Vaalum Suvaduhal

இது ஒரு வகை வசியம்

இரவு பத்துமணி

மெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் வாய்க்குள் இருந்த எலும்பை எடுத்துவிட்டு அவர்களிடம,; 'என்ன எலும்பு கொடுத்தது" என்று கேட்டேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

நிச்சயமாக அது பூனை அல்லது நாய்க்குட்டியின் தாடை எலும்புத் துண்டு. அது அவர்களது அன்றைய மதிய உணவாக இருக்க வேண்டும்.

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, 'இனி சமைத்த எலும்பு கொடுக்க வேண்டாம"; என்று சொல்லியனுப்பினேன். இந்த சுவையான சம்பவத்தை நர்சுக்குச் சொல்லிச் சிரிக்க நினைத்தபோது ஸ்ரீவன் (ரெசளந) எனக்கு பொலிசில் இருந்து தகவல் வந்திருக்கிறது என பரபரத்தான்.

என்ன விடயம்?

Westgate Bridge ற்கு சிறிது தூரத்தில் நடந்த பெரிய விபத்து ஒன்றில் மூன்று பிள்ளைகளும், பெற்றோரும் வந்த கார் சாலை ஓரத்தில் மோதியதால் இரண்டு குழந்தைகளும் தந்தையும் இறந்துவிட்டார்கள். பொலிஸ் அம்புலன்ஸ் எல்லாம் ஸ்தலத்தில் நின்ற போதிலும் எவராலும் அந்தக் காரை நெருங்க முடியவில்லை.

ஏன்? அவர்களது நாய் (Bull-Terrior) எவரையும் நெருங்க விடாமல் கடிக்க எத்தனித்துக் கொண்டிருந்தது.

துப்பாக்கியால் சுடமுடியாதா?

தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் நின்று அவர்களைப் பாதுகாப்பதாக நினைக்கிறது. சுடுவது ஆபத்து என நினைத்து எங்களை கூப்பிட்டிருக்கிறார்கள். ஆஸ்பத்திரியை மூடிவிட்டு எப்படிச் செல்வது என யோசித்தாலும் முடிவில் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடன் செல்ல முடிவு செய்தோம்.

ஸ்ரீவன் மிகுந்த பரபரப்புடன் மயக்க ஊசிமருந்துகள், Blanket மற்றும் நாய்க்குச் சுருக்குப் போடும் உபகரணங்களுடன் என்னுடைய காரை அடைந்தான்.

மழை பெய்துகொண்டிருந்தது.

வெளிச்சம் தெளிவாக இல்லை. ஆனாலும் வேகமாகச் சென்றோம். ஸ்ரீவனுக்கு Action Packed படத்தின் கதாநாயகனின் நினைப்பு. இரண்டு மைல் தொலைவிலே Freeway இரண்டுபக்கமும் மூடப்பட்டிருந்தது. பொலிசாரிடம் எம்மை அடையாளம் காட்டியதும் உடனே போகச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் போகச் சொன்ன பாதை எதிர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தயக்கத்துடன் வண்டியைச் செலுத்தினேன். இதுதான் என்றுமில்லாதபடி முதன்முதலாகப் பொலிசார் எதிர்ப்பாதையில் செல்லும்படி கூறுவது என நகைத்தான்.

கடைசியாக விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது, பிரகாசமான வெளிச்சத்தில் அந்தப் பயங்கரக்காட்சி தெளிவாகத் தெரிந்தது. காரின் முன்பகுதி காற்றுப்போன இறப்பர் பந்துபோல் உள்வாங்கி இருந்தது. ஒரு குடும்பம் இரத்தம் சிந்திய நிலையில் காரில் இருந்தது. வெள்ளை நிற நாய் அவர்களுக்கு நடுவில் சுற்றி நின்றோரைப் பயமுறுத்தியும் குரைத்துக்கொண்டும் நின்றது.

ஸ்ரீபன் சுருக்குத் தடியுடனும், நான் மயக்க மருந்து நிறைந்த ஊசியுடனும் காரை விட்டு இறங்கியபோது சகலரும் எமக்கு வழிவிட்டனர். உடைந்த கண்ணாடிக் கதவினூடாக சுருக்குக் கயிறுள்ள தடியைச் செலுத்தி கழுத்தில் போட்டான். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த நாய் கதவினூடாக பாய்ந்து வந்து ஸ்ரீவனின் காலை நக்கியது. எனது மயக்க மருந்துக்கு வேலை இருக்கவில்லை. சுற்றி இருந்தவர்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவரைப் போல் எம்மைப் பார்த்துவிட்டு மீட்பு வேலையில் இறங்கினார்கள். நாயை எனது காரில் ஏற்றிக்கொண்டு வந்தோம்.

"Job done well" என்று ஸ்ரீவனுக்குச் சொன்னேன்.
'Bloody TV Crew " என்று கவலையுடன் சொன்ன ஸ்ரீவன் நாயின் தலையைத் தடவியபடி முன்சீட்டில் உட்கார்ந்தான்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.