வாசிப்பு அனுபவம்
நடேசன்
கடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விளைவாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப்
படித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது.
கொழும்பான் சேமது நானா இதில் முக்கியமான பாத்திரம் . கொழும்பில் இருந்து பல வருட காலம் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பியவர். ஏழையாக கொழும்புக்கு தோணியில் சென்று மீண்டும் ஏழையாக ஊர் திரும்புகிறார்.
அவரது குடும்பத்தினரே முக்கிய பாத்திரங்கள். அவரது மகன் அலி, கிறீஸ்த்தவப்பெண்ணின் கோழியைத் திருடியதுதான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி .
“ எப்படி ஒரு கோழித் திருட்டை மிகச் சிக்கலான மத மோதலாக்குவது என நீங்கள் கேட்கலாம்…?
கோழியை மட்டும் திருடியது வலுவான காரணமல்ல என்பதால் அந்த கிறீஸ்தவப் பெண்ணின் முலையைத் திருகியதாக வதந்தி கொழுத்தி வைக்கப்படுகிறது.
கிறீஸ்துவப் பெண்ணான லில்லியைக் காதலிக்கும் புஸ்பாபஸ் என்பவன் ஒரு முஸ்லீம் சண்டியனின் தம்பியை போட்டு உதைத்துவிடுகிறான்.
பிறகென்ன…? கிறீஸ்தவச் சண்டியர்களுக்கு இரத்தம் கொதிக்கிறது. ஹோமரின் இலியட்டில் ஹெலனுக்காக தொடங்கிய போராகியது.
கலவரம் சூடு பிடித்து, பலர் இரண்டு பக்கமும் இறக்கிறார்கள் . அந்தத் தருணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் அப்பாவிப் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குகிறார்கள். இந்த நேரத்தில் காவலுக்கு வந்த பொலிஸ்க்காரரும் தனது பங்கிற்கு ஒரு அப்பாவிச் சிறு பெண்ணிடம் தனது உடற்பசியைத் தீர்த்துக் கொள்ளுகிறார் . வள்ளங்கள்- வலைகள் -வீடுகள் எரிக்கப்பட்டு மக்கள் நடுத்தெருவிற்கு வருகின்றனர்
இந்தக்கலவரங்கள் நடக்குமெனத் தெரிந்த முஸ்லீம் பணக்காரர்கள், தங்களது குடும்பங்களுடன் நகரங்களுக்கு சென்று நட்சத்திர விடுதிகளில் தங்கி விடுகிறார்கள். ஏழை இஸ்லாமிய மக்கள் கிறீஸ்தவர்களுக்கு எதிராக ஜிகாத் என்று புனிதப் போரில் ஈடுபடுகிறார்கள்
இங்கும் கோழி அலி மற்றும் புஸ்பாஸ் என்ற ஆண்பாத்திரங்கள் அழகாக பின்னப்படுகின்றன. இந்த நாவலில் சிகரமாக நிற்பது உரையாடல்களே . தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு கதாபாத்திரங்களால் சொல்லப்பட்ட நாவல் என்றேன். இங்கு கூனன்தோப்பு உடையாடல்களால் சொல்லப்படுகிறது
கதாசிரியர் சொல்வதை விட, பாத்திரங்கள் தங்கள் மொழிகளால் உரையாடும்போது கதை மனதில் நிற்கும். அதற்காகத்தான் ஆரம்பகால ஆங்கிலேய ஜெர்மனிய நாவல்களில் (Pamela By Pamela by Samuel Richardson , க The Sorrows of Young Werthe b Johann Wolfgang von Goethers கடிதங்களால் கதை சொன்னார்கள் .
தோப்பில் முகம்மது மீரானின் உரையாடல்கள் வட்டார மொழியுடன் அரேபிய சொற்களும் கலந்துள்ளதால் இதனைக் கூர்மையாக அவதானித்து படிக்கவேண்டும்.
