இதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றத்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும்.
நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தனது குடும்பத்தை தேடுதலே இந்தப்படம்.
உள்ளுணர்வுகளின் தேடுதலே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது சிலம் டக் மிலியனரில் வந்த தேவ் பட்டேலின்(Dev Patel) மிகவும் இயற்கையான நடிப்பு. ஆனால், ஐந்து வயதான சன்னி பவரே(Sunny Pawar) எனது மனத்தைக் கவர்ந்த பாத்திரம்.
தொலைந்த சரோ என்ற பையன் உத்தரப்பிரதேசத்தில் இரயில் ஏறி கல்கந்தா வந்து சேர்வதும், ஓடும் அந்த இரயிலில் வெளியேற முயலுவதும் மிகவும் இயற்கையானவை. கல்கத்தாவில் உணவிற்காகத் திரிவதும் அவனை, மனித வல்லுறுகளாக கொத்தத் திரிபவர்கள் அதிர்வுகளைக் கொடுத்தபோதும், இந்திய நிலம், மக்கள், வறுமை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.
அவுஸ்திரேலியத் தம்பதிகளால் சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து தத்தெடுத்து, தஸ்மேனியாவின் ஹோபாட் நகரத்தில் வளரும் அவனுக்கு, மெல்பேனில் இந்திய நண்பர்களின் மத்தியில் ஒரு விருந்தின்போது பார்த்த ஜிலேயியால் பழைய நினைவுகள் திரும்புகிறது. சிறுவனானாக இந்தியாவில் இருந்தபோது பல முறை ஜிலேபிக்கு ஆசைப்பட்டவன் சரோ.
அவுஸ்திரேலியத் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒருவனான சரோவிற்கு பழைய நினைவுகளில் தத்தளிக்கும்போது, மற்றயவன் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த வன்முறையில் இருந்து வெளிவரமுடியாமல் போதை வஸ்துக்களில் சிக்குகிறான். தத்தெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளினது நிலையால் அல்லலுறும் பெற்றோர்கள் கதையாக விரிகிறது.
இந்தியாவில் இலட்சக்கணக்கில் காணாமல் போகும் குழந்தைகள், சிறுவர்கள் புகலிடமாகும் சிறுவர் காப்பகங்கள் சித்திரவதைக் கூடங்களாக இருப்பதைக் கேள்விக்குள்ளாகிறது. குழந்தைகளைப் பிள்ளையில்லா எமது ஆசிய நாட்டவர்கள் ஏன் தத்தெடுப்பதில்லை? ஆனால் மேற்கத்தையர் தத்தெடுக்கும்போது பல தடைகள் கேள்விகளாகின்றன.
உள்உணர்வின் மாற்றங்களை பிரதிபலிக்கும் எடிற்றிங் மற்றும் இந்தியா, தஸ்மேனியா பகுதியில் கமரா திறமையாக நகர்கிறது. இயற்கையாக எல்லோரது நடிப்பு இருந்தாலும் நிக்கோல் கிட்மன்(Nicle Kidman) தோற்றம் அந்தப் பாத்திரத்திற்கு ஒட்டாமல் நகசுத்தி வந்த ஒரு விரல்போல் உணரமுடிந்தது.
காப்பியில் எவ்வளவு பால் ஊற்றினால் காப்பின் ருசி கெடாமல் மேன்மையாகும் என்பதுபோல கலையையும் சமூகநோக்கத்தையும் எப்படிக் கலந்து வைக்க முடியும் என்பதற்கு லயன் திரைப்படம் உதாரணம்.
ஒரு 10 ஆண்டுகள் முன்பதாக சிங்களத்தில் பாண்டித்தியமுள்ள என் பெர்லின் நண்பரொரொவர் “உங்களை இங்கே இதழியல் படிக்கும் சிங்கள மாணவர் ஒருவர் பேட்டிகாண விரும்புகிறார் சம்மதமா” எனக்கேட்டார். அங்காடியொன்றில் காய்கறிகளை வாங்கிவருமளவுக்கே சிங்களத்தில் புலமை உள்ள நான் அவர் ஆய்வுமாணவர் என்றபடியால் அவரை ஊக்குவிப்பதை என் கடமையாக உணர்ந்து சம்மதித்தேன். குறிப்பிட்ட நாள் நண்பரும், மாணவரும் வீட்டுக்கு வந்திருந்தனர். வந்தநேரந்தொட்டு இருவரும் ஜெர்மனிலேயே உரையாடிக்கொண்டிருந்தனர். “ தோழர்களே……நீங்கள் சிங்களத்திலேயே உரையாடலாம் எனக்கு ஆட்ஷேபனை இல்லை” என்றேன். நண்பர் சொன்னார் உரையாட நான் தயார்தான் “ பரிதாபம்…….அவருக்கு சிங்களம் தெரியாது” என்றார். அவர் நான் நிஜத்தில் சந்தித்த பிறிதொரு ‘சரோ’……..!