|
மாலதி முருகபூபதி
இலக்கியம் காலக்கண்ணாடி. தான் தோன்றிய காலப்பகுதியிலே மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்பதை எடுத்தியம்பும் வல்லமை பெற்றதே இலக்கியம்.
அவ்வகையிலே என். எஸ் நடேசன் எழுதிய வண்ணாத்திக்குளம் என்ற குறுநாவலானது 1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறை அதாவது இலங்கையின் அரசியல் பொருளாதார - சமூக நிலையினை அப்படியே அறிய வைக்கிறது.
எத்தனையோ தமிழ்க்கிராமங்கள் தம் பெயரை இழந்து இன்று சிங்களப் பெயருடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். பதவியாக்குளம் எனத் தற்பொழுது வழங்கி வரும் இடம் முன்னர் வண்ணத்திக் குளம் என்ற பெயரில் இருந்தமையை இந்நாவல் வாயிலாக அறிய முடிகிறது.
புத்தளம்-மன்னார் வீதியிலே தற்பொழுது வண்ணாத்தி வில்லு- என்ற இடம் இருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவோம்.?
சில சிற்றூர்கள் இன்னும் அந்த பெயருடன் தொடர்ந்தும் வாழ்கின்றன. உதாரணமாக நஞ்சுண்டான் கரை, வண்ணாத்தி வில்லு, பொன்பரப்பி, போன்றவை அத்தகையவை. இவை என்றும் நெஞ்சு விட்டகலாத சிற்றூர்கள்.
நடேசன் தமது நாவலில் குறிப்பிடுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது பதவியாக்குளம் எனப்படுகின்றது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக சிங்களக்குடிகளே நிரம்பிய பிரதேசமாக மாறியுள்ளது.
வண்ணாத்திக்குளம்-குறுநாவலானது “காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே” என்ற பாடப்படிகளை நினைவூட்டினாலும் 1980 -1983களில் தமிழ் - சிங்கள இன மோதல்களின் தன்மையினை வெளிக்கொணர்ந்து காட்டுவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய திரு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள்-அரசியல் போக்கின் அகோரத்தனத்தினால் அப்பாவி மானுடர்கள் பொசுங்கியும், நசுங்கியும் போகின்றதை எடுத்துக்காட்டவோ அல்லது அளப்பரிய இடர் நடுவிலும் மனிதப்பண்புகளதை தளராமல் காப்பாற்ற முயற்சிப்பதை இன்றைய நிலையில் இலக்கியத்தினால் மாத்திரமே பூரணமாக வெளிச்சம் போட்டுக்காட்ட முடிகிறது.
மிகமிகத் தேவையான அக்காரியத்தை நடேசன் இச் சிறுநூல் மூலம் கணிசமான அளவில் செய்து காட்டியுள்ளார்.
எனக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது, பொருத்தமானது.
மிருக வைத்தியராக இலங்கையில் தாம் கடமையாற்றிய இடங்களை வைத்தே- அதாவது தமது சொந்த அனுபவங்களை வைத்தே நடேசன் இக்குறு நாவலை புனைந்துள்ளார்.
சுருக்கமாக சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையை சந்தர்ப்பவசத்தில் கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் பந்தத்தை ஏற்படுத்திய போதிலும் நாட்டு நிலையால் ஒருமித்த அவ்விரு உள்ளங்களும் நிம்மதியாக தமது வாழ்க்கையை ஓட்ட முடியாது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதை மிக அழகாக- எளிமையான நடையில் சொற்றொடர்கள், உவமானங்கள் பழமொழிகளை எழுதி மெருகூட்டி எழுதியதுடன் ஊர் வழக்குகளையும் எழுதிக் காட்டியுள்ளார்.
நயினாதீவு செல்லாத ஒருவருக்கு நயினாதீவு பற்றிய அறிவையும் அங்கு சென்று வந்த உணர்வையும் ஏற்படுத்துகின்ற மாதிரி எழுதியுள்ளாhர். தம் எழுத்தின் மூலம் எழுவைதீவுக்கு எம்மை அழைத்தே சென்று விடுகிறார்.