கிறீஸ்தவர்களது தளபதியாக கலவரத்தில் ஈடுபடும் புஸ்பாஸ் என்பவன் காதர் என்ற முதலாளிக்கும் கிறீஸ்த்தவப் பெண்ணுக்கும் பிறந்தவன் . அவனை துலுக்கனுக்குப் பிறந்தவனாக கிறீஸ்த்தவர்கள் ஏசும்போது தனது தகப்பனை கொலை செய்யவும் அவன் நினைக்கிறான்.
அவனது தாயைப்பார்த்து “ மேகரயில உள்ளவனுக்கு இஞ்ச உள்ள பம்பளிஞ் வளுவோ இடம் கொடுத்ததனாலேதானே அவனுக இஞ்ச வரனுவோ “ என லில்லியின் தாய் கூறினாள்.
ஊரிலிருந்து சென்று நகரத்தில் தங்கும் ஹாஜியார் முதலாளிக்கு இரவாகியதும் சினிமா பார்க்க ஆசை . மனைவி மகளோடு படத்திற்குப் போகும்போது மகளிடம், “ முட்டாக்கு போடவேண்டாம் துலுக்கச்சீனு சொல்லுவாங்கோ “ வாப்பா மகளை விலக்கினார்.
அவர்கள் பார்த்த அந்தப்படம், 71 ஆம் வருடத்தில் வங்காள அகதிகள் உயிருக்காக ஓடிவருவதையும் அதில் குழந்தைகள் இறப்பதையும் மக்கள் வயோதிபர்களை முதுகில் ஏற்றியபடி செல்வதையும் அகதிகள் தப்பிக்கும்போது துப்பாக்கி குண்டடிபட்டு இறப்பதுமான அவலக் காட்சிகளைக் கொண்டது
“ காக்கா நம்மட ஊரிலும் இப்படித்தான் “ என சுலைமான் ஹாஜியாரிடம் காண்பித்தான்.
“அனுபவிக்கட்டும்” என்றார் ஹாஜியார்.
இப்படியாக பல இடங்களில் போலிகளையும் பொய்மைகளையும் தோலுரித்த வண்ணம் உரையாடல்கள் செல்கின்றன.
குடியேற்றம்
தோப்பில் முகம்மது மீரானின் கடைசி நாவல். காலச்சுவடு பதிப்பித்தது . இது மற்றய இவரது நாவல்களில் இருந்து மட்டுமல்ல, நாவல் வடிவத்திலிருந்தும் வேறுபடுகிறது. ஆங்கிலத்தில் உள்ள Frame Narrative வகையைச் சேர்ந்தது. பல கதைகள் இங்கு சொல்லப்பட்டு நாவலாகிறது.
ஒரு காலத்தில் கடல் வாணிபத்தில் கொடி கட்டிப்பறந்த மரைக்காயர் பிற்காலத்தில், அதே வியாபாரத்தில் ஈடுபட்ட பறங்கியரால் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், மரைக்காயர்கள் அவர்களது தலைவனான சின்னத்தம்பி மரைக்காயரது தலைமையில் விட்டுக் கொடுக்காமல் வீரப்போர் செய்கிறார்கள். காட்டிக் கொடுப்பும் துரோகமும் சேர்ந்து மரைக்காயர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
தலைவர்கள் அழிந்ததும் சாதாரண மக்கள் இதுவரையும் வாழ்ந்த கடற்கரைப் பிரதேசத்தை விட்டு விலகி உயிர் தப்பிவாழ உள்நிலப்பகுதிகளுக்கு வரும் போது, அவர்களுக்கு மிகவும் தாழ்வான எதற்கும் பிரயோசனமற்ற காட்டுப்பகுதியில் ஓடக்கரை என்ற பகுதியில் இடம் கிடைக்கிறது. அங்கு குடிசைகளில் வாழ்கிறார்கள்.
