இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த
இவ்விழா மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது.
பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
நூறுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மறைந்தவர்கள் பற்றிய குறிப்புகளும் படங்களின் கீழே பதிவுசெய்யப்பட்டிருந்தன.
மண்பத்தின் உள்ளரங்கத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள், சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் – திருமதி வஜ்னா ரஃபீக் அவர்களின் வரவேற்புரையுடனும் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியனின் தொடக்கவுரையுடனும் ஆரம்பமாகியது.
அண்மையில் தமிழகத்தில் மறைந்த கலைஞரும் எழுத்தாளருமான “கூத்துப்பட்டறை” ந. முத்துசாமி – இதழாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஒளிப்படக்கலைஞருமான “யுகமாயினி” சித்தன், இலங்கையில் மறைந்த எழுத்தாளர்கள் கெக்கிராவ ஸஹானா மற்றும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஆகியோரும் நினைவுகூரப்பட்டனர். இவர்கள் தொடர்பான இரங்கலுரைகளை மருத்துவர் நடேசன், சட்டத்தரணி ( திருமதி) மரியம் நளிமுடீன் மற்றும் முருகபூபதி ஆகியோர் நிகழ்த்தினர்.
கவிஞர் சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் நடைபெறும் கவிஞர்கள் அரங்கில் கல்லோடைக்கரன் , முஜிபுர் ரஹ்மான், பொன்னரசு சிங்காரம் , அறவேந்தன், ஶ்ரீ கௌரிசங்கர், நளிமுடீன் ஆகியோர் பங்குபற்றினர்..
மருத்துவர் நடேசன் தலைமையில் நடைபெற்ற நாவல் இலக்கியக்கருத்தரங்கில், சாந்தி சிவக்குமார் , கலாதேவி பால சண்முகன், தெய்வீகன் ஆகியோர் ஈழத்து – தமிழக நாவல்கள் குறித்தும் புகலிட நாவல்கள் பற்றியும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிகளையடுத்து கண்ணன் விக்னேஸ்வரனின் மெல்பன் ஆலாபணா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அரங்கங்களில் விழா நிகழ்ச்சிகளை திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கர், சங்கர் தொகுத்து அறிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்