அரசியலிலே தமக்கிருந்த ஈடுபாட்டினை. எனக்குப் புது அனுபவமாக இருந்தது எந்தக்காலத்திலும் நான் அரசியல் வாதிகளை சந்தித்ததோ, பேசியதோ கிடையாது. பேராதனைப் பல்கழைக்கழகத்தில் சக மாணவர்களிடம் பேசிய அரசியல் மட்டும் தான். யாழ்ப்பாணத்தில் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவயதில் சென்றபோது அவர்கள் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். வயது வந்ததும் அந்தப் பேச்சுக்களின் போலித்தனங்களும், சந்தர்ப்பவாதங்களும் புரிந்தபின் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. ஆனால் என்னால் அரசியலை வெறுக்க முடியவில்லை. இதை விட மிகவும் கவனமாக உள்நாட்டு. வெளிநாட்டு அரசியலைக் கவனித்து வந்தேன்” எனக் குறிப்பிடுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
பண்டாரா என்ற ஜே.வி.பி இளைஞனுடன் உரையாடிய பின் தன் மனநிலையை - அனுராதபுரத்தின் இடிந்த கட்டிடங்களும் பண்டாரவின் வேகமான அரசியல் நிலை பற்றிய கேள்விகளும் கற்பாறையில் விழுந்தெழும் அருவியாக தெறித்து மனதில் நீர்த்திரையை உருவாக்கியது என அழகாக விளங்க வைக்கிறார் ஆசிரியர்.
தீவுப்பகுதிகளில் மாத்திரமல்ல வடமராட்சிப்பகுதியிலும் நடமாடி மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். என்பதை கடை வீதியை கடந்து போகும் போது எதிரிலே ஒரு மாடு வந்தது. சடுதியாக பிரேக் பிடித்தேன். மோட்டார் சைக்கள் மாட்டில் மெதுவாக மோதி நின்றது. மாடு வேலியில் நீளக்கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. தங்களின் பக்கத்து வீட்டுப்புல்லையும் தின்ன வேண்டும் என்ற தாராள மனப்பான்மை கொண்ட வடமராட்சிக்காரரை மனதில் திட்டியபடி வியாபாரி மூலையை நோக்கிச் சென்றேன்” என்ற அடிகள் மூலம் அறிய முடிகிறது.
ஆசிரியரின் மனஉணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்த சில வரிகள்:- “காதல் உணர்வின் அத்திவாரத்தில் மனித உறவுகள் கட்டப்படுகின்றன.” “நான் மற்றவர் கருத்தை கேட்பதும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பதுவும் தானே பேச்சுச் சுதந்திரம்” இனத்துவேசத்தின் அடிப்படை அறியாமை” மௌனமே உலகெங்கும் ஒரு மொழியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையுமே”.
தமிழ் சிங்கள இனத்துவேஷம் நிரம்பிய காலத்துப் பெற்றோரின் மனநிலையை இவ்வாறு கூறுகிறார். அதாவது சிங்களப் பெண்ணை மகன் திருமணம் செய்யப் போவதாக கேள்விப்பட்டதும் தகப்பனார் கூறும் கூற்று இவ்வாறு அமைகின்றது:- “ தம்பி நீ வளர்ந்து விட்டாய். உனக்குத் தெரியும் உனது செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நீயே பொறுப்பு.” “கலவரம் நடந்தால் பொடிச்சியோடு நீ எங்கே போவாய்?”
தாயார் கூறும் கூற்று “சிங்களத்தியை கல்யாணம் கட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திலும் இருக்க முடியாது.. அந்த மதவாச்சியிலும் நீ இருக்க முடியாது.” இவ்வாறு பெற்றோரின் மனவுணர்ச்சி அழகாக காட்டப்படுகிறது.
பத்து மாதம் பல இன்னல்களுக்கு மத்தியில் சுமந்து உலகிலே தவழ விடும் அருமை அன்னையை யார் மறப்பார். அவ்வகையிலேயே திரு. நடேசனும் தமது படைப்பினைத் தமது தாயாருக்கு படையலாக்கியுள்ளார்.
நாவலிலே குறுநாவல்-நெடுங்கதை என்ற வகைகளுண்டு. திரு நடேசனின் இப்படைப்பு குறு நாவலைச் சாரும்.
“வண்ணாத்திக்குளம்” ஆம். வண்ணத்துச் சிறகுகளால் மாந்தர் தம் மனதைக் கவரும் வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்த குளமாக இருந்திருக்குமோ? அல்லது வண்ணத்துப் பூச்சிகள் போன்ற கண்களையுடைய மகளிர் நீராடுகின்ற தடாகங்களை நிறைய் பெற்றிருந்ததோ அவ்வூர். பேச்சு வழக்கிலே “வண்ணாத்திப்பூச்சி” என்று தானே குறிப்பிடுவோம்.
எவ்வாறிருப்பினும் வண்ண நிiவுகளை மீட்டெடுத்ததற்காக வண்ணாத்திக்குளம்” எனப் பெயரிட்டு வண்ண அட்டையுடன் அடக்கமாக வளர்த்தெடுத்த குறுநாவல் தனது முடிவுக்காகத் திடீரென குறுக்கியதன் காரணம் யாதோ எனப் படபடக்கிறது இதயம்.
காதலுடன் இலங்கை அரசியலின் யதார்த்த நிலையினையும் துல்லியமாக எழுதிய இக்குறுநாவலின் ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
|