வவுனியாவில்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் ஒன்று கூடலும்.
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் பணிமனையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு. கணேஷ் தலைமையில் நடந்தது.
நிதியத்தின் ஸ்தாபகரும் நடப்பாண்டின் துணை நிதிச்செயலாளருமான திரு. லெ. முருகபூபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியை உதவி பெறும் மாணவர்களே மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.
உதவி பெறும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக வங்கிக்கணக்குகள் தொடங்குவது தொடர்பான தகவல் அமர்வைத்தொடர்ந்து, நிதியத்தின் உதவியை 1988 முதல் பெற்ற முதல் மாணவியும் கல்வியை இடைநிறுத்தாது நிறைவுசெய்து பட்டதாரியாகியவருமான தற்பொழுது வவுனியா சைவப்பிரகாச வித்தியாலய ஆரம்ப பாடசாலை அதிபருமான திருமதி கிருஷ்ணவேணி நந்தன் உரையாற்றினார்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள அன்பர்களின் தொடர்ச்சியான ஆதரவினால் கல்வியைத்தொடர்ந்து பட்டதாரியாகி ஆசிரியராக பணியாற்றி தற்பொழுது அதிபர் தரத்திற்கு தான் உயர்ந்திருப்பதற்கு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அளப்பரிய சேவையே அடிப்படைக்காரணம் என்றும் 26 ஆண்டுகளுக்குப்பின்னர் அதே நிதியத்தின் நிகழ்வில் கலந்துகொண்டது மனதிற்கு நிறைவுதருவதாகவும் குறிப்பிட்டார்.
தற்பொழுது நிதியத்தின் உதவியை பெறும் மாணவர்கள் இதனை முன்னுதாரணமாகக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கல்வி நிதியத்தின் உதவியினால் பயனடைந்த மாணவிகள் செல்வி ஆர் . வேணுகா மற்றும் மேரி கீர்த்திகா ஆகியோர் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகங்களுக்கு சமீபத்தில் தெரிவாகியுள்ளனர்.
இம்மாணவிகள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தெரிவித்தனர்.
தற்பொழுது உதவிபெற்று வரும் மாணவிகள் செல்வி பிரமிளா தேவராஜா, செல்வி கயானா கங்கை நேசன் ஆகியோர் பாடல்கள் பாடி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.
வவுனியா இலுப்பைக்குளத்தில் இயங்கும் இரட்சண்ய சேனை விடுதியில் போரில் பெற்றவர்களை இழந்த பெண் பிள்ளைகளை பராமரித்துவரும் அருட்சகோதரி குமாரி அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்