ரிமதி, நீ இன்று செய்தது தேவையில்லாத விடயம். உனக்கும் காலோசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை முழு வைத்தியசாலைக்கும் எடுத்து செல்லாதே. சிவாவை நீ முரண்பட்ட விடயம் வைத்தியசாலையில் பெரிதாக்கப்படும். இன்னும் ஆறு மாதத்தில் உனது கிளினிக் தயாராகிவிடும். இது உனக்கு தேவைதானா? என்றாள் .
அவளது கைகள் அந்த புளுகீலரது கால்களை ரிமதி பாத்தோலியஸ் ஆணிகளைப் போட்டு உருக்கு பிளேட்டை இறுக்கமாக பொருத்துவதற்கு வசதியாக தூக்கி பிடித்தபடி கீழ் உதட்டை ஒன்றாக குவித்தபடி அவனை கண்களால் துளைத்தாள்
‘உனக்கு இலகுவாக கேள்வி கேட்டு விட்டு ஆலோசனை சொல்ல முடிகிறது. எனக்குத்தானே தெரியும். நான் பட்ட அவமானத்தின் காந்தல்,’ தலை நிமிராமல் தொடர்ந்து எலும்பில் ஆணியை திருகி இறுக்கியபடி
‘நான் அதை மறுக்கவில்லை. காலோசின் முதலாவது பிரச்சனை ஆட்களோடு மரியாதையாக பேசத் தெரியாது. இந்த பத்து வருடத்தில் நான் பலமுறை சண்டைக்கு போயிருக்கிறேன். நான் கேட்பது உனது பிரச்சனையை பலரது பிரச்சனையாக மாற்றதே என்பதுதான்.’
“நான் சிவாவிடம் கேட்ட கேள்வியை காலோசிடம் கேட்டிருக்க வேண்டும் என்கிறாயா?
‘அப்படி கேட்டால் உனது கேள்வியில் நியாயமிருக்கிறது என்பேன்’
‘மற்றவர்கள் பொறுப்பெடுத்து செய்யாமல் விட்டதால்தான் காயம்பட்ட செல்லப்பிராணிகள் கருணைக்கொலை செய்யப்படுகிறது. இப்படியான பிராணிகளை நான் எடுத்து ஆபிரேசன் செய்வது கலோசுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் நேரடியாக சொல்லி இருக்கலாம். அதை விட்டு தேனீர் அறையில் ரிமதி ஓவர்டைம்க்காக செய்வதாக பலருக்கு முன்பு கூறியது என்னை அவமானப்படுத்தும் விடயம்.’
‘இரவு பதினொரு மணிவரையும் ஓவர்டைம் போட்டிருந்ததை, ஜோன் லிஸ்மோர் அழைத்து விசாரித்தபோது நான் விளக்கம் அளித்தேன். போன புதன் கிழமை நாங்கள் ஆபிரேசன் செய்த பூனைக்கு இரண்டு இடத்தில் குடலை வெட்டவேண்டி இருந்தது. அடுத்த நாள் பின் போட்டிருக்க முடியாத விடயம் என்பதை விபரித்தேன்’
ஜெனட்டின் கேள்வியின் நியாயம் புரிந்தாலும் தனது தவறை ஏற்காமல் ரிமதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாலும், அவன் மனத்தில் காலோசின்மேல் ஏற்பட்ட ஆத்திரம் அடங்கவில்லை. மனத்தில் எரிமலை தொடர்ந்து குமிறிக் கொண்டிருந்தது. காலோஸ், சிவா மட்டுமல்ல எந்த வெளிநாட்டவர்களிலும் நல்ல அபிப்பிராயம் கிடையாது என்பதை அவனால் சொல்ல முடியாது. சொன்னாலும் அதை ஜெனட் ஏற்காமல் மேலும் எதிர்ப்பாள். தொடர்ச்சியாக அந்த ஆபரேசன் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு இருப்பது அவனது எண்ணங்களை அவள். அறியாது திரைபோட இலகுவாக இருந்தது.
