நடேசன்
அந்த வீட்டின் முன்கதவைத் திறந்தபடி உள்ளே சென்ற என்னைத் தனது வெள்ளைத்தாடியை ஒரு கையால் தடவியபடி சிவந்த கலங்கிய கண்களுடன் மறுகையால் வீட்டின் கதவைத் திறந்து ‘நொயல் நன்றி’ எனச்சொல்லியவாறு மகிந்தபால உள்ளே அழைக்க, மிருகவைத்தியராகிய என்னைப் பார்த்து ‘மரணதேவதை
வருகிறது’ என்று திருமதி மகிந்தபால சொன்னார்.
நான் எதிர்பார்க்காத வார்த்தைகள். பழைய சுவிஷேச வார்த்தைகள்.
மெல்பனின் வசந்தகாலத்தின் மாலை நேரம். பசுமையான புற்கள் அழகாக செதுக்கியபடியிருந்தது. வேலியோரத்து பொக்ஸ் செடிகள் இடுப்பளவு உயரத்தில் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவர்களது வீட்டின் முன்பகுதி புறதரையின் விளிம்புகளின் இரண்டுபக்கத்திலும் பல வர்ண ரோஜாச் செடிகள் அலங்கரித்தன. வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது வெள்ளைக் காரின் பின்னால் எனது காரை நிறுத்திவிட்டு ஊசிகள் மற்றும் தேவையான மருந்துகள் கொண்ட பெட்டி சகிதம் வீட்டுப்படிகளில் நின்று மெதுவாக கதவைத் தட்டினேன்.
ஏனோ தெரியவில்லை. இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டின் முன்பகுதியில் ரோஜாச் செடி வளர்ப்பார்கள். பின்பகுதியில் அல்ஷேசன் நாய் வளர்ப்பார்கள். தமிழர்களாயின் வாசலில் பித்தளை மாவிலைகளும் செருப்புகளும் எம்மை வரவேற்றும். அவை ஊரில் இருந்து இவர்கள் கொண்டுவந்த சில அடையாளங்களாகும்.
ஒவ்வொரு முறையும் மகிந்தபால வீடு சென்றால் எனது வயிற்றுக்கு சிக்னல் விழுந்துவிடும். பகலானால் உணவும் இரவானால் குடிப்பதற்கும் கொடுத்து உபசரிப்பார்கள். மகிந்தபாலவின் சமையல் பிரமாதமாக இருக்கும். அவர்கள் வீட்டு வாசலை எனது கார் அடைந்து அதில் உள்ள கை பிரேக்கைப் போட்டதும் வயிற்றில் மெதுவாக பசியோ இல்லை தாகமோ எடுக்கும். இதைத்தான் தன்னிச்சையான விடயங்கள் என ரஷ்ஷிய விஞ்ஞானி பாவ்வலோ மணியடித்து நாய்களில் செய்துகாட்டினார்.
எனது வைத்தியசாலையில் இருந்து பதினைந்து நிமிடம் கார் செலுத்தும் தூரத்தில் இருக்கும் வயதான தம்பதிகள்தான் அவர்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள். மகிந்தபால சிங்களவர். அவரது மனைவி தமிழர். காதல் திருமணம்.
வீட்டுக்குள் வந்த என்னைப் பார்த்து திருமதி மகிந்தபால மரணதேவதை எனக் கூறிய வார்த்தைகள் எனது இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அறிந்தால் அவற்றின் கூர்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
நான் சிரித்தபடி எனது உணர்வுகளை முகத்தில் மறைத்துக் கொண்டு உள்ளே சென்றாலும் அந்த வார்த்தை ஏற்படுத்திய பாதிப்பை பல வருடங்களாகியும் என்னால் மறக்க முடியவில்லை.
வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு, வயோதிபத்தாலும் குணப்படுத்தமுடியாத நோயால் துன்புறும்போது அவற்றை அந்தத் துன்பத்திலிருந்து மிகவும் அமைதியாக இறப்பதற்காக நாங்கள் வழங்கும் விடுதலையே யூத்தனேசியா எனப்படும் கருணக்கொலை.
ஒவ்வொரு முறையும் இப்படியாக கருணைக்கொலையை செய்யும் முன்பாக அதனது சாதக பாதகங்களை விளக்கிவிட்டு அதைச் செய்வதற்காக பிராணியின் உரிமையாளர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு நாங்கள் தூண்டுவது வழக்கமானது.
