உண்மைகள் இரண்டு

எக்ஸோடஸ்1984
The day we see the truth and cease to speak is the day we begin to die -Martin Luther King Jr

நடேசன்

pathmanaba

நானும் விசாகனும் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் மனதை பலகாலமாக நெருடிக்கொண்டிருந்தது.

ஏன் இன்னமும் அந்த விடயம் என்னைப் பாதிக்கிறது?

அது ஒரு சகோதரனை பறிகொடுத்த தொடரும் சோகத்தின் நிழல்.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான பத்மநாபவை பொறுத்தவரை, நாம் அவரை இரஞ்சன் என அழைப்பதுதான் வழக்கம். 84 ஆம் ஆண்டில் ஒரு காலைநேரம் என்னையும் விசாகனையும் எமது அறையில் சந்தித்து ஒரு இருபது அல்லது இருபத்திரண்டு வயதான இளைஞனை எமக்கு அறிமுகம் செய்து அவரை ஊருக்கு (இலங்கை) அனுப்பும் வரையில் எமது அறையில் சில வாரங்கள் வைத்திருக்கும்படி கேட்டார்.

அவனது பெயர் புனைபெயர் என்பதால் அதை இங்கு எழுதவில்லை. அவனது தோற்றம் மிகவும் திடகாத்திரமானதுடன் வட இந்தியர் போன்ற நிறங்கொண்டவன். பார்த்தவுடன்; பொலிவூட் சினிமா நடிகனின் தோற்றம் மனதில் வந்து போகும். ஆனால் அவனது தமிழ் உச்சரிப்பில் இருந்து அவன் கிழக்கு மாகாணம் அதிலும் தென்கிழக்கு எனப்புரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் அவனது ஊரையோ, உறவையே அறிய முற்படவில்லை. அவனும் எங்களிடம் சொன்னதும் இல்லை.

எங்களோடு வெளியே சாப்பிடுவதும் சினிமாப் படம் பார்ப்பதும் என இருந்தாலும் அவனது முகத்தில் ஒரு சோகத்தின் நிழல் படர்ந்திருந்தது. எங்களை ஒரு மூத்த சகோதரர்களாக நினைத்து பழகிவந்தான். அவன் கராத்தே கற்றவன் என்பது நாம் அறிந்து கொண்ட விடயம். உலோக சில்லுகளை எறிவது, கத்தியை வீசுவது போன்ற பாதுகாப்பு கலைகளில் பயிற்சி பெற்றவனாகவும் இருந்தான்.
அவனோடு இருந்த காலத்தில் சென்னையின் பல இடங்களில் நடு இரவு சினிமா பார்த்துவிட்டு இரவுவேளையில் நடந்து வருவோம்

அவன் எங்களை விட்டுச் சென்ற பின்பு மீண்டும், பத்மநாபா எம்மை சந்தித்து அவனை வைத்திருந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு ‘அவர் இந்தியாவில் பயிற்சி பெற்ற இஸ்லாமியத்தோழர். எங்களோடு சேர்ந்து பலகாலமாக இயங்கியவர். தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழ் -முஸ்லிம் நெருக்கடியால் கொஞ்சம் மனம் கலங்கிவிட்டார். மேலும் ஊருக்கு போவதற்கும் விரும்புகிறார். அதுவரையும் அவரை மற்றத் தோழர்களோடு கலந்து இருக்கும்போது அவருக்கு மனக்கஷ்டமாக இருக்கலாம். அதுதான் உங்களுடன் சேர்த்துவிட்டேன்’ என்றார்.

பிற்காலத்தில் அந்த இஸ்லாமியத் தோழர் இஸ்லாமிய ஊர்காவல் படையோடு சேர்ந்து இயங்கியபோது ஈரோஸ் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டதாக அறிந்து மிகவும் மனவருத்தப்பட்டேன். பல தடவைகள் ஒரே உணவுப்பொதியில் ஒன்றாக சாப்பிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதம் வாழ்ந்திருந்தோம்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒன்றாக வாழ்ந்த சிறுபான்மை சமூகங்களை இரண்டாக பிளந்ததும், அதற்கான ஆப்பை வைத்ததும் இலங்கை அரசாங்கமோ அல்லது விடுதலைப்புலிகளே அல்ல. இந்த இருதரப்பிலும், இலகுவாக நாம் சேறை வீசினால் அங்கு அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். ஏனென்றால் அவர்கள் சென்னை மாநகரத்தில் இரயில்வே தண்டவாளத்தருகே தொடர்ச்சியாக அமைந்திருக்கும் குட்டி சுவர்கள் போன்றவர்கள். அந்தச் சுவரின் அருகே குடிசையில் வாழும் பெண்கள் மாட்டுச்சாணியை வட்டியாகத் தட்டி உலர்த்துவதற்கு பயன்படுத்துவார்கள். ஏற்கனவே அசிங்கமான வசனங்களும் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதால் அதில் எறியப்பட்ட சாணி மேலும் அசிங்கப்படுத்த முடியாது.

84 ஆம் ஆண்டு சித்திரையில், கிழக்குமாகாணத்தில் ,அம்பாறையில் அமைந்த காரைதீவு என்ற கிராமத்தில் முதன்முதலாகக் கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் பங்கு எதுவும் இல்லை என என்னால் கூறமுடியாவிட்டாலும் – அக்காலத்தில் ஆயுதம் தரித்திருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி மற்றும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த காரைதீவு இளைஞர்கள் பங்குபற்றியதால் சாதாரண மக்களிடம் உருவாகிய பிரச்சினை இரு இனங்களிடையே உருவான நெருக்கடியானது. இதற்கு முன்பாக பல இஸ்லாமிய இளைஞர்கள் முக்கியமாக புளட் மற்றும் ஈ பி ஆர் எல்; எஃவ் என்ற இரு இயக்கங்களில் கிழக்கு மாகாணத்தில் இணைந்திருந்தது மட்டுமல்ல, இந்தியப் படைகளிடமும் பயிற்சியும் பெற்றார்கள்.

அவ்வாறு பயிற்சி பெற்ற இளைஞர்கள் அந்தச் சம்பவத்தின் பின்பு மனக்கசப்படைந்து இருந்தபோது அக்காலத்தில் சென்னையில் இலங்கை பிரதி தூதுவர் ஒருவரால் இளைஞர்கள் இயக்கங்களுக்கு எதிராக இயங்குவதற்கு கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். இந்த கைங்கரியத்தில் சில கிழக்கு மாகாண அரசியலவாதிகளும் பங்கு பற்றினார்கள். ஏற்கனவே கிழக்குமாகாணத்தில் இயக்கங்களில் சேர்ந்து, பின்னால் விலகியவர்கள் பலர் ஊர்காவல்படைகளில் சேர்ப்பதும், அவற்றை ஒருங்கிணைத்து பயிற்சியளிப்பதிலும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். அப்படியான அமைப்புகள் மத்தியகிழக்கில் உள்ள பற்றா (Fatah) மற்றும் ஜிகாத் (Jihad) என்ற பெயரில் செயல்பட்டார்கள். இவைகளில் சாதாரணமான இஸ்லாமிய மக்கள், பங்குஏற்ற மக்கள் அமைப்பாக இல்லாதபோதும் – இவைகள் இரு இனங்களைப் பிரிப்பதற்கு பாவிக்கப்பட்டது.

இப்படியாக இந்த அமைப்புகள் எதிர்ப்புரட்சி அமைப்பாக வளர்க்கப்பட்டது. இந்தப் போர்முறையை கொண்டு வந்தவர் அக்காதேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி. பிற்காலத்தில் இது மிகவும் பிரயோசனமான புலிப்பொறியாக மாறியது. அவரது முயற்சி உண்மையில் மிகவும் சாணக்கியமானது. இதற்கான பாராட்டுதலை அவர் பிற்காலத்தில்கூட பெறவில்லை. அமைச்சர் லலித் அத்துலத் முதலி மிகவும் சாணாக்கியமானவர். இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்தால் விடுதலைப்புலிகள் 2009 வரை நீடித்திருக்க முடிந்திராது. மேலும் இவ்வளவு தமிழர்கள் சிங்களவர் இறந்திருக்க நேர்ந்திராது.

பற்றா (Fatah) மற்றும் ஜிகாத் (Jihad) அமைப்புகள் செய்த செயல்களுக்கும் பல படிமேலே சென்று, புலிகள் பலமடங்கு பாதகமான செயல்களான காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள், வடபகுதியில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுதல் என்பவற்றில் ஈடுபட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதிகள், இன அழிப்பாளர் என்று தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொண்டார்கள்.
——

