நடேசனின் “உனையே மயல் கொண்டால் “




இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


நடேசனின்’ உனையே மயல் கொண்டால்” எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல்.
‘பைபோலார் டிஸீஸ்- (bipolar dieases-disorder (manic depression) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு மனவியாதியால் துயர் படும் ஒரு பெண்ணையும் அவளைத் திருமணம் செய்து அல்லற்படும் கணவரையும் பின்னிப்பிணைந்த நாவல்.

மன நலம் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ சாதாரண மனிதர்கள் மாதிரி வாழ்க்கை நடத்துவது கடினம். தாம்பத்திய வாழ்வின் முக்கிய அம்சமான ‘பாலியல்’ உறவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களால் சந்தோசமாக அனுபவிக்க முடியாது.

பாலியல் உறவுக்கு ஆரோக்கியமான மனநிலை முக்கியம். உதாரணமாக,மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையின் பூரண விறைப்பையடைவதும், தாம்பத்திய உறவை அனுபவிப்பதும் மிகவும் கடினம். இதைப்புரியாமல் பலர் தங்களுக்கு ஏதோ ‘ பிழை’ இருப்பதாக நினைத்துக் குடிக்க தொடங்கி. அடுப்பில் இருந்து நழுவி நெருப்பில் விழுந்து அழிந்த கதையாக வாழ்க்கையை முடித்துக்கொள்வதுமுண்டு.

நடேசனின் நாவல் ‘ பைப்போலர்’ வருத்தம் வந்த சோபா என்ற பெண்னின் வாழ்க்கையைப் பற்றியது. பைப்போலார் வருத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி மூட் மாறும்(Mood swings) . மிக மிக சந்தோசமும் ஆழமான சோகமும் ( Deep depression) இவர்களை ஆட்டிப்படைக்கும்.

அமெரிக்காவில் 2.3 கோடி மக்கள் இந்த மனவருத்ததால் கஷ்டப்படுகிறார்கள். அதில் 20 வீதமானவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.

இந்த வருத்ததிற்குக் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் ஒருமனிதனின் வாழ்க்கையில் நடந்த அதி துக்கமான சம்பவங்களும்((Trauma) , சிலவேளைகளில் பாரம்பரியமும்(Genetic ) காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆசிய நாட்டுப்பெண்களில் 6% வீதமானவர்கள் ஏதோ ஒரு வித மன வருத்ததிற்கு ஆளாகிறார்கள் என்று லண்டன் மனவைத்திய அமைப்புக்கள் கணிப்பிட்டுகின்றன.இவர்களில் பலர் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதுமுண்டு(self harming).

நடேசனின் ”உனையே மயல் கொண்டால்” அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்த் தம்பதிகளுக்குள் நடக்கும் பாலியற் பிரச்சினை, அந்தப் பிரச்சினை வருவதற்கான உந்துகோல்கள், பிரச்சினை வரும்போது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண உணர்வுகளின் போராட்டம், மனதை வெல்ல முடியாமல் காமத்தின் தணலுக்குள் வீழ்ந்துபோகும் அனுபவம் அதன் மூலம் தெரிந்து கொண்ட உண்மைகள், அந்த உறவாற் கிடைத்த குற்ற உணர்வு, கிடைத்த தண்டனை என்பனபற்றி மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

மனவியாதி பற்றிய தமிழ்ச் சமுகத்தின் கணிப்பும் கதாபாத்திரங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கதையின் ஒரு நாயகியாகிய சோபாவுக்கு வந்த அதிர்ச்சிகளில் 83ம் ஆண்டு இனக்கலவரம் மட்டுமன்றி, சோபாவின் தமயன் கார்த்திக்கின் மரணமும் ஒன்று. அவன், டெலோ இயக்கத்தில் இருந்தான் என்ற குற்றத்தால் புலிகளால் எரித்துக்கொல்லப்பட்டவர்களில் ஒரு தமிழன்.

அந்தச் சம்பவம் அந்தக்குடும்பத்தின் அத்திவாரத்தையே அழித்த சம்பவம் என்பது சோபாவின் வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

‘சிங்களவர் வீடு வாசலை எரித்தார்கள்,ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்ளையை எரித்துக் கொன்று விட்டார்கள். சிங்களவன் நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் எங்களை அடித்தார்கள்.யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என்பிள்ளையைக்கொன்றார்கள்” என்ற இராசம்மாவின் புலம்பல் இயக்கங்களில் சேர்ந்து இறந்த பல இளைஞர்களின் புலம்பலும் சோகமுமாகும்.

