வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.

இலங்கை யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, 2021 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

 ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா,  மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார்.  இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்கமுடியும்.

டொமினிக் என்பது அவரது இயற்பெயர்.  தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம் பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக்,  தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.

மல்லிகை  ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு  அதனை வெளியிடத்தொடங்கியதும்,  மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.

இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார்.

ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும்  கண்ணீரும்.

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில்   இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!

 
விருதை  வாங்கிக்கொண்டு  யாழ்ப்பாணத்துக்கு  ரயிலில்              திரும்பிவருகிறார்.  ஊர்மக்கள்  அச்சமயம்  யாழ்ப்பாண               மேயராக  பதவியிலிருந்த  துரைராஜாவின்   தலைமையில்    மாலை   அணிவித்து  அவரை  வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார்  வீதியில்  தந்தையாரின்  ஜோசப்சலூனை                         கவனித்துக்கொண்டே இலக்கியப்பிரதிகளும் எழுதினார்.
கம்யூனிஸ்ட்  கட்சியிலும்  அங்கத்துவம்    பெற்றிருந்தார்.                      அடிநிலை  மக்களுக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.      

தண்ணீரும்  கண்ணீரும்   கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர்   பாதுகை,   சாலையின் திருப்பம்,  வாழ்வின் தரிசனம் முதலான தொகுதிகளையும் மேலும் சில நூல்களையும்              வரவாக்கியவர்.

சாலையின் திருப்பம் தொகுதிக்கு அவரது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை   எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான இதழ்களும் ஜீவாவின்   உருவப்படத்தை  அட்டையில்   பிரசுரித்து அவரைப்பற்றிஎழுதி கௌரவித்திருக்கின்றன.              குமுதம் இலவசஇணைப்பாக   ஜீவாவின் அனுபவமுத்திரைகள் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து    விநியோகித்திருக்கிறது.

 ஒரு சிறுகதைஎழுத்தாளன்,பெரிய பொருளாதார வசதிகளோ,  உயர்ந்தகல்விப்பின்புலமோ இல்லாமல் தொடர்ச்சியாக   45  ஆண்டுகளுக்கும்  மேலாக  மல்லிகை இலக்கிய இதழை                   நடத்தியிருக்கிறார்  என்ற சாதனையும் இன்று காலம் கடந்த செய்திதான்.
 
 இலங்கை நாடாளுமன்றத்தில் விதந்துபேசப்பட்ட இலக்கியவாதியான  டொமினிக்ஜீவாவுக்கு அந்தப்பெருமையை           பெற்றுக்கொடுத்ததும் அவரது அயராத முயற்சியினால் வெளியாகிக்கொண்டிருந்த மல்லிகைதான்.

யாழ். குடாநாட்டுக்குள்ளிருந்து முதலிலும் போர் நெருக்கடி தொடங்கிய1990இற்குப்பின்னர் கொழும்பிலிருந்தும் வெளியான அவரது மல்லிகை இதழில் இலங்கையின் அனைத்துப்பிரதேச எழுத்தாளர்கள் மட்டுமன்றி, தமிழகத்திலிருந்தும் புகலிட நாடுகளிலுமிருந்தும் பலர் எழுதினார்கள்.

  மாதாந்தம்மல்லிகையை வெளியிட்டவாறே                                         ‘மல்லிகைப்பந்தல்’ பதிப்பகத்தின் மூலம் பல படைப்பாளிகளின் படைப்புகளையும் நூலுருவாக்கினார். விநியோகித்தார். அத்துடன் சிலபிரதேச சிறப்பிதழ்களையும் வெளிக்கொணர்ந்து மண்வாசனை இலக்கியத்திற்கும் வளம் சேர்ப்பித்தார்.

இலங்கையில் கலை, இலக்கியவாதிகளையும் இலக்கிய விமர்சகர்களாகத் திகழ்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களையும் ஆழமாக நேசித்து அவர்களது ஆக்கங்களுக்கும் சிறந்த களம் வழங்கினார். 

அத்துடன் தமிழ்நாட்டில் கண்ணதாசன், ஜெயகாந்தன், சிட்டி சுந்தரராஜன், பா. சிவப்பிராசம் , சோ.  சிவபாதசுந்தரம், ‘ சுந்தா ‘  சுந்தரலிங்கம், மேத்தா, இன்குலாப், திலகவதி, சிவகாமி,ராஜம்கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன்,  செ. கணேசலிங்கன், பாலகுமாரன், சு. சமுத்திரம், அக்கினி புத்திரன்,   தமிழச்சி தங்கபாண்டியன், கு. சின்னப்ப பாரதி,   செ. யோகநாதன், பொன்னீலன், கண.முத்தையா, அகிலன் கண்ணன், பா. ரவி, கவிஞர் அறிவுமதி, ரங்கநாதன், நர்மதா ராமலிங்கம், குணசேகரன், அறந்தை            நாராயணன்,  தி.க. சிவசங்கரன், நா. வானமாமலை,பொன்னீலன்,                                     நீல பத்மநாபன்,  ஆ. குருசாமி ,  சலமன் பாப்பையா,  வைரமுத்து,   மீரா, மேத்தாதாஸன்,   ‘ ‘இளம்பிறை‘ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள்         தா. பாண்டியன், மகேந்திரன், நல்லகண்ணு, மாணிக்கம் , அருணாசலம்  உட்பட பலருடன் நட்பையும் பேணியவர்.