தமிழ்நாட்டில் நான் வாழ்ந்த காலத்தில் பலர் பல்வேறு வயதில், பின்புலத்தில் எனது நண்பர்கள் ஆகினார்கள். அவர்களது நினைவுகள் என் இதயத்தில் ஆழமானவை. அவர்களில் முக்கியமானவர் தோழர் பாண்டியன் ஈ பி ஆர் எல் எஃவ் இயக்கத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்து சென்னையில் குடியிருந்தவர்கள். பாண்டியன் அக்காலத்தில் என்னிலும் பதினைந்து வயது மூத்தவராக இருந்த போதிலும், எமது நட்பு நெருக்கமானது. வல்வெட்டித்துறை பாரம்பரியத்தைக் கொண்ட இவர் – திருகோணமலையில் உதவி மேயராக இருந்தவர். இவரது மனைவி வல்வெட்டித்துறை. இவர்களுக்கு எட்டு ஆண்குழந்கைள் இருந்திருக்க வேண்டும். ஊரில் வசதியாக வாழ்ந்தவர்கள். இவர்களின் ஒரு மகன் அக்காலத்தில் ரெலோ இயக்கத்தில் சேர்ந்திருந்தான். மற்றைய ஒரு மகன் கப்பலில் வேலை செய்தான்.

சென்னையில் ஒரு நாள் இவரது வீட்டிற்குச் சென்று மாலை உணவருந்தியபோது அவரது மனைவி சொன்னார் ‘நம்முடைய இயக்கப் பொடியள் மதியம் வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள்’

எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தோழர் பாண்டியன் ஈபிஆர் எல் எவ்ஃ. ஆனால் மகன் ரெலோ இந்த வகையில் அவரது மனைவி “நம்மடை இயக்கமென்பது” யாரை குறிக்கிறது…?

தாங்க முடியாத மனக் குழப்பத்தை தவிர்க்க அவரை தனியே அழைத்துக் கேட்டேன்.

‘உங்கள் மனைவி நம்மட இயக்கமெனச்சொல்வது யார் தோழர.;…?

‘அவ சொல்வது விடுதலைப்புலிகள் இயக்கத்தை’

எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.

அவர் மேலும் சொல்லிய விடயங்கள் ஆச்சரியமளித்தன.

ஏற்கனவே தனது மகன் உட்பட வல்வெட்டித்துறை இளைஞர்கள் எண்ணூறுக்கு மேற்பட்டவர்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள் எனவும், இவர்கள் மாதம் தலா பத்து பவுண்ட்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்குவதாகவும் கூறினார்.

‘உங்களது வல்வெட்டித்துறையினர் எல்லோரும் விடுதலைப்புலிகளின் பின்னால் நிற்கும்போது நீங்கள் மட்டும் ஏன் ஈ பி ஆர் எல் எஃவ் வோடு இருக்கிறீர்கள்…?;”

‘என்ன செய்வது…? இந்த நாபாவோடு பேசித்தொடர்பு வைத்தபடியால் அந்த மனுசனை விட்டுப் போகமுடியவில்லை.’

ஐம்பது வயது இருக்கும்… ஆறு அடிக்கும் மேல் உயரமான பாண்டியன் முப்பத்தைந்து வயதான பத்மநாபவைப் பற்றி பேசிய விதம் எனக்கு மேலும் ஆச்சரியம் அளித்தது.

இந்தச் சம்பவம் மேலும் ஒரு உண்மையை புரியவைத்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அசுர வளர்ச்சிக்கு கோழித்தீனியில் கலந்த குறோத்ஓமோன் போன்ற புறக்காரணிகள் தவிர்ந்த சில அகக்காரணிகள் இருந்தன. அதில் முக்கியமானது வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களது ஒருமித்த பொருளாதார ஆதரவுடன் அவர்கள் காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த சட்டத்தை மீறிய விடயங்களை செய்த தொழில்நுட்பம் அவர்களால் விடுதலைப்புலிகளிடமும் அப்படியே மாற்றம் (Skill transfer) செய்யக் கூடியதாக இருந்தது.

பிரித்தானிய காலனி ஆட்சியில் மட்டுமல்ல ஏன் அதற்கு முன்பே… வல்வெட்டித்துறையினர் இந்தியா – இலங்கைக்கு இடையில் கடல் வாணிபம் செய்தவர்கள். நியாயமாக அவர்கள் செய்த வாணிபம் பிரித்தானியர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்தபின்பு சட்டவிரோதமாகியது. அவர்கள் இலங்கை – இந்திய சுதந்திரத்தின் பின்பாக உருவாகிய சட்டத்தை மதிக்கவில்லை. மேலும் நிலத்தின் சட்டம், நீரில் வாழும் அவர்களைப் பாதிக்காது என்று கூட அவர்கள் நினைத்து இருக்கலாம். இலங்கையின் நிலப்பகுதியில் வாழ்ந்தாலும் மனதளவில் மட்டுமல்ல, பொருள் நுகர்வதிலும் தமிழ்நாட்டவர்களைப்போல் தென்பட்டார்கள்.

77ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது நான் உட்பட பத்து மாணவர்கள் உடுப்பிட்டியில் தமிழர் கூட்டணியினரால் நிறுத்தப்பட்டு தேர்தலில் நின்ற சிறுபான்மைத் தமிழர் இராஜலிங்கத்திற்கு (அக்காலத்தில் தமிழ்கட்சிகள் பாவித்த சொற்பதம் எனக்கு விரல் கூசினாலும் பாவிக்கின்றேன்) சார்பாக பத்து நாட்கள் பிரசாரம் செய்தோம். அப்பொழுது வல்வெட்டித்துறையின் ஒரு பகுதியான பொலிகண்டி ஊரில் இருந்த ஒவ்வொரு வீடாக சென்றோம். ஒவ்வொரு வீட்டிலும் நான் கண்ட பொருட்கள் பல இந்தியாவைச் சேர்ந்தவை. சுவர்களில் இருந்த உருவப்படங்களில் இருந்தவர்கள் இந்தியத் தலைவர்கள். இப்படி இருந்தது ஆச்சரியமில்லை. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலருக்கு தமிழ்நாட்டு மோகமிருந்தது.

இவற்றுக்கும் மேலாக எனக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவென்றால் எங்களுடன் வந்து பத்துநாளும் வழிகாட்டியாக நடந்த பதினைந்து வயது சிறுவன் கடைசிநாள் என்னிடம் சொன்னதுதான்.

‘நீங்கள் கண்டியில் சிங்களவர்களுடன்தானே இருக்கிறீர்கள.;..? பயமில்லையா…?

‘பிரச்சினையில்லை. ஏன் கேட்கிறாய்?.’ என்றபோது சங்கு மார்க் வெள்ளை சாரம் கட்டியிருந்த அவன் தனது மடியில் இருந்து கறுப்பான சிறிய ரிவோல்வரை எடுத்தபடி ‘என்னிடம் ஒரு ரிவோல்வர் இருக்கு. தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். யாராவது சிங்களவன் உங்களோடு சேட்டைவிட்டால் உதவும்’ என்று எனக்கு நீட்டினான.

‘நான் தேவை வராது என நினைக்கிறேன் ‘ எனச்சொன்னவாறு எனக்கு வந்த அதிர்வை சமாளித்தபடி பின்வாங்கினேன்.

அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றம் இன்னமும் நினைவில் தங்கியுள்ளது.

அவனைப் பொறுத்தவரை கண்டி எதிரிகளின் பிரதேசம். எதிரிகள் மத்தியில் நாங்கள் வசிப்பதாக அவனது எண்ணம் இருந்திருக்கவேண்டும்.

ஏராளமான வல்வெட்டித்துறை வீடுகள் கடத்தல் பொருட்களை வைப்பதற்காக பங்கர்களுடன் கட்டப்படவை என வல்வெட்டித்துறை நண்பனே சொல்லியிருந்தான்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு வட இலங்கையில் முதல் இராணுவ முகாம்களாக பலாலியிலும் பின்பு ஆனையிறவிலும் உருவாகியது. அவைகள் யாழ்ப்பாணத்தமிழரை அடக்குவதற்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டதல்ல. வல்வெட்டித்துறை கடத்தலைத் தடுக்கவும் இந்தியாவில் இருந்து தோணியில் இலங்கை வருவதைத் தடுப்பதற்குமே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டவர் இலங்கை வருவதை தடுக்கவும் வல்வெட்டித்துறை கடத்தல்காரரை பிடிப்பததற்கும் உருவாகியவை என்பது கசப்பான இரு உண்மைகள்.

சரித்திரகாலமாக நிலத்தில் உள்ள சட்டங்களை புறக்கணித்த இடமான வல்வெட்டித்துறையில் இருந்து எங்களது விடுதலைப் போராட்ட தலைவர்கள் உருவாகியது ஒரு முரண்நகையா…? இல்லை நியதியா…?

வெளிநாடுகளில் உருவாகிய விடுதலை இயக்கங்கள் குறைந்த பட்சம் தங்களுக்குள் சில விதி செய்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் போட்ட விதிகளையே இவர்கள் மீறியது எப்படி…?

இயக்கத்தவர்கள் திருமண விதிகளில் இருந்து- பாதுகாப்புப் படையிடம் சரணடையாமல் தற்கொலை செய்வது போன்ற விதிகள் எல்லாம் மீறப்படுவதற்காகத்தானா?

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: