நடேசன்
“நந்திக்கடலை நோக்கி’ என்ற ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் கடந்த 30 வருடகாலப் போரை ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் நமக்களிக்கிறது .
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகிய இந்த புத்தகம் தென்னிலங்கை மக்களியே பிரபலமானது. இந்த புத்தகம் ஈழப்போரை பற்றிய வரலாற்று ஆவணமாக கொள்ளமுடியாது. வரலாறு என்பது பல ஆவணங்களை ஒருங்கு சேரப் பார்த்து எழுதுவது. . இந்தப் புத்தகம் வரலாற்றில் உள்ள உண்மை நிகழ்வோடு எழுதியவரினது மனவோட்டங்களையும் எமக்கு தருவதால் வாசிப்பதற்கு சுவையாக உள்ளது. தமிழினியின் கூர் வாளின் நிழல் போன்றது..
இந்த புத்தகத்தில் இலங்கை இராணுவத்தின் தியாகங்கள், மரணங்கள், அழிவுகள் எமக்குத் தெரியவருகிறது . இலங்கை இராணுவம் இந்தப்போரை வெல்லாவிடில் என்ன நடந்திருக்கும்? தொடந்து இன்னமும் யுத்தம் நடந்திருக்கும்? அல்லது பிரபாகரனால் ஒரு பகுதி வெல்லப்பட்டிருந்தாலும் அது சோமாலியாவோ அல்லது ஆவ்கானிஸ்தான்போன்ற ஒரு நாடாக இலங்கை இருக்கும். தொடர்ச்சியான விமானத்தாக்குதலில் எவ்வளவு தமிழர்கள் மிஞ்சியிருப்பார்கள்? இதற்கப்பால் வெளிநாடுகளின் விடுதலைபுலி முகவர்களின் அட்காசம் தொடர்ந்திருக்கும்.
தற்பொழுது நாம் திரும்பிப்பார்த்தால், இலங்கையில் தமிழர்கள் மட்டும் ஆயுதம் எடுக்கவில்லை. இரு தடவைகள் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசின் மீது போர்தொடுத்ததால் கடந்த 30 வருடப்போரின் விளைவுக்கு சமமான அளவில் உயிர்கள் பலியாகியிருக்கிறது. இந்தியாவின் படைகள் இருமுறை இலங்கை மண்ணில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக கோசமெழுப்பும் சிங்களத் தீவிரவாதிகள், இலங்கை அழைத்தே இந்தியா, இலங்கைக்கு வந்து இலங்கையரசைக் காப்பாற்றியது என்பதை மனத்தில் நினைக்கவேண்டும்.
மீண்டும் புத்தகத்தைப்பற்றி சொல்லவேண்டும். இதில் இராணுவத்தின் பலங்கள், பலவீனங்கள் தெரியவருவதுடன் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எப்படியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்கள் என்பதும் புரிகிறது . இவர்களது தவறுகளால் இரு இனத்தின் இளைஞர்களும் ஒருவரோடு ஒருவராக போரிட்டு அழிந்தார்கள்.
இராணுவம் மட்டும் எந்த நாட்டிலும் தனியாக இயங்கமுடியாது. அது மிருகத்தை கொல்லும் அம்பின் கூர்முனை போன்ற தன்மைக்கு ஒப்பிட்டால் குறிபார்த்தல், பலம் தந்திரம், புஜபலம் என்பன அம்பைச் செலுத்தி மிருகத்தைக் கொல்லத்தேவை . அதேபோல் இலங்கை இராணுவம் மட்டும் புலிகளை அழிக்கவில்லை. விமானப்படை கடற்படை என்பனவற்றிற்கப்பால் வெளிநாடுகளின் உதவி , இந்தியர்களின் துணை, அரசியல் தலைமைத்துவம் என்பது கட்டாயமானது. அப்பால் தேவாநந்தா, கருணா போன்றவர்கள் பாத்திரம் முக்கியமானது. விடுதலைப்புலி இயக்கத்தினர் எதிரிகளை உருவாக்குவதில் கைவந்தவர்கள். பல தமிழர்களை தங்களுக்கு எதிராக மாற்றியவர்கள்.