மல்லிகை, இலங்கை மற்றும் புகலிட தமிழக எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில் பதிவுசெய்து அவர்களைப்பற்றிய   ஆக்கங்களையும் பிரசுரித்துவந்தது. 

இதுவும் பெறுமதிமிக்க இலக்கியப்பணிதான்.

                 தமிழக படைப்பாளிகள் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன்,                                          நீலபத்மநாபன், நா.வானமாமலை, பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, சுதந்திர போராட்ட தியாகி சிந்துபூந்துறை அண்ணாச்சி  சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே.கோரி மற்றும் வெளிநாடுகளில் வாழும் அ.முத்துலிங்கம்                 கவிஞர் அம்பி , வவுனியூர் இரா. உதயணன்,பத்மநாப ஐயர் , கவிஞர் சேரன் , நிலக்கிளி  பாலமனோகரன் ,  க.பாலேந்திரா ,  எஸ்.பொ., வ.ஐ.ச.ஜெயபாலன் , சுதாராஜ் , இளைய அப்துல்லாஹ் ,  முருகபூபதி ஆகியோரின் உருவப்படங்களையும்                            அவர்களைப்பற்றி ஏனைய  எழுத்தாளர்கள் எழுதிய ஆக்கங்களையும்  மல்லிகை கடந்த காலங்களில் பிரசுரித்து அவர்களின் கலை, இலக்கிய, சமூகப்பணிகளை கௌரவித்திருக்கிறது.

                 குறிப்பிட்ட அட்டைப்படக்கட்டுரைகளும்  தனித்தனி தொகுப்புகளாக,  மல்லிகைப்பந்தலில் நூலுருப்பெற்றன. அவை:-
       அட்டைப்பட   ஓவியங்கள் (1986)
       மல்லிகை   முகங்கள்    (1996)
       அட்டைப்படங்கள்        (2002)
       முன்முகங்கள்          (2007)

காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும் முரண்பட்டவர்கள் கூட மல்லிகையின்   அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும்  இடம்பெற்றுள்ளனர்.

 இந்தப்பண்பு  இலங்கை இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல தமிழக இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்                                               இலக்கியவாதிகள்  இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார்.

இலங்கை அரசின் அதியுயர்  இலக்கியவிருதான சாகித்திய ரத்னா, மற்றும் தேசத்தின் கண் விருதும்,  கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருதும் பெற்றவர்.

 ஜீவாவின் சிறுகதைகள், ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.              அவரது பல கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு   பத்ரே பிரசூத்திய. (மொழிபெயர்த்தவர் இப்னு அஸுமத்)

 ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம். இதனை Undrawn Portrait for Unwritten Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில்                  வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் க. குமாரசாமி.

சோவியத்நாட்டுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டனுக்கும் சென்று அங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.

அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து 2012 இற்குப்பின்னர் மல்லிகையின் வரவு தடைப்பட்டது.  

மல்லிகை ஜீவா எழுத்தாளர், இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை.  வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !

அவரது மறைவையடுத்து இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடர்ச்சியாக இணையவழி காணொளி நினைவேந்தல்களும்  இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை அரசு அவருக்கு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் எனவும், அவர் பிறந்த யாழ்ப்பாணம் மண்ணில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான மல்லிகை ஜீவா அவர்களினால், 1972 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கிய உலகிற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன்.

அவரது மல்லிகையில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியானது.

அதனையடுத்து எனது பல சிறுகதைகளும், கட்டுரைகளும் மல்லிகையில் தொடர்ந்து வெளிவந்தன.

எனது பாட்டி சொன்ன கதைகள், ( சிறுவர் இலக்கியம் )  கங்கை மகள் ( சிறுகதைகள் ) ஆகியன மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக வந்தன.

மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 ஆம் ஆண்டு வெளியிட்டேன்.

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தவேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவையும் பலரதும் ஆதரவுடன் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நான்கு நாட்கள் நடத்தி நனவாக்கியிருக்கின்றேன்.

ஈழத்தின் தர்மாவேசக்குரல் மல்லிகை ஜீவா, தனது குரலை  2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நிரந்தரமாக நிறுத்திக்கொண்டாலும், அதற்கு முன்னர்  சில வருடங்களாகவே இலங்கை தலைப்பட்டினத்திற்கு அப்பால்  புறநகரமான மட்டக்குளியவில் அமைந்த காக்கைதீவு என்ற இடத்தில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்திலிருந்தவாறு மௌனத் தவமியற்றிக்கொண்டிருந்தார்.

மல்லிகை ஜீவாவுடன் எனக்கிருந்த உறவு ஐந்து  தசாப்தங்களுக்கும் மேற்பட்டது.  1971 முதல் 1987 தொடக்கம் வரையில் ஒவ்வொரு மாதமும் அவருடன் பல மணிநேரங்களை செலவிட்டிருக்கின்றேன்.

அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கும் இலக்கியப்பயணம் மேற்கொண்டேன். தலைநகரில் அவருடன் வீதிவீதியாக சுற்றியலைந்தேன்.  அவருக்குப்பிடித்தமான உணவகங்களில் பசியையும் போக்கினோம். அவருடனான பயணம் தமிழகம் வரையும் வியாபித்திருந்தது.

அவரது  93 வயது முதுமையில்  அவரது உடல் நிலையை கருதி,  மறைவுச்செய்தி  எந்தநிமிடத்திலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதாயிருந்தாலும்,  அச்செய்தி உறுதியானபோது உள்ளம் சமநிலையின்றி தவித்துப்போனது.

மின்னஞ்சல் ஊடாகவும் காணொளிகள் வாயிலாகவும் வந்துகொண்டிருந்த பதிவுகளை கண்ணுற்றபோது,  மனம் பேதலித்து தொண்டை அடைத்தது.  விம்மலை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருந்தது.

உடன் பிறப்பினை இழந்துவிட்ட சோகம்தான் இற்றைவரையில் மனதை அலைக்கழிக்கிறது.

அதிலிருந்து விடுபடுவதற்கு மல்லிகை ஜீவாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களையும்  மறக்கமுடியாத நிகழ்வுகளையும்  வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன்.  

அவரது மறைவையடுத்து, அவர் குறித்து  நான் எழுதிய சில ஆக்கங்களின் தொகுப்பே இந்நூல்.

இந்த ஆக்கங்களில் அவரது இலக்கிய ஆளுமைக்கு அப்பாலிருந்த பல பக்கங்களையும்  வாசகர்கள் தரிசிக்கமுடியும்.

இதனை அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். இவ்விதழின் ஆசிரியர்கள் யாழ். பாஸ்கர், கவிஞர் செ.  பாஸ்கரன் ஆகியோருக்கும் தமிழ்முரசு ஆசிரிய பீடத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

மல்லிகை ஜீவா மறைந்தபின்னர் இலங்கையிலும் உலகெங்கும் மெய்நிகர் ஊடாக பல நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. சிலவற்றில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

மல்லிகை ஜீவா நினைவு முத்திரை இலங்கையில் வெளியிடப்படவேண்டும். அவர் பிறந்த யாழ். மண்ணில் அவர் நினைவாக ஒரு மண்டபம் அமையவேண்டும். அங்கு அவரை நினைவுபடுத்தும் ஆவணங்கள் இடம்பெறல் வேண்டும் என்றும் பலரிடத்திலும் வேண்டுகோள்களை விடுத்தேன்.

கொரோனோ பெருந்தொற்றினால்,  இந்த வேண்டுகோள்கள் இன்னமும் கனவாகவே மௌனத்தவமியற்றுகின்றன.  எனினும் எதிர்காலத்தில் இக்கனவுகள் நனவாகவேண்டும். அதற்காகவும் நாம் உழைக்கவேண்டும்.

கடந்த ஆண்டு ( 2021 ) எனக்கு 70 வயது பிறந்தது.  1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்றுதான்,  எனது பிறந்த தினத்தின்போது எனது முதல் சிறுகதை  ( கனவுகள் ஆயிரம் ) மல்லிகையில் வெளியாகி, குறிப்பிட்ட இதழை ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் அனுப்பி பெற்றுக்கொண்டேன்.  இது தற்செயல்  நிகழ்வு. 

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி,  எனது  70 வயது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நூல்களின்     ( கதைத்  தொகுப்பின் கதை, நடந்தாய் வாழி களனி கங்கை, பாட்டி சொன்ன கதைகள் ) வெளியீட்டை  மல்லிகை ஜீவா நினைவரங்கிலேயே நடத்தினேன்.

இதுவே பெருந்தொற்று காலத்தில் வெளியரங்கில் நடந்த முதலாவது ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சியாகும்.  இவ்வரங்கில் ஜீவாவின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் அஞ்சலி செலுத்தினோம்.

இலக்கிய நண்பர் நடேசன், ஜீவா பற்றிய நினைவுரையை நிகழ்த்தினார்.  மல்லிகை ஜீவா நினைவு விருதை அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் அக்கினிக்குஞ்சு இணைய இதழை நடத்திவரும் நண்பர் யாழ். பாஸ்கர் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தோம். இந்நிகழ்வு சம்பந்தமான படங்களும் இந்நூலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்நூலுக்கான முகப்போவியம் வரைந்துள்ள எமது இனிய நண்பர்  ஓவியக் கலைஞர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

                                                                                         அன்புடன்

letchumananm@gmail.com                                  முருகபூபதி

%d bloggers like this: