உலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது.
ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது.
ரஸ்சியாவில் விவசாய உற்பத்தி 1930 இல் இருந்து கூட்டுப் பண்ணைகளாக 1980 வரையும் நடந்தது. அக்காலத்திலே பிரமாதமாக நடக்காதபோதிலும் தேவையான உணவு அதிக செலவில் உற்பத்தி செய்யப்பட்டது. 80 களில் பண்ணைகள் எல்லாம் கைவிடப்பட்டன. அதிலிருந்தவர்கள் நகரங்களை நோக்கி வேலைக்குச் சென்றதால் மொத்தமான ரஸ்சிய நாட்டு விவசாயம் அழிந்த நிலையில், மற்றைய நாடுகளில் இருந்து உணவு இறக்குமதி கட்டாயமாகியது.
சோவியத்தின் சீர்குலைவால் பட்டினி தள்ளப்பட்டபோது பெற்ரோல் மற்றும் எரிவாயுவின் விலை ஏறியது. பெற்றோலியம் விற்பனையில் வந்த பணம், உணவு தானிய இறக்குமதிக்கு கைகொடுத்தது.
உக்ரேனியாவின் பிரிவினைவாதிகளுக்கு உதவியதற்கும், மற்றும் கிரேமிய குடாநாட்டை ரஸ்சிய தன்வசமாக்கியதால் மேற்குலகம் சீற்றமடைந்து ரஸ்சியாவுடனான வர்த்தகத்திற்குத் தடை விதித்தது. இந்தத் தடையின் காரணமாகக் ஐரோப்பிய நாடுகள் உணவுப்பொருட்கள் ஏற்றுமதியைத் தடைசெய்தன.
ரஸ்சிய அதிபர் புட்டின் தண்டனையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டதால் சுதேச உற்பத்தி பெருகி, தற்பொழுது உணவு ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது. இந்த வருடம் தானிய உற்பத்தி சாதனையாகியுள்ளது. பல மாதங்கள் குளிரான நாடானபடியால் பழங்கள், மற்றும் பால் பொருட்கள் மற்றைய நாடுகளில் இருந்து வருகிறது.
பயணத்தில் எதிர்பாராத விதமாக, எமது பிரயாண முகவர்கள் ரஸ்சிய விவசாயக் குடும்பத்தைச் சந்திப்பதற்கு எமக்கு ஒழுங்கு செய்தார்கள். மாஸ்கோவில் இருந்து நூறு கிலோமீட்டர் அப்பால் ஓரு கிராமம். அவர்களது வீடு கிட்டத்தட்ட அரை ஏக்கரில் உள்ளது. சுற்றிவர ஆப்பிள், நெக்ரறீன் என பழமரங்கள் உள்ள சிறிய வீடு. நாய் வாசலில் எம்மை வரவேற்றது.
எமது குழுவில் பெரும்பாலானவர்கள் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவரையும் அவர்கள் ரஸ்சியரைப் பற்றி கேட்டும், படித்த விடயங்கள் எப்படியிருந்திருக்கும் என்பதை நான் அவர்களது பேச்சில் புரிந்து கொண்டேன். இரும்புத்திரையின் உள்ளே வசிப்பவர்கள் ரஸ்சியர்கள் என்ற நினைவில் அந்த வீட்டில் உள்ளே புகுந்து பார்த்தார்கள். நான் தயங்கித் தயங்கியே இறுதியில் சென்றேன். எனக்கு யாரோ மனிதர்களின் அந்தரங்கமான பிரதேசத்தை பார்ப்பது போன்ற மனநிலை ஆனாலும் எழுத்தாளராக இருக்கும் என் போன்றவர்களது தொழிலே அதுதானே என்பதால் இறுதியாக நின்று ஒழுங்காக வைக்கப்பட்டிருந்த அறைகளைப் பார்த்தேன்.அத்துடன் போட்டோ எடுத்தேன். கணவன் மெலிந்தவர் அவர் சிரிப்பதற்கு தயங்கியபோதிலும் மனைவி வாய் நிறைய சிரித்தபடி கணவனுக்கு எதிர்மாறாக இருந்தார்.
அந்த விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரியைப் பார்த்தபோது நான் கேள்விப்பட்ட மிகயில் சொசென்கோவின்(Mikhail Zoshchenko) பேலியா என்ற (Pelagea)பெண்ணின் கதை ஞாபகம் வந்தது.
ஒரு கமியூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர், படிப்பற்ற விவசாயப் பெண்ணை திருமணம் செய்திருந்தார்.அவர் கட்சியின் உயர் மட்டத்திற்கு சென்றார். அக்காலத்திலே எல்லோருக்கும் கல்வி வழங்க கமியூனிஸ்ட் கட்சியும், அரசாங்கமும் நாடு தழுவிய பிரசாரம் செய்தார்கள்.
கட்சியின் பிரமுகராகிய அவருக்கு எழுத்தறிவற்ற மனைவி அவமானமாக இருந்ததால் மனைவியை படிக்கும்படி வலியுறுத்தினார். வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிக்கும் எனக்கு படிப்பு தேவையில்லை என தொடர்ந்து மறுத்தபடியிருந்தார்.
ஒரு நாள் வேலையில் இருந்து திரும்பிய கணவனின் சட்டைப் பையில், அழகிய கவருக்குள் வாசனையூட்டப்பட்ட கடிதம் இருந்ததைப் பார்த்ததும் அதில் என்ன எழுதியிருப்பது அறிவதற்காக வாசிக்க விரும்பியபோது தனக்கு படிப்பறிவில்லை என்று கவலைப்பட்டார்.
தனது கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில், மிகவும் ஆர்வமாக இரண்டு மாதத்தில் வாசிக்கும் அறிவைப் பெற்றுக்கொண்டு வாசித்தார்
வாசிப்பு பழகுவதற்காக கணவனுக்கு புத்தகத்தை கொடுத்த பெண் கொமரேட் ” உங்கள் மனைவிக்கு படிப்பறிவில்லாதது எவ்வளவு அசிங்கமான விடயம்” என எழுதியிருந்தது.
வாசனையிட்ட கடிதத்தைப் படித்த மனைவி அதில் எழுதப்பட்ட விடயத்தைப் புரிந்து அவமானப்பட்டு அழுதாள்.
இந்தகதை மூலம் சோவியத் கமியூனிஸ்ட் அரசு படிப்பறிவில்லாமல் இருந்த சோவியத் மக்களை மிகவும் குறுகிய காலத்தில் கல்வியைப் போதித்து அவர்களை படித்த சமூகமாக மாற்றியது என்பதற்கு அந்த புத்தக அலுமாரி அடையாளம்.
நம்நாடுகளில் படித்த மத்தியதர வர்கத்தினரது வீடுகளிலும் கூட புத்தக அலுமாரியிராது.
அந்த மனிதர் காலம் முழுவதும் விவசாயி அல்ல. ஒரு காலத்தில் கூட்டுப்பண்ணையில் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்தவர் இப்பொழுது பகுதி நேர விவசாயமும் மற்றும் பழங்களில் இருந்து ஜாம் மற்றும் ஊறுகாய் செய்கிறர் என்றார்கள். மொழி தெரியாததால் அவர்களுடன் பேசமுடியவில்லை என்ற குறையைத் தவிர உண்மையான ரஸ்சியரது வீட்டுக்கக்குள் சென்று வரும் சந்தர்ப்பம் எல்லாப் பயணிகளுக்கும் கிடைப்பதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்
மறுமொழியொன்றை இடுங்கள்