மதிப்பீடு : சி. செல்வராசா
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் 1972-76 வரை பேராதனைப்பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன். அதன் பின் அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987ல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே. நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து இன்பம் பெறவில்லை. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர் நொய்யல் நடேசனின் “கானல் தேசம்” பற்றி அறிந்து அதை ஆவலுடன் வாங்கி வாசித்தேன். இலங்கை அரசியலுடன் அதுவும் ஆயுதப்போராட்ட அரசியலுடன் இணைந்த கதை என்பதால் ஆரவத்துடன் வாசிக்கத்தொடங்கினேன். பல்வேறு உலகவிளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் குழப்பங்களுக்கு மத்தியில் வேகமாக வாசித்து முடித்தேன். தன்மைக்குத் திருப்தியாக இருந்தது . “இந்த மிருக வைத்தியரா இப்படி எழுதியிருக்கிறார்” என்று வியந்து போனேன். சண்டைக் காலத்தில் ஊரில் சீவிக்காவிட்டாலும் ஊரில் இருந்தவர்போல் இடங்கள், நிகழ்வுகள், போராளிகள் போராடிய இடங்கள், அவர்கள் நடத்திய வதைமுகாம்கள், சித்திரவதைகள் மேலும் வெளிநாடுகளில் இயக்கங்களின் ஆதரவாளர்கள்/ அடியாட்கள் செய்த திருகுதாளங்கள் , பணமோசடிகள் என்பவற்றோடு அரசாங்கங்களின் உளவு வேலைகள் எனப் பல்வேறு தகவல்களை நாவலினூடாக அவர்சொல்லும்விதம் அதில் நாவனின் கதையோட்டம் இரசனை குழம்பிவிடாமல் பார்த்துக்கொண்டு கதையை நகர்த்திச்செல்லும் உத்தி என்பன மிகவும் சிறப்பாக அமைந்து ஒரு நல்ல நாவலை , அதுவும் நம் வாழ்வோடு இரண்டறக்கலந்த ஒரு பக்கத்தைப் பின்நோக்கிப் புரட்டிப்பார்க்க நடேசனின் “கானல் தேசம்” எனக்கு உதவியது. “எல்லாப் பொடியளும் எந்த இயக்கம் என்று பாராமல் எமக்கு விடுதலை பெற்றுத்தானே போனவ்கள். அவங்களில ஒருபகுதியை இன்னொருபகுதி சுட்டுத்தள்ளி அழித்தது எந்தவித்த்திலும் நியாயமான செயல் அல்ல, இதுவே எம் இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும்” என்பது என் கருத்து.
நடேசனின் “கானல் தேசம்” நாவலை வாசித்து முடித்ததும் அவரது மற்றொரு நாவலான “உனையே மயல் கொண்டு” என்ற நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு ஏற்பட்ட பல நிதர்சமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.
கதையில் வரும் சந்திரன்- மஞ்சுளா- ஷோபா-ஜூலியா, இராசம்மா-இராசநாயத்தார்- போன்ற கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள். அவர்களது எண்ணங்களும், போக்குகளும், செயற்பாடுகளும், பிரச்சனைகளும், மனப்போராட்டங்களும், மன அழுத்தங்களும்இவற்றுக்கிடையே அவர்களின் இல்லறவாழ்வும் இதற்கு அடிப்படையான உடல்உறவு இன்பமும் அதன் பிறழ்வும் எவ்வாறு மனித வாழ்வினை இயக்கிச்செல்கின்றன அல்லது இடறிவிழுத்துகின்றன என்பதை நொய்யல் நடேசன் நல்ல ஒரு நாவலாக எமக்குத் தந்துள்ளார். “வாழ்க்கை என்பது சந்தோசமாக வாழ்வதற்கே! ஆனால் அதிகமானோருக்கு ஏன்எல்லோருக்குமே அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்வு இன்பமாக சந்தோசமாக அமைவதில்லை” என்றே நான் கருதுகின்றேன். இதனால் அவரவர் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்திகள் என்பவற்றுக்கு வடிகால் தேடி ஒவ்வொருவரும் தமக்குத்தெரிந்தவகையில் செயற்படுவதே மனித இயல்பு. இதே இந்தக் கதையில் வரும் சந்திரனும் செய்ய முயற்சிக்கின்றான். இது இந்த நாவல் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு வாசகனின் மனவோட்டம். அன்புடன் , சிட்னியிலிருந்து சி. செல்வராசா
மறுமொழியொன்றை இடுங்கள்