ரிமதி பாத்தோலியஸசின் தந்தைவழி பாட்டனார் இங்கிலந்தில் இருந்து வந்தாலும் இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கப்பலில் இளைஞனாக பிரிஸ்பேன் துறைமுகத்தில் வந்திறங்கி, குயின்ஸ்லாண்டில் கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கி பின்பு கடும் முயற்சியால் கரும்புத் தோட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகினார். இவரது கரும்புத் தோட்டம் மகனது காலத்தில் இன்னும் பெரிதாகியது. இரண்டு தலைமுறையில் பெரிய கரும்புத்தோட்ட விவசாயக் குடும்பமாகியது. சிறுவயதில் ரிமதி இந்த கரும்பு தோட்டத்தில் வேலைகளை ஈடுபட்டாலும் ,கரும்பு விவசாயம் மனத்திற்கு பிடிக்கவில்லை. பிரிஸ்பனுக்கு சென்று மிருக வைத்தியம் படிப்பதையே குறிக்கோளாக இருந்தான். பாட்டனுக்கும் தகப்பனுக்கும் இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு ரிமதி படிக்க சென்றது அவர்களுக்கு புதுமையாக இருந்தது. பல தடவை சொல்லிப் பார்தார்கள். ரிமதி பிடிவாதமாக இருந்தான். ரிமதியின் தம்பி ஜேம்ஸ் முழு நேர கரும்பு விவசாயியாக மாறிவிட்டான்.
ரிமதியின் தந்தை ரெவர் பாத்தோலியஸ் பல காலம் அவுஸ்திரேலிய தேசியக்கட்சியில் அங்கத்தவராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளில் பிற்காலத்தில் அதிருப்தி கொண்டு கட்சியின் அங்கத்ததுவத்தில் இருந்து விலகி கொண்டார். எழுபதில் அவுஸ்திரேலிய கரையில் வியட்னாமியர் அகதிகளாக வந்து ஒதுங்கிய போது அக்காலத்தில் ஆட்சியில் இருந்த லிபரல் அரசாங்கத்தின் அகதிகளை வரவேற்கும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை. அக்காலத்தில் பிரதமரான மல்கம் பிரேசர் இந்த அகதிகளை அரவணைத்து குடியுரிமை கொடுத்து புதிய அத்தியாயத்தை இந்த நாட்டில் தொடக்கி வைத்தார். அதுவரையும் ஐரோப்பியர்களது நாடாக இருந்த அவுஸ்திரேலியாவில் பெருமளவில் ஆசியர்கள் குடிவந்தது பலரது மனங்களில் அச்சத்தை உருவாக்கியது. ஒருகாலத்தில் இந்த நாடு ஆசிய மக்களால் நிரம்பிவிடும் என்ற பய உணர்வு உருவாகியது. இதற்கு காரணம் பெருந்தொகையான ஆசியமக்களை கொண்ட பிரதேசத்தில் இந்த நாடு இருப்பதும் பூகோள அமைப்பு. அஸ்திரேலியா பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்களையே கொண்டு இருப்பதாலும் இப்படியான பய உணர்வுகளை தங்களுக்குள் நியாயப்படுத்தி மனக்கசப்போடு கட்சியில் இருந்தார்கள் ரெவர் பாத்தோலியஸ் போன்றவர்களுக்கு அதன் பின்பு நடந்த விடயம் விவசாயியான ரெவரால் பொறுக்க முடியவில்லை.. வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உணவு பண்டங்கள் திறந்த பொருளாதார கொள்கையில் இறக்குமதியாவதால் அதனால் அவுஸ்திரேலிய விவசாயம் நலிவதையும் ரெவர் எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறினார். சிறுவயதில் ரிமதிக்கு தந்தையின் அரசியல் கொள்கைகள் பல மனத்தில் பதிந்து விட்டது. அபோரிஜின தொழிலாளர்களும் சில பசிபிக் தீவுகளை சேர்ந்த மெலனீசிய மக்கள் கூலிகளாக கரும்பு வெட்டும் போது அவர்களது தோட்டத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். கருப்பு நிறத்தவர்கள் கருப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் குளிக்காமல் அழுக்காக இருப்பதுதான் என ரிமதி சிறுவயதில் நினைத்த காலமும் உண்டு. கறுப்பானவர்கள் கூலி வேலை மட்டும்தான் செய்வார்கள் என்ற சிந்தனையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் அதிக அளவில் வெளிநாட்டவர்களை அதிலும் ஆசியர்களை அனுமதிக்கிறது தவறு என்ற அவனது கருத்தில் மாற்றம் நிகழவில்லை. விவசாயத்தில் ஈடுபடும் அவுஸ்திரேலியர்கள் பலர் இந்த சிந்தனை உடையவர்கள். குயின்ஸலாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையினர் நகரத்தை விட்டு விலகி வாழ்வதால் இந்த சிந்தனை மற்ற மாநிலங்களைவிட பலமாக உள்ளது. இதன் காரணத்தால் ஆசியர்கள் வருகைக்கு எதிரான கொள்கையை மட்டுமே கொண்ட ஒரேநாடு என்ற கட்சியை போலின் கான்சன் எனும் பெண்மணி ஆரம்பித்து பல இலச்சம் வாக்குகளை பெற்று செனட்டராக முடிந்தது. பொருளாரத்தில் மந்தமான நேரத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போகும்போது புதிதாக குடிவருபவர்கள் அவுஸ்திரேலியரின் வேலைகளை எடுத்து கொள்கிறார்கள் என்ற கருத்து அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கூட ஏற்படுகிறது.
இப்படியான கசப்பு உணர்வுகள் மனிதமனங்களில் துளிர்விடும்போது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் மேல் இந்த வேற்றுமை உணர்வு ஏற்படுவதில்லை. தோற்றத்தில் ,கலாச்சாரத்தில், மொழியில், மதத்தில் வேறுபடும்; ஆசியர்கள் மற்றும் அரேபியர்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மிக சிறிய தொகையாக இருந்தபோதும்,
இப்படியான சிந்தனையில் உள்ளவர்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து வந்த ரிமதி பாத்தோலியஸ் மிருக வைத்தியராக படித்து முடிந்ததும் பிரிஸ்பேனில் வேலை செய்யும் காலத்தில் மெல்பேனை சேர்ந்த கைலியை சந்தித்து திருமணம் புரிந்து கொள்கிறான். பிரிஸ்பனை விட்டு இடம் பெயர்ந்து மெல்பேனில் வாழ விரும்பும் கைலியால் தூண்டப்பட்டு ரிமதி மெல்பேனில் சொந்தமாக கிளினிக் வைக்க முயலுகிறபோது பல தடவை வேலையில் இருந்து விடுப்பு எடுத்தான். சில நாட்கள் அதிகமாக மெல்பேனில் தங்கி சொந்த வேலையை பார்த்தால் வேலையில் இருந்த நீக்கப்பட்டான்.
மெல்பேன் வந்து கைலியின் வீட்டில் இருந்தபடி வேலை தேடிய போது இந்த வைத்தியசாலையில் வெற்றிடம் இருப்பதாக பழய நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துகொண்டதால் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்து கொண்டான்.. ரிமதி வேலையில் சேர்ந்த அன்று தனது மேலதிகாரியாக ஒரு ஆசியன் இருப்பதை எதிர்பார்கவில்லை. ஆனால் அதை மிக கஸ்டத்துடன் பொறுத்துக் கொண்ட போது காலோசின் நடத்தைகள் அவனுக்கு அநாகரிகமாக இருந்தது. பெண்களுக்கு முன்பு காமம் கலந்த நகைச்சுவையாக பேசுவது, மதிய நேரத்தில் மதுபான விடுதிக்கு போவது போன்ற இயல்புகள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ரிமதியினால் சகிக்க முடியவில்லை. ஆறுமாதம் அல்லது ஒருவருடம் எனது கிளினிக் தயாராகும் வரை இந்த இடத்தில் வேலை செய்யவேண்டியது என்று பொறுமையை கடைப்பிடித்தான். அந்த பொறுமையை சோதிப்பது போல் அன்று நடந்த சம்பவம் இருந்தது.
