புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது
‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான்.
புத்தரின் புன்னகை அவனது முகத்தில் தவழ்ந்ந்தது.
சுந்தரம்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் கேட்ட போது ‘ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் மூன்று மிருகவைத்தியர்கள் இந்த மூன்று அறைகளிலும் வேலை செய்கிறார்கள். இந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நாட்களில் இந்தப் பூனைகளுக்கு நலமெடுக்கும் வேலை நடக்கிறது. இன்றைக்கு செவ்வாய்கிழமை என்பதால் இந்த அறையில் நடக்க வேண்டும். எனவே இன்று இந்த வேலையை நீங்கள் செய்யும் நாள்’ என விபரித்தான்.
பதினொரு பூனைகளும் பல்வேறு வர்ணங்களில் பாரதியாரின் பாடலுக்கேற்றபடி கூடுகளில் இருந்த படி மிரண்ட கண்களால் இடைவெளிக(ளுடாக பார்த்தபடி இருந்தன. இப்படியாக கூட்டாக நலமெடுத்தல் இதுவே முதல் முறையானதால் பதினொரு கடுவன் பூனைகளின் இருபத்திரண்டு விதைகளை எடுப்பதற்காக ஒவ்வொன்றாக மயக்க மருந்து கொடுத்து விதை எடுக்கத் தயாரான சுந்தரபிள்ளையை சாம் தடுத்தான்.
‘இப்படி நாம் எடுத்தால் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் சென்றுவிடும். அது இந்த இடத்தில் சரிவராது. பதினொரு பூனைகளுக்கும் முதலில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு பின்பு நலம் எடுப்போம்’
எல்லாவற்றிற்கும் மயக்க ஊசி கொடுத்து மயக்கமாக்கியபின் மேசையில் கிழங்குகளை அடுக்கியது போல் கிடத்திய பின்பு சாம் அவற்றின் விதைப்பகுதியை சுத்தப்படுத்தி அற்கஹோல் தெளித்த பின்பு சுந்தரம்பிள்ளையால் ஒப்பரேசனால் விதைகளை எடுத்ததும் அந்தப் பதினொரு பூனைகளிலும் படிந்திருந்த இரத்தக்கறைகளை சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் அவற்றினது கூட்டுக்குள் வைக்கப்பட்டன.. சாம் கூறியபடி அந்த வேலை அரை மணி நேரத்தில் முடிந்து விட்டது. .
இலங்கையில் கிராமங்களில் இரண்டு பேர் அமத்தி சாக்குப் பையில் ஆண் நாய்களை போட்டு தரையில் அழுத்தி பிடித்திருக்க மூன்றாவது மனிதர் அதனது விதைகளை நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பு சத்தகத்தால் வெட்டி எடுத்து விட்டு அந்த இடத்தில் அவைகள் துடிக்கத் துடிக்க ஓலம் இட்டபடி இருக்கும் போது சுடுசாம்பலை அள்ளி அந்த இடத்தில் தடவும் குரூரமான காட்சி நினைவுக்கு வந்தது. இதை விட கொடூரமானது மாடுகளுக்கு வண்டிக்காக விதை நீக்கும் படலம். காளைமாடுகளுக்கு சாராயம் பருக்கிவிட்டு நான்கு கால்களை ஒன்றாகக் பிணைத்துக் கட்டிவிட்டு அவைகள் ஓலமிட கிடுக்கித்தடியால் அவைகளின் விதைகளை நசிப்பது.. மறுநாள் அந்தக் காளை மாடுகளின் விதைகள் காற்பந்தளவு வீங்கியபடி இருக்கும். அந்த வீக்கம் வற்றி சாதாரண நிலை அடைவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். கயிற்றில் கட்டப்பட்ட களைமாடுகள் தீனமான குரலில் ஓலமிட்டபடி கட்டிய மரத்தை சுற்றி பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும். அவற்றால் நிலத்தில் படுத்து இளைப்பாறவோ உணவு உண்ணவோ பல நாட்களாகும். இந்தக் கொடுமைகளை சிறுவனாக பார்த்த அனுபவம் சுந்தரம்பிள்ளைக்கு உண்டு.
