இரயில்ப்பயணம் எனக்குப் பிடித்தது யாழ்ப்பாணம்- கொழும்பு அதன்பின் கண்டி மலையகம் என மாணவப் பருவத்திலும் சென்னை-டெல்கி பம்பாய்- திருவனந்தபுரம் என தொடந்து பின்பு ஐரோப்பாவின் இரயில்களில் நாடுகள் ஊடாகப் பியாணம் செய்திருக்கிறேன். இப்பொழுது நான் எழுதும் இந்தப் பிரயாணம் மிகவும் வித்தியாசமானது
இன்கா அரச பரம்பரையின் தலைநகரான குஸ்கோ அவர்களது தொப்பிள் எனச் சொல்வார்கள். ஆனால் இன்காக்களின் வரலாறு தொடங்கிய இடம் புனாவுக்கு அருகில் உள்ள வாவி. ((Lake Titicaca) இந்த வாவியில் இருந்தே இன்காக்களின் ஆரம்ப மூதாதையர் தோன்றுகிறார்கள். ஆரம்ப மூதாதையினர் விவிலியத்தில் மண்ணில் இருந்து உருவாகுவாகவது போல் இங்கும் மண்ணில் இருந்து சூரியக்கடவுளால் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டனர் என்பது அவர்களது நம்பிக்கை. ஆண்கள் விவசாயத்திலும் பெண்கள் ஆடைகள் நெய்வதிலும் நிபுணர்களாக மற்றய மனிதர்களுக்கு கற்பிக்க அங்கிருந்து அனுப்பப்பட்டதாக அவர்களது ஐதீகம்.
உலகத்தில் உயரமான இடத்தில் உள்ள தித்திக்கா வாவி அந்தீஸ் மலையின்மீது படிந்த நீரால் உருவாகியது. ஆழமானதால் கப்பல் போக்குவரத்து நடக்கிறது. ரிற்ரிகாகா வாவி பொலிவியாவையும் பெருவையும் பிரிப்பது மட்டுமல்ல தென்னமரிக்கவின் மனித வரலாற்று தொடக்கப் புள்ளியாகக் பார்க்கப்படுகிறது.
குஸ்கோவில் இருந்து புனே நகருக்கு அண்டியன் எக்புளோரர் என்ற பெரு நாட்டின் ரயிலில் காலையில் புறப்பட்டோம். புனே 390 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த நகரம் 3800 மீட்டர் உயரத்தில் உள்ள அந்தீஸ் மலையில் உள்ளது. குஸ்கோவிலும் 500 மீட்டர் உயரமானது. இந்த புனோ நகரத்தை அடைவதற்கு 4000 மீட்டர்கள் உயரமான எக்காலத்திலும் நிரந்தரமாக உறைபனிபடிந்த அந்தீஸ் மலையை இந்த இரயில் கடந்து செல்லும்.
நீலமும் மஞ்சளுமான இரயில் பெட்டிகளிள் இருக்கைகள் வசதியானவை.இங்கு உணவு மற்றும் சகல வசதி செய்வதற்கும் குரல் கொடுத்தபோது வருவதற்கு கறுப்பு யூனிபோம் அணிந்த பரிசாரகர்கள் இருந்தார்கள். கண்ணாடி யன்னல்களுடன் வசதியாக வெளியே பார்க்க முடியும். இரயில் பெட்டிகள் சூடாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. கடைசியில் அமைந்திருந்த இரு பெட்டிகளில் ஒன்று பானங்களை அருந்தியபடி உணவருந்துவதற்கான சிற்றுண்டிசாலையாகவும மற்யது இருந்தபடியே வெளியே இயற்கையை இரசிப்பதற்காக கண்ணடிகளை வைத்து உருவாக்கிய வசதிகளை கொண்டது
இடங்களைப் பார்பதற்கு பிரயாணம் செய்வோம் ஆனால் பிரயாணமே அனுபமாக மாறுவது மிகவும் சில நேரங்களில்த்தான். முன்பொருமுறை எகிப்திய வரலாற்று நகரங்கள் இடையில் நைல் நதியில் பயணம் செய்தபோது இப்படியான உணர்வு ஏற்பட்டது. அதேபோல் இந்தப் பயணம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது.