” எப்போது எனக்கு இந்த மனநிலையில் ஒரு மாற்றம் வந்தது? எண்பத்தி மூன்றில் காடையர்கள் என்னை நிர்வாணமாக்கியபோதா? கார்த்திக்கின் எரிந்த உடலை பார்த்தபோதா? கார்த்திக்கும் அவனது நண்பர்களும் எப்படித் தோட்டங்கள் வீடுகள் என ஒளிந்தபோது துரத்தித் துரதிச் சுட்டான்கள் எனக்கார்த்திக்கின் நண்பர்கள் விபரித்தபோதா” எனப்பலவாறு சோபாவின் மனம் குமைந்தது, என்கிறார் ஆசிரியர்.

இன்றைய கால கட்டத்தில் எனக்குப்பிடித்த தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் அ. முத்துலிங்கம், பொ. கருணாஹரமூர்த்தி நடேசன் போன்றோரின் எழுத்தில் இலக்கியத்திறமை மட்டுமன்றி யதார்த்தமும் இருப்பதாகக் கூறுவேன்.இவர்கள் வார்த்தைகளை வைத்து ‘இலக்கிய விளையாட்டு’ விளையாடாதவர்கள். சொல்ல வந்ததை நேர்மையாகச் சொல்பவர்கள். சொல்லும் விடயத்தை, முடிந்தவரைக்கும் விளக்கமாகச் சொல்பவர்கள். இலக்கியத் தரத்துடன் சொல்பவர்கள். ‘புதிய உத்திகள்’ என்று எப்படியெல்லாமோ, எதையோ சொல்லி வாசகர்களைக்குழப்பாதவர்கள். தாங்கள் கண்ட அனுபவத்துடன் வாசகர்களையும் இனைத்துக்கொள்பவர்கள். எழுதும் விடயத்தை விறு விறுப்பாக எழுதுபவர்கள்.

நடேசனின் நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களின்’ பழைய’ வாழ்க்கையின் ஏக்கத்தையோ, புதிய உலகின் எதிர்பார்ப்பையோ காட்டாமல் நடைமுறைச் சம்பவங்களைக்கோர்த்த ஒரு யதார்த்தப்படைப்பு.

பல மனிதர்கள் சொல்ல விரும்பாத, சொல்லத்தயங்கும், மன நலப்பிரச்சினைகளும் அதன் பாதிப்பால் வரும் பாலியற் பிரச்சினைகளும் கதைப்பொருளாக எடுக்கப்பட்டிருக்கிறது.


நடேசன் வைத்தியத் துறையனுபவம் உள்ளவர் என்பதால் இந்தநாவலின் நாயகர்களான் கணவன் , மனைவி, காதலி என்போரின் மனநிலைப்பிரச்சினையை விரிவான, சமுதாய,பாலியல், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவி செய்கிறார்.



கதையின் பரிமாணங்கள்.

-இலங்கையிலிருந்து மேற்துறைப்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குப்போய் அங்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தமிழ் குடும்பஸ்தனைப்பற்றிய கதையிது.

-அவனது மனைவிக்குக் குழந்தை பிறந்தபின் மன நலப்பிரச்சினையேற்பட்டுக் குடும்பவாழ்க்கையின் அர்த்தத்தைக் கேள்வி கேட்கப்பண்னுகிறது. குடும்ப வாழ்வில் ஏற்படும் பாலியல் உறவின் வெறுமை கணவனுக்கும் மனைவிக்குமிடையில் எத்தனை பிளவையும், வெறுமையையும், சந்தேகங்களையும் சங்கடங்களையும் உண்டாக்குகிறது என்பதைப் பகிரங்கமாகச் சொல்கிற நாவல் இது.

மன நலப் பிரச்சினை வந்தால் ஆணோ பெண்ணோ தங்களின் பாலியலின் தேவைகளை எப்படி இழக்கிறார்கள், உணரும் சக்தியிழக்கிறார்கள் என்பதைச் சாதாரணமானக் குடும்பக்கதையூடாகக் காட்டியிருக்கிறார் நடேசன்.

-ஆசிய மக்களிடையே மனநல நோய் பற்றிக் கடைப்பிடிக்கும் இரகசியங்கள், பொய்மைகளை உடைத்து உண்மைகளுக்கு முகம் கொடுக்க இந்நாவல் மிகவும் உதவியாயிருக்கும்.

மனிதன் பேசத்தெரிந்த ஒரு மிருகம். மூன்று பெரு உணர்வுகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. பசி,செக்ஸ், பாதுகாப்பு என்பன மிகவும் முக்கியமானவை.இன்றைய கால கட்டத்தில் மத்தியதர வாழ்க்கை நடத்தும் மனிதன் பசியை வெல்லத் தன் படிப்பைப் பாவித்துப் பிழைத்துக்கொல்கிறான்.