மனதை விட்டு அகலாத சம்பவம் ஒன்றும் சுந்தரம்பிள்ளை இலங்கையில் மிருக வைத்தியராக வேலை செய்த காலப்பகுதியில் நடந்தது.
ஒரு நாள் இலங்கையில் அநுராதபுரம் பகுதியில் வேலை செய்யும் போது நடந்த சம்பவம். இரண்டு சிங்கள விவசாயிகள் அவசரமாக வந்து காளை மாட்டிற்கு இரண்டு நாளாக இரத்தப் பெருக்கு நிற்க்கவில்லை வந்து பாருங்கள் என அழைத்தார்கள். விடயத்தை விவரமாக கேட்டபோது கிடுக்கித் தடியால் நலம் எடுக்கப்பட்ட ஒரு காளை மாட்டினது விதைப்பையை வீங்கி பெருத்து இருந்திருக்கிறது. அந்த விதையில் இருந்து வடிந்த இரத்த வாடையால் கவரப்பட்ட ஒரு காகம் விதையில் கொத்தி இருந்திருக்கிறது. கொத்தியபோது விதைக்கு வந்த பிரதான இரத்த நாடியில் உறைந்திருந்த இரத்தக்கட்டியையையும் தின்று விட்டது. இரத்த நாடியில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டே இருந்தது. இது நடந்து இரு நாட்கள் இரத்தப் போக்கு நிற்குமென காத்திருந்து விட்டு அது நடைபெறாததால் வைத்தியரை நாடியிருக்கிறார்கள். சுந்தரம்பிள்ளை அங்கு சென்று பார்த்த போதும் அந்த இடம் ஒரு குளக்கரை. அந்த குளக்கரையின் மேட்டில் வளர்ந்திருந்த பூவரச மரத்தில் அந்தக் சிவப்பும் வெள்ளையும் கலந்த காளை மாடு கட்டப்பட்டு நின்றது. அதனது தேங்காய் போல் வீங்கிய விதையின் கீழ்பகுதியில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டிருந்தது. மரத்தை சுற்றிய பகுதியெங்கும் இரத்தத்தால் வட்டமாக சகதியாக்கப்பட்டிருந்தது.அந்த இரத்த மணத்திற்காக காகங்கள் பூவரச மரத்தில் கூட்டமாக காத்திருந்தது. அந்த விவசாயிகள் இரத்தம் ஓடத் தொடங்கியதும் காளைமாட்டுக்கு காவல் இருந்ததால் நாய் நரி போன்ற மிருகங்கள் வரவில்லை. கண்ணீர் முகத்தில் கோலமிட விட்டு, விட்டு ஓலம் இட்டபடி அந்தக் காளை மாடு மரத்தை சுத்தி இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது.
காலம் காலமாக செய்வதையே தாங்கள் செய்ததாக கூறியபோது மேலதிகமாக அவர்களிடம் எதுவும் பேசாது மயக்கமருந்தைக் கொடுத்து இரத்த நாடியை கட்டியபின்தான் இரத்தப் போக்கு நின்றது. வண்டிக்குக் கட்டும் அந்த வடக்கன்மாடு அன்று உயிர் பிழைத்த சம்பவம் மனத்திரையில் வந்தது. அந்த ஒரு மாட்டுக்கு செய்த சேவையே நாலுவருடம் படித்ததற்கு போதுமானது என்ற மன நிறைவை சுந்தரம்பிள்ளைக்குத் தந்தது.