இவர்களது நிலத்திற்கு மேட்டுப்பகுதியில் வாழும் இராவுத்தர்கள், மரைக்காயர்களிடம் வாடகை வசூலிப்பதோடு இவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக நடத்துகிறார்கள் .
இப்படியான குடியேற்றத்தில் வாழ்பவர்களது கதைளே இங்கு நாவலாகிறது.
பொதுவாக இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரே மாதிரியான மார்க்கமாக நமக்குத் தெரிகிறபோதும் அவர்களிடையே உள்ள பணமுள்ளவன்
பணமற்றவன் இராவுத்தன்- மரைக்காயன் எனப்பல பேதங்கள்.
பல கதைகளை உள்ளடக்கிய நாவலில் மய்யத்தை ஏற்றும் சந்தூக் என்ற வண்டியை ஓட்டும் மைதீன் பாத்திரம் மிகவும் காத்திரமானது . மிகவும் ஏழ்மையானவன். , சமூகத்தில் ஒரு மய்யம் விழுந்தாலே அவன் வீட்டில் அடுப்பெரியும் . அவன் அதில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடித்துவிடுவான். மையம் எடுப்பதால் அவனது வண்டியில் மற்றவர்கள் எதுவித பொருட்களையும் ஏற்றவிடமாட்டார்கள் . ஒரு முறை முதலிரவுத் தம்பதிகளுக்கு படுப்பதற்கு மெத்தையை ஏற்றியற்காக அந்த மெத்தையை எரிக்கச் சொல்லி விட்டார்கள் .
வீரம் விளைந்த பெரியதம்பி மரைக்காயரின் வம்சமான மைதீன், அவமானத்தால் இந்த மையம் தள்ளும் வேலை வேணாம் என கடலில் மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறான் . ஆனால், அவனால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியவில்லை . காரணம் பறங்கியரால் கொலை செய்யப்பட்ட மூதாதையரின் இரத்தவாடை கடலில் வருவதால் மீண்டும் மய்யத்தை தள்ள வந்துவிட்டான்.
இதுபோல் தன் மகளை அடித்த கணவனை கண்டதும் செய்யக்கா மருமகனை அடித்துவிட்டார் இதனால் அவமானமடைந்தவன் தூக்குப்போட்டு இறந்துவிட்டான். அவனது மய்யத்தை புதைக்கப் பணமில்லாததால் அவனது உடல் மூன்று நாட்களில் அழுகிவிடுறது. இறுதியில் புதைக்கப்பட்டாலும் பலரது மரணங்களுக்கு அவனது ஆவி காரணமாகப் பேசப்படுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதை, விறகு வெட்டி வேலனது கதை . முஸ்லீம் குமர் பல காலமாக கரையேறாது இருப்பதால் வேற்று மதத்தவனை சுன்னத்துப்பண்ணி நிக்கா செய்துவைக்க தாயும் கல்யாணத் தரகனும் திட்டம் போடுகிறார்கள். வேலனுக்கு சுன்னத்து சடங்கு நடந்து ஏழு நாட்கள் புண் ஆறியபின் கல்யாணத்திற்கு தயாராகிய அவன் காபீர் என பெண் மறுத்துவிடுகிறாள் . ஆனால் வேலன் கல்யாணத்திற்காக தரகனின் முன்னும் பின்னும் அலைகிறான்.
வீணாக அப்பாவி இளைஞர்கள் பணக்காரர்களால் ஐ சிஸ் (ISIS) ஆக இனம் காணப்பட்டு துன்புறுத்தப்படுவதும் இங்கு வருகிறது . முற்காலத்தின் பிரச்சினைகளும் தற்கால பிரச்சினைகளும் ஒன்றாகி – கிட்டத்தட்ட ஐந்து நுற்றாண்டுகள் வாழ்ந்த பாத்திரங்கள் மூலமாக இணைக்கப்பட்டு கதையாகிறது.
மிகவும் அடிமட்டத்து மக்களது கதை அழகாக சொல்லப்படுகிறது.
—0—
Thanks!