தங்க பகோடா
மாலையில் நாங்கள் சென்ற 326 அடி உயரத்துடன் தங்கத்தால் வேயப்பட்ட தங்க பகோடா Shwedagon Pagoda யங்கூனில் முக்கியமானது. இதுவே பர்மாவின் தேசியக் குறியீடாகும். இதற்கு சுவையான வரலாறு உள்ளது.
இந்த பகோடாவை சுற்றிய பிரதேசம் புராதனமான காலத்தில் இருந்த கரையோர மீன்பிடிக் கிராமமே. 2500 வருடங்கள் முன்பாக இரண்டு பர்மிய சகோதரர்கள் வியாபார விடயமாக இந்தியா சென்றபோது புனித அரசமரத்தின கீழ் அமர்ந்திருந்த புத்தரை சந்தித்து அவருக்கு தேன் கேக்கை உணவாக கொடுத்தபோது அதற்கு வெகுமதியாக புத்தர் தனது 8 தலை மயிர்கள் அவர்களுக்கு கொடுத்தார். வரும் வழியில் 4 தலைமயிர்களை வேறு இரு தேசத்து அரசர்களுக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் மீண்டும் தற்போதைய பகோடா இருக்கும் இடத்தில் வைத்து திறந்தபோது அந்தப் பேழையில் 8 தலைமயிர்களும் இருந்தன. அந்த தலைமயிர்கள் பேழையொன்றில் புதைக்கப்பட்டு அதன்மேல் இந்த பகோடா கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. தகரம் செப்பு ஈயம் பளிங்கு இரும்பு என அடுக்குகளாக பகோடாக்களை உருவாக்கி அதன்மேல் செங்கல்லில் ஆரம்ப பகோடா கட்டப்பட்டது.
இப்பொழுது ஆரம்ப கட்டிடத்தின்மேல் பலஅடுக்குகளாக பின் வந்த அரச வம்சங்களால் உயர்த்தி பகோடா கட்டுப்படது. பிற்காலத்தில் பெண்ணரசியால் (Shi sawbu) தங்கத்தில் வேயப்பட்டுள்ளது. கோபுரத்தின் நுனியில் வைரங்கள் இழைக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக தங்கத்தால் இந்த பகோடா வேயப்படுவதால் எவ்வளவு தங்கம் உள்ளது என சொல்லமுடியாது. எனது வாகனச்சாரதி 64 தொன் என்றார். அது சரியாக இருக்கலாம் என விக்கிப்பீடியாவில் இருந்தது.
இதைவிட பல ஐதீகங்கள் இந்த பகோடவை சுற்றி உள்ளது. 8 மயிரில் நான்கு தொலைந்தது. ஆனால் பின்னர் அந்தப் பேழையை திறந்தபோது அந்த 8 மயிர்களும் இருந்தன. அப்பொழுது பல நம்ப முடியாத அதிசய விடயங்கள் நடந்தன எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த பகோடாவை சுற்றி பிற்காலத்தில் காடு புதராக வளர்ந்து பகோடா மூடப்பட்டபோது அசோக மன்னரால் இந்த இடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்கிறார்கள். இந்துக்களது இராம இராச்சியம் என்பதுபோல் இங்கு பல இடங்களில் அசோகனின் இராச்சியம் வந்து போகிறது. எல்லா நாட்டினருக்கும் ஐதீகங்கள் இதிகாசக் கதைகள் தேவையாக இருக்கிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட நம்பிக்கைகளை வாய்வழியாக வந்த தொன்மங்களால் அல்லது கற்பனை சக்தி நிறைந்தவர்களால் உருவாக்கப்பட்டவை என ஒதுக்கிவிட்டாலும் அதற்கு அப்பாற்பட்டு வரலாறு தெரிந்த காலத்தில் பல விடயங்கள் நடந்தன.
பிற்காலத்தில புவி நடுக்கம் ஏற்பட்டு இந்த பகோடா உடைந்து மீண்டும் கட்டப்பட்டது. இங்குள்ள 30 தொன் மணியை ஆரம்பத்தில் போர்த்துக்கேய கொள்ளையன் ஒருவன் திருடிக் கொண்டு செல்ல முயன்றபோது அது ஆற்றில் விழுந்தது. ஆனால் அதை எடுக்க முடியவில்லை.
பிற்காலத்தில் பிரித்தானியர்கள் 23 தொன் மணியை திருடிக் கொண்டுபோக முனைந்தபோது அந்த மணியும் ஆற்றில் விழுந்தது. பிரித்தானியர் இந்த பகோடாவில் தங்கியிருந்ததுடன் அதன் உச்சியில் தங்களது கொடியை பறக்க விட்டார்கள். பல அட்டுழியங்களை செய்தார்கள். தற்போதைய இஸ்லாமிய பயங்கரவாதிகள்போல் நடந்துகொண்டபோது பிரித்தானிய அரசின் நேரடியான தலையீட்டால் அவை நிறுத்தப்பட்டது.
தொடர்ச்சிய வந்த பர்மிய அரசர்கள் மட்டுமல்ல பிற்காலத்து இராணுவ அரசாங்கமும் இந்த பகோடாவை புதுபித்தது.
பர்மியர்களின் கலாச்சாரம் இந்த பகோடாவுடன் பின்னப்பட்டுள்ளது. கண்டியின் தலதாமாளிகை இலங்கை அரசர்களோடும் மன்னர்களோடும் எப்படி உள்ளதோ அதேபோல் இந்த பகோடா பர்மியர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது.
இந்த பகோடா புனிதமானது என்பதற்கு மேலாக இது அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தின் அழகு கண்ணைக் கவருவதுடன் வியப்பை உருவாக்குகிறது. மாலை நேரத்தில் நான் தாஜ்மஹாலைப் பார்த்தபோது ஏற்பட்டதிலும் பார்க்க அதிகமான அழகு இங்குள்ளது எனச் சொல்லவேண்டும். மாலை நேரத்து வானத்தின் பின்னணி நீல வெல்வெட் துணியில் வைக்கப்பட்டிருந்த அழகிய தங்க ஆபரணம்போல் தெரிந்தது.
பிரதான பகோடாவைச் சுற்றி அமைக்கப்பட்ட பொன்னிற 64 தூபிகள் உள்ளது. வெண்பளிங்கில் அமைக்கப்பட்ட தரைத் தளப்பிரதேசம் சுற்றியுள்ள பின்புலத்தில் பார்க்கும்போது இந்தப்பிரதேசம் தேவலோகத்தில் இருந்து செதுக்கி எடுக்கப்பட்டதா என நினைக்கத்தோன்றும். பகோடாவை சுற்றிய பிரதேசத்தில் பிரார்த்தனை செய்யும் பர்மியர்களைப் பார்க்கும்போது மட்டுமே இது நாம் வசிக்கும் புவியில் அமைந்த இடமென நினைக்க வைக்கிறது.
பர்மா ஏழைநாடாக இருந்தபோதும் மிகவும் சுத்தமான நாடு. அதிலும் பகோடா அமைந்த இடங்கள் தொடர்ச்சியாக சுத்தப்படுத்தப்படுகின்றன. நாங்கள் சென்றபோது பல பெண்கள் புல்லால் உருவாக்கப்பட்ட துடைப்பங்களால் பளிங்குத் தரையை சுத்தமாக்குவதை ஒரு பிரார்த்தனையாக வரிசையில் நின்று தேவதைகளின் நடன அசைவு போல் செய்தார்கள். நமது தமிழக இந்துக் கோயில்களிலும் இப்படியான பிரார்த்தனை வடிவம் இருந்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் புதிய சாமியார்களாவது கோயில்களை சுத்தப்படுத்துவதை பிரார்த்தனையாக செய்தால் மேலதிக புண்ணியம் கிடைக்கும் என்றாவது சொல்லக்கூடாதா?
64 தொன் தங்கத்தில் வேயப்பட்ட இந்த பகோடா ஒருவித பொருளாதாரப்பார்வையில் வீண் என யாராவது நினைத்தால் அது தவறு. பர்மாவின் முக்கியமான யாத்திரை இடமாகவும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாகவும் அமைந்து அந்நிய செலாவணியை ஈட்ட உதவுகிறது. கடந்த 12 மாதங்களில் 460 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதிக் கட்டணமாக வந்திருப்பதாக உள்ளுர் பத்திரிகையில் செய்தியிருந்தது.
பர்மாவில் அதிகமாக அமைந்திருப்பது பகோடாக்கள்தான். பெரிதும் சிறிதுமாக எங்கும் காணலாம். வெளி நாட்டவர்களுக்கு இது புரிவது கடினமாக இருக்கலாம். சில பகோடாக்கள் பராமரிக்கப்பட்டாலும் பல பராமரிப்பற்றுவிட்டன. யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை இந்துக்களின் கோவில்கள் அதிகம் என நினைத்த எனக்கே இது அதைவிட அதிகமாக இருந்தது வியப்பைக் கொடுத்தது.
பகோடா கட்டுவதை ஜோர்ஜ் ஓவல் தனது பர்மாவில் சிலநாட்கள் (Burmese days ) என்ற நாவலில் எள்ளி நகையாடுவது சுவையானது . அந்த நாவலில் பல கெடுதிகளை செய்யும் வில்லனாக வரும் ஒரு பர்மிய நீதியரசர் ( நான் நினைக்கிறேன் நீதியரசர் ஒருவரை வில்லனாக்கும் துணிவு ஜோர்ஜ் ஓவலுக்கு மாத்திரமே முடியும்) தனது இறுதிகாலத்தில், தனது கெட்டவிடயங்களுக்கு விமோசனமாக பகோடா கட்டிவிடுவதாக நினைத்துக்கொண்டு எந்த தயக்கமும் இல்லாது எல்லாக் கெட்ட விடயங்களையும் செய்கிறார். அதாவது எவ்வளவு பாவம் செய்தாலும் நான் பகோடா ஒன்றைக் கட்டிவிட்டால் அந்த புண்ணியம் இறுதியில் தன்னைக் கழுவி சுத்தமாக்கிவிடும் என்ற எண்ணம். ஆனால் இறுதியில் பகோடாவை முடிப்பதன் முன்பு இறந்துவிடுகிறார். அவரது மனைவி போல் இருந்த ஒரு பெண் அதைத் தொடர்கிறார். ஒரு விதத்தில் பர்மாவின் காணப்பட்ட பகோடாக்கள் பலரது பாவங்களை எடுத்துக் காட்டுவதாக என்னால் நினைக்க முடிந்தது.
யப்பானியர்களும் பிரித்தானியர்களும் குண்டுபோட்டு சண்டையிட்டபோது இந்த பகோடாக்களே மக்களது வாழ்விடங்களாக இருந்தன. முக்கியமாக குகைகளில் அமைந்தவை இதற்கு பயன்படுத்தப்பட்டன.
SHAN NALLIAH க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி