டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்

எக்ஸைல் 1984
Sethi

நடேசன்
தமிழர் மருத்துவ நிதியத்திற்கு சிறிது சிறிதாக பணம் சேர்ந்தபோது எமது நடவடிக்கைகளை அகலப்படுத்த முயற்சித்தோம். அப்போது எனது மனைவி சியாமளா மட்டும் மருத்துவ நடவடிக்கைகளை கவனித்தவண்ணமிருந்தார். அதிகமாக மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தியவர்கள் எமக்கு அருகில் இருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணியினர். அதைவிட அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த இலங்கைத் தமிழர்களும் சிகிச்சைக்காக வந்தார்கள். அயலில் இருந்த சென்னை வாழ் தமிழர்களும் வரும்போது எமக்கு வேலைப்பளு கூடியது.

மருத்துவ அறிவை தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் உள்ளவர்களுக்கு ஊட்டும் விடயத்தில் முகாம்களில் வாழும் கல்வி கற்றவர்களில் முக்கியமாக இளம்பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு வாரகாலத்துள் அடிப்படையான உடல்நல விடயங்களை கற்பித்தும் மற்றும் முதல் உதவி போன்றவற்றை பயிற்றுவிப்பதற்கும் திட்டமிட்டு செயற்பட்டோம்.

அகதிமுகாமில் மருத்துவ விழிப்புணர்வூட்டிய சிலரைத் தேர்வு செய்து திருப்பூரில் உள்ள அரசுசார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு வாரகாலப் பயிற்சிக்கும் ஒரு உடன்படிக்கையைச் செய்தோம்.
அக்காலத்தில் சென்னையில் உள்ள பல மருத்துவ நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு நாங்கள் கடிதம் கொடுத்தபோது குறைந்த பணத்திலோ அல்லது இலவசமாகவோ செய்தார்கள். அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஈழம் என்ற சொல் மந்திரமாக இருந்தது. இதைத் தவறாக பாவித்தவர்களையும் முக்கியமாக சில தமிழர்கள் தம்மை அகதிஎனச் சொல்லி தமிழ்நாடெங்கும் உள்ள கோயில்களுக்கு இலவசமாக இரயில்களில் யாத்திரை செய்தவர்களையும் எனக்குத் தெரியும்.

அகதி முகாம்களில் வசிப்பவர்களுக்கான மருத்துவ பயிற்சியை எனது மனைவியும் செய்யும்போது முகாம்களுக்குச் சென்று பயிற்சிக்கு ஆட்களை அழைத்துவருவதும் எனது தொழிலாகியது. கன்னியாகுமரி தூத்துக்குடி முதலான இரண்டு மாவட்டங்களையும் தவிர்த்து மற்றைய எல்லா மாவட்டங்களுக்கும் சென்றுவந்துள்ளேன். சென்னையில் இருந்து தெற்கே மண்டபம் வரையுமுள்ள தமிழ்நாட்டு கடற்கரையெங்கும் இலங்கை அகதிகள் இருந்த புயல் பாதுகாப்பு மண்டபங்களெங்கும் கால்கள் மணலில் புதைய தோளில் சுமந்த பொதியுடன் நடந்த காலங்கள் இனிமையானவை. ஏதோ ஒரு முக்கியமான கடமையை ஆற்றுவதற்காக இந்தியா வந்துள்ளேன் என நினைத்த நாட்கள் அவை.

இப்படி ஒரு நாள் நாகப்பட்டிணம் அருகே இருந்த அகதிமுகாமிற்கு போக வேண்டியிருந்தது. பஸ்சில் இருந்து இறங்கி சில கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அன்று என்னுடன் கருணாநிதியும் துணையாக வந்தான். எமக்கு ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர் (பெயர்கள் நினைவு வைக்காமல் ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர். எல். எஃப. இனரை தோழர் என்பது இலகுவானது) என்னையும் உதவியாக இருந்த கருணாநிதியையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மூன்று பேராக பயணித்தார்.

