அப்பழுக்கற்றவர்கள் எல்லோரும் முத்தத்துக்காக சிறைசென்ற ஒருவரை பொது வெளியில் துவைத்து காயவிட்டுள்ளார்கள்.
நல்லது, தீமைகளை கண்டிக்கும் ஒரு சமூகம் என்பது எனக்கு மயிர்கூச்செறிகிறது. ஆண்கள் தவறுவிடும்போது நீங்கள் பொங்கி எழுவது வரவேற்கத்தக்கது .
அதுவும் முகநூல் நட்புக்கு இதைவிட சிறப்பு என்ன தேவை? நண்பனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்பது எமது நக்கீரன் பாரம்பரியமல்லவா?
ஏற்கனவே ஒருவன் தண்டிக்கப்பட்டாலும் இரண்டாவது முறை, ஏன் பல முறை நாங்கள் தர்ம அடியை கொடுத்து, நாங்கள் எவ்வளவு நேர்மையானவர்கள் என்பதை நிருபிக்க தவறவேண்டாமா ? எங்களுக்காகவே உருவாக்கிய பழமொழிதானே பனையில் விழுந்தவனை மாடேறி உழக்குவது என்பது தானே .
சிறுகுற்றமோ பெருங்குற்றமோ அதற்கு கொலை என்பதுதானே எமது சமீபத்திய வரலாறு. அதை விட்டு விலகலாமா? அவுஸ்திரேலியாவில் இருந்தாலென்ற கனடாவில் இருந்தாலென்ன எமது மண்ணின் புழுதியில் இருக்கு நேர்மையை புவியெங்கும் கொண்டுவந்துள்ளோமே!
குற்றவாளியை மட்டுமல்ல அவனது குடும்பத்தையும் நாங்கள் அவமானப்படுத்தியே தீரவேண்டும் என்ற எங்கள் வன்மத்தை விட்டால் நாங்கள் எப்படி எமது ஊர்ப்பனைமரம் போல் தலை நிமிர்ந்து நிற்பது?
குற்றமற்றவர்கள் மட்டுமே கல்வீசச் சொன்ன அந்த யேசுநாதரை விட நான் உயர்நதவன் என காட்டவேண்டாமோ? கட்டிய மனைவியைத் தவிர எவரையும் ஏறெடுத்துப்பார்காதவர். ஏன் கனவிலும் நினைக்க மாட்டோம். நாங்கள் அப்படி ஒரு பெண்பார்த்தாலும் அவளது முலையை ராமனாக மாறி துண்டிப்போம்.
அவுஸ்திரேலியாவில் கொலைகளை பாலியல் வன்முறையை செய்துவிட்டு, சில வருடங்கள் தண்டிக்கப்பட்டும் வெளிவரும் குற்றவாளிகளைக் காணலாம். காரணம் சட்டம் இவர்களை மென்மையாக நடத்தவில்லை. இவர்கள் மீண்டும் சமூகத்தில் வந்து ஒன்றாகி நல்ல மனிதர்களாக வாழ்வதற்கே.
நாங்கள் தமிழர்கள். இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. சுடுதண்ணி ஊத்தப்பட்டவன் மீது கொதியெண்ணை ஊற்றாமல் விடமாட்டோம்.
சந்தர்ப்ப சாட்சியங்கள் என ஒரு விடயம் இருக்கிறதே?
இந்தக் வழக்கில் ஏதாவது பின்னணி உள்ளதா?
இவையெல்லாம் எமக்குத்தேவையில்லை.
உள்ளறையில் முத்தமிட்டதை யார் கண்டது?
இந்த வழக்கின் பயனாக அவுஸ்திரேலிய தடுப்புக்காவல்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நிருபித்திருக்கிறார்களே?
இது பிற்காலத்தில் அகதிகேட்கும் பெண்களுக்கு சாதகமாக இதுக்குமே?
இந்த வழக்கால் இனிவருங்காலத்தில் தனியார்கள் நடத்தும் தடுப்புகாவல் நிலையங்கள் தவறுகள் நடக்கும் இடமாக இந்த தீர்ப்பால் மாற்றப்பட்டுளளதே?
வழக்கை ஆதரித்து நடத்திய அகதிகள் சார்பான பெண்களும், பெண் நீதிபதியும் இதில் தீவிரம் காட்டியது முத்தமிட்டதற்காக மட்டுமல்ல?
முதல் முறையாக ஒருவன் செய்த சிறிய குற்றமென சந்தர்ப்ப சாட்சியஙகளை வைத்து நடத்திய வழக்கில் இப்படியான தீர்பெழுத ஏதாவது பின்னணி உள்ளதா?
இந்த வழக்கை ஏன் ஒருவன் மேன்முறையீடு செய்யவில்லை?
அவனது செயலில் ஏதாவது காரணம் இருக்குமா?
எம்மைப்பொறுத்தவரை இவையெல்லாம் பார்க்க முடியாது. நாங்கள் நேர்மையானவர்கள்.
கோடு, அரசாங்கம் போன்றவற்றின் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொள்வோம்.
அப்படியால் உங்களில் யாராவது பொய் சொல்லாமல் அகதி அந்தஸ்து எடுத்தீர்களா ? –
இல்லையே
உங்களை ஆரம்பத்தில் நிராகரித்தபோது நீங்கள் மேன்முறையீடு செய்யவில்லையா?
இல்லையே?
இலங்கைப்பெண்கள் பலர் இலங்கை இராணுவத்தால் வன்முறைக்கு உட்பட்டதாக எழுதியதாக அகதி விண்ணப்பங்களில் உள்ளதே? –
அது நாங்கள் அகதி விண்ணப்பத்திற்காக பொய் எழுதுவது.
உங்களுக்கு பகிடியும் வெற்றியும் விளங்காதோ? எனது கணவனுக்கே தெரியும் நான் இப்படி இராணுவம் பாலியல் கொடுமை செய்தது எனச் சொல்லித்தான் எடுத்ததென்று அவர் கேட்கவில்லை. உங்களுக்கு மட்டும ஏன் இப்ப இந்தக்கதை? .
இல்லை இந்த ஈரானியப் பெண்ணும் அகதி அந்தஸ்துக்காக காத்திருக்கலாம். இலங்கைக்கு திரும்பிப்போவதிலும் ஈரானுக்கு திரும்பிப்போது கடினம் அல்லவா?
இப்படி எல்லாம் இருக்கா? எங்களுக்கு தெரியாது. நாங்கள் தலைவர் வழி வந்தவர்கள் . கறுப்பு வெள்ளை என்பதுதான் தெரியும்
எட நீங்கள் எல்லாம் படித்தவர்கள் இல்லையா?
நாங்கள் அடிப்படையில் தமிழர். படிப்பெல்லாம் வேலைக்குத்தானே
சரி நான் பேயன் உங்களோடு இவ்வளவு நேரமும் வேலமினக்கட்டேன்.
“முத்தமா முத்தம்மா?” மீது ஒரு மறுமொழி
அன்புள்ள நடேசன்,
ஏன் இந்த கதையை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்லி பாருங்கள் …எந்த தமிழன் எண்டாலும் ஏற்று கொள்ளுவானா? அகதி அந்தஸ்து எடுப்பதற்காக சிலர் பொய் சொல்வதுண்டு. அது புத்திசாலித்தனமாக காரியம் சாதிப்பது மட்டுமே. இங்கே என்ன நேர்மையின்ன்மை வந்தது. அது ஒரு சிறிய வியாபாரம் மட்டுமே. மற்றும்படி இங்கே ராணுவம் பெண்களை கற்பழிக்கவில்லையா? சரி நீங்கள் ஏன் ஐயா இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் எப்போதும் ஆதரவு தாறீங்கள்….நீங்கள் ராணுவத்திடமும் இலங்கை அரசிடமும் எந்த சலுகையும் பெற்று இந்த கதை கதைக்கிறீர்கள் என்று நான் சத்தியமாக நம்பவில்லை. ஆனால் எப்போதோ தமிழர்களால் தனிப்பட்ட பாதிப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உண்மை. எனக்கும் தான். ஆனால் உலகில் ஒரு நேர்மையான தமிழன் கூடவா இல்லை …தமிழ் தேசியம் உயர்வான ஒரு சித்தாந்தம் தான் ….நிறைய குறைபாடுகள் உண்டு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. முதலில் தமிழர்களை ஆதரியுங்கள். பின்னர் தமிழர்களின் குறைகளை விமர்சியுங்கள். ஏன் இந்த தமிழ் இன எதிரிகளை எப்போதும் ஆதரிக்கிறீர்கள். இலங்கை அரசு வேலையும் சம்பளமும் கல்வியும் தந்தது உண்மை. அதே நேரம் தமிழர்களை அடிப்படை உரிமைகளில் வஞ்சித்து விட்டது என்பதும் உண்மை அல்லவா. இல்லை என்று உங்களால் நியாயமான காரணங்களை வைத்து வாதிட முடியுமா. தனி நாடு என்பது அமைந்தால் தமிழர்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்காதீர்கள். (அது ஒரு சைவ சவூதி அரசாக மாறினாலும் ) அது எனக்கான நாடு அல்லவா. நீங்கள் படித்தவர். எங்களது நாடு உருவாக்க எடுத்த முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டது உண்மை. அதற்காக நீங்கள் எம்மவரையே குறை சொல்ல வேண்டாம். நீங்களும் வாருங்கள். குறைகளை காட்டமாக விமர்சியுங்கள் . ஆனால் எதிரிகளுக்கு ஆதரவாக கதைக்க வேண்டாம். விரும்பினால் நாம் விரிவாக விவாதிக்க முடியும். நன்றி. வாழ்த்துக்கள் ….