செல்லப்பிராணிகளுக்கான மருத்துவம் நடக்கும் இந்த வைத்திய சாலையில் நேரம் மிக முக்கியானது. பல விடயங்கள் தொழிற்சாலையில் நடப்பது போன்று வேகமாக நடைபெறும். எப்பொழுதும் பலர் தங்களது நோயுற்ற செல்லப் பிராணிகளுடன் வைத்தியத்துக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இலங்கை, இந்தியாவில் அரசாங்க வைத்தியசாலைகளை தருமாஸ்பத்திரி என்பார்கள். அந்த அர்த்தத்தில் பார்த்தால் இந்த வைத்தியசாலை செல்லப்பிராணிகளுக்கான தருமாஸ்பத்திரி எனக் கூறலாம்
இரண்டாவது உலகப் போரின் பின்பு வசதியற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தாராளமனம் கொண்ட சீமாட்டி ஒருவரால் உருவாக்கப்பட்டு பின்னர் கருணை உள்ளம் கொண்டவர்களின் கவனிப்பில் இந்த வைத்தியசாலை இயங்கிவருகிறது. உரிமையாளரிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் எந்த ஒரு பிராணியும் நோயால் துன்புறக்கூடாது என்பதே இந்த வைத்தியசாலையின் பிரதான நோக்கமாக அன்றில் இருந்து இன்று வரையும் உள்ளது. நோய் பிணியால் துன்புறும் மிருகங்களுக்கு வைத்தியம் செய்ய அசோக மன்னனால் உலகத்தில் முதலாவது மிருக வைத்தியசாலை கட்டப்பட்டதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்தவிதத்தில் பார்த்தால் இது அந்த அசோகனின் வைத்தியசாலைக்கு நிகரானது
ஒவ்வொரு நாளும் நடு இரவு வரை இப்படியான நோக்கத்திற்காக திறந்திருக்கும் இந்த வைத்தியசாலையில் மறுநாள் புதன்கிழமை இரவு பணி செய்வதற்கான நேர அட்டவணை சுந்தரம்பிள்ளைக்கு தரப்பட்டிருந்தது. இரவுகளில் கொண்டு வரப்படும் செல்லப்பிராணிகள் கடும் நோயுள்ளனவாகவும் வாகன விபத்துக்குள்ளானவையாகவும் இருக்கும். அவைகளை எப்படி சாமாளிப்பது என்பது இதயத்துடிப்பை கூட்டியது..
‘மதிய உணவு நேரமாகிவிட்டது’ எனச்சொல்லியவாறு, சுந்தரம்பிள்ளையை சாம் வைத்தியசாலைக்கு வெளியே கூட்டி வந்தான்.
‘நான் ஏற்கனவே சான்விச் கொண்டு வந்திருக்கிறேன்’; எனச் சொன்ன போது ‘இந்த வைத்தியசாலைக்குள் இருக்கும் அவசரத்தையும் பரபரப்பையும் விட்டுத் தள்ளி விட்டு வெளியே இயற்கையை பார்த்து, நுகர்ந்தால்தான் பின்பு நிம்மதியாக வேலை செய்யமுடியும்.’ என்றான்.
நடுப்பகலில் கிடைத்த ஒரு மணி நேரத்தை செலவிட தெருவுக்கு வந்த போது ஏற்கனவே வைத்தியசாலையின் வாசலில் அன்ரூவும் டொக்டர் சேரமும் நின்று கொண்டிருந்தார்கள்.
‘வாங்கோ இன்று பிரிட்டிஷ்; மதுவிடுதிக்குப் போவோம். இன்று செவ்வாய்கிழமை மதியம் பெண்கள் மேலே உடுப்பு இல்லாமல் பியர் பரிமாறும் நாள்’;
அன்ரூ அழைந்தான்.
‘அன்ரூவுக்கு எந்த நாளில் அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த மதுபான விடுதியில் பெண்கள் மேலுடை இல்லாமல் இருப்பார்கள் என்பது அத்துப்படி’. என சாம் என அவனது முதுகில் தட்டினானான்
‘இப்படி மனதுக்கு ரம்மியமான காட்சிகளைப் பார்த்தால்தான் திரும்பி வந்து மாலை ஆறுமணி வரையும் வேலை பார்க்க தெம்பாக இருக்கும். பெண்களின் உடலைப் பார்ப்பதை விட மனத்துக்கு வேறு எது ஊக்கமாத்திரை?.’- அன்ரூ விட்டுக் கொடுக்காமல்
எல்லோருமாக நோர்த் மெல்பனில் உள்ள அந்த மதுபானச்சாலையை நோக்கி நடந்தார்கள்;.
சுந்தரம்பிள்ளைக்கு இது புதுமையாக இருந்தது. ஆனாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. இவர்கள்தான் நட்புடன என்னை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அப்பொழுது அங்கு அவசரமாக ஓடி வந்த நர்ஸ் நொரேல், ‘காலோஸ்… ஒரு இளம் பெண் வேலைக்காக உம்மைச் சந்திக்க வந்து காத்திருக்கிறாள். அவளுக்கு என்ன சொல்வது?’
