ஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் .
அப்போது மீண்டும் தொலைக்காட்சி திரையைப் பார்த்தபோது 8200 அடிகள் எனக்காட்டியது . ஏன் விமானம் தரையிறங்கவில்லை. அந்தரத்தில் நிற்கிறதா? என யோசித்தபடியே இருந்தபோது விமானத்தின் கதவுகள் திறக்கப்படும் என அறிவிப்பு வந்தது. என்னைச் சுதாரித்துக்கொண்டு இறங்கினேன்.
ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோ. அந்திய மலையின் முகட்டில் உள்ளது. உலகத்தின் அதி உயர்வான நாட்டின் தலைநகரம். இது பூமத்திய ரேகையில் உள்ளது. இந்த இடம் 1934 இல் ஸ்பானியர்களால் இன்கா அரசிடமிருந்து வெல்லப்பட்டது. தற்போது நாம் காணும் இந்த நகரம் இன்கா மன்னர்களால் கட்டப்பட்ட நகரின் சிதைவுகளின்மேல் ஸ்பானியர்களால் உருவாக்கப்பட்டது .
இன்கா அரசை 15 ஆம் நூற்றாண்டிலே கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு அதாவது கொலம்பசுக்கு முன்பு எனச் சொல்லப்படும் காலத்தில் பல பூர்வ குடிகள் 10000 வருடங்களாகத் இப்பகுதியில் தொடர்ச்சியாக வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது
கொலம்பியாவில் உள்ள கற்றகேனா என்ற ஸ்பானியர்களால் கட்டப்பட்ட நகரைப் பார்த்தேன் . அங்கும் 400 வருடங்களுக்கு மேலான நகர அமைப்பை அப்படியே பாதுகாக்கிறார்கள். அதைப்பார்த்த எனக்கு இம்முறை கனடா சென்றபோது கீற்றோ நகரத்தைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. என்னோடு நண்பன் ஒருவன் வருவதற்குத் தயார் என்று சொல்லிவிட்டு கடைசியில் காலை வாரிவிட்டான். ஆனாலும் முன்வைத்த காலை பின்வைக்காது தனியாகப் புறப்பட்டேன்
மொழி தெரியாத நாட்டில் நடு இரவில் போய் இறங்கியபோது மெதுவான பதட்டமிருந்தது. ஆனால் குடிவரவு அதிகாரிகளது சிரித்த முகத்தை பார்த்தவுடன் அந்தப் பதட்டம் போய்விட்டது .
இதுவரை சிம்பாப்வே கிழக்குத் தீமோர் என நான் பயணித்த இடங்களில் புழக்கத்தில் இருந்த அமரிக்கா டொலரே இங்கும் பாவனையில் உள்ள பணமாகும்.
கீற்றோ தேவாலயங்கள் பல அமைந்த நகரம். இந்த தேவாலயங்கள் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளனன.
முதல் நாளிலே ஒழுங்கு பண்ணியிருந்த வழிகாட்டியுடன் சென்ற தேவாலயம் (Basilica del Voto Nacional), தென் அமெரிக்காவிலே மிகப்பிரமாணடமானது. அழகான வளைவுகளையும், வண்ண கண்ணாடிகளையும் கொண்டது. உயரத்தில் ஏறிப்பார்ககும்போது அதன் வளைவின் அழகை ரசிக்கமுடியும். வளைந்தபடி செல்லும் ஏணிகளில் ஏறுவது கொஞ்சம் கடினமானது. ஆனால் கஸ்டப்பட்டு ஏறியபின் அங்கு நின்று முழு தேவாலயத்தையும் பார்க்கலாம். இந்த தேவாலயத்தைக் கட்டியவர்கள் பூரணமாக்காமல் விட்டார்கள். இதைகட்டி முடித்தால் உலகம் அழியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது
சிறகுகள் கொண்ட மேரியின் சிலையொன்று கீற்றோ. மலைக்குன்றில் உள்ளது. பல இடங்களில் மலைகளில் இயேசுநாதரைப் பார்த்த எனக்கு வித்தியாசமாக இருந்தது.
கத்தோலிக்க மதத்தில் உள்ள கன்னிமேரி, இங்கு நமது காளிபோல் வெள்ளி சங்கிலி கொண்டு சாத்தானை போரிட்டுத் தோற்கடித்துவிட்டு தனது காலில் போட்டு மிதித்தபடி நிற்கிறாள். கன்னிமேரியின் உருவத்தில் ஒரு நடனத் தாரகையின் லாவகம், நளினம் தெரிகிறது. 12 நட்சத்திரங்களைத் தனது கிரீடமாக அணிந்து வெள்ளியில் செய்த சிறகுகள் கொண்டு தேவதையாகக் காட்சியளித்தாள் . தாய்மை தெரியச் சாந்தமாகத் தெரியும் வழக்கமான கன்னிமேரியின் சிலைகளுக்கு முற்றும் வேறாக இருந்தது.
இந்துமதம் மற்றும் கத்தோலிக்க மதத்தில் சிற்பிகள், ஓவியர்கள் , இலக்கியவாதிகளால் கற்பனையான கதைகளும் , வடிவங்களும், மற்றும் ஓவியங்களும் மதநம்பிக்கைக்கு அப்பால் மனித வாழ்வுக்கு வளமூட்டுகின்றன . இந்த இரண்டு மதங்களும் இல்லாதபோது வாழ்வில் எத்தனை விடயங்களை இழந்திருப்போம் .கத்தோலிக்க மதமில்லாத விதத்தில் இலக்கியத்தில் மாயயதார்த்தம் என்ற கதை சொல்லல் வந்திராது. இந்து மதமில்லாதபோது மிருகங்களைக் கொண்ட கதைகளே உலகத்தில் இருந்திராது. இந்த கதைகளற்ற குழந்தைகளில் வாழ்வு எப்படி வறுமையாக இருக்கும் என நினைக்க வைத்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்