குஸ்கோ மற்றும் சாக்கிரட் பள்ளத்தாக்கைக் கடந்ததும் இரயிலின் இரு பக்கத்தில் பிரதேசங்கள் கண்ணிற்கு இனிமைதரும் கிராமப்புறக் காட்சிகளாகியது. நகரங்களை மட்டும் பார்க்கும் உல்லாசப் பிரயாணிகளாக நாங்கள் அமைந்துவிட்டதால் இந்த இரயில்ப் பிரயாணம் கிராமிய காட்சிகளைக் தரிசிக்கும் பாக்கியத்தை உருவாக்கியது.
காளைமாடுகளை ஏரில் பூட்டிவைத்து உழுவதும், செம்மறியாடுகளை சிறுவர்கள் மேய்ப்பதும், வயதானவர்கள் அல்பக்கா இலாமாக்களை வரிசையாக சாய்த்தபடி, செல்வதும் காலை நேரத்துக் காட்சிகளாகியது. பெண்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் உடையணிந்தபடி சுமைகளை தலையில் வைத்தும் குழந்தைகளை தோளில் ஊஞ்சலாக போட்டு காவியபடி செல்வதும் வயற்கரையோரத்தில் செல்வதும் தெரிந்தது. மதியநேரத்தில் ஆண்களும் பெண்களும் புல்லாலான தொப்பிகளை வெப்பத்தைத் தடுக்க அணிந்திருந்தார்கள். இந்தப் பகுதியில் வெக்கை கடற்கரைப்பகுதியிலும் அதிகமானது.
சிறிதும் பெரிதுமான செங்கற்களான வீடுகள் விவசாய நிலங்களுக்கு பக்கத்திலே இருந்தன. வேலை செய்து களைத்தவர்கள் மதியத்தில் வரப்புகளில் இருந்து பலர் ஒன்றாக ஓய்வெடுப்பதையும், உணவுண்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
அந்தீய மலையை அண்டிவாழும் மக்கள் விவசாயத்தில் மிகவும் சிறந்தவர்கள். இவர்கள் மண்ணிற்கேற்ப பயிர் செய்வதும், சுழல்ப்பயிர்கள் செய்வதில் நிபுணர்கள். ஆதிகாலத்தில் இருந்தே நீர்பாசனம், காலநிலை என்பவற்றில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். இயற்கையுரமாக கினிபிக் மற்றும் அல்பக்கா பேன்றவர்களின் கழிவுகளை பாவித்துள்ளார்கள். எமது பொங்கல்போல் அறுவடை நன்றாக இருந்தால் பூமிக்கு நன்றி சொல்லி பாட்டு, நடனம் என பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். எந்த ஒருகாலத்திலும் உணவுப்பஞ்சம ஏற்படாத பிரதேசம் என சொல்கிறர்கள். ஆல்பக்கா லாமா இவர்களது முக்கிய வளர்ப்பு மிருகங்களாகிறது இவற்றின் மாமிசத்துடன் தோல்; சாணி என்பன பல விடயங்களுக்குப் பயன்படுகிறது
உயரமான மலைகளைக் கடந்தபோது அதிக குடிசனமற்ற பிரதேசங்களைக் காணமுடிந்தது அந்தீஸ் மலைகுன்றுகளை ஊடறுத்தும், சுற்றியும் இரயில் செல்வதால் மலைச்சிகரங்கள் தொடர்ச்சியாக வந்தபடி இருந்தது. பல மலைகள் பாரிய கரிய கற்பாறைகளை தலையில் வைத்தபடி இருந்தன. மற்றவை சிறிதும் பெரிதுமான கற்குவியல்களாக எந்த பச்சைப்புல்லற்று, யாரோ தீ வைக்து எரிந்த மலைகளாகத் தோன்றியது. அவற்றிற்கு அப்பால் நீலவானத்தை பின் தள்ளிவிட்டு பனிபடர்ந்த உயர்வான மலைசிகரங்கள் எட்டிப்பார்த்தன..
உயரம் குறைந்த குன்றுகளில் அடிவாரத்தில் சில பற்றைக் காடாக இருந்தன. அவற்றை ஊடறுத்து ஆறுகள், நீரோடைகள் நீளமான பாம்புகளாக பளபளத்தன. பல கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்திற்கு துணையாக ஒரு ஆறு ஓடி வந்தது களைத்த சிறுவனாக தன்வழியே திரும்பியது. ஆற்றின் ஓரங்களில் அவுஸ்திரேலிய யூகலிக்கப்ரஸ் மரங்கள் மட்டும் பாசன் பரேட்டில் வரும் அழகிகள்போல், நெடிதாக வளர்ந்து பச்சை இலைகளுடன் எம்மைப்பாரென பளபளத்தபடி நின்றன. அவற்றின் அருகில் பச்சை நிறமான புதர்த்தாவரங்கள் தங்களை வெட்கத்துடன் ஒதுங்கிக்கொண்டன. மரங்களற்ற பசும்புல் கம்பளமான மலையடிவாரம்.
சரியாக குஸ்கோவிற்கும் புனோவிற்கும் இடையில் உள்ள (La Raya) இடத்தில் இரயில் நின்றது அங்கு ஒரு சந்தையுள்ளது. நான் நினைக்கிறேன் இந்த இரயிலுக்காக மட்டுமே உருவாகியது. ஒரு தேவாலத்தைத் தவிர எதுவும் தெரியவில்லை. ஒரு பக்கம் பள்ளத்தாக்காகவும் மறுபக்கம் பனிமூடிய மலைபகுதியாக இருந்தது. எல்லோரும் இரயிலில் இருந்து இறங்கியபோது நானும் இறங்கி அங்கு எழுப்பப் பட்டிருந்த பலகையைப் பார்த்தேன். அதில் 4331(14,150 ft) மீட்டர் உயரம் எனப் போட்டிருந்தது. நான் இறங்கியதும் மூச்சை இழுத்துப் பார்த்தேன் இங்கு தேவையான அளவு ஒட்சிகன் இருக்கிறதா என்னால் நடக்க முடியுமா என கால்களை வைத்து உறுதி செய்து கொண்டேன். இறங்கிய மற்றவர்கள் சந்தையில் பேரம் பேசத் தொடங்கினார்கள் அல்பக்கா மற்றும் லாமா உரோத்தால் நெய்த பொருட்களும் சீனாவில் இருந்து வந்த எலக்ரோனிக் சாமன்கள் மற்றும் சுவனியர்கள் இருந்தன.
நான் சந்தைப் பக்கம் செல்லாமல் பனி படர்ந்த மலைப்பிரதேசத்தை போட்டோ எடுத்துக் கொண்டுவந்தபோது யாரோ என்னைக் கூர்ந்து பார்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. வானத்து முழு நிலவாக பத்துப் பன்னிண்டு வயதான இளம் சிறுமி என்னைப் பார்த்தாள். அவளது அருகில் அல்பக்கா இருந்தது. அந்த அல்பக்காவை வைத்து யாராவது போட்டோ எடுபார்களோ என்பது அவளது நோக்கமாக இருக்கவேண்டும் ஆனால் இரயிலில் இருந்து இறங்கியவர்கள் சந்தையில் பேரம் பேசவதில் இருந்தார்கள். நான் அவள் அருகில் சென்று உடல்மொழியால் அனுமதி கேட்டுவிட்டு ஓரு டாலரை கொடுத்துவிட்டு போட்டோ எடுத்ததும் அவளது முகம் மலரந்தது . எனது மனைவியையும் இழுத்து வந்து இன்னொருமுறை போட்டோ எடுததுவிட்டு மீண்டுமொரு டாலரைக் கொடுத்தேன்
பதினைந்து நிமிடத் தரிப்பின் பின்பாக இரயில் புறப்பட்டது.
