Vaalum Suvaduhal

இந்த மண்ணும் அந்த மண்ணும்

- நடேசன்

''டொக்டர்... எனது நாயை எனது காரினால் அடித்துவிட்டேன். மிகவும் கவலையாக இருக்கிறது. அதற்கு உட்காயம் ஏற்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கின்றேன். உதவமுடியுமா?"" - என்று ஒரு ஆங்கில மாது என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்.

எனது நர்ஸ்ஸை அனுப்பி அவளுக்கு உதவி நாயை 'கிளினிக்கிற்கு'க் கொண்டுவரச் செய்தேன். நாய்க்கு சுமார் பதினைந்து வயதிருக்கும். அதனைப் பரிசோதித்துவிட்டு, 'பின்கால்களில் உணர்வுஇல்லை. முதுகெலும்பு தாக்கப்பட்டிருக்கலாம். நாளை X-Ray எடுத்துப்பார்ப்போம்" என்றேன்.

நாயை அடித்துவிட்ட குற்ற உணர்வினால், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்ற நிலைமைக்கு அந்தப்பெண் தள்ளப்பட்டிருந்தாள். நாயை மீண்டும் படுக்கவைத்து சோதித்தபோது-ஏற்கனவே அடி வாங்கிய கோபத்திலிருந்த அந்த நாய் என் கையைக் கடித்துவிட்டது.

அவள் பதறிப்போய் 'மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றாள். இந்த தொழில் முறைக்கஷ்டம் (occupational hazzad) எமக்குச் சாதாரணமானது.

அதேசமயம் இங்கு அவுஸ்திரேலியாவில் நாய் கடித்துவிட்டால்-கடிபட்ட இடத்திற்கு மருந்தைப் போட்டுவிட்டு 'That's OK' – என்று அமைதியாகச் சொல்லிவிடலாம்.

ஆனால் இலங்கையில்.... எனது நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றது. மதவாச்சியில் நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு ஊழியர் ஓடிவந்து ''டொக்டர், பண்டாரவின் ஆட்டை நாய்கடித்துவிட்டது. வந்து பாருங்கள்"" என்றான்.

மதவாச்சியிலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் பண்டார வசிக்கின்றான். சென்றேன். பண்டார ஏற்கனவே எனக்கு அறிமுகமானவன்.

''டொக்டர் எங்கள் வீட்டு நாய் - ஆட்டை மட்டுமல்ல-எனது மகன் பொடிசிங்கோவையும் கடித்துவிட்டது எனக்கு வந்த ஆத்திரத்தில் நாயை சுட்டுக் கொன்றுவிட்டேன்.""

ஆனால் இச்சம்பவம் நடந்து ஒரு வாரமாகிவிட்டதையும் அறிந்தேன். நாயிடம் கடிபட்ட ஆடு எழும்பமுடியாமல் கிடந்தது. ஆடு தனது உடல் முழுவதையும் நக்கிக் கொண்டிருந்தது. பண்டார-ஆடு நாயினால் கடிபட்ட கவலையில் இருந்தான். ஆனால் நாயினால் கடிபட்ட மகனை எதுவித கவலையும் இன்றி பாடசாலைக்கு அனுப்பியிருந்தான்.

தாமதமின்றி மகனை அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஏற்பாடு செய்யும்படி சொன்னேன். தனது காயத்தைத் தன் நாவால் நக்கிச் சுகம் தேடி, ஆடு-பாவம்-அதற்கு சுயடிநள வந்துவிட்டது. அதனைக் கருணைக் கொலை மூலம் மேல் உலகம் அனுப்பிவிட்டு (நாயின் தலையை MRI க்கு (Medical Research Institute) அனுப்பினேன்) நாய்கடிபட்ட பண்டாரவின் மகனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

பண்டாரவின் மகன் பொடிசிப்கோ ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டிருந்தான். அது இருட்டறை. அவனைப் பரிசோதித்த டாக்டர் எனது நண்பன்.

பொடிசிப்கோவின் உடலிலும் Rabies Virus பரவிவிட்டதற்கான அறிகுறி தென்பட்டுவிட்டதாக அந்த டாக்டர் சொன்னார். Rabies வந்த ஆட்டையும் நாயையும் பார்த்த எனக்கு, அந்தக்கிருமி தாக்கிய ஒரு சிறுவனைப் பார்ப்பது அதுதான் முதல் அநுபவம். பரிதாபத்திற்குரிய அந்த பத்துவயதுச் சிறுவன் - ஒரு கப் தண்ணீரைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் எழுந்து நடுக்கத்துடன் கூச்சலிட்டான். அவன் குரல் மாறியிருந்தது. நாயின் ஊழைச் சத்தம் போன்று ஒலித்தது.

இதைத்தான் ர்லனசழிhழடியைHydrophobia எனக் கூறுவர்.

காற்றும் வெளிச்சமும் பட்டால் இந்தப் பாதிப்புக்குள்ளான நோயாளி Violent Tremor ஆக மாறும் சாத்தியங்கள் அநேகம். எனக்கு அதற்குமேல் அங்க நிற்க முடியவில்லை. ''டொக்டர் பொடிசிப்போ இன்னும் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பான்"" என் சிற்றூழியன் கேட்டான்.

நான் உதடு பிதுக்கினேன். மரணத்துக்கு நாள் குறித்து வேதனையை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல் மௌனமானேன்.

இப்படி எத்தனை 'பொடிசிப்கோக்கள்' எமது தாய்நாட்டில்.

இலங்கையின் வடபகுதியில் பல வருடங்களாக விசர்நாய்க்கடிக்கு தடை மருந்தே கிடைப்பதில்லை என அறியும் பொழுதெல்லாம், ஏனோ தெரியாது பொடிசிப்கோ என் மனக்கண்ணிலே தோன்றுவான்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.