மூன்று பேர் ஒன்றாக ஒரே சைக்கிளில் செல்வதால் பொலிசின் கண்களில் இருந்து விலகுவதற்காக பிரதான பாதைகளை விலக்கி தோட்டப் பிரதேசங்களுடாக சென்றபோது மதியசூரியன் சுட்டெரித்தது. சைக்கிளில் நான் நடுவே கருணாநிதி பின்னாலும் அமர்ந்திருக்க பழைய மோட்டார் சைக்கிள் சத்தமிட்டபடி அந்தப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணித்தது. பனைகளும் தென்னைகளும் ஆங்காங்கு இருந்த மணல் தன்மையான தோட்டப்பிரதேசம்.

மழைக்காலத்தில் மானாவாரியாக அங்கு கச்சான் கடலை சாகுபடி செய்து அறுவடைக்கு பயிர்கள் தயாராக இருந்தது. எதிரில் இருந்து வந்த காற்றில் கலந்திருந்த உப்புச்சுவை நாக்கில் கரித்தபோது கடற்கரைக்கு சிறிது துரம்தான் இருப்பதை உணர முடிந்தது.

பல பனை மரங்கள் வரிசையாக பாதையின் இருபுறமும் அணிவகுத்திருக்கும் காவலாளிபோல் நின்றிருத்த பிரதேசத்தில் பாதையூடாக சென்றபோது திடீரென மரத்தின் மறைவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் எமது மோட்டார் சைக்கிளை சூழ்ந்து கொண்டதும் எமது சைக்கிள் நிறுத்தப்பட்டது. திரும்பிப்போகும்படி கூச்சலிட்டபடி வந்தவர்கள் தர்ம அடியாக கைகளினால் எங்களை அடித்தார்கள். அடிகளில் விரோதமான வேகம் இருக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் நான் நடுவில் இருந்ததால் பெரும்பாலான அடி கருணாநிதிக்கும ஈரோஸ் தோழருக்கும் பட்டது. கருணாநிதி இறங்கி தனது தலையை பொத்திக் கொண்டதால் அடிகள் அவனது தோளில் விழுந்தது. அடி, உதைகளை வாழ்க்கையில் பார்க்காத நான் இன்னமும் சைக்கிளில் உறைந்து போய் இருந்தேன் ஈரோஸ் தோழர் தலையில் ஹெல்மெட் இருந்ததால் அவர் தலை தப்பியது. ஆனால் அவருக்கு தோளிலும் நெஞ்சிலும் அடிகள் விழுந்தன. சிறிது நேரத்தில் ஏதோ நினைத்தரோ ‘நாங்கள் ஈழத்தவர்’ என்று அவர் கூவியபோது விழுந்த அடி மந்திரத்தால் கட்டப்பட்டதுபோல உடனே நின்றது.

அடித்தவர்கள் உடனே மன்னிப்புக் கேட்டார்கள்.

அடித்தவர்களில் வெள்ளை வேட்டி கட்டியபடி தலைமை வகித்தவர் விடயத்தை விளக்கினார்.

அந்தக் கடலைத் தோட்டத்தை அறுவடை செய்ய உள்ளுர்த் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்டிருக்கிறார்கள. அதைக் கொடுக்க மறுத்த தோட்ட உரிமையாளர் வெளியூரில் இருந்து கூலியாட்களை கொண்டுவர இருந்ததால் அப்படி வருபவர்களை அடித்து திருப்பி அனுப்ப உள்ளுர்த் தொழிலாளர் பனைகளிடையே மறைந்திருந்தார்கள். அந்த இடத்தில் அந்த நேரத்தில் நாம் சென்றதால் எமக்கு தர்ம அடி கிடைத்தது. அடித்தவர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்து எங்களை உபசரித்தார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் இருந்துவிட்டு அகதி மக்கள் இருந்த புயல் பாதுகாப்பு மண்டபத்திற்கு சென்றோம்.

தமிழ்நாட்டில் வசித்தபோது நான் பார்த்த ஒரு விடயம் தமிழ்நாட்டவர்களிடம் மிக இலகுவாக கூட்டமாக (mob mentality) ஒரே மனப்பான்மைக்கு சென்று விடுவார்கள். இதற்கு அதிக காரணம் தேவையில்லை. ஆனால் தனியாக இருக்கும்போதுதான் உண்மைகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்வார்கள்.

எமது மருத்துவ நிலையத்தில் காலையில் வைத்திய சேவையளிப்பது என் மனைவியாக இருப்பதால் இரவு நேரத்திற்கு ஒருவரை நியமிப்பது என முடிவு செய்தோம். எமக்கு உதவியாக இருந்த கருணாநிதியுடன் ஒரு வைத்தியரை தொடர்ந்து வைப்பதற்கு முடிவு எடுத்தபோது அக்காலத்தில் மலையகத்தில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்மநாபாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது சகோதரர் ஏற்கனவே ஈழமக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என நினைக்கிறேன். டொக்டர் பொஸ் எனப்படும் இவர் தோட்ட வைத்திய அதிகாரியாக இருந்தவர். 83 இல் பாதிப்படைந்தவர். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பஸ்தர் என்பதால் அவரை வேலைக்கு அமர்த்திவிட்டு பகலில் எனது மனைவி கிளினிக்கைப் பார்த்துக் கொள்வார். இரவில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என அவரைக்கேட்டுக்கொண்டோம். ‘எங்களால் இந்தியப்பணத்தில் 500 ரூபாய் மட்டும் தரமுடியும். இதனை உங்களுக்கான வேதனமாக நினைக்கவேண்டாம். அப்படி வேதனம் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் உங்களுக்கு இந்தப் பணம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றேன்.

டொக்டர் பொஸ் வேலையை ஏற்றுக் கொண்டார். அவர் எப்பொழுதும் மடிப்புக் கலையாத முழுக்கை சட்டையும் அணிந்து அதனை முழுநீளமாக விடுவார். மலையக சீதோஸ்ணத்தில் பழகிய பழக்கம் சென்னை வெய்யிலிலும் அதை விடமறுத்தார்.

இந்தக் காலத்தில் இயக்கங்களில் கால் இழந்தவர்களையும் எம்மால் பார்க்க முடிந்தது. அப்பொழுது எமக்கு ஜெய்ப்பூர் காலணி பற்றிய விடயங்களையும் அறிய முடிந்தது.
86 ஆம் ஆண்டில் தமிழர் மருத்துவ நிதியத்தின் செயலாளரான நானும் நண்பன் டொக்டர் சிவநாதனும் அக்காலத்தில் ஜெய்ப்பூர் செயற்கை காலை அறிந்து, அங்கு சென்றோம்.

Awaken02486

பம்பாயில் பரதம் பயின்ற சுதா சந்திரன் திருச்சியில் நடந்த விபத்தில் காலை இழந்து ஜெய்ப்பூர் செயற்கைக் காலை பொருத்திய பின் நடனமாடி மயூரி திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறியப்பட்டார். இந்த விடயம் அக்காலத்தில் மிக முக்கியமாக பேசப்பட்டது.

எலும்பு சத்திர சிகிச்சை வைத்தியரான டொக்டர் பிரமோத் கரன் சேத்தி (Dr Pramod Kran Sethi) ராம் சந்தரால் Ram Chandara )ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட அலுமினியத்தால் ஆன இந்த செயற்கைக் கால்கள் டொக்டர் சேத்தியினால் முன்னேற்றமாக தரப்படுத்தப்பட்டு பலருக்கும் பொருத்தப்பட்டது. இந்தக் கால்கள் காலணி அணியாதவர்களுக்கு ஏற்றபடி உள்ளதால் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு உகந்தது. மிகக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். நிலத்தில் காலை மடித்தபடி இருப்பது, வயலில் இறங்கி வேலை செய்வது முதலான நடைமுறைக்கு இந்த செயற்கைக் கால்கள் இலகுவானது. அக்காலத்தில் போர் நடந்த ஆப்கானிஸ்தான் மொசாம்பிக் போன்ற நாடுகளில் மிதிவெடியால் கால்களை இழந்தவர்களுக்கு இது பெரிதும் பயன்பட்டது

