
ஒரு காலகட்டத்தில் அதன் நிறுவனர் ஜெமினிவாசன் ஆசிரியராகவிருந்தபோது பல தரமான சிறுகதைகள் அதில் வெளிவந்தன. ஜெயகாந்தனின் சில சிறந்த சிறுகதைகளும்
“ முத்திரைக்கதை “ அந்தஸ்துடன் வெளிவந்தது. அவ்வேளையில் அச்சிறுகதைகளுக்கு ஆனந்தவிகடன் 500/ = இந்திய ரூபாவும் சன்மானமாக வழங்கியது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் அதில் ஒன்று.
பின்னாளில் ஆனந்தவிகடனின் போக்குப்பிடியாமல், ஜெயகாந்தன் அதில் எழுதுவதை நிறுத்தினார். அதற்காக தனக்கு ஆனந்தவிகடன் வழங்கிய சன்மானங்களை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை !
ஆனந்தவிகடனுக்கு பொன்விழா வந்தபோது, விழாவும் நடத்தி சிறப்புமலரும் வெளியிட்டது. ஜெயகாந்தனுக்கும் அழைப்பு வந்தது. ஆனால், அவர் செல்லாமல் புறக்கணித்தார்.
நிருபர்கள் ஏன் என்று கேட்டதற்கு “ அது திவசச் சாப்பாடு “ என்றார்.
ஒருவர் இறந்தபின்னர் ஒரு மாதம் கழித்து தரப்படும் விருந்துதான் திவசச்சாப்பாடு. இதிலிருந்து ஜெயகாந்தனின் எள்ளல் எமக்குப்புரியும். அவரும் வருவார் என்ற நம்பிக்கையில் பொன்விழா மலரில் அவர் முன்னர் எழுதிய அக்கினிப்பிரவேசம் கதையையும் மறுபிரசுரம் செய்திருந்தனர்.
எம்.ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது ஆனந்தவிகடனின் முகப்பு அட்டையில் எம். எல். ஏ.க்களை திருடர்களாக சித்திரித்த கேலிச்சித்திரம் வந்தமையால், ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ( ஜெமனி வாசனின் மகன் ) கைதுசெய்யப்பட்டார்.
இந்த பாலசுப்பிரமணியன்தான் ஜெமினி முன்னர் தயாரித்து வெளியிட்ட எம்.ஜி. ஆர். நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்தையும் தயாரித்தது, அதன் தயாரிப்பு நிருவாகியாக இதே பாலசுப்பிரமணியன்தான் எம்.ஜி. ஆரை நேரில் சந்தித்து ஒளிவிளக்கு கால்ஷீட் தொடர்பாகவும் நடிப்பதற்கான சம்பளம் பற்றியும் பேசியிருந்தவர்.
இந்தத் தகவல்களை பாலசுப்பிரமணியன் தடுப்புக்காவலிருந்து வெளியே வந்ததும், ஆனந்தவிகடன் உதவி ஆசிரியர் சுதாங்கனை அழைத்து வழங்கிய விரிவான நேர்காணலில் தெரிவித்தார்.
அதனையடுத்து, சுதாங்கனும் வாசகர் மத்தியில் கவனிப்புக்குரிய நிருபர் ஆனார். இவர்தான் விடுதலைப்புலிகளுக்கு சார்பான செய்திகளுக்கு ஆனந்தவிகடனில் முக்கியத்துவம் கொடுத்தவர்.
ஆனந்தவிகடன் குழுமம் வெளியிட்ட ஜூனியர் விகடனில்தான், இந்திய அமைதிப்படை இலங்கையில் நடந்துகொண்டவிதம் பற்றி இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் எழுதிய ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை என்ற தொடரை வெளியிட்டது. அதற்கெல்லாம் பின்னணியிலிருந்தவர்தான் இந்த சுதாங்கன்.
பின்னாளில் விடுதலைப்புலிகளின் பிரசாரத்திற்கும் ஆனந்தவிகடன் – ஜூனியர் விகடன் பயன்பட்டது. ஆனால், அது இந்திய உளவுப்பிரிவின் ( ரோ) கண்ணில் படும் என்பதும் தெரியாமல் கண்மூடித்தனமாக ஆனந்தவிகடன் நடந்துகொண்டது.
புலிகளின் தரைப்படை, கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படை ( கரும்புலிகள் ) பற்றிய வண்ணப்படங்களை ஆனந்தவிகடன் பக்கம் பக்கமாக வெளியிட்டு, புலிகளுக்கு உலை வைத்தது.
அத்தகைய செய்திகள் – படங்கள் ஒரு கெரில்லா முறையில் போரை ஆரம்பித்திருந்த புலிகளுக்கு இடையூறாகிவிடும் என்பதை ஆனந்தவிகடனின் அந்த மூன்றாம் தர ஜனரஞ்சக வியாபார தந்திரம் புரிந்துகொள்ளவில்லை.
இறுதிப் போர்காலத்தில் பொலிஸ் நடேசன் கலங்கியிருந்தபுலித்தலைவர் பிரபாகரனிடம் ஆனந்தவிகடன் செய்திகளைக் காட்டி “முழுத் தமிழகமும் எங்கள் பின்னால் “என ஆறுதல் வார்தைகள் “கூறுவாராம் .
இவையெல்லாம் ஆனந்தவிகடனின் ஈழப்போராட்த்திற்கான உதவிகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்