முடிவை அவர்கள் தீர்மானிப்பார்கள். மிருகவைத்தியர்களான நாங்கள் செல்லப்பிராணியின் உடல்நிலை அதனது துன்பம் என்பவற்றைக் கருத்தில் கொள்வோம். அவற்றின் உரிமையாளர்கள் அதை ஏற்பார்களா இல்லையா அதற்குத் தயாரான மனநிலையில் உள்ளார்களா என்பது எமக்கு இரண்டாம் பட்சமே.
மகிந்தபால தம்பதியரின் பபி என்ற கறுப்பு வெள்ளையான ஆண் பூனை கடந்த பத்து வருடங்களாக எனது வைத்தியப் பராமரிப்பில் இருந்தது. என்னிடம் வரும்போது ஐந்து அல்லது ஆறு வயதாக இருக்கும். சில வருடங்கள் முன்பாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் என்னால் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பின்பாக என்னால் அங்கீகரிக்கப்பட்ட விசேட உணவில் வாழ்ந்தது. பபி இறுதியில் சாப்பிட மறுத்தபோது மகிந்தபால என்னிடம் கொண்டு வந்தார் அப்பொழுது அதன் வாயைத்திறந்து பார்த்தபோது மேல் அன்னத்தில் புண்ணாகத் தெரிந்தது . அதை கான்சர் என முடிவு செய்ய எனக்கு அதிக நேரமெடுக்கவில்லை. வாயில் வரும் கான்சரைக் குணப்படுத்தமுடியாது.
இலங்கையில் ஒப்சேவர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த மகிந்தபாலவை நான் சந்தித்தது பபியின் உரிமையாளராக. அந்த நாள் இன்னமும் நினைவில் உள்ளது
ஒரு நாள் எனது கிளினிக்குக்கு பபியை இரத்த பரிசோதனைக்காக கொண்டு வந்தார். இரண்டு கைகளாலும் குழந்தையைப்போல் அணைத்து நெஞ்சருகே வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருந்தார்.
‘பபியின் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்’ என்றார்.
மகிந்தபாலவை அக்காலத்தில் தமிழ் தேசியவாதிகளுக்குக் கண்ணில் காட்டமுடியாது. சிங்கள தேசியவாதிகளில் முக்கியமானவராக மெல்பனில் அடையாளப்படுத்தப்பட்டார்.
பபியின் பல்லை சுத்தமாக்கிய பின்பு எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். எனது விடுதலைப்புலி எதிர்ப்பும் அவரது நிலையும் ஒன்றாகிய போதிலும் பல விடயங்களில் மாறுபடுவோம். தான் சிங்களப் பயங்கரவாதத்தையும் எதிர்த்ததாகவும் இப்பொழுது தமிழ்ப் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாகவும் தனது நிலைமையை விளக்குவார். தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிமையானவர்.
எனக்கு அவர் அறிமுகமான காலத்தில் மகிந்தபால தம்பதியினர் 70 வயதானவர்கள். குழந்தைகள் இல்லாத அவர்களது வாழ்க்கை பொபியைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில்; ஒரு நாள் பபி தொலைந்துவிட்டது என எனக்குத் தகவல் சொல்லியதும் நான் அவருடன் பல இடங்களில் தேடிக் கடைசியில் RSPCA நிறுவனத்தின் பிராணிகள் வதிப்பிடத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. நானும் மகிந்தபாலவுடன் அங்குச் சென்றேன்.
அங்கு உள்ளவர்களிடம் பபியைப் பற்றி விசாரித்தபோது அங்கு வந்து இரு நாட்களாகியும் கொடுக்கப்பட்ட உணவை உண்ண மறுத்தபடி விரதமிருந்ததாகச் சொன்னார்கள். பூனைகளில் பொதுவாக இந்தக் குணமுள்ளது. அவைகளது சூழல் மாறினால் உணவு கொள்ளாமல் இருப்பது. வேட்டையாடும் மிருகங்கள் புதிய இடத்திற்குச் செல்லும்போது உணவைத்தேடி அலைய முடியாது. ஏற்கனவே புதிய இடத்தில் வாழும் வேட்டை மிருகங்களிடம் இருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டியது அத்தியாவசியமானது.
ஒவ்வொரு மிருகத்தின் உயிர்வாழ்விற்கான பரிணாமத்தில் இந்தத் தன்மை ஏற்பட்டிருக்கலாம். மனிதர்கள் புதிய இடத்திற்குச் சென்றால் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் முதல்நாள் நித்திரை கொள்வது கடினமானது. புதிய இடத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர்ப் பாதுகாப்பு கருதி உருவாகிய விடயங்கள் எம்மை இன்னமும் தொடருகிறது.
வீடு வந்த பின்பே பபி மகிந்தபாலவின் கையால் வைக்கப்பட்ட உணவையருந்தி தனது விரதத்தை முடித்துக்கொண்டது.
இப்படியான பபியை கான்சர் வந்த பின்பு எதுவித மருத்துவமும் செய்ய மறுத்துவிட்டேன். மெல்பனில் பல பௌத்த சிங்களவர்களோடு எனக்குப் பிரச்சினை எழும். நோயைக் குணப்படுத்த முடியாது போனால் கருணைக் கொலைக்கு முடிவெடுக்கும்படி சொல்லும்போது அவர்கள் பௌத்த மதத்தின் பிரகாரம் கொலை செய்யக் கூடாது என்று அது வாழும்வரையும் வாழட்டும் என அடம் பிடிப்பார்கள்.
விடயம் புரியாதவர்கள் மட்டுமல்ல, புரிந்தவர்களும் இவ்வாறு நடந்துகொள்வார்கள். எனது மனைவியின் ஒரு சினேகிதி டொக்டர். அவர்களின் பூனைக்கும் சிறுநீரக வருத்தம் வந்தபோது இரண்டு முறை சேலையின் கொடுத்து தற்காலிகமாக குணமாக்கினேன். ஆனால், இறுதியில் மறுத்துவிட்டேன். அவர்கள் தங்களது வீட்டில் வைத்து சேலையினை கொடுக்கமுடியுமா ? எனக்கேட்டபோது, நான் எனது விசுவாசம் எனது தொழிலுக்கே எனச் சொல்லி மறுத்துவிட்டேன்.
அவர்கள் என் மீது மனவருத்தமடைந்தார்கள். பின்பு சில நாட்களில் அந்தப் பூனை அவர்கள் வீட்டில் இறந்தது.
மகிந்தபாலவும், அவரது மனைவி கத்தோலிக்கத் தமிழராக இருந்ததாலோ அல்லது என் மீது கொண்ட நம்பிக்கையாலோ எனது வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். தங்களது வீட்டில் வைத்து கருணைக் கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.
கடைசிச் சில நிமிடங்களை அவர்கள் பபியோடு செலவழிப்பதற்காக நான் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அவரைப் பார்த்தால் கிறிஸ்துவ போதகர்போல் தெரிந்தார்.
விருந்தாளியுடன் மகிந்தபால தம்பதிகள் பபி இருந்த அறையுள்ளே பேசும்போது வெளியே ஹோலில் இருந்த எனக்கு மரணதேவதை என்ற விடயம் மீண்டும் உள் மனதில் தந்தியை மீட்டியது
மரணத்தின் தேவதை என்பதும் மரணதேவன் என்ற வார்த்தைப் பதம் இந்துமதத்தில் யமனைக் குறித்தாலும் மேற்கு நாட்டவர்களிடமும் ஆங்கிலத்திலும் பிரபலமானது. பலரைக் கொன்றவர்களை அதாவது தொடர் கொலைகாரர்களை அப்படி பத்திரிகைகள் தலையங்கமிடுவது வழக்கம். வைத்தியசாலையில் பலரைக் கொல்லும் வைத்தியர் அல்லது நேர்சையோ அல்லது இளம்பெண்களையோ கொல்லும் ஆண் கொலைகாரனையோ இப்படி அழைப்பார்கள். இதனது மூலத்தை ஆராய்ந்தால் பழைய சுவிஷேசத்தில் எக்சோடஸ்ஸில் விபரம் உள்ளது.
யூத அடிமைகளை எகிப்தில் இருந்து வெளியேற அனுமதிக்காத மன்னனுக்குப் பல இடர்கள் வந்தன. உடல்களில் பொக்களம் வந்தது. நைல்நதி இரத்த நிறமாகியது. தவளைகள் நைல் நதியில் இருந்து புறப்பட்டு நாட்டுக்குள் மன்னனின் அரண்மனைக்குள் குவிந்தன. இவைக்கெல்லாம் செவிசாய்க்காதபோது கடைசியாக பத்தாவதாக பிளேக் நோயாக மரண தேவதை வந்தது. அரசனது முதல் பிள்ளை மட்டுமல்ல அடிமையின் முதலாவது குழந்தையுடன் மிருகங்களின் தலைக் கன்றையும் காவு எடுத்தது. ஹொலிவுட் எடுத்த பத்துக் கட்டளைகள் போன்ற படங்களில் பெரிய நிழலாகக் காட்டுவார்கள்.
இறைவன் யூதர்களிடம் ” உங்கள் வீட்டில் வளர்ந்த செம்மறியை அறுத்து இரத்தத்தை வாசல் நிலைக்கதவில் பூசி மரண தேவதையைத் தடுங்கள். அன்றைய நாளில் வீட்டுக்குள் இருந்து செம்மறியின் மாமிசத்துடன் ஈஸ்ட் சேர்க்காத பாணுடன் உண்ணுங்கள். இந்த நாள் பாஸ்ஓவர் தினமாக எதிர்காலத்திலும் கொண்டாடப்படும். மரணதேவதை உங்கள் வீடுகளை நெருங்காது. ”
இந்தத் தினத்திலே யேசு கிறிஸ்த்துநாதர் தன் சீடர்களுடன் கடைசி உணவருந்தினார். அன்று யூதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டு ரோமர்களால் கைதானார். இந்த மரணதேவதை என்ற வாக்கியம் மற்றைய ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத்திலும் உள்ளது.
எனது நேரம் வந்ததும் அறைக்குள் மெதுவாகச் சென்றேன். படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த பபியின் தலையை மெதுவாகத் தடவிவிட்டு கழுத்தில் மயக்க மருந்தை ஏற்றினேன். வழக்கமாக நான் அதன் தலையில் தடவும்போது உடலை நெளித்து வாலைமேல் உயர்த்தியபடி சென்று விடும். ஆனால், இன்று எதுவித அசைவுமின்றி கிடந்தது பின்னர் நான் ஊசியை எடுத்தவுடன் தலையை நிமிர்த்தியது. ஆனால், நகரவில்லை. அதற்கான பலம் அதன் உடலில் இல்லை.
அதைப்பார்த்து கண்ணீர் மல்கியபடி இருவரும் நின்றனர். மகிந்தபாலவிடம் நான் கருணைக்கொலைக்கான மருந்து ஏற்றப்போகிறேன் என எனது சைகையால் காட்டிவிட்டு ஏற்கனவே தயாராக இருந்த பச்சைத்திராவகத்தை அதனது முன்காலில் உள்ள இரத்த நாளத்தில் ஏற்றினேன். சில நிமிடங்களில் சுவாசம் நின்றது ஊசியை எடுத்துவிட்டு எனது ஸ்ரெத்தஸ்கோப்பை வைத்து இதயத்துடிப்பு நின்றதை உறுதி செய்தேன். நிலைக்குத்தி நின்ற அதனது கண்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்த டவலால் தலையைத் தவிர மற்றைய பகுதிகளை மூடிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி ஹோலுக்கு வந்தேன்.
வீட்டின் பின்புறமான தோட்டத்தில் ஒரு குழி ஏற்கனவே தோண்டப்பட்டிருந்தது. ஒரு அடி மட்டுமே ஆழம் – அகலமான குழியில் பபியை வைத்துவிட்டு அந்தப் போதகர் சுவிஷேசத்திலிருந்து சில வார்த்தைகளை சில நிமிட நேரம் சொன்னார். அதன்பின் பபியின் மீது மண்ணைமூடி அடக்கம் பண்ணிவிட்டு அதில் ஒரு சிவப்பு ரோஜா மரத்தை நட்டுவிட்டுச் சென்றார்.
நானும் அந்த இடத்தில் இருந்து வெளியேறியபோது பபி ஒரு வெற்றிடத்தை அங்கு விட்டுச் சென்றது என்பதை நானும் உணர்ந்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்