முதலாவதாக ரயிலில் டெல்லி பின்பு ஜெய்ப்பூர் சென்றது மறக்க முடியாத அனுபவம். கட்டிடங்களெல்லாம் மென்சிவப்பு நிறத்தில் இருந்ததும் வண்ணவண்ண தலைப்பாக்கள் கட்டிய மனிதர்கள் மொட்டாக்குப் போட்ட கலர்கலரான பெண்கள் பாதைகளில் ஓட்டகங்கள் என ஜெய்ப்பூர் அக்காலத்தில் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஜெய்பூருக்கு இரவு சென்றதும் ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் நாங்கள் காலையில் சேவா மான்சிங் வைத்தியசாலைக்குச் சென்று விசாரித்தோம். அங்கு உள்ளவர்கள் தொலைபேசியில் ‘இலங்கைத் தமிழர்கள் இருவர் உங்களை தேடிவந்திருக்கிறார்கள்’ என்றார்கள்.

‘உடனே அனுப்பவும்’

அந்த இளம் காலை நேரத்தில் டொக்டர் சேத்தியின் வீட்டில் உபசரிக்கப்பட்டோம்.

டொக்டர் சேத்தி நாங்கள் சென்ற காலத்தில் தனது வேலையில் இருந்து இளைப்பாறியிருந்தாலும் தொடர்ச்சியாக ஜெய்ப்பூர் கால்விடயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அழைப்பில் தான் ஆப்கானிஸ்;தான் சென்றதையும் அங்கே ஜெய்ப்பூர் செயற்கைக் கால் செய்வதற்கு தாங்கள் பயிற்றுவித்ததையும் எமக்குக் கூறினார் அந்த எளிமையான மனிதர்.

நாங்கள் இலங்கையில் நடக்கும் போரை விளக்கிவிட்டு ‘தற்பொழுது பெருமளவில் தேவை இல்லாவிடினும் எதிர்காலத் தேவையைக்கருதி சிலரை செயற்கை கால் செய்வதில் பயிற்றுவிக்க விரும்புகிறோம்’ என்றேன்.

அதற்கான ஆவன செய்வதாக உறுதியளித்தார். காலையுணவை அவரது வீட்டில் உண்ட பின்பு வெளியேறினோம்.
சில மணி நேரம் அவருடன் பேசியதில் அவரது எளிமையும் மனிதாபிமான உணர்வும் சேவை மனப்பான்மையும் என்னை மிகவும் கவர்ந்தது.

உலகப் புகழ் பெற்ற ஓதோபீடிக் சேர்ஜன் என்பதற்கான தன்மை எதுவும் அவரது வார்த்தையில் வெளிவரவில்லை. மருத்துவ சொற்கள் எதுவும் பாவிக்காது சாதாரண மனிதராக அவர் பேசினார்.

இறுதியில் ‘நீங்களா இந்த ஜெய்ப்பூர் காலை வடிவமைத்தது? என்ற எனது கேள்விக்கு அமைதியாக ‘அதன் பெருமை ராம் சந்தருக்கே சேரும் என்றார்’

டொக்டர் சேத்தி காசியில் பிறந்தவர் மருத்துவராகிய பின்பு எடின்பெரோவில் எலும்பு முறிவு சத்திரசிகிச்சையில் பயிற்றப்பட்டவர். ஆரம்பத்தில் மரத்திலும் இரப்பரிலும் ஜெய்ப்பூர் காலை வடிவமைத்த ராம் சந்தரின் வடிவமைப்பை பிற்காலத்தில் நாங்கள் பார்த்தபோது அலுமீனியத்தை உபயோகித்து அக்கால்களின் நிறையை குறைத்தார்கள்.

அதன் பின்பு மூன்றுதடவை ஜெய்ப்பூர் சென்று 18 இலங்கைத் தமிழர்களை பயிற்றுவித்தோம். இதன் பின்பே இலங்கையர் பலர் அரசாங்கத்தின் சார்பில் பயிற்றப்பட்டனர்.

எலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராகிய டொக்டர் பிரமோத் கரன் சேத்தி பேராசிரியராக இருந்து இளைப்பாறியவர். இவரது சேவைக்காக இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதும், பிலிப்பைன்ஸ் அரசால் ராமன் மாக்சேசே விருதும் அளித்தும் கௌரவிக்கப்பட்டவர்.

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சொந்தமான டொக்டர் சேத்தி தனது 80 ஆவது வயதில் 2008 ஜனவரி 6 ஆம் திகதி காலமானார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: