|
||
|
என்னுரை ''நமது மூதாதையர்களின் தோள்களில் நாம் ஏறி நிற்கிறோம்.'' இவ்வாறு குறிப்பிட்டார் பரிணாம வளர்ச்சி குறித்து சிந்தித்த தத்துவமேதை சார்ள்ஸ் டார்வின். இன்றைய நவீனஉலகில் நாம் அநுபவிக்கும் சகல வாய்ப்பு வசதிகளுக்காகவும் நாம் நமது முன்னோர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். அவர்களை மறக்க முடியாது. பகுத்தறிவு மிக்கவர்கள், மனிதர்களின் நோய்பிணி தீர்த்து சாவுடன்
போராடியவர்களை உயிர்ப்பிப்பதற்கு மாத்திரம் உழைக்கவில்லை. ஐந்தறிவு
கொண்ட உயிரனங்களின்பாலும் அவர்கள் நேசம் கொண்டிருந்தார்கள். மிருக மருத்தவராக நான் பயிற்சிபெற்ற காலம் முதல் எனக்குக் கிட்டிய அனுபவங்களே இங்கு பதிவாகின்றன. கலை, இலக்கிய, பத்திரிகைத்துறையுடன் பரிச்சயம்மிக்கவனாக ஊறி வளர்ந்த கட்டத்திலே இவை பதிவாகின்றன என்பதும் உண்மை. எனது வாசிப்பு அறிவுக்கு வித்திட்டவர் எனது தாய்வழிப் பாட்டன். அவர் கண் பார்வையை இழந்து எதனையும் வாசிக்க முடியாமல் தவித்த காலப் பகுதியில் எனக்கு ஆறு வயது இருக்கும். அவருக்காக நான் வீரகேசரியையும் கல்கியையும் உரத்து வாசிக்க
வேண்டியவனானேன். என் பாட்டனாருடன் மேலும் பலர் என் வாசிப்புக்குச்
செவிமடுத்தனர். இந்த வாசிப்பு வேலை என்னை வீட்டோடு கட்டுப்படுத்தியதுங்கூட ஒருவகையில் பின்னாளில் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் இப்போது கருதுகிறேன். மிருகவைத்தியராக நான் தொழில்புரியத் தொடங்கியதும் எனக்குக் கிடைத்த அநுபவங்களை நினைவுகளில் அழுத்தமாக பதிவு செய்து வைத்திருந்தமையால்தான் உதயம் வாசகர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. வழக்கறிஞரிடமும் வைத்தியரிடமும் உண்மையை மறைக்கக் கூடாது என்பர். அதே போன்று – வழக்கறிஞர்களுக்கும் வைத்தியர்களுக்கும் 'தமது" வாடிக்கையாளர்களின் அந்தரங்கங்களை வெளியிடல் தகாது என்ற பண்பும் இருக்கவேண்டும் என்கிற மரபும் நீடிக்கின்றது. ஆனால் மிருகவைத்தியர்களை இந்த Client confidentiality கட்டுப்படுத்துவதில்லை. இதனால் என் அனுபவங்கள் இங்கு பதிவாகின்றன. தனது மிருகவைத்திய அநுபவங்களை இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் புத்தகமாக வெளியிட்டவர் Dr.James Harroit. இவருக்கு மிருகவைத்தியர்கள் யாவரும் மிகவும் கடமைப்பட்டவர்கள். இவரது அநுபவங்கள் பின்பு தொலைக்காட்சித் தொடர்களாக All Great and Small என்ற பெயரில் வெளியானது. இவற்றை பின்னாளில் பார்த்த பல மாணவர்கள் பலர் மிருக வைத்தியதுறையில் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். உலகடங்கிலும் 65சதவீதமான பெண்கள் இத்துறையில் (மருத்துவத்துறையில்) பயிலுகின்றனர். நான் மிருகவைத்தியராக மாத்திரம் இயங்காமல், இலங்கையின் இனப்போராட்டத்தின் விளைவாக உருவான அகதிகள் விவகாரம் - மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக தீவிரமாகவும் செயல்பட்டிருக்கின்றேன். தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த வேளையிலும,; அவுஸ்திரேலியாவில்
புகலிடம் பெற்ற பின்பும் என்; இப்பணி தொடர்கின்றது. அதனால்தான், நான் சந்தித்த மனிதர்கள் மாத்திரமன்றி பிராணிகளும்
முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தொடரை எழுதியபொழுது எழுத்துப் பிழை-இலக்கணப் பிழைகளைச் செப்பம் செய்து உதவிய அதேசமயம் ஆக்கப?ர்வமான ஆலோசனைகளை வழங்கிய நண்பர்கள் மாவை நித்தியானந்தன் என். கணேசலிங்கம், லெ. முருகப?பதி ஆகியோருக்கும் எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். தொடர்ந்து இதனை உதயத்தில் படித்து வந்த நண்பர் எஸ். பொ. அவர்கள் இத்தொடர் உதிரியாகிவிடாமல் நூலாகவேண்டும் எனப் பெரிதும் விரும்பினார். அவரது விருப்பின் நியாயத்தையும் உணர்ந்தேன். அதனால் - அத்தொடர் இன்று தொகுப்பாகின்றது. வாசகர்களுக்கும் - மித்ரா வெளியீட்டு நிறுவனத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றி.
நொயல் நடேசன் Mulgrave Veterinary Clinic Wheelers Hill Vic – 3150 Ph : 9561 0242 Email : uthayam@optusnet.com.au |
||
|
|
||
|
|