பர்மாவின் வரலாற்றில் பல தலைநகரங்கள் இருந்தன. ஆரம்பத்தில் பகான் என்ற நகரம் மத்திய பகுதியில் இருந்தது. அங்குதான் பர்மா என்ற பரந்த நிலப்பரப்பு ஒரு தேசிய நாடாகியது. 300 வருடங்களாக பகான் அரசின் தலைநகரமாக இருந்தது.
இந்தக் காலம் 10-12 நூற்றாண்டுகள்- ஆசிய நாடுகளில் உன்னத காலமாக இருந்திருக்கிறது. கம்போடியா தாய்லாந்து தமிழ்நாட்டில் சோழர்காலம் என தேசிய அரசுகள் உருவாகி ஆட்சி நடத்திய காலம். அதே வேளையில் ஐரோப்பியர்கள் தேசிய அரசுகள் அற்று நகர அரசுகளாக (City states) இருந்ததும் சிலுவை யுத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் போரிட்டகாலம். உருவாக்கிய அரசுகளை தக்க வைக்க முடியாமல் சகோதர சண்டையில் அழிந்த ஆசிய நாடுகள் அதேவேளையில் ஐரோப்பிர்கள் படிப்படியாக முன்னேறியதும் வித்தியாசமான வரலாற்றுப் போக்குகள்.
பகானில் இருந்த பர்மிய அரசு, சீனாவை ஆண்ட மங்கோலியர் வம்சத்து குப்பிளாய்க்கான் தலைமையிலான படையெடுப்பால் அழிந்தது. இதன் பின் பர்மாவில் பல சிறிய குறுநில அரசுகள் உருவாகின. இறுதியில் உருவாகிய அரசே மண்டலேயை பர்மாவின் தலைநகரமாக்கியது.
மண்டலயை தலைநகரமாகக் கொண்ட பர்மா, பிரித்தானியர்களால் மூன்றாவது பர்மா- பிரித்தானியப் போரில் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியர் காலத்திலேதான் கடற்கரை நகரமான இரங்கூன் தலைநகரமாகியது . அந்தமான் கடலில் அமைந்த இந்த துறைமுகப்பட்டணம் பிரித்தானியர்கள் காலத்தில் கடல் வணிபத்தில் கல்கத்தாவுக்கு நிகரானது. இந்தியா வைசிராயின் கீழ் பர்மாவும் நிர்வாகித்ததால் இந்தியர்கள் இங்கு வந்தார்கள். அதில் ஏராளமானவர்கள் வங்காளிகள் மற்றவர்கள் தமிழர்கள். இவர்கள் வர்த்தகத்தில் மேலோங்கியதுடன் நூறு வருடங்களுக்கு மேல் இரங்கூனில் நடந்த மொத்த வர்த்தகத்தை இவர்களே முடிவு செய்தார்கள். சுதந்திரத்தின் பின்பாக பர்மிய இராணுவ அரசாங்கத்திடம் இந்தியர்கள் வியாபார நிலையங்களை மற்றும் உடமைகளை இழந்துவிட்டு வெளியேறினார்கள். வெளியேறியவர்கள் வியாபாரிகளும் மற்றும் மத்திய தரவர்க்கத்தைசேர்ந்த படித்தவர்கள். சாதாரண இந்தியர்கள் தொடர்ந்தும் பர்மாவில் வசித்தார்கள். தற்பொழுது இந்தியர்கள் ஐந்து இலட்சத்துக்கு மேல் அங்கு இருப்பதாகச் சொன்னார்கள்; கடந்த இராணுவ அரசு எந்த புள்ளி விபரமும் எடுக்கவில்லை.
யங்கூனில் பல வருடங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வீட்டில் அங் சான் சூ சி வீட்டின் கேட் மேல் தோன்றி மக்களை பார்ப்பதால் அங் சான் சூ சியின் வீடு யங்சூனில் மட்டுமல்ல தொலைக்காட்சியால் உலகெங்கும் எடுத்துச் சென்று பிரசித்தமானது.
அங் சான் சூ சியின் வீடு
நாங்கள் அங்கு போனபோது சீனாவில் இருந்து வந்த பயணிகள் அங்கு கூடி நின்றார்கள். அதிகமாக பர்மாவுக்கு உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் சீனர்கள். இரண்டாவது மூன்றாவது இடத்தில் தாய்லாந்து யப்பான் என அதிகமானோர் ஆசியர்கள்தான் வருகிறார்கள். மேற்கு நாட்டவர்களது தொகை இன்னமும் குறிப்பிடும் அளவில் இல்லை என்றார் எமது வழிகாட்டி.
அங் சான் சூ சியின் வீட்டின் முன்பாக நின்று பலர் படம் எடுத்துக்கொண்டார்கள். நாங்கள் வந்த சிறிது நேரத்தில மூடியிருந்த அந்த வீட்டின் கம்பவுணட்; கதவு திறந்து கொண்டது.
நாங்கள் அருகாமையில் இருந்த பிரபலமான புத்தர் சயனத்தில் இருக்கும் பகோடாவுக்கு சென்றோம் (The Chauk Htut Gyi pagoda in Yangon)) 230 அடி நீளமானது. இது பர்மா சுதந்திரமடைந்த பின்பாக கட்டப்பட்டது. புத்தரின் பாதத்தில் உள்ள ரேகைகளை பெரிதாக்கியிருந்தார்கள். அது மற்ற இடங்களில் பார்க்காத விடயம்.
பர்மாவில் உள்ள புத்த ஆலயங்களில் எவற்றிலும் உண்டியல் இருப்பதில்லை. மேடையில் பெரிய தட்டு திறந்தபடியே இருக்கும். எல்லோரும் அதில் பணத்தை வைப்பார்கள். உண்டியல் வைத்து பூட்டு போடுவது மட்டுமல்லாமல், கமரா வைத்து கண்காணிக்கும் மெல்பன் கோயில்கள் எனது மனதில் வந்து போனது.
அவுஸ்திரேலியா போன்ற செல்வந்த நாடுகளில் உண்டியல்கள் திருடுவது நடக்கிறது. மெல்பனில் நடந்த அரங்கேற்ற நிகழ்வில் அன்பளிப்புகள் போடப்பட்ட பெட்டி பணத்துடன் திருட்டுப் போனது. ஆனால் வறியநாடான பர்மாவில் ஆலயங்களில் பணம் திருட்டுப்போவதில்லை என்பது வறுமை மட்டும் குற்றங்களுக்கு காரணம் அல்ல என்பது புரிந்தது. திருட்டு கலாச்சாரத்தின் கூறு என்பதை புறக்கணிக்க முடியாது.
பர்மாவில் அபின் வியாபாரத்தை பிரித்தானியரால் செய்ய முடியவில்லை. ஆனால் பர்மாவை கைப்பற்றி சீனாவின் தென்பகுதியூடாக செல்வதற்கு முயன்றார்கள். 19; ஆம் நூற்றாண்டில் தற்போதைய கொலம்பியா மாபியா போல் அபின் கடத்தல் வியாபாரத்தை செய்தவர்கள் பிரித்தானியர். பர்மியர் அதிக அளவு மது குடிக்கவில்லை. ஆனால் நமது பனங்கள்ளு அங்கும் கிடைக்கும். அத்துடன் வெற்றிலை பாக்கு தாரளமாகப் போடுவார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்