வெளிநாடுகளின் பங்கிற்கு உதாரணமாக – மார்கழி 2005ன் பின்பு அவுஸ்திரேலியா பிரான்சில் விடுதலைப்புலி முகவர்கள் கைது செய்யப்பட்டபின்பு இந்த இரு நாடுகளிலும் இருந்து ஆயுதத்திற்கு பணம்போவது நின்றுவிட்டது. ( அதன்பின்பு அவர்கள் சேர்த்த பணம் எங்கே என்னைக் கேட்காதீர்கள்- நான் கொடுக்கவில்லை ஆதலால் கேட்க உரிமையில்லை)
பிரபாகரனை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதால்,பெரும்பாலான தமிழர்களும், குறிப்பிட்ட அளவு சிங்களவரும், மற்றும் மேற்கு நாட்டினரும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைத்தார்கள்.
பிரபாகரன் மற்ற இயக்கத்தினரை மட்டுமல்ல, தனது இயக்கத்தினரையே சித்திரவதை செய்து கொலை செய்த மனிதன். மாத்தயாவோடு கைது செய்யப்பட்ட பலருக்கு விரல்களில் நகங்கள் கிடையாது.கடைசிவரை இருந்த யோகி என்படும் நரேனுக்கே நகமில்லை என மிகவும் நெருங்கியவர் எனக்கு கூறினார். இப்படியான செயல்களின் விளைவாக தொடர்ந்து வாழ்ந்தாலும் அவுஸ்திரேலிய வம்பற்போல்(Wombat) பிரபாகரன் நாற்பது அடியின் கீழே மட்டுமே உயிர் வாழ்திருக்க முடியும். ஈழம் கண்டால் கூட இராணுவ அணிவகுப்பைப் பார்க்க முடியுமா? கிளிநோச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு வந்தவர்களின் விரல் இடுக்குகுகளை உள்ளேவிடுவதற்கு முன்பாக சோதித்தர்கள்.
இப்படியானவர்கள் பலர் சரித்திரத்தில் இருந்திருக்கிறார்கள். அங்கோலாவில் ஜோனாதன் சவிம்பி என்பவர் சிஐஏயால் போசிக்கப்பட்ட யுனிட்டா என்ற இயக்கத்தை சேர்ந்தவர் . இவர் வெள்ளைமாளிகையில் டோனால்ட் ரீகனால் விடுதலைப்போராளி எனப் புகழப்பட்டவர் . வல்லரசுப் பனிப்போர் முடிந்தபின்பு, அமரிக்கா, அங்கோலாவுடன் சமரசம் செய்தது. ஆனால் இவர் ஆயுதத்தை கைவிட மறுத்தார். இறுதியில் காட்டு மிருகம்போல் நடுக்காட்டில் சுடப்பட்டு மரணமானார். இவருக்கு பல மனைவிகளும் 25 பிள்ளைகளும் இருந்தார்கள்.
நாலாவது ஈழப்போரில் 5800 மேற்பட்ட இராணுவத்தினர் மரணமாகியும் 25000 த்துக்மேல் காயமடைந்துமிருக்கிறார்கள். நிட்சயமாக விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதைவிட பொதுமக்கள் தொகை எவ்வளவு? இப்படியான இழப்புகள் தமிழ், சிங்களம் என்ற இனவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. .நினைத்தால் வலிக்கும்
போரின்பின் இரண்டு தரப்பிலும் உள்ள பல்வேறுபட்டவர்களோடு பழகி பேசியதனால் நான் உணர்ந்த உண்மை தமிழர்கள் சிங்களவர்கள் கொண்டிருக்கும் விரோதம் ஆளமானதல்ல. பெரும்பாலானவை இரண்டு பக்க அரசியல்வாதிகளால் தங்களது பதவிகளைத் தக்க வைக்க ஊட்டபப்பட்ட நஞ்சு . இதை வெளியேற்றுவது இலகுவானது. ஆனால் இருபக்கத்தினரும் இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும்.
சுயபச்சாபத்தில் தொடர்ந்து உழலும் தமிழ்மக்கள் இந்தப்புத்தகத்தை படிப்பதின் மூலம் அடுத்தபக்கத்தினரையும் அறிய முடியும். போரில் எவரும் வெல்வதில்லை. இரு பகுதியினரும் தோல்வியடைகின்றனர் ஆனால் அதிக ஜனத்தொகையுள்ளவர்கள் அந்ததோல்வியைத் தாங்குவார்கள் என்பதே உண்மை. .சாதாரண மொழியில் சொன்னால் சூதாட்டம்போல் எல்லோரும் பணத்தை இழப்போம் ஆனால் வசதியுள்ளவன் அதைத்தாங்கிக்கொள்வான்.
மறுமொழியொன்றை இடுங்கள்