Vaalum Suvaduhal

இரத்த தான மகிமை

பிராணிகளிடம் விநோதமான குணங்கள் உண்டு. எங்கள் வீட்டு நாய் - சண்டியும் இதற்கு - விதிவிலக்கல்ல.

திடீரென்று மாயமாகிவிடும், தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். சண்டி எம்மிடம் வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதிவிட்டேன். மாயமாகித் தேடி அலைந்த கதை ஒரு புறமிருக்க, எதனையும் சாப்பிடும் இயல்பும் அதன், பிறவிக்குணமாகியதுதான் ஆபத்தானது.

வீட்டைவிட்டு ஓடி மாயமாவது, காண்பதையெல்லாம் உண்பது இந்த குணங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாய்பேசாத உயிரினங்களுக்கும் ஏற்புடையதல்ல.

எங்கள் 'சண்டியின்' இந்த குணஇயல்புகளினால் நாம் பல சந்தர்ப்பங்களில் சங்கடங்களை எதிர்நோக்கியுள்ளோம். எமது வீட்டுச் செல்லப்பிராணியாக வளரவந்த ஒரு மாத காலத்தில், ஒரு நாள் வீ;ட்டுக்குப் புல்வெட்ட வந்தவா,; பின் வளவுக் கதவை மூடாமல் சென்றதன் விளைவு சண்டி மாயமாகிவிட்டது.

இரண்டு நாள்களாகத் தேடி அலைந்தோம். RSPCA நகரசபை, Dog Pound இப்படி எல்லா இடங்களிலும் தேடி களைத்து ஓய்ந்து - அருகில் உள்ள Milkbar களில் விளம்பரம் ஒட்டி நாயைக் கண்டு பிடித்து தருவோருக்கு சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தோம்.

மூன்றாவது நாள் தொலைபேசியில் கிடைத்த தகவலையடுத்து மூன்று மைல் தொலைவில் உள்ள வீட்டுக்குச் சென்றோம்.

''இரண்டு நாட்களாக எமது வீட்டு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் சுமார் அரைமணி நேரத்திற்கு முன்பு Garden shed இனுள் புகுந்து நத்தைக்கு வைக்கப்பட்ட விஷமருந்தைச் சாப்பிட்டுவிட்டது. நாம் மிருக வைத்தியரிடம் கொண்டு சென்றுள்ளோம். அங்கே போனால் பார்க்கலாம்"" என்றார்கள்.

குறிப்பிட்ட Vet Dispensary க்கு சென்ற போது அங்கே எங்கள் சண்டி அரைமயக்கத்தில் வாலை ஆட்டியவாறு பாதி மூடிய கண்களால் எம்மை பார்த்தது.

குணமாகி வீடு திரும்பியது.

வீட்டில் கால் மேசுகள், சொக்கலேட் அடிக்கடி காணாமல் போகும். சமிபாடடையக் கூடியவை தவிர்ந்து ஏனையவை வீட்டின் பின்பகுதியை சுத்தப்படுத்தும் சமயங்களில் காணப்படும். மேலும் சமையலறையில் உணவுப் பொருள்கள் பதார்த்தங்கள் நிலத்தில் சிந்திவிட்டால் நாம் Hoover பிடித்து சுத்தம் செய்வதற்கு முன்பே சண்டி Hoover ஆக மாறி உட்கொண்டு சுத்தம் செய்துவிடும்.

கண்டதையும் உண்டு சங்கடப்படுத்தும் சண்டி அண்மையிலே யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று ஒரு காரியம் செய்து எமலோகத்திற்கு புறப்பட்டு பாதி வழியில் திரும்பி பரலோகத்திற்கே வந்தது.

எலிகளின் தொல்லையை தாங்கமுடியாமல் Pest Control செய்பவர்களை அழைத்தோம். அவர்களின் ஆலோசனைப் பிரகாரம் எலிப்பாசாணத்தை வீட்டின் கூரை மற்றும் சுவர் மூலைகளில் வைத்தோம். இவ்விதம் எலிப்பாசாணத்தை வைப்பதற்கு முன்பு நாய் - அதனைத் தீண்டாதா? எனவும் கேட்டோம். அவர்கள் ''இல்லை'' என்றார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு.
எங்கள் சண்டி, எலிப்பாசாணம் வைத்து ஒரு வாரம் கழித்து ஒருநாள் , உணவு ஏதும் உண்ணாமல் சோர்ந்து கிடந்தது. இன்றுவிட்டால், நாளை சாப்பிடும்தானே" என்று அசட்டையாக இருந்துவிட்டோம்.
இரண்டாம் நாளும் ஏதும் உண்ணாமல் சோர்ந்து கிடந்தது. என்னைக் கண்டு வாலை ஆட்டியது. வேலைக்குச் சென்று மாலை திரும்பி வந்து பார்த்தேன். இப்போது வாலும் ஆடவில்லை.

''ஓ.... ஏதோ கவலைக்கிடமாக நிலைமைதான்" என்பதை சட்டென புரிந்து கொண்டு சண்டியின் நாக்கையும் கண்களையும் பார்த்தேன். வெளிறிப்போயிருந்தது.

காரணம் விளங்கிவிட்டது. முன்பு அந்த வீட்டில் நத்தைக்கு வைத்த விஷம் சாப்பிட்டது போன்று இப்போது எமது வீட்டில் எலிக்கு வைத்த விஷம் சாப்பிட்டு விட்டது.

சாண்டி பிழைப்பதாயின் இரத்தம் ஏற்ற வேண்டும்.

சாண்டியை காரில் ஏற்றிக் கொண்டு முன்னர் நான் பணிபுரிந்த மிருக மருத்துவமனைக்கு விரைந்தேன். சுமார் ஆறுமணித்தியாலமாக இரத்தம் ஏற்றப்பட்டது. நாய் இரத்தம்தான், மனித இரத்தம் அல்ல. நாய் இரத்தம் எவ்விதம் சேகரிக்கப்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நாய்கள் இரத்ததானம் செய்கின்றன.

எப்படி?

அநாதரவாக வீதிகளில் திரியும் நாய்கள,; பராமரிக்க எவரும் இல்லாத நிலையில் கருணைக் கொலை செய்யப்படுவதுண்டு. அவ்விதம் இறக்கமுன்பு அத்தகைய நாய்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்படும்.

யாரோ முகம் அறியாதவர்களிடம் வாழ்ந்து அநாதரவான நாய்களின் இரத்தம் எங்கள் சண்டியைக் காப்பாற்றியது. சண்டி மறுநாள் சுகமாக வீடு திரும்பியது. எனினும் - எலிப்பாஷாணம், நத்தை விஷம் அதனை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கவலைiயாக மனதை அரிக்கிறது.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.