நடேசன்

அவுஸ்திரேலியாவில் புதிதாக வீடு கட்டிய பின்னர், வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் புற்களை விரிப்பாகக் கொண்டு வந்து பதித்து புற்தரையை உருவாக்குவார்கள். சில இடங்களில் புல் அழிந்தாலோ அல்லது , வளராது போனாலோ புல் விதைகளை நட்டு, மெல்பன் கிரிக்கட் மைதானம்போன்று புற்களை வளர்ப்பார்கள்.
பின்பு இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு ஒரு முறை அவற்றை வெட்டுவார்கள் . நன்றாக வளராதபோது அதற்கு பசளையிடுவார்கள். கோடை வந்தால் பணம் கொடுத்து வாங்கிய குடி நீரை ஒன்று விட்டு ஒரு நாள் புல்லுக்குப் பாய்ச்சுவார்கள் .
மீண்டும் வளரும் புற்களைத் தொடர்ந்து வெட்டுவார்கள். இந்த வேலை செய்ய முடியாத என் போன்றோர் ஒருவரை அழைத்து பணம் கொடுத்து புல்லு வெட்டவைப்போம். இங்கு பணம், மனித உழைப்பு, சுத்திகரிக்கப்பட்ட நீர் , மற்றும் பசளை இதைவிட இயந்திரங்கள் என மொத்த செலவை இறுதியில் கணக்குப் பார்த்தால் பில்லியன்களில் அளவிடலாம் .
இது தொடர்ச்சியாகச் செய்யப்படும் அபத்தமான செயற்பாட்டில் ஒன்றாக எங்களுக்குத் தெரிவதில்லை . ஏன் அரசுக்கும் தெரிவதில்லை. நான் செய்த இந்த வேலையை எனக்குப் பின்னர் எனது மகன் செய்கிறான் . எனது பேரனும் வளர்ந்தபின் செய்வான் . எனது தலைமுறை தொடர்ந்து செய்யும் .
இந்த மாதிரியாக 25 வீதமான சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது என்ற அபத்தமான செயலை சுதந்திரத்திற்கு முன்பு ஜி.ஜி. பொன்னம்பலம் கேட்டார் . அவருக்குப் போட்டியாக செல்வநாயகம் எமக்குத் தமிழரசு வேண்டுமென கோசம் வைத்து சிங்கள மக்களைக் கிளர்ந்தெழப் பண்ணினார்.
பஸ், கார்களின் இலக்கத்தகட்டிலிருந்த சிங்கள ஶ்ரீ க்கு தார் பூசினர். அதன் எதிரொலியாக 1958 இல் நடந்த கலவரத்தின் விளைவுகளினால் தென் இலங்கையில் தமிழர்கள் எந்தவொரு வியாபாரமோ ஜீவிதமோ செய்யமுடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
அதன்பின் அமிர்தலிங்கத்தின் இனவிரோதப்பேச்சுகள் மற்றும் இலங்கை அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் 1977 அதன்பின்பு 1981 – 1983 என இரு கலவரங்களால் உருவாகியது.
பாதிக்கப்பட்டது யார்…? தமிழர்கள்.
அதன்பின்னர் முப்பது வருட காலம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன், சிங்களப் பயங்கரவாதத்தை அதே பயங்கரவாதத்தால் எதிர்ப்போம் என்ற கோசத்துடன் தனது முப்படைகளையும் ஒருங்கிணைத்துப் போர் புரிந்து மீண்டும் ஒரு இலட்சம் தமிழர்களை உயிர்ப்பலி கொடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கானோரை அங்கவீனர்களாகவும் பெண்களை விதவைகளாகவும் மற்றும் குழந்தைகளை அனாதைகளாகவும் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகவும் மாற்றிவிட்டு அவரும் ஆவியாகிவிட்டார் .
சிங்கள பவுத்த இனவாதத்தை இல்லையென்று சொல்லவில்லை. அது இருக்கும் . அவர்களது இருப்பிற்கு அது தேவையானதும் கூட . அதுவே ஜனநாயகம். அதை தமிழ் இனவாதத்தால் வெற்றி கொள்ளமுடியாது என்பது இதுவரையிலும் மூளை வளர்ச்சியற்று பிறந்த குழந்தைக்கும் புரிந்திருக்க வேண்டும் .
எந்த பிரச்சினைகளையும் தீர்க்க பல வடிவங்களுண்டு . அதைச் சிந்திக்காமல் மீண்டும் பொன்னம்பலம் -செல்வநாயகம் – அமிர்தலிங்கம் போன பாதையில் போவதற்கு தற்போது இளைப்பாறிய நீதியரசர் கச்சை கட்டியிருக்கிறார் .
இவர் பேசும் விடயங்களை பேசச் சட்டப்படிப்புத் தேவையில்லை . ஏன் பாடசாலைக்கே போயிருக்கத் தேவையில்லை. அறுபதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்த பொன்ராசா கோணாந்தோட்டத்து புவனேந்திரன் , கரையூர் மணியம் போன்றவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தால் இதைவிட அழகாகச் செய்திருப்பார்கள். வர்ணஜாலமான வார்த்தைகளுடன்,
நமது வாழ்நாள் காலத்தில் சிறையிலிருந்தே அரசுடன் பேசி பிரச்சினைகளை முடித்து வைத்தவர் நெல்சன் மண்டேலா .
அவர் நினைத்திருந்தால் பத்து மடங்கு அதிகமாக இருந்த கறுப்பின மக்களிடம் இனத்துவேசம்பேசி வெள்ளை அரசை தொடர்ந்து நடத்த முடியாது செய்திருக்கலாம். பல கலவரங்களைத் தூண்டியிருக்கலாம். ஆனால், அந்த மகான் அவ்வாறு செய்யவில்லை. அரசுக்கெதிரான சில வன்முறைகளை ஆரம்பத்தில் அங்கீகரித்த போதிலும் பிற்காலத்தால் அவைகூட நிறுத்தப்பட்டது .
தற்போது இலங்கைத் தமிழர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் வந்த தமிழ் அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வாழ்பவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப நடப்பதை ஏற்கமுடியாது என்பதை உள்ளூரில் உள்ளவர்கள் சொல்லவேண்டும்.
இல்லையெனில் விடுதலைப்புலிகள் காலத்தைப் போன்றதோர் காலம் உருவாகலாம். இனவாதம், பழிவாங்கல் , வெறுப்பு என்பனவற்றை மனிதர்கள் மத்தியில் இலகுவாக உருவாக்கமுடியும் ஆனால், அவை உருவாகியபின்பு அவற்றுக்கு கடிவாளம்போடமுடியாது.
தொடர்ச்சியான இனவாத பேச்சுகள் இராணுவத்தை வடகிழக்கில் மீண்டும் நிலைகொள்ளவைக்கும். அடக்குமுறைகளை அதிகரிக்க வைக்கும். அபிவிருத்தி நடக்காது.
இலங்கைத்தமிழ் மக்கள் இறுதியாக நடந்த போரிலிருந்து இன்னமும் மீண்டு எழும்பவில்லை. காயம்பட்டவர்களின் காயங்கள் ஆறவில்லை. தாய்மாரின் கண்ணீர் வற்றவில்லை .
உங்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது . அரசபடைகள் சுமந்திரனைப் பாதுகாப்பதற்கு மேலாகப் பாதுகாக்கும் .
ஆனால் மக்கள்?
ஒரு தலைமுறையாவது சமாதானத்தை நோக்கிச் செல்லவேண்டும் . அதற்கான இடைவெளியை அரசியல்வாதிகள் கொடுக்கவேண்டும் .
நன்றி – ஈழநாடு
மறுமொழியொன்றை இடுங்கள்