பசியை வெல்ல எடுத முயற்சிகளில் வெற்றி கொண்டதுபோல் பாலியலில் வெற்றி கொள்ளப் பெரும்பாலானவர்களால் முடியவில்லை. வயிறு நிறைந்தால் பசிபோய்விடும். பாலியிற் தேவை நினைவுகள் இரவும் பகலும் ஒரு மனிதனை ஆட்டிப்படைப்படைப்பதாகச் சொல்லப்படுகிறது. குடித்தால் வெறிப்பது மது, பெண்னைப் பார்த்தால் வெறிதருவது காமம் என்பதன் உண்மையை இந்நாவலின் பல இடங்களில் ஆசிரியர் படம் பிடிக்கிறார்.

எதையும் எளிதாக வாங்க முடியுமான மேற்கைய நாகரிகத்தில் உண்மையான அன்பை வாங்குவது கஷ்டம் என்பதும் கதையினூடே சொல்லப்படுகிறது.

கடந்த வாழ்க்கையின் தொடர்கள் எப்படி மனிதனை வாட்டுகிறது, உருக்குலைக்கிறது, உருப்படியாக்குகிறது, மாற்றுகிறது என்பதை இந்நாவலை ஆழமாகப் படிப்பவர்களுக்குப்புரியும்.

எங்கள் சமூகத்தில் சொல்லப்படாத சில விடயங்களை டாக்டர் நடேசன் சொல்கிறார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த துயர் சம்பவங்கள் எப்படி அவள் வாழ்க்கையைப்பாதிக்கிறது, அந்தப்பாதிப்பை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை இந்நாவல் படிப்பவர்கள் உணர்வார்கள்.

பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பல பெண்கள் மனம் விட்டுப்பேச மாட்டார்கள். மனத்தின் அடியில் புதைத்து விடுவார்கள்.

நல்லா சாப்பாடு இல்லாத ஏழையைத் தொற்றுவியாதிக்கிருமிகள் தாக்கினால் ஏழையின் உடம்பு தாங்காது.

அதேபோல் மனதில் பல குழப்பங்களைப்புதைத்து வைத்திருக்கும் பெண்ணுக்கும், அவளின் வாழ்க்கையை சரியான விதத்தில் கொண்டு நடத்த அவள் மன நிலை விடாது. ‘ மூட்’ அடிக்கடி மாறும். ஒரு நேரம் சந்தோசமும் மறு நேரம் துக்கமுமாகித் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். இதை ஆங்கிலத்தில்’ பைபோலார்’ நோய் என்று கூறுவார்கள்.

இந்த மன நிலைஉள்ளவர்களுடன் வாழ்க்கை நடத்துவது முள்போல் நடப்பதற்குச் சமம். இதைப்புரிந்து கொண்டு வைத்தியம் தேடாமல் இருப்பவர்கள் பலர். அதிலும் ஆசியா நாட்டவர்களைப் பொறுத்தவரையில் ‘ மன நலம்’ பற்றிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவைக்கப்படுகின்றன. தோல்வியான வாழ்க்கையாக மதிக்கப்படுகிறது. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பூட்டி வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டம் இன்றும் எங்களிடையே பரவலாக இருக்கிறது.

எங்கள் தமிழர்களிற் பலர், ‘விசர்’ பிடித்தவர்கள் என்று மற்றவர்கள் சொல்லி விடுவார்கள் என்பதற்காக எதையும் மறைத்து வைத்து விடுவார்கள். இலங்கையில் எட்டு மாகாணங்களும் அங்கொடை என்ற பைத்திய வைத்தியசாலை மட்டும் இருக்கும்போது வடக்கு மாகாணத்திற்கு மட்டும் மேலதிகமாக இன்னுமொரு வைத்தியாசால மந்திகையில் தேவைப்படுகிறது என்பதன் மூலம், எங்களில் எத்தனைபேர் மன நல சேவையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புரியவரும்.

மன நலப் பிரச்சினைகள் மறைக்கப் படத்தேவையற்றவை. அதிகப்படி வேலைசெய்யும் இயந்திரம் பழுதடைவதுபோல் அதிகப்படி துன்ப துயர் அனுபவித்த மனங்களும் சிலவேளை குழம்பிப்போகின்றன. இவை சமுதாயத்திலிருந்து மறைத்து வைக்கப்படவேண்டியவையல்ல. மனிதர்கள் ஒருத்தருக்கொருத்தர் உண்மையான அன்பு காட்டுவதன் மூலமோ அல்லது மன நலத்தைச் சீர் படுத்தும் மருந்துகள் கொடுத்தோ குணமாக்கப்படவேண்டியவை என்பதை இக்கதைமூலம் சொல்லித் தமிழ் மக்களுக்கு ஒரு அரிய சேவை செய்திருக்கும் நடேசனுக்கு எனது பாராட்டுக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: