
இரங்கூன் வீதியில் தலையை மூடியபடி இந்திய முகத்துடன் ஒரு இஸ்லாமிய பெண் எதிரில் வந்தாள். அப்பொழுது வழிகாட்டியிடம் ‘ எப்படி எல்லா மதக்கோவில்களும் இவ்வாறு ஒரே இடத்தில் இருக்கின்றன ? ‘ என்று கேட்டேன்.
‘ இவை பலகாலமாக இருக்கிறது. ‘
‘ அவ்வாறாயின் எப்படி இரக்கீன் மாநிலங்களும் புத்த மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சினை எனச் செய்திகள் வருகிறது ?’
‘அயல்நாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களால் எற்படும் பிரச்சினைதான் என்றான்
தற்பொழுது பிரபலமாக பேசப்படும் இந்த விடயத்தை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றில் சிறிது தூரம் பயணிக்கவேண்டும்
மியன்மார் ஏழு மாநிலங்களும் ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாகிய ரக்கீன் (Rakhine State) பிரதேசம் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வாழும் தனி மாநிலம். இந்த மாநிலத்தின் வட மேற்குப்பகுதி தற்போது பங்களாதேசை அண்டியது. இந்த மாநிலத்தில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட 20 வீதமான சிறுபான்மையினர் எனும் ரொகினியா முஸ்லீம்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்பவர்கள். இதைவிட இதே அளவு வங்காளதேசத்தில் இருந்து குடியேறி இருப்பதாக பர்மிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதேச இரக்கீன் மக்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள்.
ரோகினியா(Rohingyas) முஸ்லீம்களின் பிரச்சினை இப்பொழுது தொடங்கியதல்ல. 1948 இல் இந்தியா பிரிந்தபோது ரோகினியர்கள் தங்களது பிரதேசத்தை அக்காலப் பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியான கொரில்லா யுத்தம் நடந்தது. பல வெளிநாடுகளின் தூண்டுதல்கள் இந்த ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தன. வங்காளதேசம் பாகிஸ்தான் சவூதி அரேபியா என பலரதும் தூண்டுதல்களால் நடந்த ஆயுதப்போராட்டத்தை பர்மா இராணுவம் தனது பலத்தால் அடக்கியது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் 2012 ஜுன் பத்தாம் திகதி நடந்த இனக்கலவரத்தில் இருபக்கத்திலும் உயிர் இழப்பும் உடமைகளை எரித்தலும் நடந்தது.
இரண்டு பக்கத்திலும் உயிர் சேதங்கள் நடந்தது. வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டன. இதன் பின் பர்மிய அரசாங்கம் அவசரகால பிரகடனம் செய்தபின் ரொகன்னியா மக்கள் கடுமையாக நடத்தப்பட்டார்கள். பர்மிய அரசாங்கம் ரோகின்னிய மக்கள் பலரை நாடற்றவர்களாக்கி அவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கவில்லை. அவர்களை வங்காள தேசத்தவர்கள் எனப் பிரகடனப்படுத்தி பல வழிகளில் இரண்டாந்தர பிரஜைகளாக்கியது.
பர்மாவின் சரித்திரத்தில் பலகாலமாக இரக்கீன் மாநிலம் தனி இராச்சியமாக இருந்தது. பர்மாவில் இருந்து மலைத்தொடரால் கிழக்கில் பிரிக்கப்பட்ட இந்த மாகாணம் மேற்கில் வங்காளக்கடல் அமைந்த பிரதேசமாகும். இரக்கீன் என்பதன் அர்த்தம் இராட்சதர்கள். அதாவது மற்றைய பர்மியர்களிலும் பார்க்க இவர்கள் கருமையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
இங்கு புத்தர் வந்துபோனார் என்ற ஐதீகமும் இலங்கையைப்போல் அங்குள்ளவர்கள் இடையே பரவியுள்ளது. இதனால் தங்களை புத்தமதத்தின் காவலர்களாக நினைக்கிறார்கள் போலும்!
பர்மியர்கள் இரக்கீனை 1734 இல் யுத்தத்தில் கைப்பற்றி பர்மாவுடன் இணைத்தார்கள். ரிக்கீனேசு மக்கள் ஐந்தாயிரம் வருடங்களாக சுதந்திரமான இராட்சியமாக வாழ்ந்ததாக அவர்களது இதிகாசக் கதைகளில் சொல்லப்படுகிறது. 1826 இல் நடந்த முதல் பர்மிய – இங்கிலாந்து போரில் ரிக்கீனேசை இந்தியாவின் வங்காளத்துடன் பிரித்தானியர்கள்; இணைத்து இந்தியப் பிரதேசமாக ஆண்டார்கள். பர்மா சுதந்திரமடைந்தபோது ரிக்கீனேசு பர்மாவின் பகுதியாகியது.
ரோகின்யா மக்களின் பிரச்சினையை பர்மாவில் பௌத்த இஸ்லாமிய பிரச்சினையாக்குவது இலகுவானது. ஆனால் உண்மை பல மடிப்புகளைக் கொண்டது. நான் பார்த்த பர்மாவின் மற்றைய பல இடங்களில் முஸ்லிம்கள் மத வழிபாட்டு சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்கள். அதேநேரத்தில் முஸ்லீம்களது மதம் கலாச்சாரம் என்பன பர்மாவில் தங்களை சிறுபான்மையாக்கிவிடும் என்ற அச்சம் பர்மியர்களிடம் உள்ளது. ஆனால் இந்த விடயம் பர்மாவுக்கு மட்டும் பொதுவானது அல்ல. பிலிப்பைன்;ஸ் , தாய்லாந்து என்பன முஸ்லிம்களை சிறுபான்மையாக கொண்டவை. அங்கு தொடர்ச்சியான ஆயுதப்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பர்மாவில் மற்றைய சிறுபான்மையாக வாழும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவர்கள் பர்மியர், அதாவது மங்கோலிய-தீபத் இனத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் புத்தசமயத்தவர்கள். ரொகினியர்கள் மொழியால் உடல் அமைப்பால் மதத்தால் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். இதை இலகுவாக இன மத வாதமென நாங்கள் சொல்லமுடியும்.
பர்மாவை பௌத்த இனவாத அரசு என பிரகடனப்படுத்த முனைவது நியாயமற்றது என்பதே எனது வாதமாகும். எந்த ஒருநாட்டிற்கும் தனது கலாச்சார மத விடயங்களை பாதுகாக்கும் உரிமையுள்ளது.
பர்மாவில் இவ்வளவுகாலமும் இருந்த இராணுவ அரசிற்கு பல சிறுபான்மையினத்தவரோடு பிரச்சினைகள் உண்டு. இராணுவங்கள் எப்பொழுதும் சுத்தியல்போன்றது. எந்தவிதமான பிரச்சனைகளையும் ஒரே மாதிரி தீர்ப்பதற்கு முயல்வன. இதனால்த்தான் மற்றய சிறுபான்மை இனங்களது உரிமைப் பிரச்சனைகளையும் இதுவரைகாலமும் அடக்குமுறையால் தீர்த்து முயன்று வருகிறார்கள்.
இலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்களை கொண்டு வந்து மலையகத்தில் சிங்கள மக்கள் இடையே குடியமர்த்தி பிரச்சினையை உருவாக்கியதுபோல் ரோகினிய மக்களின் பிரச்சினை பிரித்தானிய அரசால் வங்காளத்தையும் இரக்கீனையும் ஒன்றாக சேர்த்து ஆண்டபோது உருவாகியிருக்கிறது.
ஆங்கிலேயரின் காலனி ஆட்சிதான் பிரச்சனையின் மூலகாரணம். இந்த விடயத்தை வங்காளதேசம் மற்றும் உலக நாடுகள் பர்மாவுடன் ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்படும் ரோகினிய மக்களுக்கு நியாயமாக தீர்க்ப்படவேண்டியது அவசியமாகிறது.
••••••••
மறுமொழியொன்றை இடுங்கள்