ஒரு நாள் காலை நேரத்தில் காலோஸ் ரிமதியை அழைத்து ‘நேற்று இரவு பதினொரு மணிவரையும் ஓவட்டைம் செய்தது என கணக்காளர் ஜோன் லிஸ்மோர் சொன்னார். அதிக ஓவட்டைம் செய்வது வைத்தியசாலை பணத்தை விரயமாக்கும் என்பதால் ஆதரிக்கப்படுவது இல்லை.’என்றான்
‘அரைவாசியில் நான் எடுத்த வேலையை விட முடியாது. அந்தப் பூனைக்கு வயிற்றில் நுால் சிக்கியிருந்ததால் இரண்டு இடத்தில் குடலை எடுக்கவேண்டி இருந்தது.’
‘ரிமதி இந்த வைத்தியசாலை பொது மக்கள் நன்கொடையில் இயங்குவது. பெரிய சத்திர சிகீச்சைகளை இங்கே செய்யமுடியாது. அதற்காக வெளியே விசேட ஸ்பெசலிஸ்ட்டுகள் உள்ளார்கள்.’
‘அப்படியானால் அந்த பூனையை கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்திருக்கும்.’
‘அது பரவாயில்லை.’
‘அந்த பூனையை காப்பாற்றக் கூடியதாக இருந்து அதை செய்யாவிட்டால் எனக்கு மிருக வைத்தியராக இருக்க தகுதி இல்லை என நான் நினைத்தேன்.’
கோபத்தில் கண்ணும் முகமும் சிவந்தபடி ஆனால் வார்த்தையின் ஒலியை உயர்த்தாமல் அமைதியாக
‘அந்தப் பூனையை காப்பாற்ற நீயும் உனக்கு உதவியாக இருந்த ஜெனட்டுக்கும் கொடுத்த ஓவட்டைம் பணத்தை இந்த வைத்தியசாலை நிர்வாகம் இழந்திருக்கிறது. ஆனால் அந்த ஆபிரேசனுக்கு சரியான பணத்தை அந்த உரிமையாளரிடம் நாங்கள் வாங்க முடியாது. நீ செய்த செய்த ஒப்பரேசன் உனது திறமையை பரீட்சிக்க செய்த சாகசம். உனது சொந்த செலவில் செய்தால் இதை யாரும் கேட்க போவது இல்லை.’ மீண்டும் சிரித்தபடி காலோஸ்
பொறுமையாக இருவரும் குரலை மெதுவாக வைத்தபடி பேசினாலும் இருவர் மனங்களிலும் ஒரு நிழல் யுத்தம் நடைபெற்றது.
‘நீங்கள் சொல்லுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.’ரிமதி இறுதியாக
‘இங்கே பார். உனக்கு விருப்பம் என்றால் வேலை செய். இல்லையேல் போய் கொண்டு இரு’என சொல்லி விட்டு காலோஸ் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ரிமதிக்கு ஆத்திரத்துக்கு அளவில்லை. முகத்திலும் கண்களிலும் கோபம் கொதித்தது. அந்த அறையில் பல முறை நாலா திசையும் நடந்தபடி சுவர்களை முஷ்டியால் பலமுறை குத்தினான். கால்களால் நிலத்தில் உதைந்தான். தனது கோபம் அடங்கும் வரை அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று பார்த்தும் பிரயோசனம் இல்லை. நேராக ஆப்பிரேசன் தியேட்டருக்கு வந்து அங்கும் கோபத்தில் ஆபிரேசன் மேசையில் பலமுறை குத்தியடி இருந்தான். வேலையைவிட்டு விலகி விடுவோமா என நினைத்தபோது குழந்தையை சுமக்கும் கைலியின் ஞாபகம் வந்து அவனைத் தடுத்தது.
இரண்டு நாட்களின் பின் தேநீர் அறைக்கு சென்றபோது காலோஸ் சொந்த கிளினிக்கை தொடங்குவதற்காக இங்கு ஓவட்டைம் செய்கிறார் போல என கணக்காளர ஜோன் லிஸ்மோரிடம் சொல்லி சிரித்தது மெதுவாக காதில் விழுந்து. அந்த இடத்தில் சென்று வாக்குவாதப்பட்டால் கைகலப்பில் முடியும் என்ற நினைப்புடன் ரிமதி தேநீர் அறைக்கு செல்லாமல் தனது வேலையை செய்ய திரும்பி சென்றான். அன்றில் இருந்து ரிமதி; காலோசுடன் பேசுவதைத் தவிர்த்தான். சந்திக்கும் போதெல்லாம் தலையை திருப்பியபடி சென்றான். இருவரும் ஒருவருடன் பேசாமல் இருந்தாலும் அந்த வைத்திய சாலையில் ஒரு நிழல் குருசேத்திரம் ஆரம்பமாகியது. போர் வியுகங்கள் வகுக்கப்பட்டு இருவர் பகுதிக்கும் பலர் சேனாதிபதிகளாகவும் காலாட்படை வீரர்களாகவும் சேர்ந்து கொண்டனர்.
——–
சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்த மறுதினம் புதிதாக சேர்ந்த மிருகவைத்தியர் ஷரன் பேட் காலோஸ் கூறியது போல் அழகானவள். இருபத்தைந்து வயதில் மெல்பேன் பல்கலைக்கழகத்தில் பயிற்சியை முடித்து விட்டு வேலைக்கு வந்திருந்தாள்.புதிதாக சுந்தரம்பிள்ளையும் ஷரனும் பெரும்பாலான நாட்கள் ஒன்றாக அடுத்த அறைகளில் வேலை செய்தார்கள். அடிக்கடி இருவரும் அபிபிராயங்கள் கேட்பதற்கோ ஒருவருக் கொருவர் உதவிகள் செய்வதற்கோ சந்திக்க வேண்டி வந்தது. ஷரனது சிரிப்பும் அதைவிட முக்கியமாக இடுப்பு கீழாக இறுக்கமான பாண்டை போட்டு இடுப்பை நகர்த்தும் விதம் ஆண்களை கிறுங்கப் பண்ணும். மெல்பேண் வசந்தத்தின் ஆரம்ப காலம் கொஞ்சம் குளிரான இருந்ததால் அவளது அழகிய கால்கள் மறைக்கப்பட்டு இருந்தன. நிச்சயமாக இன்னும் சில மாதங்களில் மெல்பேன் காலநிலையில் மாற்றம் ஏற்படும்போது இந்த வைத்தியசாலையில் பலவீனமான இதயங்கள் துடிப்பதை மறந்து விடலாம் அல்லது சிறிய உள்நாட்டு கலவரம் ஏற்பட வழியுண்டு என சிவா சுந்தரம்பிள்ளைக்கு நினைப்பு வந்தது. ஆனால் ஷரனுக்கு கைக்குழந்தை ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டதும் சுந்தரம்பிள்ளைக்கு உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது. தாயாகிய எந்த அறிகுறியும் அவளது உடலில் இருக்கவில்லை.
அழகான கன்னிமை குன்றாமல் தாயாவது விவிலியத்தில் மேரிக்கு மட்டும் தனியுரிமையா?
வேலையைக்கு வந்த சிலநாட்களில் சுந்தரம்பிள்ளையிடம் ‘சிவா நான் நாளைக்கு வருவதற்கு சிறிது நேரம் செல்லும். தயவு செய்து எனது வோட் இரவுண்டையும் செய்கிறாயா’என கேட்டு தோளில் கை போட்டாள்.
காலையில் எனது வேலையுடன் இவளது வேலையை சேர்த்து செய்வது இரட்டிப்பு வேலையாக இருக்குமே? இப்படி கேட்கிறாளே?
இவ்வளவு நெருக்கமாக வந்து நம்பிக்கையில் கேட்கும் போது எப்படி மறுப்பது என நினைத்தபடி சரி என சுந்தரம்பிள்ளை தலையாட்டினார்.
‘நன்றி’ எனக் கூறி மீண்டும் இறுக்கமாக தோளை அழுத்திவிட்டு சென்றாள்.
உண்மையில் பெண்களால் தேவையானபோது மற்றவரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற கலை தெரிந்திருக்கிறது. அழகை எந்த அளவில் பிரயோகிப்பது என்பது ஒரு கலை. மருந்து மாதிரி பாவிக்க வேண்டியது. அளவை மீறும்போது மற்றவர்களால் சாகசக்காரி என இனங் கண்டு ஒதுங்கி விடுவார்கள். நிட்சயமாக ஷரனிடம் அந்த கலைத் திறமை கைவந்து உள்ளது.
ஷரன் கேட்டதையும் சுந்தரம்பிள்ளையின் தோளை அழுத்தியதையும் தூரத்தில் இருந்து அவதானித்த சாம் அருகில் வைத்து ‘என்ன இவ்வளவு நெருக்கமாகி விட்டீர்கள்’எனக் கூறி புன்னகையை தவழ விட்டான். அந்தப் புன்னகையில் பல கோடி அர்த்தங்கள் இருந்ததை வேண்டுமென்றே கவனிக்காமல் சுந்தரம்பிள்ளை ‘நாளைக்கு தான் வர சிறிது நேரமாகும் என தனக்கும் சேர்த்து வாட் இரவுண்டை செய்யட்டாம்’;.
அப்ப நீங்கள் என்ன சொன்னிர்கள்?
‘ஓம் என சொன்னேன். சிறிய குழந்தையின் தாயானதால் வீட்டில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம்?’
‘ இங்கே இப்படி உபகாரங்கள் செய்யத் தொடங்கினால் எல்லோரும் உமது தலையில் கட்டி விடுவார்கள். மேலும் எனக்கு ஷரனில் நல்ல அவிப்பிராயம் .இல்லை.’
‘ஒரு கிழமையில் அவளோடு மூன்று நாட்கள் சேர்ந்து வேலை செய்கிறேம். பரஸ்பர நல்லெண்ணம் இருந்தால் தானே நல்லது.’
அதற்கு பதில் சொல்லாவிட்டாலும் பழய புன்னகை மாறவில்லை. மேலும் சாமுக்கு பெண்கள் விடயத்தில் தனது கணிப்பில் எப்பொழுதும் அபார நம்பிக்கை இருந்தது.
அடுத்த நாள் தனது வாட் இரவுண்டை சாமின் உதவியுடன் முடித்து அந்த அறிக்கையை சாமிடம் கொடுத்து அனுப்பி விட்டு மீண்டும் ஷரனுக்காக அவளது நேர்சான நொரேலுடன் சென்றபோது நொரேல் மூலம் பல தகவல்கள் தெரியவந்தது.
ஷரன் தன்னிலும் பார்க்க பதினைந்து வருடம் வயது கூடியவரை திருமணம் செய்துள்ளாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலே இருவருக்கும் குழந்தை பிறந்து விட்டது. ஷரனது கணவனுக்கு தலையில் வழுக்கல்; தற்பொழுது நாற்பது வயது இருக்கும்.
‘இதையெல்லாம் இவ்வளவு சீக்கிரம் எப்படி அறிந்து கொண்டாய்?’ ஆவலுடன்
‘நேற்று பிள்ளையோடு வந்து கிரிஸ்ரியன்தான் ஷரனை வேலையில் இருந்து கூட்டி சென்றது. அழகான ஆண் குழந்தை. பார்ப்பதற்கு மொழு மொழு என்றிருந்தான்’
அவளது வார்த்தையில் குழந்தைகள் மேல் அவளது ஆசை தெரிந்தது.
‘இவ்வளவு தெரிந்த உனக்கு ஷரனின் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்பது தெரிந்திருக்குமே?
‘விட்டேனா? அதை மட்டும். தீ அணைப்பு படையில் உத்தியோகம் பார்க்கிறார். இதைவிட முக்கிய விடயம் உனக்கு தெரிய வேண்டும்.
என்ன கதை விடுகிறாய் ?
‘ஷரனுக்கு கராத்தே தெரியும். அதை பழக்கியது கிறிஸ்ரியன்‘
”உண்மையாகவா? ஆச்சரியத்துடன்‘
‘அந்தக் காலத்தில் வந்த காதலில்தான் இருவரும் ஒன்றாகினார்கள்.’
ஷரனது வோட் இரவுண்டை செய்ய ஒப்புக் கொண்டது சாமுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான விடயங்களை அறிந்கு கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் உதவி இருக்கிறது என நினைத்தபடி சுந்தரம்பிள்ளை வேலையை முடித்தபோது ஷரன் வந்து சேர்ந்தாள்.
‘இது உனது வாட் இரவுண் அறிக்கை’ என பச்சைப் புத்தகத்தைக் கொடுத்தார்.
அதில் எந்த செல்லப்பிராணி குணமாகிவிட்டது, எதற்கு தீவிர சிகீச்சை வேண்டும் ,எது சத்திர சிகீச்சைக்கு உட்படுத்த வேண்டும் என என குறிக்கப்பட்டிருந்தது.
இம் முறை ஷரனிடம் இருந்து சிவாவினது ஒரு மணிநேர வேலைக்கு விலையாக கன்னத்தில் முத்தம் கிடைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த நொரேல் சிரித்துவிட்டு ஷரன் அந்த இடத்தை விட்டு விலகியதும் ‘ லிப்ரிக் அடையாளத்தை துடைத்துக் கொள். அதிகம் வழியாதே. சிவா, ஷரனின் கணவன் கராட்டியில் கருப்பு பெல்ட்காரன் என்பதை நினைவு வைத்திரு’ எனக் கூறி கண்ணைச் சிமிட்டினாள்.
‘அவள் கொடுத்தாள் நான் மறுக்கக் கூட அவள் அவகாசம் தரவில்லை. எதற்கும் உனது ஆலோசனைக்கு நன்றி’ எனக்கூறிவிட்டு தேநீர் அருந்தவதற்காக சாமுடன் ஓய்வு அறைக்கு சென்றான்.
———-
தேனீர் அருந்தும் அறையில் அன்று எல்லாரும் இடையில் ஒரு முக்கியமான விடயம் பேசப்பட்டது. முக்கியமாக பெண்கள் உரத்த தொனியில் பேசினார்கள்.
வைத்தியசாலையில் பாதுகாப்புத் தேவை.’
‘ அத்துடன் ஆணும் பெண்ணுமாக வேலை செய்யவேண்டும்’.
சுந்தரம்பிள்ளைக்கு அடி நுனி புரியவில்லை. ஆனால் ஏதோ முக்கியமான விடயம் நடந்து விட்டது என்பது புரிந்தது. அதே வேளையில் சாம் அதை தெரிந்து கொண்டோ அல்லது பெரிதாக நினைக்காமல் புறக்கணிக்கிறான் என்பது புரிந்தது. அவன் தனது காப்பியை போடுவதில் கரிசனையாக இருந்தான். அவனுக்கு காப்பியில் பால் விடக்கூடாது. கருநிறமாக தடிப்பாக இருக்கவேண்டும். அடிப்பகுதில் குடித்து முடிந்த பின்பு வண்டல் மண்போல் காப்பி தேங்கி இருக்கவேண்டும். இதற்காக விசேடமான காப்பித்தூள் தனக்கு பிரத்தியேகமாக வைத்துள்ளான்.
லீசா என்ற இளம் நர்சு வந்து ‘சிவா, இரவு நடந்தது தெரியுமா?’
‘இல்லையே?’
