Vaalum Suvaduhal

போதை தந்த கொக்கீஸ்

கஞ்சாப் பலகாரம்


மனிதர்கள் போதை வஸ்துக்கு அடிமையாகி மயங்கும் கதை அறிவோம். ஆனால் - ஐந்தறிவு படைத்த மிருகம் இந்தப் போதையினால் மயங்கும் கதை கேள்விப்பட்டதுண்டா?

நான் பணிபுரிந்த மிருகமருத்துவமனை வழக்கமாக இரவு பன்னிரண்டு மணியுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

நானும் என்னுடன் பணிபுரிந்தவர்களும் வீட்டுக்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த நள்ளிரவுவேளை.

வெளியே அழைப்புமணி ஓசை கேட்கிறது.
நர்ஸ் சென்று திறந்தாள்.
ஒரு இளைஞன் நாயொன்றுடன் வந்தான். ''டொக்டர் நாயின் உடல்நிலை கவலை தருகிறது. தொடர்ந்து நித்திரை கொள்ளுமாற் போன்று ஒரு வகை மயக்கம்.""

நான் நாயை பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றேன். பரிசோதனையை தொடங்கினேன். இதயத்துடிப்பு பலமாகவும் அதேசமயம் குறைவாகவும் கேட்டது.

கண்களை டோர்ச் வெளிச்சத்தில் பார்த்த பொழுது கண்மணி சிறுத்தும், ஆனால் வெளிச்சத்தில் தெளிவாகவும் இருந்தது.

பரிசோதனை மேசையிலிருந்தும் அது நித்திரை கொள்ளுமாற் போன்று தூங்கி வழிந்தது. சிறுவயதில், ஊரில் சிவராத்திரி நாளில் விடிய விடிய தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மறுநாள் ஆங்கில வகுப்பில் தூங்கி வழிந்ததை இந்த நாய் நினைப்ப?ட்டியது.

நாயை கொண்டு வந்த இளைஞனிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.

''உமது வீட்டில் யாராவது நித்திரை மாத்திரை பாவிக்கிறார்களா?""

''இல்லை டொக்டர், அது அப்படி ஒன்றும் இல்லை.

''அப்படியாயின்...யாரவது எதிரிகள் உமக்கு இருக்கிறார்களா?""

''இல்லையே டொக்டர்.. ஏன் அப்படி கேட்கிறீர்கள்?"" அவன் பதட்டத்துடன் கேட்டான்.
''எவரும் நாய்க்கு உணவில் நஞ்சு கலந்து விட்டார்களோ எனவும் சந்தேகப்படத் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை. எமது மருத்துவமனை மூடும் நேரமாகிவிட்டது. நாய்க்குத் தொடர்ச்சியான கண்காணிப்பும் சிகிச்சையும் தேவைப்படுகிறது. அதற்கு உடனடியாக நாயை மெல்பன் பல்கலைக்கழக மிருக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது என்றேன்.

''வேறு வழி இல்லையா?'' - எனப் பரிதாபமாகக் கேட்டான்.""

''சேலைன் ஏற்றவேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு முதலில் - உமது வீட்டைப் போய் சோதனை செய்து பாரும். ஏதோ வித்தியாசமான பதார்த்தத்தை உமது நாய் உட்கொண்டிருக்கிறது,"" என்றேன்.

அந்த இளைஞன் சற்று யோசித்துவிட்டு - ''சரி டொக்டர் பல்கலைக்கழக மிருகமருத்துவமனைக்கே போகிறேன்"" - என நாயையும் கொண்டு கிளம்பிவிட்டான்.

எனது மனதில் இனம்புரியாத சந்தேகம் எழுந்தது.

''எதற்கும் உமது தொலைபேசி இலக்கத்தை நர்ஸிடம் கொடுத்துச் செல்லும். வீட்டை சோதித்துவிட்டு எம்மோடு தொடர்பு கொள்ளவும்''.

அரைமணிநேரமாகியும் அவனிடமிருந்து தகவல் இல்லை.

பொறுமையிழந்து - நர்ஸிடம் அவனுக்குக் கோல் எடுத்து விசாரிக்கும்படி சொன்னேன். பதினைந்து நிமிடத்தில் நர்ஸ் சுவாரஸ்யமான கதையுடன் வந்தாள்.

''டொக்டர் அவனுடைய வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுடைய நண்பன் ஒருவனுக்காக Buck Night நடந்துள்ளது. (Buck Night என்றால் திருமணத்திற்கு முன்பு நண்பர்களால் மணமகனுக்கு நடத்தப்படும் விருந்து) மதுபோதை போதாமல் - கஞ்சாவை பயன்படுத்தி சிகரட் புகைத்துள்ளார்கள். சிகரட் பழக்கமற்றவர்கள் மாவுக்குள் கஞ்சாவை வைத்து ''பேக்"" செய்து (கஞ்சா கொக்கீஸ்) சாப்பிட்டிருக்கிறார்கள். கீழே விழுந்த கஞ்சா பிஸ்கட் துகள்களை அந்த நாய் சாப்பிட்டிருக்கிறது. இதுதான் நடந்துள்ள சம்பவம். அவன் அதனை இங்கு மறைத்துவிட்டு இப்போது உண்மையை தொலைபேசியில் ஒப்புக்கொள்கிறான்.

அவள் சொல்லிவிட்டு விடைபெற்றாள். அந்த இளைஞனின் பெயர் ரொபர்ட். நாயின் பெயர் ரெக்ஸ். ''ஓ...ரொபர்ட்....ரெக்ஸ்... மர்ஜூவானா கொக்கீஸ் ...."" என்று சிரித்துக்கொண்டே எனது காரை நோக்கிச் சென்றேன்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.