
தனது ஆண் நாய்க்குட்டிக்கு தடுப்பூசி மருந்து கொடுப்பதற்காக அதனைக் கொண்டு வந்தாள் ஒரு மத்திம வயதுப் பெண். அதனைச் சோதித்துப் பார்த்த பொழுது குடல் இறங்குதல்(Umbilical Hernia) எனப்படும் தொப்புள் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.இதனை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றேன்.
அந்தப் பெண் தயங்கினாள்.
அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, இது சிறிய சத்திர சிகிச்சைதான். அதிகம் செலவும் இல்லை. ஆண் நாய்.எனவே,விதைநீக்கம் (Castration) செய்யும் போது இச்சிகிச்சையும் சுலபம் என்றேன். இதற்கு அப்பெண் சம்மதித்ததையடுத்து வரவேற்பு அறையில் கடமையிலிருப்பவரிடம் ஒரு திகதியை பதிவு செய்துகொள்ளுமாறும் சொன்னேன்.
சுமார் மூன்று மாதம் கழிந்து எமது மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது. நாம் பத்தாயிரம் டொலர் நட்டஈடு குறிப்பிட்ட நாயின் சொந்தக்காரருக்கு வழங்க வேண்டும் என்பதே அந்த நோட்டீஸின் சாராம்சம். நடந்த சம்பவம் இதுதான். நாயைக் கொண்டு வந்து சத்திரசிகிச்சைக்குத் திகதி பெற்றுச் சென்ற பெண்ணின் கணவர்விதை நீக்கம் விரும்பாத காரணத்தால், குறிப்பிட்ட பெண் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குடல் இறங்குதல்(Umbilical Hernia) சத்திரசிகிச்சை மாத்திரமே செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். எனினும் அச்சமயம் பணியில் இருந்த தாதி இதனை முறையாக பதிவு செய்யவில்லை. அந்தப் பெண்ணின் கணவர்தான் சிகிச்சைக்கு வந்தார். வந்தவரும் நினைவுபடுத்தவில்லை. ஆனால் நாய்க்கு சத்திரசிகிச்சை செய்த டாக்டரோ – முன்பு நான் தெரிவித்த ஆலோசனைப் பிரகாரம் விதைநீக்கம் , குடல் இறங்குதல் இரண்டையும் செய்துவிட்டார்.
நாயின் விதை அகற்றப்பட்டதால் அதன் இனவிருத்திபாதிப்புக்குள்ளானதை சுட்டிக்காட்டியே எம் மீது வழக்குத் தொடர எத்தனித்தனர். தகவல் பரிமாற்றத்தால் நேர்ந்துவிட்ட தவறினால் ஏற்பட்ட கோளாறை அவர்களுக்கு விளக்கியும் அந்த தம்பதியர்சமரசத்திற்கு வர மறுத்தனர். நீதிமன்றம் வழக்கு என சந்திக்க நேர்ந்தால் ஏற்படவிருக்கும் செலவை சுட்டிக் காட்டினேன். அத்துடன், நீங்கள்,
உங்களுக்கிருக்கும் பணத்தேவைக்காக நாயின் விதைக்கு விலை கூறுகிறீர்கள் என்றே நாமும்வாதிட நேரும் என்றேன்.
இதனைக் கேட்டு தயங்கிய தம்பதியர் நட்ட ஈடாக ஆயிரம் ரூபாய் பெற சம்மதித்தனர். எம் தாயகத்தில் நாய் விற்ற காசு குரைக்காது என்பர். நாயின் விதைக்கும் விலைகூறி பணம் பெற்றவர்களையும்இந்த அஸ்திரேலிய மண்ணில் கண்டேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்