‘மதிய உணவுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். வந்தவுடன் சந்திக்கிறேன்’. என்றான் காலோஸ்
‘எந்த மதுவிடுதி என்று சொல்லும்… நான் கூட்டிக்கொண்டு வருகிறேன். அவள் எனக்கு ஏற்கனவே தெரிந்தவள்தான்’.
‘பிரிட்டிஷ் மதுவிடுதி;’ என்றான் அன்ரூ சிரித்தபடி.
அதிக தூரம் நடக்கத் தேவை இருக்கவில்லை. இரண்டு சிறிய தெருக்களையும் அதன் அருகே பச்சையாக கம்பளம் விரித்து அதன் மேல் நட என்று சொல்லதுபோல வெட்டி விடப்பட்ட புல்தரைகளையும் அங்கு இடைக்கிடையே ஆங்காங்கு இருக்கும் யூகலிக்ப்ரஸ் மரங்களையும் கடந்து சென்ற போது இரண்டு வீதிகள் சந்திக்கும் இடத்தில் அந்த பிரிட்டிஷ் மதுபானச்சாலை தெரிந்தது.
அந்த நேரத்தில் வெளியே நடப்பது சாம் சொல்லியது போல் உடலுக்கும் மனத்திற்கும் அமைதியை கொடுத்தது. மெல்பனின் வசந்த காலத்து இதமான மஞ்சள் வெய்யில் உடலுக்கு இதமாக சூடாக இருந்தது. மிதந்து வந்த காற்று யுகலிப்ரஸ் வாசத்துடன் முகத்தில் மயிலிறகாக வருடிக் கொடுத்தது. யுகலிகப்ரஸ் மரங்கள் எந்தக் காலத்திலும் பச்சையாக இருப்பதும் எந்த இடத்திலும் வளரும் தன்மையால் நகரத்தை பசுமையாக்கியது. இதனால்தான் நந்தவனங்களின் நகரம் என்ற பெயர் மெல்பனுக்கு கிடைத்தது. முழு அவுஸ்திரேலியாவும் களிமண்ணும் இயற்கைப்பசளை தன்மையுமற்ற பூமியானதால் நீர்த் தன்மை இருப்பதில்லை. இதனால் மிகக் குறைந்த வகை மரங்களே இயற்கையாக வளரும். இந்த வறுமையான நிலத்தில் வெற்றிகரமாக வளரும் யுகலிக்ப்ரஸ் மரத்தை அவுஸ்திரேலியா எங்கும் காணலாம்.
மதுச்சாலை இருந்த இடம் மெல்பனின் மையப்பகுதி இருந்து இரு கிலோ மீட்டரில் இருந்தாலும் அமைதியாக அதிக வாகனங்கள் அற்ற தெருக்களாக இருந்தது. மதுச்சாலையின் பெயர் வாசலில் சிறிய விளம்பரப்பலகையில் நீல வர்ணத்தில் எழுதி இருந்தது. அதன் கீழ் விக்ரோரியா பிட்டர் என்ற பியர் போத்தலின் படம் வரைந்திருந்தது. குடிபோதையில் உள்ளவர்களும், ஆங்கிலம் புரியாதவர்களும் படத்தை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற பொதுநலம் அந்த மதுபானச்சாலை உரிமையாளர்களுக்கு இருந்திருக்கவேண்டும். பெரிய விளம்பரமில்லாத பழய கட்டிடத்தில் அமைந்திருந்த அந்த மதுச்சாலை மெல்பேன் துறைமுகத் தொழிலாளர்களுக்காக ஆரம்பத்தில் இருந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் இருந்து மெல்பேன் துறைமுகம் வெகு துாரமில்லை
