Vaalum Suvaduhal

Lawn Mower ஆக்கப்பட்ட செம்மறியாடு

மெல்பன் குளிரில் நடுங்கியவாறு, அந்த நீதிமன்றத்தின் முன்னால், இப்ரஹிம் என்ற எகிப்தியனை மனதிற்குள் திட்டியவாறு நின்றேன்.

குளிரும் - மனச்சலிப்பும் எரிச்சலைத்தான் அன்று எனக்கு ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் சாட்சியாக எனது பெயர் எப்போது அழைக்கப்படும் எனக் காத்து நின்று தவமியற்றினேன்.
இவ்விதம் சாட்சிக் கூண்டில் ஏறவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். பின்னணி ஒரு திரைப்படம் போன்று மனதில் விரிகின்றது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பிஸியான நாள். வழக்கமாக நாய், ப?னைகளுடன் சிகிச்சைக்காக உறவாடும் நான், அன்று ஒரு செம்மறி ஆட்டுக்குச் சிகிச்சை செய்ய நேர்ந்தது.

வெள்ளை நிறமான செம்மறி ஆட்டைச் சுமந்தபடி அந்த எகிப்தியன் மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவனது தாடியும் - அவன் சுமந்த ஆடும் தேவாலய சுவரோவியங்களை நினைவுபடுத்தின.

''ஆட்டுக்கு என்ன பிரச்சினை""? எனக் கேட்டேன். அவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினான்.

செம்மறி ஆட்டின் குளம்புகளுக்கு மேல் நான்கு கால்களிலும் சுற்றிவர காயங்கள் 'சீழ் பிடித்திருந்தது. மேலும் அந்த காயங்களிலிருந்து வந்த மணம் - மூக்கைத் துளைத்தது. பலநாட் காயம்.

எப்படி காயம் நேர்ந்தது எனக் கேட்டபோது, 'ஆடு தப்பிச் செல்லாமல் இருக்க நான்கு கால்களையும் கயிற்றினால் கட்டினேன். அதனால் ஏற்பட்ட காயம்..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னான்.

'இப்படியும் ஒரு முட்டாளா?" - மனதில் நினைத்தேன். சொல்லத் தயங்கினேன். காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து கட்டினேன்.

இது நிகழ்ந்து இரண்டு வாரம் கடந்திருக்கும். RSPCA இன்ஸ்பெக்டர் எமது மருத்துவமனைக்கு வந்தார்.

பல தோற்றங்களில் எடுக்கப்பட்ட செம்மறிஆடுகளின் வர்ணப் புகைப்படங்களைக் காண்பித்து இந்த ஆட்டைத் தெரிகிறதா எனக் கேட்டார்.

''எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்னர், நான்கு கால்களிலும் காயங்களுடன் வந்த ஒரு செம்மறி ஆட்டிற்குச் சிகிச்சை செய்துள்ளேன்"" - எனச் சொன்னேன்.

அத்துடன், சம்பவத்தையும் விபரித்தேன். ஆட்டை கொண்டுவந்தவரை நினைவு படுத்த முடியுமா என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

''ஆமாம், யேசுநாதரின் தாடியுடன் அவனது உருவம் நினைவுக்கு வருகிறது. அவனது பெயர் இப்ரஹிம்"". என்று சொல்லிவிட்டு, ""என்ன விவகாரம்?"" எனக் கேட்டேன்.

''அது சுவாரஸ்யமான கதை,"" - என்ற இன்ஸ்பெக்டர் சொன்ன சுவாரஸ்யம் இதுதான்:

அந்த செம்மறி ஆடு சலிம் என்பவனுக்குச் சொந்தமானது. அத்தோடு சலிமின் பின் வளவில் வளர்ந்த புல்லை மேய்ந்து வாழ்ந்தது. தனது முதுகுவலி காரணமாக தனது வளவில் வளர்ந்த புல்லை வெட்டி சுத்தப்படுத்த Lawn Mower பாவிக்காத இப்ரஹிம், சலீமிடம் அவனது செம்மறி ஆட்டை இரவல் வாங்கிச் சென்று தனது வளவில் புல்மேயச் செய்திருக்கிறான்.

ஆடு தப்பி ஓடாமல் இருப்பதற்காக அதன் நான்கு கால்களையும் கட்டியிருக்கிறான். இறுக்கமாக கட்டியமையால் ஏற்பட்ட காயங்கள்தான் அப்படி சீழ் பிடித்திருந்தது.

அவன் செம்மறி ஆட்டை இவ்விதமாகப் புல்லுவெட்டு இயந்திரமாகப் பாவித்த காட்சியைக் கண்ட அயலார்,
RSPCA இற்கு புகாரிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த இன்ஸ்பெக்டர் நடவடிக்கையில் இறங்கினார்.

Animal Cruality சட்டத்தின் கீழ் இப்ரஹீமுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆடு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு பண்ணைக்கு அனுப்பப்பட்டது.

அந்த நீதிமன்றத்தின் வாயிலில் கால் கடுக்க, என் தலைவிதியை நொந்தபடி நின்றேன். இன்ஸ்பெக்டர் ஸ்மித் அருகே வந்தார். ""டாக்டர் மன்னிக்க வேண்டும். உங்களது சாட்சியத்திற்கே அவசியம் இன்றி அவன், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான். அதனால் 800 டொலர்கள் அபராதமும் செலுத்திவிட்டான';'.

''அந்த 800 டொலர்களுக்கு இப்ரஹீம் இரண்டு டுயறn ஆழறநச இயந்திரங்கள் வாங்கியிருந்திருக்கலாம். முட்டாள்"" என்று மனதிற்குள் திட்டினேன்.

ஆனால், இதிலிருந்து ஒரு உண்மையும் புலனாகிறது. எனது தாய்நாட்டை நினைத்தேன். மனிதனுக்கே பாதுகாப்பற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே வாய் பேசாத மிருகத்திற்கும் பாதுகாப்பு உண்டு.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.