நடேசன்
பலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது.
ஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் . அமைதியின் நினைவுகள் எம்மிடமுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பன்னிரண்டாம் தரத்தில் படித்தபோது, இலங்கையில் மொழிவாரியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியாக மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வந்ததால் உயர் வகுப்பில் படித்த பல மாணவர்களின் மனதில் அவநம்பிக்கை தோன்றியது . இலங்கையில் படித்து பல்கலைக்கழகம்போக முடியாது போனதால் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்
பணவசதியுள்ள எனது நண்பர்கள் இங்கிலாந்து , இந்தியா என படிக்கச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் என்னுடன் படித்த பாலா . செல்வாக்கான வைத்தியரின் மகன். அவனே எங்கள் வகுப்பில் வசதியானவன். அவனுக்குத் திருச்சி புனித யோசப் கல்லூரியில் பி எஸ்சி படிக்க இடம் கிடைத்தது.
சித்திரை மாதம் . விடுமுறையாக அதனைக் கழித்துவிட்டு, மீண்டும் கல்லூரி வந்த சமயம், ஒரு நாள் காலையில் பரிசோதனைச்சாலையில் வைத்து எல்லோரிடமும் பெருமையுடன் சொன்னான்.
ஒளி சிந்தும் கண்களுடன் முகத்தின் பூரிப்பும் எம்மை ஆட்கொண்டபோதிலும் எனக்குச் சிறிது பொறாமை தலைகாட்டியது. அவனது பணம் அதிஸ்டத்தை வழங்கியுள்ளது என நினைத்தாலும் சில கணத்தில் சந்தோசமடைந்து அவனை வாழ்த்தினேன். எங்களது தாவரவியல் வகுப்பாசிரியரும் எமது சந்தோசத்தில் கலந்து கொண்டார் .அவரது மகிழ்வுக்கு வேறு காரணம்.
பாலா ஏற்கனவே பாடங்களில் கவனமெடுக்காதது மட்டுமல்ல, மற்றவர்கள் படிப்பிற்கு இடையூறாக இருப்பதால் .அவரைப் பொறுத்தவரையில் அவன் செல்வது மகிழ்வான விடயமே.
அவன் புறப்பட்டபோது, வழியனுப்ப , வகுப்பில் உள்ள இருபது பேர்களும் பலாலி நோக்கி வாகனமொன்றில் சென்றோம். .அது எங்களுக்கு உல்லாசப் பிரயாணமாக அமைந்தது.
அப்பொழுது அங்கு பெரிய விமான நிலையமில்லை. எல்லோரும் விமானத்தின் அருகே சென்று அவனைத் திருச்சிக்கு வழியனுப்பினோம் . அவனது முகம் பார்ப்பதற்கு நடிகர் விஜயகுமாரைப்போலிருக்கும். என்ன, நிறம் மட்டும் குறைவு. நீலச்சட்டை. அதே நிறப்பாண்ட் அணிந்தபடி விமானமேறினான் .
74 ஆம் ஆண்டில் நடந்தாலும், அவன் விமானப் படிக்கட்டுகளில் ஏறியது இன்னமும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நான் செய்ய விரும்பியதை அவன் செய்கிறான் என்பதுடன் அதுவே என்னைப் பொறுத்தவரை முதல் முறையாக விமானத்தருகே சென்றதுமாகும்.
வடமாகாணத்திற்குத் திருச்சியுடன் இருந்த விமானத் தொடர்பு பிற்காலத்தில் துண்டிக்கப்பட்டது . ஆனால் பிறகு வேதாரணியம், ராமேஸ்வரம் எனக் கடலால் தொடர்புகளை இயக்கங்கள் மேற்கொண்டார்கள் என்பது நமது வரலாறு.
யாழ்ப்பாணமென்பது இலங்கையின் ஒரு துண்டிக்கப்பட்ட பிரதேசம். சிறிய நிலமே. மனிதர்களின் கழுத்துப்போல் ஆனையிறவுடன் இணைக்கிறது. சில மணி நேரம் மண்வெட்டியால் கொத்தினால் இலங்கையில் இருந்து இலங்கையின் பிரதான பகுதியில் இருந்து பிரித்துவிடலாம். இப்படியான பிரதேச அமைப்பு எங்களை அறியாமலே எங்கள் மனங்களில் உள்நோக்கிய தன்மையை ஏற்படுத்துகிறது. தாராளமான தன்மை, மற்றவர்களை வரவேற்றல் குறைந்து , எவரையும் அச்சத்துடன் பார்க்கத்துண்டுகிறது. இதையே சில இடதுசாரிகள் யாழ்ப்பாண மையவாதம் என்பார்கள். உண்மையில் இது சூழ்நிலையால் உருவாகிய அச்சமல்லாது வேறொன்றுமில்லை.
தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமான தொடர்புகள் அரசியல் மொழி கலாச்சார ரீதியானவை . ஒரு காலத்தில் காலையில் சென்று இரவு படம் பார்த்துவிட்டுத் திரும்பியதாக பழைய தலைமுறையினர் சொல்லியதை கேட்டிருக்கிறேன் . ஆனால், இரு நாடுகளினதும் சுதந்திரத்தின் பின்னர் இந்த வழக்கம் நின்று விட்டது. அல்லது இரகசியமாக நடந்தது.
சமீபத்தில் பலாலி விமான நிலையத்தை சர்வதேசிய தரத்திற்கு மாற்றியதால் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் ஊடாக பலரும் இலங்கை வரும்போது யாழ்ப்பாணத்தில் புதுவெள்ளம் மனங்களில் பாய்வதுடன் வணிகரீதியாக தொடர்பாடுகளும் ஏற்படும் .
இதுவரை இலங்கைக்கு ஏராளமான உல்லாசப்பிரயாணிகள் வந்தாலும், அவர்கள் எவரும் வடபகுதிக்கு வருவதில்லை . இதனால் இலங்கை அரசால் மட்டுமல்ல உல்லாசப்பிரயாணிகளால் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாகவும் வடபகுதி மாறியிருந்தது. .
யாழ்ப்பாணம் மனிதவளம் மட்டுமே உள்ள பிரதேசம். உல்லாசப்பிரயாணிகளின் வருகையால் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் போக்குவரத்து கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் வங்கிகள் எனப் புதிய மாற்றங்களும் தோன்றும்.
முப்பது வருடப் போரினால் யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு மட்டுமல்ல, ஆங்கில மொழி அறிவும் குறைந்துள்ளது. உலகத்தின் வர்த்தக மொழியை நாங்கள் புறக்கணிக்க முடியாது.
இதுவரையும் இந்தியாவுக்குத் தலயாத்திரையோ உல்லாசப்பிரயாணமோ போவதற்கு கொழுப்பிற்குச் சென்று அங்கு தங்கி, அதிக பணத்தைச் செலவு செய்து போக வேண்டும். அந்த மாதிரியான தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகிறது .
உலகம் சுருங்கிவிடுகிறது எனச் சொல்லியபடி இருந்தாலும், இப்படியான போக்குவரத்து தொடர்புகளே சொற்களை நிஜமாக்குகின்றன.
மக்கள் திலகம் எம்ஜி. ராமச்சந்திரன் அறுபதுகளில் சரோஜாதேவியுடன் சினிமா நடிகராக கொழும்பூடாக ஒரு புயல் நாளில் யாழ்ப்பாணம் வந்தது நினைவில் உள்ளது. அவர் நடித்த படங்களைப் பார்க்க எனது அண்ணன், மச்சான் இருவரும் கட்டுமரத்தில் கடலில் வீட்டுக்குத் தெரியாமல் சென்றதும் அதற்காக வீட்டிலிருந்தவர்கள் அவர்களைத் திட்டித்தீர்த்ததும் அவ்வேளையில் பாலகனாக இருந்த எனக்குத் தெரியும்.
என் போன்ற தமிழர்கள் எப்பொழுதும் குறைபடுவது இதுவரையும் எந்தவொரு தமிழக முதல்வரும் இலங்கைத் தமிழரை போருக்கு முன்போ பின்போ பார்க்க வரவில்லை . இந்த மனக்குறையைத் திருச்சியிலிருந்த பலாலி வரும் விமானசேவை தீர்க்குமா? ?
நன்றி -புதியதலைமுறை
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்