கதவைத் திறந்து நால்வரும் உள்ளே சென்றனர். அங்கு இருளாக இருந்தது. ஒரு அழுது வடியும் மின்சார பல்ப் மட்டும் உயரத்தில் தெரிந்தது. கண்களுக்கு விம்பங்கள் உருவங்களாக மாறி தெளிவாக தெரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது. அத்துடன் பெரிய சத்தத்துடன் வந்து கொண்டிருந்த கெவி மெற்றல் இசை காதை அடைத்தது. பியர் மணம் மூக்கை தடவி தலைக்குச் சென்று போதைக்கான இரசாயனங்களை கிளறியதும் உடனே மதுவின் தாகத்தை மூளையில் ஏற்படுத்தியது. மூக்கு காது கண்கள் என்ற மூன்று புலன்களாலும் அனுபவிக்க கூடிய இடம் மதுச்சாலை. இதில் முதலாவதாக போதைக்கான தாக்கத்தை உருவாக்குவது மணமேயாகும். மற்ற புலன்கள் மெதுவாகத்தான் செயல்பட்டது. இருள் மெதுவாக நீங்கி கட்புலன் மீண்டும் வந்து சேர்ந்தபோது சுந்தரம்பிள்ளைக்கு பல ஆண்கள் பியர் விற்கும் கவுண்டரைச் சுற்றி நிற்பது தெரிந்தது. சிறிய மதுச்சாலையானதால் அதிக ஆசனங்கள் இல்லை. பத்துக்கும்; குறைவாக போடப்பட்ட ஆசனங்கள் பெரும்பாலானவை வெறுமையாக இருந்தன.
அன்ரூ கூட்டத்தை ஊடறுத்தபடி வேகமாக எய்த அம்பின் கூர்முனைபோல் சென்றான். அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கவுண்டரை நெருங்கிய போது நான்கு ஐரோப்பிய பெண்கள் மார்பில் எதுவும் அணியாமல் கறுப்பான ஜீன்சை மட்டும் அணிந்தவாறு பியர் பரிமாறிக் கொண்டிருந்தனர். நாலு பேரும் பியருக்கு சொல்லிவிட்டு காத்திருக்கும்போது, அவர்களின் முலைகளை கண்களை வெட்டாது பார்த்துக்கொண்டிருந்த அன்ரூ திடீரென தலையை தாழ்த்தி கண்களை வெட்டி உதடுகளை பக்கவாட்டில் குவித்து காலோஸைப் பார்த்து ‘அந்த சிவப்புத் தலைக்காரியின் இரண்டு முலைகளும் சிலிக்கனால் ஆனது’ என்றான்
‘யூ பாஸ்ட்டட். சும்மா பார்த்து விட்டு போக வேண்டியது தானே. உன்னை மருத்துவ பரிசோதனை செய்யச் சொன்னார்களா? ’ சத்தமாக காலோஸ்.
‘எப்படி உறுதியாக சொல்கிறாய் அன்ரு?’ தயங்கியபடி சுந்தரம்பிள்ளை.
‘இதோ அந்தப் பெண்ணை கவனித்துப்பார்;. அந்த முலைக்காம்புகள் நேராக இருக்கின்றன.அத்தோடு கீழ்ப்பகுதியில் சிறிய வெண்மையான தழும்பு இருக்கிறது.’
அந்த சிலிக்கன் முலைக்காரி சொல்லி வைத்தாற் போல சிரித்தபடி பியர் கிளாசை தந்த போது சுந்தரம்பிள்ளைக்கு அவளது முகத்தைப் பார்ப்பதா அல்லது முலையை பார்ப்பதா என்ற சங்கடம். சங்கடத்துடன் நெளிந்தபடி இரண்டையும் பார்த்த போது அன்ரூ சொன்னது சரியாக இருக்கலாம் எனத்; தோன்றியது.
பியர் வந்ததும், பியரைப் பெற்றவர்கள் கவுண்டரை விட்டு விலகி புதிதாக பியர் வேண்டுவதற்கு வருபவர்களுக்கு ஜனநாயக அடிப்படையில் இடம் கொடுத்துவிட்டு, மற்றவர்களும் அந்த பியர் பெண்களின் முலைகளை தரிசித்து இன்பம் பெற வேண்டும். ஆனால் இந்த நால்வரும் கவுண்டரிலேயே பியர் கிளாசுகளை வைத்துக்கொண்டு, முலைகளை கண்களால் அர்ச்சித்தபடி பியரைப் பருகினார்கள். யாழ்ப்பாணத்து நல்லூர் தேரை நோக்கி தெய்வ தரிசனம் பெற முன்னேறும் ஆஸ்தீக அடியார்கள் கூட்டம் கந்தனினின் அனுக்கிரகம் தங்களுக்கு மட்டும்தான் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுவது போல் பின்னால் ஒரு கூட்டம் வந்து அலைபோல் மோதிக்கொண்டு இருந்தது. கூட்டத்தின் மோதலில் பியரை ஊற்றாமல் குடிக்க வேண்டும் என்ற கவலையும் சுந்தரம்பிள்ளையை பீடித்துக் கொண்டது.
‘பியர் வேண்டியவர்கள் பின்னால் போகலாம்’ என இரண்டு செங்கட்டிகள் உராய்வது போன்ற குரலில்;
ஒலித்த குரலுக்குரியவர் நடுத்தர வயதான உயரமான தடித்த பெண்.தலைமயிரை குட்டையாக வெட்டி இருந்தாள். அவளது கண்கள் கோபக் கனல் தெறிக்க அன்ரூவை நோக்கி இருந்தது.
ஜனநாயகத்தை நிலை நிறுத்த யாராவது அதிகாரம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு சிலர் மட்டுமே அதன் பலாபலனை அனுபவித்துவிடுவார்கள் என்ற அரசியல் தத்துவத்தை அந்த சம்பவம் விளக்கியது
‘இந்தப் பெண்தான் இந்த மதுவிடுதியின் முதலாளி’ என கூறிக்கொண்டு அன்ரூ பின்வாங்க,அவனைத் தொடர்ந்து மற்றவர்களும்; சென்று காலியாகக் கிடந்த ஆசனங்களில் அமர்ந்து பியரை குடிக்கத் தொடங்கிய போது வாசலைத் திறந்தபடி நொரேலும் அவளுடன் அன்று வேலை தேடி வந்த மற்றப் பெண்ணும் இவர்களை நோக்கி வந்தார்கள்.
வந்தவர்கள் இருவரும் பக்கத்தில் கதிரைகளை இழுத்து கொண்டு வந்து போட்டுவிட்டு மேசையை சுற்றி அமர்ந்தனர். அந்த மதுபானவிடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த இரு பெண்களையும் பார்த்தார்கள். வந்த இருவரும் இருபது வயதிற்கு சற்று மேல் இருக்கும் அழகிய இளம் பெண்கள். அத்துடன் நொரோலின் நேர்ஸக்கான வெள்ளை உடையுடன் இருந்தாள். அவள் மார்பில் குத்தியிருந்த அவளது பெயருள்ள பட்ஜ்; அவளை காட்டிக் கொடுத்தது. அவளை அவர்கள் பார்த்த பார்வையில் பலவித அர்த்தங்கள் இருந்ததாக சுந்தரம்பிள்ளை உணர்ந்தான். மனதில் எழுந்த சங்கடத்தை மறைத்தபடி ‘பியர் வேண்டுமா?’ எனக்கேட்டான்..
‘நாங்கள் வேண்டுகிறோம்’ என நோரேல் சொல்லிவிட்டு ‘இவள் ஜோ’ என்று அறிமுகப்படுத்தி அவளை அறிமுகப்படுத்தினாள்.
காலோஸ் தனது பொக்கட்டில் இருந்து பணத்தை எடுத்து சாமிடம் கொடுத்து, இரண்டு கிளாஸ் பியர் வேண்டிவருமாறு கொடுத்தான். அதைப் பார்த்துவிட்டு நொரோல் எழும்ப முயல ‘நீ எழுப்பாதே. சாம் வேண்டிக்கொண்டு வரட்டும். பியர் பரிமாறும் பெண்கள் இன்று மேலாடை அணிய மறந்து விட்டார்கள்.’ மெதுவான சிரிப்புடன் பெண்களின் முகத்தை பார்த்தபடி
இதைக் கேட்டதும் இரண்டு பெண்களின் முகத்திலும் சிவப்பு தாமரை பூத்தது. அன்ரூ வாயை பொத்தியபடி சிரிக்க, சுந்தரம்பிள்ளை கீழே ஏதோ எடுப்பது போல் பாவனை செய்தான்.சாம் பியர் வேண்ட சென்றுவிட்டான்.