இரயிலில் சாப்பாட்டின்போது மீன் சாப்பாடு கேட்டேன். இங்கு ரவுட் அல்லது சமன் போன்ற ஆற்றில் வளர்க்கும் மீன்தான் கிடைக்கும். ரவுட் மீனுடன் வெந்த சிறிய உருளைக்கிழங்குகள் பரிமாறப்பட்டன. பெருவில் எல்லாவற்றோடும் உருளைக்கிழங்கு பரிமாறப்படும் இந்த இரயிலும் சகல மதுபானத்தையும் தவிர்த்தேன். ஒரு பியர் குடித்தால் மூன்று பியரின் வேலையைக் காட்டும். அத்துடன் உடலில் உள்ள நீரை குறைத்துவிடும். ஏற்கனவே மிக குறைந்த ஒட்சிசனில் இருப்பதால் இப்படியான இடங்களில் மதுவோ, உடற்பயிற்சியோ தவிர்க்கவேண்டும்.
உணவின் பின்பாக கடைசி பெட்டியில் நான் வெளிகாட்சிகளைப பார்த்துக் கொண்டிருந்தபோது பலர் எங்களோடு நின்றனர் எங்களோடு வந்தவர் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்கள். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் தங்களது ஊர் விடயங்களை கலகலப்பாக பேசிக்கொணடிருந்போது நான் வெளியே பார்த்துக் கொண்ருந்தேன்.
ஒரு மெலிந்த உடலுடன் வெண்ணிற ஆடையணிந்த 50 வயதான ஆங்கிலப்பெண் கடைசிப் பெட்டியில் என்னுடன் அருகில் நின்று வெளிப்புறக்காட்சிகளைப் படமெடுத்தபடியிருந்தார் . இருவரும் ஒருவருக்கொருவர் இடங்களை படமெடுப்பதற்கேற்றவாறு மாறிக்கொள்வோம். அப்படி செய்யும்போது அந்தப்பெண் தனது மெல்லிய உதடுகளை அதிகம் பிரிக்காமல் புன்னகை செய்வார். அவரது கணவர் எதிரில் சீட்டில் இருநதார் அவர் மீசையும் நரைத்த மயிரும் அவரை இளைப்பாறிய இராணுவவீரர்போல் காட்டியது.
சிறிது நேரத்தில் கமராவை வைத்து படம் எடுத்த பெண் முகம் வெளியபடி கணவனது பக்கத்தில் போய் இருந்தார். நான் அவரைப் பார்த்தது ‘களைத்துப்போனீர்களா?’ என ஒரு வார்த்தை கேட்டபோது பதில் பேசாது அரைகுறையாக சிரித்தார்.
சிரிப்பதிலும் வார்த்தைகளிலும் சிக்கனமான பெண்ணோ என நினைத்தேன்
சில நிமிட நேரத்தில் தலையைப் பிடித்தபடி, அந்தப் பெண் கணவரது மடியில் தலை வைத்து அந்த பெஞ்சில் படுத்தார்
நான் அருகில் சென்று ‘என்ன பிரச்சனை?’
‘எனது மனைவிக்கு மைக்கிறேன் வருவது வழக்கம். இப்பொழுதும் அது வந்துவிட்டது’ என்றார் அந்தக் கணவர்.
ஏதோ எதிர்பார்த்தது நடந்துவிட்டது. சாதாரணமானவிடயம் என்பதுபோல் அவரது குரல் இருந்தது.
‘நான் அப்படி நினைக்கவில்லை. உங்கள் மனைவியின் முகம் வெளிறியபடி இருப்பதால் ஒட்சிசன் பற்றாக்குறையால் வந்த தலையிடிபோல் இருக்கிறது. தற்பொழுது நாங்கள் 4000 மீட்டர்கள் உயரத்தில் பிரயாணம் செய்கிறோம். இந்த இரயிலில் ஓட்சிசன் சிலிண்டர் உள்ளது. எதற்கும் நான் ஒட்சிசன் சிலிண்டருக்கு சொல்லிவிடுகிறேன் அத்துடன் எனது மனைவி ஒரு டாக்டர். அவரைக் அழைத்து வருகிறேன் என்று அவரது பதிலுக்கு காத்திராமல் இரண்டையும் செய்தேன்.
நான் ஒரு மிருகவைத்தியர் எனக்கு இதைப் பற்றித் தெரியும் என்று சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என நினைத்து மனைவியை அறிமுகப்படுத்தினேன். எந்த உபகரணமும் இல்லாமல் தனது வைத்திய வேலைகளை செய்வதற்கு எனது மனைவி சியாமளா தயக்கம் காட்டுவதும் வழக்கம். சில வருடங்கள் முன்பு அவுஸ்திரேலயாவில் இருந்து சிங்கப்பூருக்கு நாங்கள் பிரயாணம் செய்த விமானத்தில் ஒருவர் மயங்கி விழுந்தார் யாராவது டாக்டர் இருக்கிறார்களா என ஒலிபெருக்கியில் கதற நான் எனது மனைவியை இழுத்துவிட்டேன். நல்லவேளையாக ஒரு நேர்ஸ் ஏற்கனவே முதல் உதவியை தொடங்கியதால் அந்த நேர்சுக்கு உதவுது மடடுமே சியாமளாவின் வேலையாக இருந்தது.
சியாமளா வந்து பார்த்துவிட்டு நான் ஏற்கனவே சொன்னதை வலியுறுத்தினார். பரிசாரகர் ஒட்சிசன் சிலிண்டரை கொண்டுவந்து என்னிடம் தந்தார். சிலிண்டரை திறந்து ஒட்சிசன் மாஸ்க்கை பெண்ணின் முகத்தில் போட்டு அவரது கணவரை மாஸ்கை சரியாக அவரது மனைவியன் முகத்தில் பொருத்துப்படி கொடுத்தேன். அவரும் நான் சொன்னபடி செய்தார். நான் மீண்டும் படமெடுக்கப் போனாலும் அந்தப் பெண்ணைக் கவனித்தபடி நின்றேன்
ஐந்து நிமிடத்தில் அந்த மெல்லிய உதடுகளில் வெளிறல் நிறம் தொலைந்து சிவப்பு நிறத்தில் புன்னகை வந்தது. கொக்கோ தேநீரும் வந்தது. அதையும் கொடுத்தேன்
அதன் பின்பு மூன்று தடவைகள் எம்மைத் தேடிவந்து நன்றி சொன்னார்கள், அந்த தம்பதிகள்.
ஓட்சிசன் பற்றாக்குறையால் தலையிடி வாந்தி என்பன வருவதுண்டு . இதற்காகவே புனே என்ற இந்த நகரத்திற்கு நேரடியாக விமானத்தில போகவேண்டாம் என எச்சரிப்பார்கள். இரயிலில் போகுமபோது படிப்படியாக உடல் ஓரளவு தயார்ப்படுத்திக்கொள்ளும். பெரு, பொலிவியாவில் உதைப்பந்தாட்டப் போட்டிக்கு செல்ல மற்றய நாட்டு அணிகள் தவிர்க்கும். இல்லையெனில் பலநாட்கள் முன்பாக சென்று உடலைத் தயார்படுத்தவேண்டும்.
நாங்கள் புனாவை நெருங்கியபோது மாலையாகியது அந்த இரயிலிலே சூரியனது அஸ்தமனத்தை பார்க்க கூடியதாக இருந்தது. நாங்கள் நினைத்ததைவிட புனா பெரிய நகரம் என்பதும் புரிந்தது. இரயில்ப்பாதையோரத்தில் மிகவும் அருகாமையில் சிற்றுண்டிகடையில் இருந்து இரும்புக்கடை, பாத்திரக்கடை என பலவற்றை வைத்திருந்தார்கள் ரெயில்வேயின் தண்டவாளத்தற்க்கு இடையில் பல புத்தகங்கள் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனைக்காக பரப்பியிருந்தது.அங்கு இரயில் மிகவும் மெதுவாக சென்றது.
இப்படியாக வியாபாரம் செய்வதை எப்படி அனுமதிக்கிறாரகள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
தித்திகா வாவிக்கரையில் அமைந்திருந்த ஹோட்டேலுக்கு சென்றபோது இரவாகிவிட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்