Vaalum Suvaduhal

4 1/4உள்கலவி

ஷரன் - தனது 'நாய்' விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் அடிக்கடி 'அலுப்பு' கொடுப்பவள். ஒருநாள் இரவு - எனது 'மொபைல்' போண் சிணுங்கியது.
அவளேதான்.
''எனது நாய் Princess குட்டிபோடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது."" - என்றாள்.

குறிப்பிட்ட நாய் கர்ப்பமடைய காரணமான நாய் பற்றி விசாரித்துவிட்டு, சொற்ப வேளையில் மீண்டும் 'கோல்" - எடுக்குமாறு சொன்னேன். 'சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்பு தனது நாய்க்கு ஆண்குட்டி பிறந்திருக்கிறது'. என்கிற தகவலை ஷரன் சொன்னாள்.

இச்சம்பவம் நடந்து ஆறுமாதத்தின் பின்னர் 6மாதம் கழிந்தபின்பு மீண்டும் அவளிடமிருந்து கோல். ''என்ன?'' - கேட்டேன்.

""Princess குட்டிபோட மிகவும் சிரமப்படுகிறது"" - என்றாள் ஷரன்.

''எந்த நாய்?'' - என்று பிறக்கவிருக்கும் குட்டியின் தந்தை நாயை விசாரித்தேன்.

''Oscar" - என்றாள். ''அப்படியா.... ஆறுமாதத்திற்கு முன்பு Princess இற்கு பிறந்ததுதானே இந்த "Oscar" '- எனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தக் கேட்டேன்.

""ஆமாம்.... Oscar தான் காரணம்.""

''ஷரன்... இப்படி உள்இன கலப்பு செய்தால் குட்டி ஊனமாகத்தான் பிறக்கும். அதனால் - எதற்கும் Oscar இற்கு ஒப்பரேஷன் (Desexing) செய்யவேண்டும்"" - என்றேன்.

நல்ல வேளையாக - பிறந்த குட்டி ஆரோக்கியமாகப் பிறந்தது. இந்தக் குட்டி பெண்.

மேலும் ஆறுமாதம் கடந்த பின்பு- குறிப்பிட்ட பெண் நாய்க்குட்டி, பிரசவத்திற்கு தயாராக இருப்பதாகவும் பிரசவத்திற்கு சிரமப்படுவதாகவும் ஷரன் ரெலிபோனில் சொன்னாள்.

''சரி..... இந்தமுறை இந்தப் பெண் குட்டியை தாயாக்கிய நாய் எது?"" என்று சந்தேகத்துடன் கேட்டேன். ''Oscar" - என்ற பதில் கேட்டு திகைத்தேவிட்டேன்.

'Oscar' தாயுடனும் - தங்கையுடனுமா? 'எனக்கு ஆத்திரம்தான் வந்தது'. "'ஷரன்.... உங்களுக்கு எவ்வளவு சொல்லியும் பலன் இல்லை. பிறக்கும் குட்டி ஊனமுடன்தான் பிறக்கப்போகிறது - எனச் சொல்லி ரெலிபோனை வைத்தேன்'.

ஒரு வாரத்தின் பின்பு ஷரன் - சிறிய நாய்க்குட்டியை கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.

இப்பொழுதாவது உணர்ந்தால் சரி. இரண்டு தலைமுறைக்குள் உள்ளின கலப்பு விருந்தி செய்தால் விளைவு இப்படித்தான் அமையும்"" - எனச் சொன்னேன்.

இதனை எழுதும்போது தமிழ் நாட்டில் நான் பணிபுரிந்த பண்ணையொன்றில் நிகழந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அந்தப் பண்ணையில் வேலப்பன் என்ற ஒரு நபர் வேலை செய்தான். அவன் ராமநாதபுரத்திற்கு பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். மேலும் தான் 'கட்டபொம்மனின் வழித்தோன்றல் எனவும் பெருமையாக சொல்லிக் கொள்வான். அத்துடன் தமது பரம்பரை ஆந்திராவைச் சேர்ந்தது எனவும் கூறுவான். இந்த வேலப்பனுக்கு அதே பண்ணையில் வேலை செய்த மற்றமொரு பணியாளான தேவி என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது. ஆனால் அவளை அவன் மணம்முடிக்க விரும்பவில்லை.

""வேலப்பா... ஏன் தேவியை திருமணம் செய்ய மறுக்கிறாய்"" - எனக் கேட்டேன்.

''சார் .... எனக்குக் கிராமத்தில் முறைப்பெண் அதாவது என் அக்கா மகள் இருக்கிறாள். அவளைத்தான் நான் மணம் செய்ய முடியும்"" என்றான்.

வயதைக் கேட்டேன். ''ஏழு சார்....""

அடப்பாவி.... இருபத்தெட்டு வயதான நீ....... ஏழுவயதில் பெண்பிள்ளையை........ எப்படி.....?"" வியப்புடன் கேட்டேன்.
''எமது நாயக்கர் வம்ச முறைப்படி நான் அக்கா மகளைத்தான் மணம் செய்ய முடியும். அவள் இப்போது ஏழுவயதுதான். பருவமடைந்தபின்பு மணம் முடிப்பேன். இல்லையென்றால் விவசாய நிலம் சொத்து யாவும் பிரிந்துவிடும்'' என்றான்.

அந்தக்காலத்தில் ஐரோப்பாவில் அரச கிரீடங்களை கவனத்தில் கொண்டு திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காணி, சொத்து, கவனத்தில் கொள்ளப்பட்டது. மெண்டலுக்கும் டார்வினுக்கும் இவை விளங்காது.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.