‘இதைத் தெரிந்துதான் வந்தீர்களா? காய்ந்த மாடுகளே. நீங்கள் புதிதாக வந்த சிவாவையும் கெடுக்கிறீர்கள்’ என்றாள் நொரேலின். அவளது பெரிய கண்கள் மேலும் அகலமாக விரிந்தன. முகத்தில் வெட்கம் மறைந்து பொய்யான கோபம் புதிதாக மனை புகுந்தது..
‘அன்ரூ தனது மனைவியிடம் விவாகரத்து வேண்டி இப்பொழுது ஆறுமாதம் பிரிந்து தனியாக இருக்கிறான். அவன் கண்ணுக்கு பச்சைபட்டு பல காலம் ஆகி விட்டது. இப்படியே விட்டால் அவனது அந்தரங்கத்து ஈரம் காய்ந்து மரத்து விடாதா? அதன்பின் எவ்வளவு பாடுபட்டாலும் கருவாடு மீனாகுமா?’ என்று காலோஸ் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.
சுந்தரம்பிள்ளைக்கு பியர் புரைக்கேறியது.
நொரேல் அவன் தலையில் தட்டி ‘இவன்களோடு சேர்ந்தால் இப்படித்தான்’; என சிரித்தாள்.
சாம் கொண்டு வந்த பியரை குடித்துக் கொண்டு, ஜோ தனது வேலை அனுபவங்களையும் கல்வித் தரங்களையும் காலோஸ்க்கு கூறினாள்.
மேலாடை அணியாத பெண்கள் பரிமாறும் மதுபானச்சாலையில் அன்று நடந்த நேர்முகப்பரீட்சையில் ஜோ வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
‘இந்தமாதிரி இடத்தில் வேலைக்கான நேர்முகத்தை வைப்பதற்கு காலோஸால்தான் முடியும்’ என்றான் சாம்
பெண்கள் இருவரும் முன்னே சென்றுவிட்டார்கள்.
இன்றைக்கு வைத்தியசாலையில் நாங்கள் இந்த மதுச்சாலைக்கு போன விடயம் நொறேலால் சொல்லப்படும் என நினைத்த படி சுந்தரம்பிள்ளையும் சாமும் மீண்டும் தமது வேலைக்குத் திரும்பினார்கள். அங்கே வேலை செய்பவர்கள் மத்தியில், இவர்கள் மதிய நேரத்தில் அந்த மதுசாலைக்கு சென்ற விடயம் நினைத்தபடி நொரேல் மூலமாக தெரிந்துவிட்டது. ஒவ்வொருவர் சிரிப்பும் பார்வைகளும் பல கோணங்களில் இருந்தன. ஆனால் ஒருவரும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது சுந்தரம்பிள்ளைக்கு ஆறுதல் அளித்தது.
வேலை முடிந்ததும் தனது காரில் வரும்படி ஜோன் ரிங்கர் சுந்தரம்பிள்ளையை அழைத்தான். அவனது காரின் பின் சீட்டில் இருந்த அழகான பெண்ணை தனது பாட்னர் என அறிமுகப்படு;தினான். அவளது பெயர் மிஷேல். அவளது மடியில் ஒரு வெள்ளை நிறமான இங்லிஷ் புல்டோக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று மிகவும் உரிமையுடன் படுத்திருந்தது.
மிஷேலின் பெரிய உதடுகளும் சிறிது தூக்கலான தாடைகளும் நீண்ட கழுத்தும் நடிகை சோபியா லோரனை நினைவுக்கு கொண்டு வந்தது. அந்த அகலமான கண்களில் தெரிந்த தீர்க்கமான நேரிய பார்வையில் அவளது தைரியம் வெளிப்பட்டது. ஆனால் ஜோன் ரிங்கர் நடத்தையிலும் கதையிலும் அதற்கு நேர்மாறாக இருந்தான். அடக்கமான குழந்தைத்தனம் அவனில் தெரிந்தது.
இவர்கள் இருவேறு குண இயல்புகளைக்கொண்ட ஜோடி எனத் தெரிந்தது.
“மிஷேல் சுப்பர் மார்கற்றில் செய்யும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாய்களை அழகு படுத்தும் மற்றும் குளிப்பாட்டும் வேலையை சொந்தமாக செய்யப் போவதாக’ ஜோன் சொன்னான்.
அவள் உடனே ‘இதுதான் ஜோன். எல்லோருக்கும் எதையும் செய்ய முதல் பறை தட்டுவது.’ என்றாள்.
‘அதில் என்ன தவறு. சிவா என் நண்பன்.’
‘இருவரும் வீட்டுக்குப் போகும் வழியில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பின்னர்; படுக்கையிலும் சண்டை தொடரும்.’
‘சிவா சண்டையில் தான் எங்கள் காதல் தொடங்கியது’ என்றான் ஜோன்
‘அதெப்படி சண்டையில் தொடங்கியது?’
‘இப்ப ஜோன் எல்லாம் அவிட்டுவிடப் போகிறார்’ என்றபடி செல்லமாக தலையில் தட்டினாள் மிஷேல்.
அதைப் பொருட்படுத்தாமல் ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரார் நைட் கிளப்பிற்கு நான் போய் மது அருந்திக் கொண்டு இருந்தபோது எதிர்பாராமல் ஒரு வெறுமையான பியர் ரின் பறந்து வந்து முகத்தில் அடித்தது. நான் திரும்பிப் பார்த்த போது மிஷேல் ஒருவனுக்கு எறிந்த அந்த ரின், அவன் குனிந்தமையல் எனது முகத்தில் மோதியது. மிஷேல் வந்து வழிந்த இரத்தத்தை தனது கர்சிப்பால் துடைத்த விட்டு “அந்த குண்டனுக்கு எறிந்தது தவறுதலாக பட்டது” மன்னிப்புக் கேட்டாள்;.
.
நான் நெற்றியில் கையைவைத்த படி ‘யார் அந்த குண்டன்?’ எனக்கேட்டேன்.
‘அவன் நியூசிலாந்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் குரூப்பை சேர்ந்தவன்.’
‘அவன் என்ன செய்தான்?
‘நான் குடித்த பியருக்குள் ஏதோ மருந்து போட்டது போல் பாவனை செய்தான். அதுதான் நான் அவனில் எறிந்தேன்.’
‘அவனைத் தெரியுமா?’
‘எனக்கும் அவனோடு ஆறு மாத காலமாக பழக்கமுண்டு. இன்றைக்கு அதிகம் குடித்துவிட்டான். இன்றைக்கு இவனோடு மோட்டார் சைக்கிளில் போக முடியாது.”
‘ஓஹோ… நீயும் அந்த பைக்கி குரூப்பை சேர்தவள்தானா.?’
‘இதைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் ஆனதா?’ எனக்கூறி சேர்ட்டில் பிடித்தாள்.
‘ஏய் சேட்டை விடு நான் ஏதோ உனக்கு செய்து விட்டது போல் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள்’ என்றேன்.
அதைக்கேட்டு விட்டு ‘ஹஹஹஹஹ’ என்றாள் மிஷேல்
‘அன்று என்னைப் பிடித்தவள் இன்னும் விடவில்லை. இரண்டு வருடத்துக்கு மேலாகிவிட்டது’ எனச் சொல்லி ஜோன் சிரித்தான்.
இப்படி தனது காதல் கதையை ஜோன் சொல்லும்போது பின்னால் இருந்து ஜோனின் கழுத்தில் அழுத்தியபடி மிஷேல் ~ஜோன் உன்னிடம் ஒரு இரகசியம் இருக்காதே. நான் இரகசியம் பேசுவதென்றால் என் செல்லத்திடம் தான் பேசமுடியும்| எனச் சொல்லி மடியில் இருந்த நாயைக் கொஞ்சினாள்.
ஜோன், அந்தக் காரை சுந்தரம்பிள்ளையின் வீட்டு வாசலில் நிறுத்தி அவனை இறக்கிவிட்டபோது மிஷேல் முன்னே வந்து முன் சீற்றில் ஏறிக்கொண்டாள்