Vaalum Suvaduhal

புதிய அனுபவத்திற்கு அழைக்கப்படும் வாசகர்கள்..

இந்தநூலில் இடம்பெறும் அனுபவ பதிவுகள் தமிழுக்குப் புதிய வரவு. தமிழ்படைப்பு இலக்கியத்தில் கட்டுரை, சிறுகதை, நாவல், நடைச்சித்திரம் என பலகூறுகள் இருக்கின்றன.

அந்தவகையில் - நண்பர் நடேசன் ''உதயம்'' வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த அநுபவ சித்திரங்கள் - வாசகர்களை புதியதொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

பெரும்பாலான இலக்கிய படைப்பாளிகளுக்கு வாழ்வின் தரிசனங்களே கதைகளுக்கான கருப்பொருளாகவும் அமைந்துவிடுகின்றன.

நடேசனுக்கும் இது நிகழ்ந்துள்ளது.

அவரது மிருக மருத்துவதுறையில் அவர் தமக்கு கிடைத்த அனுபவங்களை – எமக்குச் சொல்கிறார்.

இந்த உலகின் ஜீவராசிகளில் மனிதப்பிறவியே மிகவும் உயர்ந்தது, உந்நதமானது என்ற கருத்தே மேலோங்கியுள்ளது. அதற்குக் காரணம் மனிதப்பிறவியின் சாதனைகளும், வெற்றிகளும், கண்டு பிடிப்புகளுமாம்.

ஆனால், மனிதர்களைப் போன்று சிந்திக்கவும் - வாய்பேசவும் முடியாத உயிரினங்களிடமுள்ள மேன்மையான குணங்கள் வெளி உலகிற்குத் தெரியவருவதில்லை.

தெரிந்தாலும் அவற்றை எழுத்தில் பதிவு செய்வது என்பது அப?ர்வம்.

அந்தவகையில் நடேசன் வித்தியாசமான பணியில் இறங்கியிருக்கிறார்.

அவர் மிருகவைத்தியராக பயின்று பட்டம்பெற்றது இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில்.

இலங்கையில் சில பாகங்களிலும், தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்திலும,; மிருகமருத்தவராக பணியாற்றிய நடேசன் - அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் தமது பணியைத் தொடர்கின்றார்..

சிறுவயதிலிருந்தே வாசிப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தமையால் இந்த நாட்டில் தரமான பத்திரிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற கனவுடனும் வாழ்ந்தார்.

அக்கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைத்தார். அதன்பலன் 'உதயம்' மாத இதழ் இந்தநாட்டில் சீராக, கிரமமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிறது.

நடேசன் தமது அநுபவங்களை பதிவு செய்வதற்கு சிறந்த களமாக உதயத்தையே தேர்ந்தெடுத்தமையால் தமிழ் வாசகர்களுக்கு இந்த அநுபவங்கள் புதிய வரவாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் மனிதர்களுக்குரிய வாழ்வுப் பாதுகாப்புக்கு "மனிதஉரிமை பேணும் சட்டங்கள் இருப்பது போன்று" உயிரினங்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது.

நாய், ப?னை உட்பட மற்றும் வீட்டில் வாழும் வளர்ப்புப் பிராணிகளுக்கென விசேட உணவுகளும், மருத்துவ வசதிகளும் கூட உள்ளன. ஒரு வீட்டின் பிராணி இறந்தால் அல்லது காணாமல் போனால் அதனை ஒரு துக்கநிகழ்வாகவே இந்நாட்டு மக்கள் கருதும் அளவுக்கு இவை மக்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

கேள்வி ஞானத்தில் நாம் அறிந்தவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நடேசனின் எழுத்துக்கள் பதிவாகியுள்ளன.

நடேசன் தன்னை ஒரு படைப்பு இலக்கியவாதியாக என்றைக்கும் பிரகடனப்படுத்திக் கொள்ளாதவர். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியிருப்பவர். அது சம்பந்தமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருப்பவர். இலங்கை அகதிகள் பெற்றோரை இழந்த அனாதைப்பிள்ளைகள் தொடர்பாக விசேட கரிசனையுடன் ஒரு இயங்கியல்வாதியாகத் தொழில்படுபவர்.

அதற்கு 'உதயம்" பக்க துணையாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

ஒருவரின் மனிதஉரிமை பேணும் மனிதாபிமானவாதியின் மற்றுமொரு எல்லையில் இருப்பதுதான் ஜீவராசிகள் குறித்த அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும்.

தமது வீடு போன்ற சொத்துக்களைக்கூட தமது வளர்ப்புப் பிராணிகளுக்கு இறுதிக்காலத்தில் எழுதிவைத்த விநோதமானவர்களையும் அறிகின்றோம்.
அதேசமயம் அந்த ஜீவராசிகளின் நுண்மையான உணர்வுகளையும் கேள்விப்படுகின்றோம்.
ஆறறிவு படைத்த மனிதனின் ஈனச்செயல்களைக்கூட தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து குற்றவாளியைக் கைதுசெய்ய உதவும் அப?ர்வமான குணம் நாய்க்கு இருக்கிறது.

இந்த படைப்பு இரகசியம் எம்மைப் பிரமிக்க வைக்கிறது. வாய்பேச முடியாத ஜீவராசிகளிடம் குடிகொண்டுள்ள மற்றும் பல விநோத குணங்களையும் - அவற்றின் எஜமானர்களாக விளங்கிய மனிதர்களின் அநுபவங்களையும் தமிழ் வாசகர்களுக்கு சொல்லியிருக்கிறார் நடேசன்.

அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

லெ. முருகபூபதி


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.