாட்டு தமிழர்களின், ஆதரவு பெறப்பட்ட முதலாவது தன்னார்வ நிறுவனம். அவர்கள் இருவரும் தமது காந்தீயம் ஊடாக காணியற்ற மலையக மக்களுக்கு காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு முன்வந்த பணி சாதாரண முயற்சியல்ல.
இலங்கைத் தமிழர் அரசியல் முக்கியமாக, மூன்று தரப்பினால் உருவாகியது.
( 1) அதிகாரத்தில் ஆசையுள்ளவர்கள் சாகும் வரையும் கதிரையில் இருப்பவர்கள்.
( 2) பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.
(3) மற்றவர்கள் முக்கியமாக இளைஞர்கள்,
உணர்வு மேலிட்டு உயிரையும் உறுப்புகளையும் காவுகொடுத்தவர்கள்.
இப்படிப்பட்ட இடத்திற்கு டேவிட் ஐயா, தான் உருவாக்கிய காந்தீயத்தையும் தன்னையும் பலியிட்டதன் மூலம் அவரது அறிவு, படிப்பு எல்லாம் அவரைக் கைவிட்டது.
பல நாடுகளில் போராட்ட இயக்கங்களில் இருந்து விரக்தி அடைந்தவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் போராட்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களை நிறுவி அதன்மூலம் பணம் வசூல் பண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். இதற்கு உதாரணங்கள் விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) மற்றும் தமிழர் மருத்துவ நிதியம் (TAMED) என சில அமைப்புகளை அவுஸ்திரேலியாவில் வைத்திருந்தார்கள். ஆனால், காந்தீயம் போன்ற நேர்மையான தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தை போராளிகள் அமைப்பாக மாற்றியதில் டேவிட்ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு.
இங்கே நான் சொல்ல விரும்பும் விடயம் ஒன்றுள்ளது. அதாவது தமிழர்களில் பல துறைகளில் நிபுணத்துவமும், திறமையும் உள்ள பலர் அநியாயத்துக்கு நல்லவர்களாகவும், அதேநேரத்தில் அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு டேவிட் ஐயா உதாரணமாகத் திகழ்ந்தார்.
எனது நண்பர் ஒருவர் பொறியியலாளர். அடிக்கடி என்னுடன் டேவிட் ஐயாவைப் பற்றிப் பேசுவார். மெல்பன் பல்கலைக்கழகத்தில் தாம் இருவரும் ஒன்றாக படித்ததாகவும் சொல்வார். அப்பொழுது நான், அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்பேன். ஈழ விடுதலைப்போராட்டம் என்ற கனவின் சிறையில் தனது செட்டையை மாட்டிக்கொண்டு தொடர்ந்தும் பல துன்பங்களை அனுபவித்த மனிதர் அவர். ஆனால், அவரது அரசியலில் எந்த நம்பிக்கையும் எனக்கிருக்கவில்லை.
இந்த பொறியியலாளர் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வட-கிழக்குக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நியாயம் கிடைக்காத விடுதலைப் போராட்டம் என்ற எனது அரசியலில் ஒத்துப்போவார்.
2005 ஆம் ஆண்டளவில் முன்னர் மெல்பனில் டேவிட் ஐயாவுடன் படித்த அந்த நண்பர், கடிதமொன்றை எனக்குக் காட்டினார். அந்தக் கடிதம் அவருக்கு அவரோடு படித்த டேவிட் ஐயா எழுதியது.
அதைப் படித்தபோது, அதில் இருந்த ஒரு வசனம் என்னைச் சிந்திக்க வைத்தது.
‘தமிழர்கள் எல்லோரும் தற்பொழுது தம்பி பிரபாகரனது இளந்தோள்களில் எல்லா பாரத்தையும் திணித்துள்ளோம். அவனால் இதை தனியே சுமக்க முடியாது. வெளிநாட்டுத்தமிழர்கள் இந்தப்பாரத்தை குறைத்து உதவவேண்டும்” என்பது அந்த வாக்கியம்.
மெல்பன்
நண்பர் கொர்னேலியஸ்ஸின், வேண்டுகோளுக்கு இணங்கி நான் இலங்கை அகதிகள் கழகத்தின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பித்தேன். இந்த விண்ணப்ப விடயம், அக்காலத்தில் விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்தவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கவேண்டுமென்பதை அவர்களின் செயல்கள் காட்டியது. இவ்வளவிற்கும் அவர்களுக்கு எதிராக நான் இயங்கவில்லை. பிரசாரம் செய்யவில்லை.
நான் இவர்களுக்கு எதிராகச் செய்த விடயம் எனக்கருதக்கூடியது, இந்த அகதிகள் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கத்துவம் வகிப்பது அல்லது சேர்ந்து இயங்குவது , அகதிகளுக்கான முன்னெடுப்பு முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்ற எனது கருத்தை செயற்குழுக் கூட்டங்களில் சொல்லியது மட்டுமே. அதற்கப்பால் எந்த அரசியல் வேலைகளிலும் ஈடுபட எனக்கு நேரமும் இல்லை. தேவையும் இருக்கவில்லை. அவுஸ்திரேலியா வந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது. வீட்டுக்கடன், பிள்ளைகள் , மனைவியின் கிளினிக் என ஓடியபடியிருந்தேன்.
ஒரு புதன்கிழமை, இலங்கை அகதிகள் கழகத்தின் வருடாந்தக்கூட்டம் மெல்பனில் மாலை 3 மணியளவிலிருந்தது. அன்று எனக்கு நோர்த் மெல்பனில் மாலை 5 மணியிலிருந்து நடு இரவுவரையும் வேலை இருந்தது . வேலைக்காகக் கையில் ஒரு பையுடன் வருடாந்த கூட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். வரும்பொழுது வழியெங்கும், நானும் சேர்ந்து உழைத்து உருவாகிய இந்தக்கழகம் அழிந்துவிடாது வேலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் காரை ஓட்டிவந்தேன். அப்படி வந்த எனக்கு கார்த் தரிப்பு இடத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. கார்களால் நிரம்பி, எனது கார் நிறுத்த இடமில்லை. ஒருவாறு காருக்கு இடம்பார்த்து நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது, அந்தச் சிறிய மண்டபம் நிறைந்திருந்தது.
என் மனத்தில்எண்ணினேன்:இதுவரையும் அகதிகள் கழகத்தின் வருடாந்த கூட்டத்திற்கு 10 -12 பேர் மட்டும் வருவார்கள் , கூட்டம் முடிந்தவுடன் எல்லோரும் நிர்வாக குழுஅங்கத்தவர்கள் ஆகிவிடுவார்கள் என்ற நிலை இப்பொழுது மாறிவிட்டதோ? ஏராளமானவர்கள் இன்று வந்திருக்கிறாரகளே! ஏதாவது விசேடமா?
எனக்கு உள்ளே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த மண்டபத்தில், இருந்த பலரில், முக்கியமாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலர் குறுக்கும் நெடுக்கும் அலைந்தார்கள். அவர்கள் முகங்களில் சீரியசான நிலை தெரிந்தது.
நான் கூட்டத்தில் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு விடயங்களை அவதானித்தேன். கூட்டத்தின் ஆரம்ப விடயங்கள் முடிந்தபின்பு மூன்று விண்ணப்பங்கள் தலைவர் பதவிக்கு வந்திருப்பதாகவும், எனது பெயரும் ஏற்கனவே தலைவராக இருந்த கொர்னேலியஸ் மற்றும் சிவசம்பு ஆகியோரது பெயர்கள் வந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. மீண்டும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அந்த இருமுனை முற்றுகைத் தாக்குதலைப் புரிந்து கொண்டேன்
“ திருவாளர் சு சிவசம்பு என்பவர் பல காலமாக அங்கத்துப் பணம் கட்டவில்லை. எப்படி அவரால் பதவிக்குப் போட்டி போட முடியும் “என எழுந்து கேள்வி எழுப்பினேன். அப்பொழுது அவரது விண்ணப்ப பத்திரம் நிராகரிக்கப்பட்டது .
ஏற்கனவே தலைவராக இருந்து விலகுவதாகக் கூறி என்னை அழைத்த நண்பர் கொர்னேலியஸ், இப்பொழுது எனக்கெதிராக கேட்கிறார். அவர் நல்ல மனிதர். ஆனால், அவர் அப்படியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதும் புரிந்துவிட்டது.
அப்பொழுது நான் எழுந்து, கொர்னேலியஸிடம், “ நீங்கள் அழைத்தே நான் இந்த விண்ணப்பத்தை அனுப்பினேன். தற்பொழுது என்ன நடந்தது.? “ எனக்கேட்டேன்.
எந்தப் பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.
மீண்டும் தொடர்ந்தேன்
“ நான் போட்டியிட்டால், நான் விடுதலைப்புலி எதிர்ப்பாளர், நீங்கள் ஆதரவாளரெனத்தான் இந்தப் போட்டி நடக்கும். இப்படியான அரசியல் இந்த அகதிகள் கழகத்துள் வரக்கூடாது என்பதே எனது விருப்பம். நீங்களே தொடர்ந்து தலைவராக இருந்து கொள்ளுங்கள் “ எனச் சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காது அந்த மண்டபத்திற்கு வெளியே வந்தேன்.
என்னை அந்தப் போட்டியில் தோற்கடித்து, அவமானப்படுத்த எண்ணியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்ற திருப்தி இருந்தாலும் , பலகாலமாக கொர்னேலியஸ் மீது கோபமாக இருந்தேன்
பின்பு, நான் கேள்விப்பட்ட விடயம் என்னை அமைதியடையப் பண்ணியது. அவரது உறவினர் ஒருவர் அவுஸ்திரேலியா வருவதற்காக ஏற்கனவே கொழும்பு வந்துவிட்டார். ஆனால் அவரது குடும்பம் இலங்கை வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தார்கள். நடேசனுக்கு எதிராகத் தலைவர் பதவியை எடுத்தால், உறவினர்களைக் கொழும்பு வருவதற்கு அனுமதிப்போம் என்பதே அவர்களது ஆயுதம். அதாவது அவரது உறவை வைத்து பிளாக்மெயில் பண்ணியிருந்தார்கள்.
இதில் மேலும் சில வேடிக்கைகள் இருந்தன. அவர்கள் முற்றாக கொர்னேலியஸை நம்பவில்லை. முன்னர் அவர் உமா மகேஸ்வரனின் புளட் இயக்கத்தை ஆதரித்தவர் என்பதும் ஒரு காரணம்.
அதனாலே போடு தடியாகவும் மற்றும் ஒருவரைப் போட்டிருந்தார்கள். அவர்தான் அந்த சிவசம்பு என்ற அன்பர். ஆனால், அந்த அன்பர், கழகத்தின் அங்கத்தவரா…? என்பதை பார்க்கத் தவறிவிட்டார்கள்.
இவ்வாறு மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பார்க்கத் தவறிய பல விடயங்கள் இருந்தன.
இப்படியான சிறிய தவறுகள், கற்கள் போன்று குவிந்து மலையாகிவிடும். அனுராதபுரத்தின் போதி மரத்தின் கீழ் அப்பாவிகளைக் கொன்றதால் புலிகளின் பிரதிநிதிகளான அவர்கள் மீது கசப்புணர்வு மட்டுமே கொண்டிருந்த என்னை, விக்ரோரியா மாநிலத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினர், தீவிர விடுதலைப்புலி எதிர்ப்பாளராக்கி எனக்கு கிரீடம் சூட்டினார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்