‘நல்ல வேளை நீங்கள் வேலை செய்யவில்லை. கற்றரீனாவும் லின்னும் இரவு வேலை பார்த்திருக்கிறார்கள். இரவு பதினொரு மணிக்கு இருவர் வந்து, தங்களது சிறிய பொமரேனியன் நாய்க்கு மலசிக்கல் போல் இருக்கறது. உடனே எனிமா கொடுக்கவேண்டும் என்றார்கள். இந்த இரவு செய்யமுடியாது. நாளை செய்கிறோம். என சொல்லி மறுத்திருக்கிறார். அவர்கள் ஆத்திரத்தில் இருந்த போது லின் உங்களுக்கு நாங்கள் சொல்வது போல் நடக்க விருப்பம் இல்லையானால் வேறு வைத்தியசாலைக்குப்போகலாம் என்றாள். இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் லின்னுக்கு ஓங்கி குத்துவிட்டான்;. நல்ல வேளையாக அந்த குத்து லின் விலகியதால் , அவனது முஷ்டி பரிசோதனை அறைச் சுவரில் ஓட்டை போட்டது.’
லீசா நாடக இயக்கனர் போல் காலை கையை அசைத்து குத்து தனக்கு விழுந்தது போல் குனிந்து, விலகி விபரித்ததை இரசிக்க கூடியதாக இருந்தது.
‘உண்மையாகவா ஓட்டை விழுந்திருக்கு?’
‘நம்பிக்கை இல்லையென்றால் போய் பார்க்கவும்;’.
‘நல்ல வேளை லின்னின் முகம் அடி விழுந்திருந்தால் லாரியில் மோதிய கார்போல் முகம் சப்பையாக வந்திருக்கும். பார்க்க இன்னும் சகிக்காது’ என்றான் சாம்.
‘நீ ஒரு இரக்கமில்லாதவன்’ எனக்கூறி விட்டு மற்றவர்களுக்கு இந்த விடயத்தை விவரிக்க அந்த இடத்தை விட்டு லீசா விலகி சென்றாள்
சாமுக்கு லின்னில் பிடிக்காது. லின் மெல்பேனில் இருந்து நூறு கிலோமீட்ருக்குஅப்பால் உள்ள சிறு நகரத்தில் இருந்து வருபவள். தாட்டியான விரிந்த தோள்களும், பரந்த மார்புகள், இடையற்ற ஆறடி உயரமான உடலுக்குரியவள். பலவருடங்கள் பருமனானகிய மரத்தில் அறுக்கப்பட்ட மரகுத்தி போல் இருப்பாள். பேசும்போது கண்ணில், முகத்தில், அசைவுகள் அல்லது நளினங்கள் எதுவும் தெரியாமல் நேராக நோக்கியபடி கறான குரலில் பேசுவாள். நினைவிலும் கனவிலும் அழகின் உபாசகராக இருக்கும் சாம்முக்கு அவளை படிக்காதது ஆச்சரியமில்லை. சாமின் வார்தையில் கூறினால் இரண்டு பெரிய முலைகளைத் தவிர பெண்மையின் அடையாளம் எதுவும் லின்னில் இல்லை என நினைப்பவன்.
‘சாம் நீ அப்படி சொல்லி இருக்கக்கூடாது.’
‘உங்களுக்கு தெரியாது. கற்றரினாவுக்கும் லின்னுக்கும் ஆட்களோடு பேசத் தெரியாது. நோயுள்ள நாயை கொண்டு வருபவர்களிடம் பக்குவமாக பேசவேண்டும் . எடுத்தெறிந்து பேசக்கூடாது. கற்றரீனா பணக்கார குடுப்பத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண மனிதர்களோட பேசிப்பழகத் தெரியாது. ஆனால் லின் அப்படி இல்லை. நாட்டுப் புறத்தில் பிறந்து வளர்தவள். அப்படி பேசி இருக்க கூடாது. பிரச்சனையை தேடி வாங்கினால் நாங்கள் என்ன செய்யமுடியும?’.
சாம் இந்த இடத்தில் ஐந்து வருடங்கள் வேளை செய்வதால் அவனது வாதங்களை எதிர்க்க முடியாது. மேலும் சாமின் அளவு கோல்கள் சிறிது வேறுபட்டாலும் இந்த வைத்திசாலையில் பலரோடு நட்பாக இருப்பவன். இதேவேளையின் பெண்கள் மத்தியில் செல்வாக்கும் சாம்முக்கு உண்டு.